Sunday, 9 March 2025

மனிதனின் இயல்பு

 

மனிதனின் இயல்பு

மலையாளத்தில் - அஷீதா

தமிழில் - உதயசங்கர்

சின்னு, நாய்க்குட்டி, பூனைக்குட்டியின் கிராமத்தில் ஆல்பெர்ட் ஆடு மேய்த்துக் கொண்டிருந்தான். ஆல்பெர்ட்டுக்கு மனைவியும் இரண்டு குழந்தைகளும் இருந்தார்கள். ஞாயிறு தோறும் குடும்பத்தோடு சர்ச்சுக்கு போகும்போது நாய்க்குட்டியும் பூனைக்குட்டியும் சர்ச்சின் முற்றம் வரை போகும்.

ஒரு நாள் ஆல்பெர்ட் ஓடி வந்தான். அவனுக்குப் பின்னால் ஒரு மலைப்பாம்பும் விரட்டிக் கொண்டு வந்தது. மலைப்பாம்பைப் பார்த்தவுடன் சின்னுவும், நாய்க்குட்டியும், பூனைக்குட்டியும் பாய்ந்து கதைப்பாட்டியின் பின்னால் போய் ஒளிந்து கொண்டார்கள். நய்க்குட்டியின் வாலில் தொங்கியபடி பூனைக்குட்டியும் ஓடியது.

நாய்க்குட்டி,

“ க்க்க்க்ர்ர்ர்ர் “ என்று உறுமியது. கதைப்பாட்டிக்குப் பயந்து பெரிய சண்டை எதுவும் வரவில்லை. ஆல்பெர்ட் சொன்னான்,

“ கிராமத்து மக்கள் தீ வைத்துக் கொளுத்திய போது, பாம்பைக் காப்பாற்றியது நான் தான் கதைப்பாட்டி.. இப்போது இது என்னையே விழுங்க வருகிறது... இது சரிதானா? சொல்லுங்கள்..”

மலைப்பாம்பு சொன்னது,

“ பசித்ததனால் தான் கதைப்பாட்டி.. வயதான காலத்தில் கவலைப்பட வேண்டாம்.. இந்த ஆலமரத்திடமும், அந்த ஆற்றிடமும், கல்யாணிப்பசுவிடமும் கேட்டால் போதும்.. மனிதர்கள் மனிதர்களுக்குச் சாதகமாகவே சொல்வார்கள்.. அதனால் கதைப்பாட்டி நீங்கள் எதுவும் சொல்லவேண்டாம்..”

ஆல்பெர்ட் ஆலமரத்திடம் கேட்டான். கம்பீரமான காற்றின் சத்தத்தில் ஆலமரம் தீர்ப்பு சொன்னது,

“ மனிதன் தானே. அப்படித்தான் செய்வான்.. மனிதனை விழுங்கினால் போதாது.. கடித்து சவைத்து சாப்பிட வேண்டும்.. சோர்வைப் போக்கும் நிழல் தரும் மரத்தையே வெட்டி எறிகிற கெட்டவன்..”

 கல்யாணிப்பசு மேய்ந்து கொண்டிருந்த இடத்திலிருந்தபடி தலையைக்கூட உயர்த்திப் பார்க்காமல் சொன்னது,

“ பாலையெல்லாம் ஒட்டக்கறந்து அதில் தண்ணீர் கலந்து விற்கிறவர்கள் மனிதர்கள்.. விழுங்கிவிடு.. மனித வர்க்கத்தை அப்படியே விழுங்கணும்.. தெரிஞ்சுதா? “

ஆற்றிடம் கேட்டபோது, ஆறு மகிழ்ச்சியுடன் கடகடவெனச் சிரித்து,

“ தாகத்துக்குக் குடிக்கும் தண்ணீரில் அத்தனை குப்பைகளையும் கொண்டு வந்து கொட்டி மோசமாக்குவது மனிதர்கள் தான்.. நன்றியில்லாதவர்கள்.. விழுங்கிவிடு.. பாம்பே..”

என்று சொன்னது.

அப்போதுஆல்பெர்ட்டின் மனைவி கதறி அழுது கொண்டே ஓடி வந்தார். அவர் பாம்பிடம்,

“ கணவரில்லாமல் நான் எப்படி வாழமுடியும்? என்னை முதலில் விழுங்கி விடு..”

என்று சொன்னார்.

பாம்புக்குப் பரிதாபம் தோன்றியது. என்ன ஆனாலும் பெண்ணல்லவா? பாவம். பாம்பு ஒரு மந்திரம் சொல்லிக் கொடுத்தது. அதைச் சொல்லி ஒரு துளி மண்ணை வாரிப்போட்டால் யாராக இருந்தாலும் இறந்து விடுவார்கள். இரண்டாவது மந்திரத்தைச் சொல்லி மண்ணைப் போட்டால் அவர்கள் உயிர் பெற்று விடுவார்கள்.

ஆல்பெர்ட்டின் மனைவி மந்திரம் சொல்லி மண்ணையள்ளி பாம்பின் மீது போட்டார்.

 பாம்பு செத்துப் போய் விட்டது.

கதைப்பாட்டி இதையெல்லாம் பார்த்தும் கேட்டும் மூக்கில் விரலை வைத்தபடி அப்படியே இருந்தார்.

 நன்றி - பறயாம் நமுக்கு கதகள்

 

No comments:

Post a Comment