கசுமலா காக்காவின் கவலை
மலையாளத்தில் - அஷீதா
தமிழில் - உதயசங்கர்
ஒரு நாள் உச்சிவேளையில் சின்னுவும், நாய்க்குட்டியும் பூனைக்குட்டியும் மண்ணைக் குழைத்து அப்பம் சுட்டு விளையாடிக் கொண்டிருந்தனர். அப்போது கசுமலா காக்கா ஆலமரத்தின் கிளையில் வந்து உட்கார்ந்து,
“ கா கா கா கா கா கா..” என்று கரைந்தது..
கதைப்பாட்டி காக்கா கவலையோடு
கரைவதைக் கவனித்தார். கதைப்பாட்டி எழுந்து எழுந்து சென்று,
“ என்ன கசுமலா.. உனக்கு என்ன கவலை? “
என்று கேட்டார். காக்காவின் கண்களில் கண்ணீர் தாரை தாரையாக வழிந்தது. அதைப்
பார்த்த நாய்க்குட்டியும், சின்னுவும், பூனைக்குட்டியும் விளையாட்டை
நிறுத்திவிட்டு கதைப்பாட்டியின் அருகில் சென்றார்கள்.
கசுமலா காக்கா தாழப்பறந்தபடியே,
“ கா கா கா கா கா “ என்று கூப்பாடு போட்டபடி கதைப்பாட்டியைச் சுற்றிச்
சுற்றி சிறகுகளடித்து பறந்தது.
கதைப்பாட்டிக்கு பறவைகள் விலங்குகள்
பேசுகிற மொழி தெரியும். நாய்க்குட்டியும், பூனைக்குட்டியும் சின்னுவும் ஒரே
குரலில்,
“ ஏன் காக்கா இப்படி கரையுது
கதைப்பாட்டி..” என்று கேட்டார்கள்.
“ கசுமலா காக்காவின் முட்டைகளை ஒரு
நல்லபாம்பு முட்டைகளைத் தின்று விட்டுப் போய் விட்டதாம்..”
“ அட..பாவமே! “ என்று சின்னு சொன்னாள்.
“ ஐய்யய்யோ..” என்று நாய்க்குட்டியும்
சொன்னது.
அப்போது கதைப்பாட்டி கசுமலா காக்காவிடம்
சொன்னார்,
“ நான் இதுக்கு ஒரு வழி சொல்றேன்..
அமைதியாக இரு..” என்று சொல்லி விட்டு சின்னுவின் கழுத்திலிருந்து
தங்கச்சங்கிலியைக் கழற்றி பாம்பின் புற்றில் போடுமாறு கதைப்பாட்டி கசுமலா
காக்காவிடம் சொன்னாள்.
கசுமலா காக்கா அதைச் செய்தது.
சின்னுவிடம் வீட்டுக்கு ஓடிப்போய் விவரம் சொல்லச் சொன்னார் கதைப்பாட்டி.
தங்கச்சங்கிலியைக் கழற்றி விளையாடும்போது காக்கா கொத்திக் கொண்டு போய் விட்டது
என்று சின்னுவும் வீட்டில் சொன்னாள்.
தங்கச்சங்கிலியைத் தேடி வந்த சின்னுவின்
வீட்டுக்காரர்கள் அந்த நல்லபாம்பை அடித்துக் கொன்று விட்டார்கள்.
கசுமலா காக்காவுக்கு மிகுந்த மகிழ்ச்சி.
பறந்து வந்து கதைப்பாட்டியின் கன்னத்தில் ஒரு முத்தம் கொடுத்தது.
இப்போதும் கதைப்பாட்டியின் கன்னத்தில்
ஒரு கரும்புள்ளி இருக்கிறது... பாருங்கள்!
No comments:
Post a Comment