ஒரு நாள்
மலையாளத்தில் - அஷீதா
தமிழில் - உதயசங்கர்
ஒரு நாள், சின்னு ஒரு அழகான, வண்ணமயமான
சட்டையில் ஓடி வந்தாள். விளையாடத் தயாராக இருந்த நாய்க்குட்டியையும் பூனைக்குட்டியையும்
பார்த்து சின்னு,
"அம்மாவும் அப்பாவும் இன்னைக்கு மண்ணில்
விளையாடக் கூடாதுன்னு சொன்னாங்க"
என்றாள். நாய்க்குட்டியும் பூனைக்குட்டியும்
அதிர்ச்சியடைந்தன. இருவரும் ஒரே குரலில்
" ஏன் அப்படி?" என்று கேட்டனர்.
"நான் கல்யாணவீட்டுக்குப் போகணும். அதுதான்
நல்ல உடை உடுத்திட்டு வந்தேன்"
என்றாள் சின்னு.
நாய்க்குட்டியும் பூனைக்குட்டியும் சின்னுவைச் சுற்றி நடந்து அவளுடைய
ஆடைகளைப் பரிசோதித்தன. அது சரி தான். சிவப்பு பூக்கள் கொண்ட வெள்ளை உடை. அழகான உடை.. அவர்கள் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டனர்.
நாய்க்குட்டிக்கும் பூனைக்குட்டிக்கும் உடைகள் இல்லை. அப்போது
மெஹெர்பா கோழி வந்து சொன்னது.
"வீட்டுக்குப் போ, சின்னு. நீ இவர்களோட விளையாடுனா
அழுக்காகிடுவ."
சின்னு சோகமாக அங்கேயே நின்றாள். கதைப்பாட்டியும் சொன்னார்.
"அம்முக்குட்டி, கல்யாணம் முடிஞ்சு வா, அப்புறம் விளையாடலாம்."
நாய்க்குட்டியும் பூனைக்குட்டியும் இரண்டு கால்களில் எழுந்து நின்று,
" நாங்களும் கல்யாணத்துக்கு வருவோம் " என்றன..
"ஐயோடா!" என்று கசுமலா காக்கா ஏளனம் செய்தது..
புல்லைத் தின்றுகொண்டிருந்த கல்யாணிப்பசு கூட அதைக் கேட்டுச் சிரித்தது.
நாய்க்குட்டியும் பூனைக்குட்டியும் சோகமாக இருந்தன.
"சின்னு திருமணத்திற்கு எங்களை
ஏன் அழைத்துச் செல்லவில்லை, கதைப்பாட்டி?"
என்று அவை கேட்டன.
"நம் அனைவருக்கும் இருப்பதற்கும்
வாழ்வதற்கும் ஒவ்வொரு இடங்கள் உள்ளன அங்கேயே இருப்பது நல்லது." என்று
கதைப்பாட்டி சொன்னார். அதைக் கேட்ட, நாய்க்குட்டியும் பூனைக்குட்டியும் அப்படியே
நின்று விட்டன.
" விலங்குகளுக்குக் காடும், மனிதர்களுக்கு, நாடும் இருக்கின்றன "
என்றார் கதைப்பாட்டி.
"நான் கல்யாணத்துக்குப் போகணும்"
என்று நாய்க்குட்டி பிடிவாதம் பிடித்தது. அப்போது, பிரகாசமான வெயிலில், மழை பெய்யத்
தொடங்கியது. கதைப்பாட்டி அதை நாய்க்குட்டிக்குக் காட்டி,
"பார், இது நரிக்குக் கலியாணம் நடக்குது.. அது தான், மழையும் வெயிலும்
சேர்ந்து வருது நீங்க எல்லாரும், நீலகண்டன் நரியோட கல்யாணத்துக்குப் போங்க."
என்று கதைப்பாட்டி சமாதானப்படுத்தினார்
"ஐயோ, நான் மாட்டேன்!" என்று கூறிவிட்டு மெஹெர்பா ஓரே ஓட்டம்........!
நன்றி - புக் டே
No comments:
Post a Comment