காக்காவும் கொக்கும்
மலையாளத்தில் - அஷீதா
தமிழில் - உதயசங்கர்
சின்னுவும், நாய்க்குட்டியும்,
பூனைக்குட்டியும் ஒளிந்து விளையாடும்போது கசுமலா காக்காவும் வந்தது. தன்னையும் விளையாட்டில்
சேர்க்க வேண்டும் என்று சண்டை போட்டது. கல்யாணிப்பசு சொன்னது,
“ உனக்கு வெட்கமாக இல்லையா கசுமலா..
இந்தச் சின்னப்பிள்ளைகளோடு விளையாட ஆசைப்படுகிறாய்..”
கசுமலாவுக்கு அது பிடிக்கவில்லை.
கோபம் கொண்ட கசுமலா பூனைக்குட்டியின் தலையில் ஒரு கொத்து கொத்தியது. பூனைக்குட்டி
‘ மியாவ் ‘ என்று அழுது கொண்டே நாய்க்குட்டியின் அருகில் சென்றது. நாய்க்குட்டி, ‘
பௌ ‘ என்று சின்னுவை அழைத்தது. சின்னு காக்கா மீது கோபப்பட்டாள். கசுமலா சிணுங்கிக்
கொண்டே ஆற்றங்கரைக்குப் போய் விட்டது. ஆற்றில் ஆழமில்லாத பகுதிகளில் நிறைய வாத்துகள்
நீந்திக் குளித்துக் கொண்டிருந்தன. நல்ல வெள்ளை நிறம். ஒரு அழுக்கு கூட இல்லை. தன்னுடைய
நிறமோ? கருப்பு. யாருக்கும் கருப்பு நிறம் பிடிக்கவில்லை. அதனால் தான் நிறையப் பேருக்கு
வாத்துகளை மிகவும் பிடித்திருக்கிறது.
காக்காவும் ஆற்றில் முங்கிக் குளித்தது.
பல நாட்களாக ஆலமரத்தடிக்குப் போகவில்லை. நிறைய நாட்களுக்குப் பிறகும் கருப்பு நிறம்
மாறவேயில்லை. அதை நினைத்துக் கவலைப்பட்டது கசுமலா காக்கா. நண்பர்களைத் தேடி திரும்பிச்
சென்றது. பூனைக்குட்டியும் நாய்க்குட்டியும் காக்காவின் குளியலைக் கேட்டு கை தட்டிச்
சிரித்தார்கள். காக்கா கவலையுடன் கதைப்பாட்டியிடம் கேட்டது,
“ கதைப்பாட்டி ஏன் நான் வெள்ளையாகவில்லை?
“
“ காக்கா குளிச்சால் கொக்காக மாறாது
கசுமலா.. எல்லோருக்கும் இயற்கை கொடுத்த சில அடிப்படையான விசயங்களை மாற்ற முடியாது...கருப்பு
நிறத்தை விட வெள்ளை நிறம் உயர்வு என்று நினைப்பதினால் தான் பிரச்னை.. கருப்பு நிறத்துக்கு
ஏழு நிறங்களும் அழகு கசுமலா காக்கா.. நமக்கு இயற்கை எதைக் கொடுத்திருக்கிறதோ அதை மகிழ்ச்சியுடன்
ஏற்றுக் கொண்டு நல்லபடியாக வாழக் கற்றுக் கொள்ளணும்.. “ என்று கதைப்ப்பாட்டி சொன்னார்.
அதைக் கேட்ட காக்காவின் கண்கள்
கலங்கின. அதைப்பார்த்த சின்னு ஓடிப்போய் கசுமலா காக்காவைக் கட்டிப்பிடித்து ஒரு முத்தம்
கொடுத்தாள்.
No comments:
Post a Comment