Friday, 14 March 2025

உளுந்து வடையின் ஓட்டம்

 

1         உளுந்து வடையின் ஓட்டம்

  உதயசங்கர்



மங்கலம் என்ற ஊரில் ஒரு பாட்டியும் தாத்தாவும் வாழ்ந்து வந்தார்கள். தினம் தினம் வேலை செய்தால் தான் சாப்பிடமுடியும். ஒருநாள் தாத்தாவுக்கு உளுந்துவடை சாப்பிட வேண்டும் என்று ஆசை வந்து விட்டது. உடனே தாத்தா பாட்டியிடம் சொன்னார். பாட்டிக்கும் ஆசை வந்து விட்டது. உளுந்து இருக்கிறதா? தெரியவில்லையே. இருக்கும் டப்பாக்களில் தேடினார். ஒரு டப்பாவில் ஒரு கைப்பிடி அளவு உளுந்து கிடந்தது. இரண்டு வடை சுடலாம். உளுந்தை தண்ணீரில் ஊற வைத்தார் பாட்டி. தாத்தா அதை ஆட்டுரலில் ஆட்டிக் கொடுத்தார்.

ஆட்டுரலிலிருந்து உளுந்து மாவை வழித்து எடுத்து ஒரு சட்டியில் போட்டார் தாத்தா.

“ . இரண்டு வடை தான் வரும்.. ஒரு வடை உமக்கு ஒரு வடை எனக்கு.. என்ன தெரிஞ்சுதா..” என்று கத்தினாள் பாட்டி. ஏன்னா தாத்தாவுக்கு காது கொஞ்சம் மந்தம்.

பிறகு பாட்டி வெங்காயம் பச்சைமிளாகாய் கறிவேப்பிலை எல்லாம் பொடிப்பொடித் துண்டுகளாய் நறுக்கி மாவில் போட்டுப் பிசைந்தார். அடுப்பில் வாணலியை வைத்தார். கொஞ்சூண்டு இருந்த கடலை எண்ணெயை ஊற்றினார்.

மாவை எடுத்து உள்ளங்கையில் தட்டி நடுவில் அழகாக ஒரு ஓட்டையைப் போட்டார். அதை எண்ணெய்ச்சட்டியில் போட்டு வேக வைத்தார். அவர் நினைத்த மாதிரி இரண்டு வடைக்குத்தான் மாவு இருந்தது. முதல் வடையை எடுத்து தட்டில் வைத்து விட்டு இரண்டாவது வடையைப் போட்டார். போட்டுவிட்டுத் திரும்பிப் பார்க்கும்போது தட்டிலிருந்த வடையைக் காணோம். சுற்றிச் சுற்றிப்பார்த்தார்.

” .. இங்கன இருந்த வடையைப் பார்த்தீரா? “ என்று கேட்டார்.

தாத்தா பதில் சொல்லவில்லை.

வாயைத் திறந்தால் வாயில் வடை இருப்பது தெரிந்துவிடுமே. அப்படியே அமுக்கரான் மாதிரி உட்கார்ந்து மெல்ல வடையை அசை போட்டுச் சாப்பிட்டுக் கொண்டிருந்தார். பாட்டிக்குத் தெரிந்து விட்டது.

“ கேட்டீரா.. இந்த வடை எனக்கு.உம்மரு கணக்கு முடிஞ்சுது .”

என்று பாட்டி கத்தினாள். தாத்தாவுக்குக் கேட்டதோ கேட்கவில்லையோ. அவர் மேலே கூரையைப் பார்த்தபடி அசை போட்டார். பாட்டிக்கு ஒரு சந்தேகம். ’ இந்த வடையையும் தாத்தா எடுத்துட்டார்னா.. என்ன செய்றது. வடையை எடுத்து தட்டில போடாம முந்தியில் முடிஞ்சுக்குவோம்னு’ நினைத்தாள்.

வடை வெந்ததும் அப்படியே கரண்டியில் எடுத்து முந்தியில் போட்டாள். அட, போடும்போது வடை தவறி கீழே விழுந்து விட்டது. விழுந்த வடை அப்படியே சக்கரம் மாதிரி ஓடியது. பாட்டி எழுந்து வடையின் பின்னால் ஓடினாள். பாட்டி ஓடுவதைப் பார்த்த தாத்தாவும் வடையைப் பிடிக்க ஓடினார்.

வடை ஓடி வீட்டு வாசலைத் தாண்டி விட்டது. அப்போது பாட்டி,

“ ஒழுங்கா நில்லு இல்லைனா..அவ்வளதான்..” என்று மிரட்டினாள். வடை ஓடியபடியே,

“ ஓட்டைவடை நான்

உளுந்து வடை நான்

உலகம் சுத்திப் பார்க்கப்போகும்

ஓட்டைவடை நான்..

குட்டிக்கரணம் போட்டாலும்

குதித்து குதித்து வந்தாலும்  

பிடிக்கமுடியாது

என்னைப் பிடிக்க முடியாது..”

என்று பாடியது. பாட்டி ஓடினாள். பின்னால் தாத்தா ஓடினார். ஆனால் ரொம்பதூரம் ஓட முடியவில்லை. அப்படியே நின்று விட்டார்கள்.

காடுமேடு எல்லாம் ஏறி ஓடியது உளுந்துவடை.

கல் மண் பார்க்காமல் உருண்டோடியது. எதிரே ஒரு காகம் பறந்து வந்தது. உளுந்துவடையைப் பார்த்ததும் ஆவலுடன் கொத்தி எடுக்க பாய்ந்து வந்தது. காகம் அருகில் வரும்வரை காத்திருந்து டக்கென்று ஒரு புதருக்குள் ஓடி விட்டது உளுந்து வடை. புதருக்குள்ளேயிருந்து,

“ ஓட்டைவடை நான்

உளுந்து வடை நான்

உலகம் சுத்திப் பார்க்கப்போகும்

ஓட்டைவடை நான்

பறந்து பறந்து வந்தாலும்

பாடிப் பாடி வந்தாலும்

பிடிக்கமுடியாது

என்னைப் பிடிக்கமுடியாது “

என்று உளுந்துவடை பாடியது. காகம் ஏமாந்து திரும்பிச்சென்றது. புதருக்குள்ளிருந்து பாய்ந்து சென்றது உளுந்து வடை. புதரில் படுத்திருந்த குள்ள நரி பின்னாலேயே பிடிக்க வந்தது. குள்ளநரிக்குப் பழைய பஞ்சதந்திரக்கதை ஞாபகம் வந்தது.

அப்போதே வாயில் எச்சில் ஊறியது.

உளுந்து வடை உருண்டு மரத்தின் மீது ஏறிக்  கொண்டது.

“ ஓட்டை வடை நான்

உளுந்து வடை நான்

உலகம் சுத்திப் பார்க்கப்போகும்

ஓட்டைவடை நான்

பாய்ந்து பாய்ந்து வந்தாலும்

பாட்டுப்பாடச் சொன்னாலும்

பிடிக்கமுடியாது

என்னைப் பிடிக்கமுடியாது “

என்று பாடியது.

கீழே இருந்த குள்ளநரி என்னென்னவோ நல்ல வார்த்தைகள் சொல்லிப்பார்த்தது. வடை அசையவில்லை.

அப்போது பெரிய காற்று அடித்தது. காற்றில் கிளைகள் வேகமாக ஆடின. வடை அப்படியே பறந்து போய் ஒரு ஓலைக்குடிசைக்கு முன்னால் விழுந்தது. அங்கே படுத்திருந்த நாய் எழுந்து மோப்பம் பிடித்து கவ்விக்கொள்ள ஓடி வந்தது.

உடனே உளுந்துவடை எழுந்து மறுபடியும் ஓடியது. பின்னாலேயே நாய் துரத்தியது.

” ஓட்டைவடை நான்

உளுந்து வடை நான்

உலகம் சுத்திப் பார்க்கப்போகும்

ஓட்டைவடை நான்

துரத்தித் துரத்தி வந்தாலும்

நாலுகாலில் வந்தாலும்

பிடிக்கமுடியாது

என்னைப் பிடிக்கமுடியாது ”

என்று பாடியபடியே ஓடியது.

ஓட்டம்னா ஓட்டம். அப்படி ஒரு ஓட்டம். கொஞ்சம் ஓய்வெடுத்துவிட்டு ஓடுவோம் என்று நினைத்தது உளுந்துவடை. அப்படியே எதிரில் தெரிந்த வீட்டுக்குள் போய் தட்டில் படுத்து உறங்கியது.

உறக்கத்திலேயே,

“ . ஓட்டைவடை நான்

உளுந்து வடை நான்

உலகம் சுத்திப் பார்க்கப்போகும்

ஓட்டைவடை நான்

ஓடி ஓடி விரட்டினாலும்

பறந்து பறந்து வந்தாலும்

குதித்து குதித்து வந்தாலும்

துரத்தித் துரத்தி வந்தாலும்

பிடிக்கமுடியாது

என்னைப் பிடிக்கமுடியாது ”

பாடியது.

எங்கே போச்சு? எப்படி வந்தது? என்று ஆச்சரியப்பட்ட பாட்டி  வடையை பிய்த்து வாயில் போட்டார் பாட்டி.

” என்னைப் பிடிக்க முடியாது..”  பாடிய படியே பாட்டியின் வயிற்றுக்குள் பத்திரமாகப் போனது உளுந்துவடை.

நன்றி - விஞ்ஞானத்துளிர் அறிவியல் மாத இதழ்

 

.


No comments:

Post a Comment