Sunday 8 July 2012

இரவின் காட்டில்..

 

திரைப்பட இயக்குநர் குமார் ஸஹானி

 

தமிழில் – உதயசங்கர்

John_Abraham_director_300 

உர்பினோ என்ற புராதன இத்தாலி நகரத்தில், குன்றின் உச்சிக்கு வளைந்து செல்கிற வெள்ளைக்கல்பாதை எங்களை அற்புதமான தோரணவாயில்களினூடாக ஒரு மியூசியத்தில் கொண்டு போய்ச் சேர்த்தது. கன்னிமேரியின் சிலைக்கு முன்னால் என்னை மறந்தநிலையில் நான் நின்றதை நினைத்துப் பார்க்கிறேன். அவள் குழந்தையைச் சாய்த்துப் பிடித்திருந்தாள். அந்தக் குழந்தையின் கண்களால் நம்மைக் கட்டிப் போடப் போவதைப் போல. கற்சிலைகளுக்கு நாம் அர்ச்சனை செய்கிற சிவப்புப் பூக்கள் அந்த விக்கிரகங்களைச் சுற்றிலும் ஒளி வீசிக் கிடந்தன. கடைசியில் ஒருவன் எப்போதும் மரியத்தின் பார்வையில் திரும்பிச் செல்கிறான். சொந்த அவயவங்களைப் போல அவள் அந்தக் குழந்தையைப் பிடித்திருந்தாள். ’ அவன் அவளுடைய பலியாவான் ‘ சாந்தமும் தெளிவுமாக அடக்கமான ஒரு வார்த்தை.

மரியத்தினுடைய பார்வையை விடத் தீர்க்கமாக அந்தக் குழந்தையைப் பார்த்துக் கொண்டு எனக்கருகில் ஜான் ஆபிரகாம் நின்று கொண்டிருந்தார். ‘ ஆமாம் ‘ என்று நான் சொன்னேன். அதற்கு மேல் நான் சொல்ல வேண்டிய அவசியமில்லை.

பலி கொடுக்கப்பட வேண்டிய குழந்தை தான் தானென்று ஜானுக்குத் தெரிந்திருந்தது. ஒரு வகையில் இது அவருடைய தீர்மானமாகவும் இருந்தது. நம்முடைய அமைப்பின் சூழ்நிலைகளினால் நாம் இதைப் போன்ற பழைய நடைமுறைகளை யோசிக்கிறோமோ என்று நான் அதிர்ச்சியடைவதுண்டு. இந்த தரித்திரபூமியை உய்விப்பதற்காக தன்னுடைய கலைப்படைப்புகளைப் பலி கொடுத்து, எல்லாம் இழந்து இளமையிலேயே இறந்து போகிற தீர்க்கதரிசியாக விதிக்கப்பட்டவனோ கலைஞன்?

” அம்ம அறியானில்” வருகிற அம்மா பலஹீனமானவள். ஆனால் அவள் பிறந்தவுடன் இறந்து போகிற ஏராளமான குழந்தைகளுக்கு உயிர் தருகிறாள். அவர்கள் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு பெயர் கொடுக்க வேண்டியிராவிட்டால் அவர்கள் எல்லோருக்கும் ஒரு ஒற்றுமையைத் தருவதற்கு ஜான் விரும்பினார். அதொன்றும் எளிதானதில்லை. பெயர்கள் ஒவ்வொரு விதத்தில் வேறுபடும். அவை அவர்களை ஜாதி, மத, சமூக வட்டத்துக்குள் ஒதுக்கித் தள்ளிவிடும். அதைத் தாண்டி அவர்களால் போக முடிவதில்லை.

” அம்ம அறியான் “ வெளியிடுவதற்கு முன்பு மக்களோடு சேர்ந்து வேலை செய்து மக்களிடம் சென்றடைவதைப் பற்றி ஜான் சொன்னார். முகமில்லாத மக்களின் பேரில் பேசுகிற எல்லாசர்வாதிகாரிகளையும், அரைத் தெய்வங்களையும் பற்றி யோசித்துக் கொண்டே ஆடிட்டோரியத்தில் பெரிய நாற்காலியில் உட்கார்ந்து கொண்டு நான் சிந்தனையில் மூழ்கிப் போனேன்.

ஆனால் ஜான் வித்தியாசமானவராக இருந்தார். அவருடைய குரல் தாழ்ந்தும் சாந்தம் நிறைந்தும் இருந்தது. இரவின் காட்டில் அலைந்து திரிந்து வந்து சேர்ந்தவனின் களைத்துப் போன குரலாக இருந்தது. அந்தக் குரலிலிருந்து அவர் சோர்ந்து போயிருந்தார் என்று தோன்றியது. அவருக்குக் கொஞ்சம் குடிக்கவேண்டும் போலிருந்தது. வார்த்தைகளில் வேகம் குறைந்திருந்தது. அம்மாவினுடைய களங்கமில்லாத ஏக்கத்தை அதனூடே பார்க்க முடிந்தது.

யதார்த்தத்திலிருந்து நம்மைக் காப்பாற்ற வேண்டி நம்மைச் சுற்றி மூடியுள்ள வெளிச்சம் புகமுடியாத கூடுகளை ஜான் ஒரு போதும் சகித்ததில்லை. ஒரு தடவை நாங்கள் சேர்ந்து சென்ற புகைவண்டிப் பிரயாணத்தில் அவர் சந்தோஷமான முகங்களைப் பார்த்து கை தட்டிச் சந்தோஷப்பட்டார். தான் என்ற அகங்கார முகமூடியணிந்தவர்களை அவர் ஒரு தாயின் கனிவுடன் பார்த்தார்.

1985 ஆம் ஆண்டு ஜூனில் பெசாரோவில் அவருடைய மிகப் புகழ்பெற்ற திரைப்படம் திரையிடப்பட்ட போது முன்னாலிருந்து அவர் ஊளையிட்டார். எல்லாவிதமான பொய்யான புகழுரைகளையும் ஒதுக்கித் தள்ளினார். தன்னைப் பற்றி அறிந்த ஒரு கலைப்படைப்பின் பொய்யான சுமைகளை நிராகரிப்பதற்காக மட்டுமில்லை. சொந்த இமேஜுக்காக சினிமாக்காரர்கள் போடும் பொய்யான நடிப்பையும் கிழித்தெறிவதற்காகவும் தான்.amma

இமேஜிலிருந்து மட்டும் உருவாகும் ஆளுமை வெறும் சூனியம் தான் என்று பின்னால் அறிந்து கொள்ள முடியும். தான் யாரென்று அறியுமுன்பே கண்ணாடியில் சொந்த பிரதிபிம்பத்தைத் தெரிந்து கொள்கிற குழந்தையைப் போல இமேஜினுடைய பொய்யான பாத்திரத்தில் ஒருவன் தன்னை அடைத்துக் கொள்வானோ? குளிக்கும்போது தன் பிரதிபிம்பத்தைப் பார்க்கிற இளைஞனிடமிருந்து தான் “ அம்ம அறியான் “ தொடங்குகிறது. பின்னால் வாழ்வையிழந்த ஏராளமான முகங்களில் இந்தப் பிரதிபிம்பம் நிழலாகத் தொடர்ந்து வரும். மறுபுறத்தில் உயிருள்ள ஒரு உடம்பின் செல்களைப் போல மக்கள்தொகை பெருகிக் கொண்டே போகிறது. கர்ப்பப்பையிலிருந்து வெளியே வருவதற்குள் தன்னை உருவாக்கிக் கொள்ளவும் , வெளியே வந்து வளர்ந்து முரண்பாடுகளோடு, சொல்ல முடியாத வேதனைகளை அநுபவிக்க வேண்டி வரும் என்பது தான் விதி. வெளியுலகிற்குப் பாய்ந்து வரும்போது ஆயிரம் மரணம் நேர்ந்தாலும் அது கோழைத்தனமாகாது. துணிவு மிக்கது. புழுவுக்கும் பட்டாம்பூச்சிகளுக்கும் கூட பிரிவுகளும் மரணமும் உண்டு.

வேறு எதற்காக இல்லையென்றாலும் ஒரு கனவை நனவாக்க வேண்டி மோசமான பிர்ச்னைகளை எதிர்கொள்ள வேண்டி தன்னை அர்ப்பணிக்க ஜான் நினைத்தார்.

முதல் கேரளப் பிரயாணத்துக்குப் பின் நானும் என் மனைவியும் ஜானை சென்னையில் சந்தித்தோம். திருச்சூருக்குப் பக்கத்தில் சொர்க்கம் போல ஒரு இடம் கண்டுபிடித்திருப்பதாக எங்களிடம் சொன்னார்.

“ வாங்க.. எங்க ஊருக்கு வந்து இருங்க..” என்று ஜான் கூறினார்.

“ நாங்க அங்கே வந்து என்ன செய்ய ஜான்? “

“ நீங்க திரைப்படம் எடுங்க.. உங்களுக்காக நான் உழைக்கிறேன்.. பசிக்கும் போது சீனிக்கிழங்கும் மீனும் தர்றேன்..”

தன்னைப் பாதித்தவர்களிடம் ஜான் கொள்ளும் ஆவேச உணர்ச்சி ஜானைத் தெரியப்படுத்தும். டெல்லியில் லோதி கார்டன்ஸில் ஒரு இரவில் ஜான் ஒரு முதிர்ந்த மரத்தைக் கட்டியணைத்துக் கொண்டார். அவருடைய முகம் முழுவதும் எறும்புகள் ஊர்ந்து கடித்தன. வாழ்க்கையில் மிகவும் சந்தோஷமான ஒரு நிமிடமாக இந்த நிகழ்வை வெகுகாலம் வரை ஜான் நினைவு கொண்டிருந்தார்.

எல்லா நிலைகளிலும் ஜானுடைய இடைவிடாத நாடோடி வாழ்க்கை உறுதியாகவே இருந்தது. அதில் தார்மீகம் எதுவுமில்லை. ஆனால் ஏக்கங்கள் இருந்தன. அம்மாவிடம் கொண்ட பொறாமை ஜானை ஒரு நார்சிஸ்ட் ஆக்கி விட்டது. ஆக்கசக்தி, அழிவுசக்திகளையெல்லாம் தன் மீது ஏற்றிக் கொள்கிற ஒரு குட்டி நார்சிஸ்ட் நம் எல்லோரிடமும் இருக்கிறான். ஒரு கட்டம் வரை ஜான் அம்மாவோடு கொண்ட பொறாமை, அவர் பாட்டில்களைப் பிடித்ததைப் போல என்றும் பால் சுரக்கும் மார்புகளைப் பிடித்துக் குடித்ததனால் இருக்கலாம்.

இந்தப் பொறாமையை ஜான் தன்னுடைய கடைசிக் காலத்தில் கடந்துவிட வேண்டுமென்று உணர்ந்தார் என்று எனக்குத் தோன்றியது. தனக்கேயுரிய வழியில் அவர் அந்த அம்மாவாக மாறுவதற்கு ஆசைப்பட்டார். இலைகளும், பூக்களும் மலர்ந்து சேர்கிற பூங்காற்றின் ஸ்பரிச சுகத்தை அவர் விரும்பினார். நிலைபாட்டிற்கான ஜியோமிதி அவரை வசீகரித்தது. ஆனால் சூனியவெளியிலுள்ள அறிவுப்பூர்வமான சிறகசைப்புகள் அம்மாவினெதிரே அவமானங்களாயின. உண்மையில் தான் நிலை நிறுத்த விரும்பிய முடிவில்லாத உறவு ஒருவேளை ஜானுக்குப் போரடித்திருக்கலாம்.

வயக்காட்டில் அடர்ந்த பச்சைப்புற்களின் மீது நின்று தலையைத் திருப்பினார். இசையிலும், அவர் விரும்பிய மற்ற விஷயங்களிலும் திருப்தியே அடைந்தார். பெண்களிடம் மடோன்னாவைப் போல ஆக வேண்டும் என்று வேண்டினார். அந்தப் பெண்களும் அவர் தங்களை ஒப்பிட்டுப் பார்க்கிறார் என்று புரிந்து கொண்டார்கள்.

போகப் போக உலகத்துக்கு அர்ப்பணிக்கப் படுகிற பலிக்குழந்தையிடத்திலும் கண்ணாடி பிம்பத்திலும் தன்னைத் தேடினார். கன்னி மேரியுடன் தன்னை ஒப்பிட்டுப் பார்த்தார். கியோவானி பெல்லினியுடைய 1460 க்கும் 1464 க்கும் இடையிலுள்ள ஓவியங்களில் ஜான் தன்னைத் தானே கண்டு கொண்டிருக்க வேண்டும். தன்னுடைய சரீரத்திலிருந்து வெளியேறிய நிமிஷத்திலேயே வேறாக மாறிவிடுகிற குழந்தையின் சரீரத்தைக் கண்டு ஆனந்தப்படுகிற மடோன்னா தான் இந்த ஓவியங்களில் இருந்தாள். உலகத்தோடு தன்னை வேறுபடுத்துகிற ஏதோ ஒன்று போல, தான் ஆசைப்படுகிற ஒரு அழகிய கனவின் வெளிப்பாடு அந்த முகத்தில் இருந்தது.

ஜானுடைய அடுத்த திரைப்படத்தில் அம்மாவிடம் ஒரு பிணமோ, கடிதமோ, செய்தியோ, கொண்டு போகத் தேவையில்லை. அவருக்கு நூறு வயது ஆகியிருக்கும். அவருக்கு வேண்டி ஒரு பலி அவசியமாகவும் இருக்கும்.

( ஜான் ஆபிரகாம் நினைவாக..)

2 comments:

  1. உதய சங்கர் அவர்களே! ஜாண் அவர்களின் "அக்கிரஹாரத்தில் கழுதை" என்ற தமிழ் திரை ப்படத்தைப் பார்த்திருக்கிறீர்களா! மிகச்சிறந்த படம்..அதனுடைய Film script புத்தகமாக வெளிவந்துள்ளாது. என்னிடமிருந்ததை மதுரை மார்க்ஸ் நூலகத்திடம் கொடுத்துவிட்டேன். அவர் எல்.ஐ.சி.யில் தான் முதலில் பணியாற்றினார். திரைப்படத்தின் மீதிருந்த ஆவலால் புனே திரப்படக் கல்லுரியில் செர்ந்தார். எல்.ஐ.சி நண்பர்கள் மாதாமாதம் பணம் அனுப்பி உதவி செய்தார்கள்.---காஸ்யபன்

    ReplyDelete
    Replies
    1. ஜானுடைய அக்கிரகாரத்தில் கழுதை, க்ரூர கிருத்தியங்கள், அம்ம அறியான், படங்களைப் பார்த்திருக்கிறேன், தோழர். அவர் எல்.ஐ.சி.யில் பணியாற்றியது என்ற தகவல் எனக்குப் புதிது. நன்றி.

      Delete