Thursday 28 June 2012

இனிக்கும் திராட்சை

உதயசங்கர்red-fox-and-grapes-shakila-malavige

அன்று இருட்டியதிலிருந்தே நரியாருக்கு எதுவுமே சாப்பிடக் கிடைக்கவில்லை. என்றுமே இப்படி நடந்தது கிடையாது. பொழுது அடையும் போது படுத்து உறங்கிய புதரிலிருந்து வெளியே வந்து உடம்பை நெளித்து நீட்டி நீண்ட கொட்டாவி விடுவார் நரியார்.

தலையை உதறி கண்களை அகலத் திறந்து பார்த்தால் எதிரே அவர் தின்பதற்கு ஏதாவது தயாராக இருக்கும். ஒரு முயல் மேய்ந்து கொண்டிருக்கும். ஒரு காட்டுக் கோழி உட்கார்ந்து கொண்டிருக்கும். ஒரு கௌதாரி பம்மிக் கொண்டிருக்கும். அட, ஒண்ணுமில்லைன்னா ஒரு காட்டெலியாவது அலைந்து திரிந்து கொண்டிருக்கும். உடனே மின்னலடித்த மாதிரி மூளை சுறுசுறுப்படையும். உடம்பின் ஒவ்வொரு அணுவிலும் ரத்தம் துடிக்கும். அப்படியே பாய்ந்து அதை லபக்கென்று பிடித்து உணவாக்கிக் கொள்வார். அப்படிச் சாப்பிடும் போதே பற்களையும் துலக்கிக் கொள்வார்.

ஆனால் இன்னிக்கு அதிசயமாய் இருக்கிறது. தூங்கி எழுந்து வெளியே வந்து பார்த்தால் ஒரு சுடுகுஞ்சியைக் கூடக் காணவில்லை. ஒரு முயலோ,ஒரு எலியோ, அட ஒரு வெட்டுக்கிளியைக் கூடப் பார்க்கமுடியவில்லையே. எல்லோரும் வேறு காட்டுக்கு ஓடிப் போய் விட்டார்களா? நரியாருக்கு எதுவும் புரியவில்லை. பசி வயிற்றைக் கவ்வியது.

உணவைத் தேடி ஓட வேண்டிய நிலைமை வந்து விட்டதே. காற்றில் மூக்கால் வாசனையை உறிஞ்சி உறிஞ்சிப் பார்த்தது. பசியும் அதிகரித்துக் கொண்டே வந்தது. ஆனால் நிற்காமல் ஓடிக் கொண்டிருந்தார் நரியார். இதுவரை கண்ணுக்கு எதுவுமே அகப்படவில்லை. என்ன சோதனை இது?

நிலவு பொழிந்து கொண்டிருந்தது. கொஞ்சம் நின்று யோசிக்கலாம் என்று நினைத்த நரியார் சட்டென நின்றார். சுற்றும் முற்றும் பார்த்தார். காட்டை விட்டு வெகுதூரம் வந்திருந்தார் நரியார். ஏதோ ஒரு வாசனை காற்றில் மிதந்து வந்தது. ஒரு பழவாசனை. சரி இன்னிக்கு சைவச்சாப்பாடு தான் என்று முடிவு செய்து கொண்டார். பழவாசனையை முகர்ந்து கொண்டே அதன் பின்னால் ஓடினார்.

திராட்சைப் பழத்தோட்டம். அங்கே திராட்சைப் பழங்கள் கொத்துக் கொத்தாய் பழுத்துத் தொங்கிக்கொண்டிருந்தன. நன்றாகப் பழுத்த கருந்திராட்சைப் பழங்கள். நரியாரின் நாக்கில் எச்சில் ஊறியது. உடனே நரியார் நல்ல வாகான தூரத்தில் போய் நின்று திரும்பி ஓடி வந்து துள்ளிக் குதித்தார். பழங்களைத் தொடக் கூடமுடியவில்லை. திரும்பவும் போய் ஓடி வந்தார். ம்ஹூம்..

சோர்வாய் இருந்தது. அப்போது அவருடைய கொள்ளுத் தாத்தா சொன்ன கதை ஞாபகத்துக்கு வந்தது. அதான் ச்சீ..ச்சீ..இந்தப் பழம் புளிக்கும் என்று தாத்தா சொன்னாரோ. கிடைக்கலன்னா இப்படி ஏதாச்சிம் சொல்லிக் கிட வேண்டியதான். அப்படியே திராட்சை கொடி நிழலில் உட்கார்ந்து யோசித்தார். திரும்பிப் போய் வேறு உணவு தேடலாமா என்று நினைத்தார். இத்தனை முறை முயற்சி செய்தும் கிடைக்கவில்லயே. இல்லை. கொள்ளுத்தாத்தாவைப் போல் மனந்தளரக் கூடாது. மாத்தி யோசிக்க வேண்டும். என்ன செய்யலாம்? சில நொடிகளில் பளிச் சென்று ஒரு யோசனை வந்தது.

சுற்றும் முற்றும் பார்த்தார் நரியார். ஒரு பெரிய கல் கிடந்தது. அதை மூக்கால் தள்ளிக் கொண்டு வந்தார். திராட்சைப் பழங்களுக்குக் கீழே வைத்து விட்டு, கல்லிலிருந்து கொஞ்ச தூரம் தள்ளிப் போய் நின்றார். ஓடி வந்து அந்தக் கல்லில் முன்கால்களை ஊன்றி பின்கால்களை காற்றில் உதைத்து ஓங்கி ஒரு குதி குதித்தார்.

என்ன ஆச்சரியம்!

குதித்திறங்கிய நரியாரின் வாயில் ஏராளமான பழக்குலைகள். மேலும் நிறையப் பழங்கள் தரையில் விழுந்து சிதறின.

வயிறு முட்ட அந்தப் பழங்களைத் தின்றார்.

பின்பு “ அடடா.. இந்தப் பழம் இனிக்கும்..” என்று சொல்லிக் கொண்டே காட்டைப் பார்த்து ஓடினார்.

2 comments: