Thursday 8 August 2024

எங்கள் தாஸ்தயேவ்ஸ்கியை ஏன் சூதாட வைத்தீர்கள் பலீனா ஸூஸ்லோவா அல்லது பலீனா அலெக்சாந்திரேவ்னா ?

 

எங்கள் தாஸ்தயேவ்ஸ்கியை ஏன் சூதாட வைத்தீர்கள் பலீனா ஸூஸ்லோவா அல்லது பலீனா அலெக்சாந்திரேவ்னா ?

உதயசங்கர்




மதிப்புக்கும் மரியாதைக்குமுரிய பலீனா ஸூஸ்லோவா அல்லது பலீனா அலெக்சாந்திரேவ்னா!

உங்கள் காதல் விளையாட்டுக்கு பாவம் எங்கள் தாஸ்த்யேவ்ஸ்கி தான் கிடைத்தாரா?  வாழ்நாள் முழுவதும் அதிதீவிர மனநிலைச் சிகரங்களுக்கிடையில் அலைபாய்ந்துகொண்டிருந்த தாஸ்தயேவ்ஸ்கி, மரணத்தின் எல்லைக்கோட்டைத் தொட்டுத் திரும்பிய தாஸ்தயேவ்ஸ்கி, ஸைபீரியாத் தணடனைக்காலத்தில்  மனித மனதின் இருள்பள்ளத்தாக்குகளை அறிந்த தாஸ்தயேவ்ஸ்கி, வாழ்நாள் முழுவதும்    வலிப்பு நோயாலும் வறுமையின் கொடுமையாலும் அவதிப்பட்ட தாஸ்தயேவ்ஸ்கி, குற்ற மனங்களின் அனாடமி, பிசியாலஜி, பற்றி ஒரு மேதையாக மனிதகுலத்துக்குக்கொடையாகத் கதைகளெழுதிய தாஸ்தயேவ்ஸ்கி கிடைத்தாரா?

நீங்கள் அவருடைய வாழ்க்கையில் தலையிடாமலிருந்தால் ஒருவேளை உங்களைத் தேடிப் பாரீசுக்குப் போயிருக்க மாட்டார். அப்படிப் போயிருக்காவிட்டால் வழியில் எதிர்ப்பட்டவெஸ்பேடன் நகருக்குப் போயிருக்க மாட்டார். காஸினோவில் ரூலெட் என்ற சூதாட்டத்தை ஆடியிருக்க மாட்டார். காதலின் பித்து சூதாட்டத்தின் பித்தாக மாறியிருக்காது. பித்தின் வெறியில் கடைசி கூல்டின் வரை வைத்து ஆடியிருக்க மாட்டார். அவரைப் பாரீசுக்கு வரவழைத்து நீங்கள் இன்னொருவரைப் பிக் அப் செய்து கொண்டு போய் விட்டீர்கள்.

இது நியாயமா? சொல்லுங்கள் பலீனா.

ஆனால் அதனால் எங்களுக்கு சூதாடி என்ற நாவல் கிடைத்தது. எங்கள் அருமை தாஸ்தயேவ்ஸ்கிக்கு அவரை இறுதிவரை போற்றிப் பாதுகாத்த அன்னா கிரிகோவ்யேவ்னா கிடைத்தார். அதற்காக உங்களை மன்னிப்பது மட்டுமில்லை நன்றியும் தெரிவித்துக் கொள்கிறேன்.

சூதாடியை வாசித்த ஞாபகமே இல்லை. மனதில் அந்த நாவல் தாஸ்தயேவ்ஸ்கி சிறுகதைகளும் குறுநவல்களும் என்ற தொகுப்பில் இருப்பதாக ஒரு மனப்பதிவு இருந்து கொண்டேயிருந்தது. ஆனால் சூதாடியைப் பற்றிப் பேசியிருக்கிறோம். நாற்பது ஆண்டுகளுக்கு முன்பு கையில் கிடைத்த புத்தகங்களையெல்லாம் அதன் ருசியறியாமல் மூளைக்குள் திணித்துக் கொண்டிருந்த  இளமைக் காலத்தில் என்றோ எப்போதோ வாசித்த போது சூதாடியின் நுட்பமும் ஆழமும் தெரியவில்லை. அதன் பின்னணி தெரியவில்லை. தாஸ்தயேவ்ஸ்கி என்ற உன்னதமான இலக்கியமேதையைத் தெரியவில்லை.  

1881 – ஆம் ஆண்டு 25 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை மாலை தாஸ்தயேவ்ஸ்கியின் வீட்டில் ஒரு விருந்து நடந்தது.விருந்துக்குப் பின் சகோதரியுடனான சச்சரவினால் உணர்ச்சிவயப்பட்ட தாஸ்தயேவ்ஸ்கி தன் அறைக்குச் செனறார். சிறிது நேரத்தில் ரத்த வாந்தியெடுத்தார். ஏற்கனவே நோயுற்ற நுரையீரலின் ரத்தத்தமனி அறுந்து ரத்தம் வெளியேறியது. 27 ஆம் தேதி மருத்துவர் பார்த்துவிட்டு கைவிரித்து விட்டார். 28 ஆம் தேதி தன்னுடைய மரணத்தைத் தானே உணர்ந்து கொண்டவர் போல தாஸ்தயேவ்ஸ்கி அன்னாவிடம் விவிலியப்புத்தகத்தை வாசிக்கும்படி கூறினார். பாதிரியாரை வரவழைக்கச் சொன்னார். இறுதிப்பிரார்த்தனை செய்தார். இரவு 8.30 மணிக்கு அவருடைய உயிர் பிரிந்தது.

ருஷ்யாவில் புஷ்கினின் மரணத்துக்குப் பிறகு மாபெரும் நிகழ்வாக தாஸ்தயேவ்ஸ்கியின் இறுதி நிகழ்வேயிருந்தது. 30000 பேர் கலந்து கொண்ட இறுதி ஊர்வலம் அந்த மகத்தான மேதை எப்படி ருஷ்ய மக்களின் மனங்களில் குடியிருந்தாரென்பதைக் காட்டியது.

பலீனா உங்களுக்குத் தெரியுமா? எப்பேர்ப்பட்ட இலக்கிய மேதை உங்களைக் காதலித்தாரென்றோ, உங்களுக்காக தன் மேல்கோட்டு உட்பட சூதாட்டத்தில் பணயம் வைத்தாரென்றோ உங்களுக்குத் தெரியுமா? நீங்கள் அவரை ஏமாற்றினீர்கள். அலைக்கழித்தீர்கள். ஆனால் அவரோ உங்களை அதாவது பலினா ஸூஸ்லோவா என்ற பலீனா அலெக்சாந்திரவ்னாவாக படைத்து நிரந்தரப்படுத்தி விட்டார். காலத்தின் இலக்கியச் சிற்பமாக நீங்கள் சூதாடியில் திகழ்கிறீர்கள். அதற்காகவும் உங்களுக்கு நன்றி

        உலக இலக்கியத்தின் உன்னத மேதையான எங்கள் பிரியத்துக்குரிய தாஸ்தயேவ்ஸ்கி, சூதாடி நாவலை கடுமையான நெருக்கடியில் எழுதத் தொடங்கினார். அவருடைய கடன்களை அடைப்பதற்காக 3000 ரூபிள் கடன் தருவதற்கு டெஸ்லோவ்ஸ்கி என்ற பதிப்பாளர் ஒத்துக் கொள்கிறார். அதற்கு அவர் வைக்கும் நிபந்தனை இன்னும் ஒரு மாத காலத்துக்குள் தாஸ்தயேவ்ஸ்கி ஒரு புதிய நாவலை எழுதிக் கொடுக்கவேண்டும். அப்படி ஒரு நாள் தாமதமானாலும் தாஸ்தயேவ்ஸ்கியின் மொத்தப்படைப்புகளின் பதிப்புரிமையும் தனக்குச் சொந்தம் என்ற நிபந்தனைக்காக அவசர அவசரமாக சூதாடியை எழுதினாரென்பதாவது உங்களுக்குத் தெரியுமா பலீனா?

பலீனா உங்கள் மீதான வெறித்தனமான காதலுக்காக அலெக்சேய் தன் உயிரையேத் தரத் தயாராகவிருக்கிறான். உங்களுக்காகத் தான் கேஸினோவுக்குள் சென்று ரூலெட் ஆட்டத்தில் கலந்து கொள்கிறான். சூதின் வெறி மெல்ல மெல்ல ஏறுவதையும், மனிதமனம் எப்படி சூதாட்டத்துக்கு அடிமையாவதையும் இவ்வளவு அற்புதமாக, உளவியல் ரீதியாக வேறு யாரேனும் சித்தரித்திருக்கிறார்களாவென்று தெரியவில்லை.

‘ சிலர் வெற்றி பெற்றுப் பணத்தை அள்ளிச் செல்வதையும், ஏனையோர் இழந்து விட்டு நிற்பதையும் பொறுத்தவரை இது ரூலெட் ஆட்டத்தில் மட்டும் தானா நடைபெறுகிறது எங்குபார்க்கினும் சிலர் வென்று கொண்டும்கொள்ளையடித்துக் கொண்டும் தானே இருக்கிறார்கள்! ‘

‘ எதனாலோ எனக்குத் தெரியாது. அவசியம் நான் வெற்றி பெற்றாக வேண்டும் என்று மட்டும்தான் எனக்குத் தெரியும். இதைவிட்டால் எனக்கு வேறுவழியே இல்லை.நிச்சயம் நான் வெற்றி பெறுவேன் என்ற எனது உறுதிக்கு இதுவே காரணமாய் இருந்தாலும் இருக்கலாம்..

அலெக்சேய்க்கு என்ன ஒரு நம்பிக்கை. பலீனாவுக்காகத்தன்னுடைய உயிரை மட்டுமல்ல ஆன்மாவையே பலியிடத் தயாராக இருக்கிறான். ஆனால் பலீனா நீங்கள் அந்தப் பிரெஞ்சுக்காரரைன் தெ கிரி மீது மையல் கொண்டிருக்கிறீர்கள்.ஆங்கிலேயென் அஸ்ட்லேயிடம் பசப்புகிறீர்கள். ஆனால் உண்மையான காதல் கொண்ட அலெக்சேயை ஒரு வேலைக்காரனைப் போல நடத்துகிறீர்கள். நீங்கள் பட்ட கடனுக்காகவே அலெக்சேய் சூதாட்டவிடுதியில் கிடக்கிறான். ஆனால் அவன் வெற்றி பெற்ற பணத்தைக் கொடுத்தபோது அதை அவன் முகத்தில் வீசி, என்னை விலைக்கு வாங்க நினைக்கிறாயா என்று அவமானப்படுத்துகிறீர்கள். இறுதிவரை உங்கள் காதலுக்காக ஏங்கித் தவிக்கும் அலெக்சேய் உதாசீனம் செய்கிறீர்கள். காதலென்பதே உதாசீனம், நிராகரிப்பு,  அவமானம், இவற்றையெல்லாம் சேர்த்தழைத்துக் கொண்டே வருவது தான் காதலோ.

இறந்து போய் விடுவாரென்று எதிர்பார்த்திருந்த கோமகள் அன்தெனீனா பாட்டி திடீரென்று புயல் மாதிரி வந்து சூதாட்டத்தில் ஒரு லட்சம் ரூபிள்களை இழந்துவிட்டுப் போகிறாள். சூதின் இருள் எந்த வயதினரையும் பீடித்து தன்னுடைய கொடும் சிறைக்குள் தள்ளிவிடுமென்பதை தாஸ்தயேவ்ஸ்கி சொல்கிறார். அலெக்சேய், பலீனா, ஜெனரல், பிளான்ஷூ,  தெ கிரியெ, அஸ்ட்லே, என்று மிகச்சில கதாபாத்திரங்களைக் கொண்டு ஒரு சிறு காவியத்தைப் படைத்திருக்கிறார் எங்கள் தாஸ்தயேவ்ஸ்கி.

“ காதலை எதிர்கொள்ளும்போது தாஸ்தயேவ்ஸ்கி நிராதரவானவர், ஒன்று மிருகத்தனமான காமம் இல்லையென்றால் ஒரு மாசோக்கிஸ்டின் அடிபணிதல், இதுவுமில்லையென்றால் இரக்கத்திலிருந்து உருப்பெறுகிற காதல்..இப்படித்தான் தாஸ்தயேவ்ஸ்கி தன்னுடைய படைப்புகளில் காதலைச் சித்தரிக்கிறார்.

சூதாடியை தாஸ்தயேவ்ஸ்கிச் சொல்லச் சொல்லச் சுருக்கெழுத்தில் எழுதிப் பின்னர் விரித்தெழுதிக் கொடுக்கும் வேலைக்காகச் சேர்ந்த அன்னா சொல்கிறார்,

“ தன் சம்பாத்தியம் முழுவதையும் சூதாடித் தொலைத்த பாட்டி தான் எனக்குச் சூதாடியில் மிகவும் அனுதாபத்தை ஏற்படுத்திய கதாபாத்திரம். நான் பலீனாவையும் முக்கியக் கதாபாத்திரமான அலெக்சேயையும் வெறுத்தேன். ஆனால் சூதாட்டப்பித்தையும், பலவீனங்களையும் நான் நேசித்தேன். ஆனால் தாஸ்தயேவ்ஸ்கி முற்றிலும் சூதாட்டக்கரனின் பக்கமாகத் தான் நின்றார். சூதாட்டக்காரனின் பல உணர்ச்சிகளும் அனுபவங்களும் தன்னுடையது தான் என்று அவர் சொன்னார். “

என்று அன்னா தன் நினைவுக்குறிப்புகளில் எழுதியிருக்கிறார். கையிலிருக்கும் கடைசிக் காசையும் சூதாட்ட்த்தில் வைத்து தன்னுடைய அதிர்ஷ்டத்தைப் பரிசோதிக்கும் மனதின் பலவீனம் அல்லது பலம் தான் என்ன? நாவலின் இறுதியில் கூட அலெக்சேய் சூதாடுவதாகவே முடிகிறது.

ஆனால் பலீனா ஒன்று கவனீத்தீர்களா? நாவலின் கடைசிவரை அலெக்சேய் அதாவது தாஸ்தயேவ்ஸ்கி உங்களைப் பற்றி அலெக்சேய்க்கு இவ்வளவு செய்திருந்தும் ஒரு வார்த்தை கூடத் தவறாகச் சொல்லவில்லை. இன்னும் சொல்லப்போனால் நீங்கள் அவரைக் காதலிப்பதாகவே முடித்திருப்பார். எத்தகைய உயர்ந்த காதல் உங்கள் மீது கொண்டிருந்தார் தாஸ்தயேவ்ஸ்கி என்பதை உணர்ந்திருக்கிறீர்களா?

இருண்டமனதின் ஷேக்ஸ்பியர் என்றும் டெவில் ஜீனியஸ் என்றும் அழைக்கப்பட்ட தாஸ்தயேவ்ஸ்கி தன்னுடைய படைப்புகளின் வழியே உளவியல் என்ற புதிய கல்விப்புலம் உருவாகக் காரணமாக இருந்திருக்கிறாரென்பது உங்களுக்குத் தெரியுமா? வாழ்நாள் முழுவதும் பிரத்யேகமான வலிப்பு நோயினால் பாதிக்கப்பட்ட தாஸ்தயேவ்ஸ்கி அவருடைய பல கதாபாத்திரங்களையும்  வலிப்பு நோயினால் அவதிப்படுபவர்களாகச் சித்தரித்திருக்கிறார். அந்த நோய் இப்போது மருத்துவ அகராதியில்  தாஸ்தயேவ்ஸ்கிவலிப்புநோய் என்ற பெயருடன் நிலைத்து நின்று விட்டது. அவருக்கு வரும் வலிப்புநோயைப் பற்றி அவரேவிவரிக்கிறார்,

“ சொர்க்கம் பூமிக்கு இறங்கி வந்து என்னைக் கவர்ந்திழுப்பதாக என்க்குத் தோன்றியது. உண்மையைச் சொல்கிறேன். கடவுளைக் காணவும் அவரில் கலக்கவும் என்னால் முடிந்தது. வலிப்பின் நேரத்தில் நான் சொர்க்கத்திலிருந்தேன். இந்த உலகத்தின் மற்ற அனைத்து இன்பங்களையும் தருகிறேனென்று சொன்னாலும் இந்தச் சொர்க்கத்தை நான் யாருக்கும் விட்டுக் கொடுக்க மாட்டேன்…

பரவச வலிப்பு நோய் என்று புதிய நோய் வகைமையைக் கண்டுபிடிக்கவும் உதவியிருக்கிறார் தாஸ்தயேவ்ஸ்கி என்பது தெரியுமா பலீனா அவர்களே!

காதல் மர்மமானது. துன்பமானது. விந்தையானது. மனிதனைக் கடவுளாகவும் கடவுளைச் சாத்தானாகவும் மாற்றுகிற வல்லமை கொண்டது என்பதை சூதாடி மூலம் உணர்த்திய இலக்கியத்தின் சிகரமே தாஸ்தயேவ்ஸ்கி உங்களை வணங்குகிறேன்.

பலீனா!  நீங்கள் தாஸ்தயேவ்ஸ்கியைக் காதலித்த தருணங்களுக்காக நன்றிகள். அவரைக் கைவிட்ட தருணத்திற்காக கோடானு கோடி வணக்கங்கள்!

பலீனா ஸூஸ்லோவா அல்லது பலீனா அலெக்சாந்திரவ்னா உங்கள் கையில் முத்தமிட அனுமதியுங்கள்.

நன்றி.



Tuesday 6 August 2024

வணங்குகிறேன் உமர்தாதா!

வணங்குகிறேன் உமர்தாதா!

உதயசங்கர்

 


உண்மையில் சொல்கிறேன். நாற்பது ஆண்டுகளுக்கு முன்பு முதல் முறை வாசித்த போது எதுவுமே புரியவில்லை. பசிக்காகவும் இல்லாமல் ருசிக்காகவும் இல்லாமல் கடனுக்காகவே மண்கட்டியைக் காற்று அடித்தப் போகாது நாவலைப் படித்தேன். அப்போது வேலையில்லாமல் சுற்றிக் கொண்டிருந்த காலம். புத்தகவாசிப்பு, தோழர்களுடன் உரையாடல், சினிமா, டீ, சிகரெட் என்று நாட்கள் ஒடிக் கொண்டிருந்தன

யாரோ சொன்னார்கள். யாரோ கொடுத்தார்கள். சொன்னவர்களும் சரி கொடுத்தவர்களும் சரி இந்த நாவலைப் பற்றிப் பிரமாதமாய்ப் பேசியதாக ஞாபகத்திலிலில்லை. அது மிகையீல் ஷொலகோவின் காலம்

 

லட்சியமும் போராட்டமும் புரட்சியும் பரபரப்பும் நிறைந்த புத்தகங்களை மட்டுமே ( காதல் வந்தால் கூட அது புரட்சியுடன் தொடர்பு படுத்தப் பட்டிருக்க வேண்டும் ) வாசிக்கவும் கிளர்ச்சியடைந்து உரத்த குரலில் ஏதோ இங்கேயே புரட்சி நடந்து கொண்டிருப்பதைப் போல கத்திச் சண்டை அதுதான் விவாதம் செய்து  கொண்டிருந்த காலம்

 

அந்த நேரத்தில் தான் பாஸூ அலீயேவின் மண்கட்டியைக் காற்று அடித்துப் போகாது கிடைத்தது. அதுவும்  காலையில் கிடைத்த புத்தகத்தை மாலைக்குள் கொடுத்துவிட வேண்டுமென்ற நிபந்தனையோடு. வேக வேகமாகப் படித்தும் படிக்காமலும் கொடுத்து விட்டேன். இந்த நாவலைப் பற்றி அதிகம் பேசியதாகவும் நினைவில்லை. ஆனால் புத்தகத்தின் தலைப்பு மட்டும் மறக்கவில்லை.  

 

இப்போது வாசிக்கும்போது எவ்வளவு சிறுபிள்ளைத்தனமாக இருந்திருக்கிறோம். குழம்பின் ருசி தெரியாத அகப்பையாக வாழ்ந்திருக்கிறோமென்று தோன்றியது. மகத்தான இலக்கியப்படைப்புகளெல்லாம் வாசிக்கும் போது அதைப்போன்ற மகத்தான இலக்கியப் படைப்புகளை நினைவுபடுத்தும். மண்கட்டியைக் காற்று அடித்துப் போகாது நாவலை வாசித்தவுடன் எனக்கு கோபல்ல கிராமம் நாவலும், அகிராகுரோசோவாவின் ட்ரீம்ஸ் குறும்படத்தொகுப்பிலுள்ள ஒரு மலைக்கிராமத்தைப் பற்றிய படமும் தான் நினைவுக்கு வந்தது.

 

உள்ளங்கையளவே உள்ள ஒரு இஸ்லாமிய மக்கள் வாழும் மலைக்கிராமத்தின் இதிகாசக்கதை. புரட்சிக்குப் பிந்தைய கூட்டுப்பண்ணைக் காலத்துக்கதை. கிராமமே ஒரு குடும்பமாக இருக்கிறது. ஒரே மனம் கொண்ட குடும்பம். மக்களின் கூட்டு நனவிலி மண்ணோடு, விவசாயத்துடன் காலம் காலமாகத் தொடர்புடையது. அதன் குரலாக உமர்தாதா இருக்கிறார். கதையின் முடிவில் இதிகாச நாயகனாக பேருருக் கொள்கிறார்

 

அவருடைய வாழ்க்கை முதிர்ந்த எருது ஆழமாக உழுவதைப் போன்றது. நிலத்தை, அந்தக் கிராமத்தை, மக்கள் மனதை, கிராம சோவியத் என்ற அமைப்பை, கட்சியின் தவறுகளை, உழுது பண்படுத்திக் கொண்டேயிருக்கிறது. எல்லாருக்காகவும் மகிழ்ச்சியடைகிறார். எல்லாருக்காகவும் துக்கப்படுகிறார். எல்லாருக்காகவும் கோபப்படுகிறார். எல்லாருடைய வாழ்விலும் உமர்தாதா இரண்டறக் கலந்திருக்கிறார்.

 

பாத்திமாத் சொல்லும் கதைவழியே நேர்மையான கட்சி ஊழியன் அகமது பதவிக்காகவும் அகமதின் மனைவி பரீஹானுக்காகவும் ஜமாலினால்  குற்றம் சாட்டப்பட்டு பதவியிழக்கிறான். கட்சி தவறு செய்கிறது. பின்னர் தவறைச் சரிசெய்கிறது. ஆனால் அதே ஜமாலினால் கொலைசெய்யவும் படுகிறான்

அதன் பிறகு அந்தக் குடும்பமும் சந்திக்கும் வாழ்க்கைப் போராட்டமும் தான் கதையென்று சொல்லி விடலாம். அந்தக் குடும்பத்தின் மூத்தவளான பாத்திமாத் தான் கதையை நடத்துகிறாள்.

 

ஒருவகையில் இந்த அவர் மொழி நாவல் சோவியத்தின் வட்டாரமொழி நாவல்களில் முன்னோடியான நாவலாக இருக்கும். ஏனெனில் அவார் மொழிக்கு 1956 ஆம் ஆண்டுதான் வரிவடிவமே உருவாக்கப்பட்டிருக்கிறது. அதுவரை வாய்மொழியாகவே தங்கள் இலக்கியத்தைப் படைத்திருக்கிறார்கள். அதனால் தான் நாவல் நெடுக அத்தனை பழமொழிகள், சொலவடைகள், நாட்டார் பாடல்கள் தளும்பி வழிகின்றன

 

சோவியத்தின் கூட்டுப்பண்ணை, கட்சி, ஹிட்லரின் பாசிச யுத்தம் எல்லாம் பின்னணியில் நிழலாக வருகின்றன.

 

சுழித்தோடும் மலையோடையைப் போலவே நாவலும் ஏராளமான திருப்பங்களையும், எதிர்பாராத்தன்மைகளையும், அதிர்ச்சி தரும் நிகழ்வுகளையும் கொண்டிருக்கிறது. மேலே கொந்தளிக்கும் கடலலைகளுக்கு ஆழத்தில் அமைதியான ஆறு ஓடுவதைப் போல அவர் கிராமத்து வாழ்க்கை முன்னேறிக் கொண்டிருக்கிறது. எதற்காகவும், யாருக்காகவும்  நிற்கவில்லை. அகமது இறந்து விடுகிறான். ஜமால் கொலை செய்யப்படுகிறான். ஸைகிது ஹிட்லர் படையினரால் கொல்லப்படுகிறான். நூருல்லா யுத்தத்தில் காயம்பட்டு குரூபியாக வருகிறான்.

 

அவ்வளவு ஏன்?

 

 காலாகாலத்துக்கும் இருப்பாரென்று எல்லாரும் நம்புகிற உமர்தாதா மரணமடைகிறார்.

 

 பிறப்பு, இறப்பு, துரோகம், சோரம், காதல்.எல்லாம் இருக்கிறது. எல்லாவற்றுக்குமேல் மக்களின் உழைப்பு மண்ணைப்பொன்னாக்குகிற உழைப்பு அவர்களை வசந்தகால நிலத்தைப் போல பண்பட்டவர்களாக்குகிறதுமலையிலிருந்து உருண்டு விழும் கரடுமுரடான பாறைகளை அநுபவங்களால் பட்டை தீட்டி அழகான கூழாங்கற்களாக மாற்றி விடுவதைப் போல மனிதர்களை அழகானவர்களாக மாற்றுகிறது.

 

இப்போது வாசிக்கும்போது நாவலின் சூட்சுமம் புரிகிறது. மாபெரும் வாழ்க்கையின் இடையறாத ஓட்டத்தை அப்படியே உள்ளங்கை ரேகையைப் பார்ப்பதைப் போலக் காட்டுகிறார்  பாஸூ அலீயேவ்

 

ஒரு தியானம் போல இருந்தது. உமர்தாதா, ஹலூன், அகமது, பரீஹான், பாத்திமாத், நஜாபாத், அஸியாத், ஜமால், அலிபேக், ஹூரிஸாதா, பரீ, ஸைகிது, மஜீது, சாதுல்லா, நூலுல்லா என்று எல்லோரும் அந்தத் தியானத்துக்குள் வந்து சென்றார்கள்

ஒரு பெரும் அமைதியும் பேரிரைச்சலும் கேட்டுக் கொண்டேயிருந்தது.

 

 மனிதர்களில்லாமல் வாழ்க்கைக்கோ, தியானத்துக்கோ அமைதிக்கோ ஏதாவது அர்த்தமிருக்கிறதா?

 

வாருங்கள்!

 

உமர் தாதா காத்திருக்கிறார். . உழைப்பைத் தியானிப்போம்

 

வணக்கம் பாஸூ அலீயேவ்!