Saturday 26 May 2012

நான் ஏன் எழுதுகிறேன்

அப்பணசாமி

நான் ஏன் எழுதுகிறேன்? நான் ஏன் எழுதத் தொடங்கினேன்? நான் எப்படி எழுதத் தொடங்கினேன்? எப்படி யோசித்தாலும் இப்போது எனக்குக் கிடைப்பது ஒரே பதில்தான்!

எழுதுவதுதான் எனக்கு மிக எளிதான தொடர்பு சாதனமாக இருந்திருக்கிறது. மிகவும் கூச்சசுபாவியான எனக்கு எழுதுவதுதான் தனிமையில் மேற்கொள்ளக்கூடிய காரியமாக இருந்திக்கிறது.

ஒவ்வொருவரும் அவரவருக்கான எளிதான சிறந்த தொடர்பு சாதனத்தைத் தேட முற்பட்டால் ஒவ்வொருவரும் வேறு வேறு முடிவுகளுக்குத்தான் வரவேண்டியிருக்கும். பலருக்குப் பேசுவதே மிக எளிதான தொடர்பு சாதனமாக இருக்கலாம். சிலருக்கு ஓவியம், வேறு சிலருக்குக் கவிதை, இசை, பாடல், கதை சொல்லுவது, பாட்டுக் கட்டுவது என பல வடிவங்களில் ஒன்று அவரவருக்கானதாக இருக்கலாம்.

என்னைப் பொருத்தவரை எனது பதின்மப் பருவத்தில் நான் எனக்குள் சுருங்கிப் போனேன். எனது கருத்துகளைப் பகிரங்கமாகச் சொல்லுவதில் தயங்கும் நிலை ஏற்பட்டது. அப்போது எழுதினால் மட்டுமே எனது எண்ணங்களைச் சிறப்பாகத் தெரிவிக்க முடியும் என்ற நம்பிக்கை - நான் ஏழாவது படிக்கும்போதே ஏனோ எனக்கு ஏற்பட்டிருந்தது.

அநேகமாக எனது முதல் எழுத்து எனது 12ஆவது வயதில் எழுதிய போஸ்ட் கார்டு காகிதம் (கடிதம்)தான் என்று என்று நினைக்கிறேன். அது எனது அப்பாவுக்கு எழுதிய முதல் கடிதம். எனது வாழ்க்கையில் எனது அப்பாவுக்கு இரண்டே இரண்டு கடிதம்தான் எழுதியிருக்கிறேன் என்பது இப்போது நினைவுக்கு வருகிறது. முதல் கடிதம் எழுதி சுமார் 25 வருசம் கழித்தே இரண்டாவது கடிதம் எழுத நேர்ந்தது. அக்கடிதத்துக்குப் பிறகு என் அப்பாவை நான் சந்திக்கவே முடியாமல் போய்விட்டது. 296354_223030614425623_100001560597711_608844_2065706084_n

நான் எனது ஏழாவது வகுப்பை ஹாஸ்டலில் தங்கிப் படித்தேன். அங்கேயே பள்ளியும். கிறித்துவ மிஷனரி நடத்திய தர்மப் பள்ளிக்கூடம். ஹாஸ்டலுக்கும் பீஸ் கிடையாது. எனது ஊரில் இருந்து சுமார் 20 மைல் தொலைவு. தப்பித்துக்கூட ஓட முடியாது. எந்தப் பக்கம் ஆனாலும் குறைந்தது 5 கி.மீ நடந்து கடக்க வேண்டும். அது சாத்தியமில்லை. பிடித்து விடுவார்கள். பிடித்துவிட்டால் காலில் சங்கிலி போட்டு பிணைத்து விடுவார்கள். எனக்கு அதற்கெல்லாம் தைரியம் இல்லை. இருந்தாலும் இந்த வருசம் எப்படியும் தொலையட்டும், அடுத்த வருசம் இங்கு இருக்கக்கூடாது என்பதில் உறுதியாக இருந்தேன். பள்ளிக்கூடத்துக்கே அனுப்பாவிட்டாலும் பரவாயில்லை; இங்கு மட்டும் இருக்கக்கூடாது என்பது எனது வைராக்கியம். கிட்டத்தட்ட அங்குதான் தனிமை நோய் அல்லது தனிமை சுகம் என்னைப் பீடித்து இருக்கலாம்.

எனது வைராக்கியத்தை அப்பாவிடம் எப்படித் தெரிவிப்பது என்ற ஆராய்ச்சியின் முடிவாகத்தான் கடிதம் எழுதும் யோசனை பிறந்தது. மூணு காசுக்கு போஸ்ட் கார்ட் வாங்கி நாலே நாலு வரி எழுதிப் போட்டேன். எழுதிப்போட்டேன் என்றால் அது ஒன்றும் அவ்வளவு எளிதான காரியமில்லை. முதலில் எழுதுவதற்கு ஒரு ரகசியமான இடத்தைக் கண்டுபிடிக்க வேண்டும். அப்புறம் பள்ளி வளாகத்தை விட்டு வெளியேற வேண்டும். கார்டு வெளியே தெரியாதபடி உடலுக்குள் மறைத்து வைக்க வேண்டும். சர்ச்சுக்கு எதிர் தெருவில் இருக்கும் போஸ்டாபிஸ் திண்ணையில் ஏறி அதில் தொங்கும் பெட்டியில் போட வேண்டும். அப்போது ஒரு சுடுகஞ்சிகூட பார்த்திருக்கக் கூடாது. அப்படியான சாதனையோடு அந்தக் கடிதத்தை எழுதிப் போட்டேன். எந்த வரிசையிலும் முதலாவது நிற்கும் அளவுக்குக் குள்ளம். இப்போது யோசிக்கும்போது பாதிரியாரின் பார்வையை மீறி எந்தக் கடிதமும் அந்த ஊரைவிட்டுப் போயிருக்க முடியாது என்று நினைக்கிறேன். ஆனால் அப்போதுஎனது எழுத்தில் மயங்கித்தான், என்னை அப்பா, அங்கிருந்து விடுவித்தார் என மிகவும் நம்பினேன். அதனால் என்னால் சிறப்பாக எழுத முடியும் என்ற நம்பிக்கை அப்போதே துளிர் விட்டிருந்தது.

தொடர்ந்து வகுப்புகளிலும் கேள்விக்கான பதில்களை எழுதும் போது நானே வாக்கியம் அமைத்து எழுதுவது எனக்குப் பிடித்தமானதாக இருந்தது. பதில்களின் நடுவே தந்திரமாக எனது சொந்த வாக்கியங்களைச் சேர்த்துவிடுவேன். தமிழ்க் கேள்வித்தாளில் எனக்குப் பிடித்த கேள்விப் பகுதி வியாசம் (கட்டுரை) எழுதுவதாகவே இருந்தது. அதற்கு எந்த ஆசிரியருக்கும் 10க்கு 6 மார்க்குமேல் போட மனசு வராது.

அப்புறம் வீட்டில் தீப்பட்டிப் பசை நாற்றத்துக்குப் பயந்து தப்பித்து எங்கள் தெரிவில் உள்ள நூலகத்தில் ஒளிந்து கொள்ளும் பழக்கமும் இருந்தது. அங்கு என்னை அறியாமல் வல்லிக்கண்ணன், புதுமைப்பித்தன், ராசு நல்லபெருமாள், கு. அழகர்சாமி ஆகியோரின் புத்தகங்களைப் புரட்டிய நினைவும் இருக்கிறது. அவற்றில் என்னை ஆச்சரியப்பட வைத்தது தாகூர் கதைகளின் மொழிப்பெயர்ப்புப் புத்தகம் ஒன்று. அதில் நமது வீடுகளில் நடக்கக்கூடிய சம்பவங்கள் போலவே கூறப்பட்டிருந்தது. வீட்டில நடப்பதை எழுதினால் அதுவும் கதைதான் என்பதை அக்கதைகள் புரியவைத்தன.

வெகுசீக்கிரத்தில் நான் கணக்குப் புலி ஆகி விட்டேன். கணக்குப் பாடம் தவிர எதுவும் ரசிப்பது இல்லை. கடைசி வரை கணித மாணவனாகவே கழித்து விட்டேன். அதனால் பள்ளிக்கூட நாள்களில் கவிஞனாகும் கனவெல்லாம் இல்லை. படிப்பெல்லாம் முடியும் நேரத்தில் நண்பர்களில் பலர் வாசிக்கும் பழக்கம் உள்ளவர்களாக இருந்தனர். அந்தப் புத்தகத்தை நானும் வாசிக்க ஆரம்பித்தேன்.

தண்டவாளத்தைத் தாண்டிப்போனால் சில புத்தகங்களைக் கண்ணில் காண்பிப்பார்கள். அப்படி ஜெயந்தன் சிறுகதைத் தொகுப்பு ஒன்றும், நீல பத்மநாபன் சிறுகதைத் தொகுப்பு ஒன்றும் வாசிக்கக் கிடைத்தது. ஒரு தொகுப்பின் தலைப்பு: சம்மதங்கள். பெரும்பாலும் நமது குடும்பங்களில் நடக்கும் சண்டை, சச்சரவுகளே கதைகளாக இருந்தன. எனக்கு ஒரே ஆச்சரியம். இதுதான் கதையா? அப்படின்னா ‘நம்ம கிட்ட எவ்வளவோ கதைகள் இருக்கே! என நினைத்தேன். ஏனென்றால் என் வீடு இது போன்ற சண்டைகளுக்கு ஜில்லாவிலேயே பிரபலமான வீடு. அப்போது நாமும் இதுபோல கதைகள் எழுத முடியும் என மீண்டும் நினைத்தேன். அதற்கேற்ற மாதிரி நான் ஏன் எழுதுகிறேன்? நான் எவ்வாறு எழுதக் கற்றுக்கொண்டேன்? நான் பயின்ற பல்கலைக் கழகங்கள் என்பன போன்ற எழுத்து குறித்த மார்க்சிம் கார்க்கி, லியோ டால்ஸ்டாய். அலெக்சி டால்ஸ்டாய், சோலோகவ், பிளாக்கனோவ் ஆகியோர் எழுதிய புத்தகங்கள் (லியோ டால்ஸ்டாய், சோலகோவ். பிளாக்கனவ் எழுதிய கட்டுரை/புத்தகங்களின் தலைப்புகள் திடீர் என நினைவுக்கு வரவில்லை) படிக்கக் கிடைத்தன. அந்தப் புத்தகங்களில் எழுத்து என்பது ’பயிற்சிதான்; தொடர்து முயற்சி செய்தாக் யாரும் எழுத்தாளனாகிவிட முடியும் என்பதைத் திரும்ப, திரும்பக் கூறினர். இவ்வாறு எனக்குக் கிடைத்த தொடர் நம்பிக்கை எழுதாமல் முடியாது என்ற நிலையை உருவாக்கியது. எழுதத் தொடங்கினேன்.

மேலும் அது ரகசிய உலகமாக இருக்கிறது. பேசினால் சிந்திய வார்த்தைகளை அள்ள முடியாது. ஆனால் எழுத்தில் திருத்தி எழுத முடிகிறது. எண்ண ஓட்டங்களுக்கும் அதை எழுதிமுடிப்பதற்கும் இடையேயான் இடைவெளி பாதுகாப்பானதாக இருக்கிறது. எழுதுவது ஒரு முதிர்ச்சியடைந்த மனிதனின் செயலாக இருக்கிறது. எழுத்து. கள்ளுக் குடித்தது போன்ற போதையைத் தருகிறது. அது பத்திரிகையில் பிரசுரமாகும்போது நான் உயரமானவனாக உணர்கிறேன். என் எழுத்தால் வாசக மனதைக் ககக்கிப்பிழிந்துவிட நினைக்கிறேன். அது அழியாது என நினைக்கிறேன்.

இவ்வளவும் தெரிந்தும் நான் ஏன் தொடர்ந்து எழுதவில்லை என்பது மீதி புராணம்!

3 comments:

  1. அருமையான பதிவு ....மீதி புராணம்?...எப்போது?

    ReplyDelete
  2. அருமையான பதிவு.
    வாழ்த்துகள்.

    ReplyDelete
  3. Good share Udayasankar...will it be possible to read your works on line..please let me know...

    ReplyDelete