Wednesday 23 May 2012

விளையாட்டே வாழ்க்கை

 

உதயசங்கர்

 

இளம் பருவத்தில் எல்லா உயிரினங்களும் ஓடி, குதித்து, பாய்ந்து, விளையாடித், தங்களுடைய உடலை உறுதி செய்கின்றன. உள் உறுப்புகளை இதயம், நுரையீரல், சிறுநீரகம், இரைப்பை, சிறுகுடல், பெருங்குடல், மலக்குடல் என்று எல்லாப்பகுதிகளும் சீராக இயங்கவும், வெளி உருவான எலும்புகள், தசைகள், அவற்றின் சக்தி, வலிமை கூடவும் விளையாட்டை உயிரினங்களின் உள்ளுணர்வோடு இணைத்து விட்டிருக்கிறது இயற்கை. குழந்தையும் அப்படித்தான். பிறந்த குழந்தை தன் கை கால்களை உதைப்பதில் துவங்கி அழுவது வரை தன் உடலின் எல்லாப்பகுதிகளையும் உறுதிப்படுத்துவதற்கான முயற்சியே. இந்த முயற்சிகளின் விளைவாகவே குழந்தை வேகமாகவும், திடமாகவும் தன் வாழ்வின் அடுத்தடுத்த கட்டங்களுக்கு நகர்ந்து போகிறது. குழந்தையின் தன்னம்பிக்கையும் வளர்கிறது.

பொதுவாக குழந்தை இருந்த இடத்தை விட்டு நகராமல் கையைக் காலை ஆட்டிக் கொண்டிருக்கும் வரை பெற்றோர்கள் மகிழ்ச்சியே அடைகிறார்கள். ஆனால் எப்போது குழந்தை இருந்த இடத்திலிருந்து அசைய ஆரம்பிக்கிறதோ அப்போதே அவர்களைக் கவலை வந்து தொற்றிக்கொள்கிறது. குழந்தை அசையாமல் ஒரே இடத்தில் இருந்து விளையாட வேண்டும் என்று நினைக்கிறார்கள். குழந்தை அசைய ஆரம்பித்ததும் அவர்கள் கவனம் முழுவதும் குழந்தைகயின்பால் திரும்பிவிடுகிறது. அங்கே போகாதே, இங்கே போகாதே அதை எடுக்காதே இதை எடுக்காதே என்றோ பாத்து பாத்து கீழே விழுந்துரப் போற.. அடிகிடி பட்டா என்ன செய்யமுடியும்... என்றோ எச்சரித்துக்கொண்டேயிருக்கிறார்கள். இதெல்லாம் குழந்தையின் மீது பெரியவர்கள் கொண்டிருக்கும் அபரிமிதமான அன்பின் விளைவு தான் என்றாலும் குழந்தைக்குத் தன்னுடைய சுதந்திரமான சுயேட்சையான வளர்ச்சியில் ஏற்படும் இடையூறாகவேத் தெரியும். தன் வாழ்வின் ஒவ்வொரு பருவத்திலும் தன் உடலில், மனதில் புதிய,புதிய கண்டுபிடிப்புகளை நிகழ்த்தித் தன் கண்டு பிடிப்புகளினால் பரவசப்பட்டுக் கொண்டிருக்கிறது குழந்தை. திரும்பிக் குப்புறப்படுக்க முயற்சி செய்கிறது, அதற்காக நூற்றுக்கணக்கான முறை முயற்சித்து முயற்சித்து தன் உடலையே தூக்கித் திருப்பிப் போடுகிறது. அதோடு தன் தலையையும் நிமிர்த்துகிறது. அதே போலவே தவழ ஆரம்பிப்பது தன் முதுகெலும்பு உரம்பெற உரம் பெற உட்கார முயற்சிப்பது, உட்கார்ந்த பிறகு எழுந்து நிற்க முயற்சிப்பது, நின்றபிறகு ஒவ்வொரு அடியாக தத்தக்கா பித்தக்கா என்று நடக்க முயற்சிப்பது பிறகு எழுந்து குழந்தை தன் உள்ளுணர்வின் வழியே கிடைத்த தூண்டுதல்களினால் புதிதாகக் கண்டு பிடித்து பெருமகிழ்ச்சி கொள்கிறது. எல்லா தூண்டுதல்களையும் இயற்கையாகவே குழந்தை பெற்றிருக்கிறது.

பெரியவர்கள் செய்ய வேண்டியதெல்லாம் குழந்தையின் செயல்களுக்கு இடையூறு செய்யாமலிருப்பது தான் குழந்தையிடம் அவநம்பிக்கையான வார்த்தைகளைப் பேசாமல், குழந்தையின் இயல்பான முயற்சிகளைக் கவனித்துக் கொண்டிருந்தால் போதும். குழந்தை விழுவது, எழுவது இயல்பு. தன்னுடைய ஒவ்வொரு செயலின் மூலமும் அதன் விளைவின் மூலமும் குழந்தை ஏதோ ஒன்றைக் கற்றுக் கொள்கிறது என்பதை பெரியவர்கள் புரிந்து கொள்ள வேண்டும். இதற்காகவே குழந்தை என்ன செய்தாலும் அல்லது குழந்தைக்கு என்ன நேர்ந்தாலும் பார்த்துக்கொண்டு சும்மா இருங்கள் என்று சொல்வதாக அர்த்தமில்லை..play

பெரும்பாலான பெரியவர்கள் குழந்தைகள் வீட்டை விட்டு வெளியே போய் விளையாடுவதில் சம்மதமில்லை. வீட்டிற்குள்ளேயே விளையாட வேண்டும், வீட்டில் பெரியவர்கள் வாங்கிக்கொடுத்திருக்கும், கார், பைக், ஹெலிகாப்டர், °பைடர்மேன், ஹீமேன், பார்பி, டெடிபியர், நாய்க்குட்டி போன்ற பொம்மைகளை வைத்துக் கொண்டு அமைதியாக சமர்த்தாக சத்தம் போடாமல் ஓடி ஆடாமல் இருந்த இடத்தில் இருந்து கொண்டே யாருக்கும் தொந்தரவு செய்யாமல் விளையாடிக் கொண்டிருக்க வேண்டும். கொஞ்சம் யோசித்துப்பார்த்தால் எவ்வளவு அபத்தமாக இருக்கிறது இந்த கண்டிஷன்கள்! பெரியவர்களான நம்மாலேயே ஒரு இடத்தில் ஒரே மாதிரி ஐந்து நிமிடங்களுக்கு மேல் உட்கார முடிவதில்லை. அப்படி இருக்கும் போது குழந்தைகளிடம் வைக்கிற இந்தக் கோரிக்கைகள் எவ்வளவு மோசமானவை. தன் வாழ்வின் ஒவ்வொரு கணத்தையும் புதிது புதிதாய் பரவசத்தின் உச்சநிலையிலேயே அனுபவிக்கத் துடிக்கும் குழந்தைகளை இப்படியான கட்டுப்பாடுகளால் கட்டிப் போடுவது சரியாக இருக்குமா?

ஏன் குழந்தைகளை வெளியே சென்று விளையாடவிடுவதில் பெருந்தயக்கம்? முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு குழந்தைகளிடம் பெற்றோர்கள் வைத்திருக்கும் கண்மூடித்தனமான அறிவியல் பார்வையற்ற அன்பு, வெறி, பாசம், பொசசிவ்னெஸ், என்று சொல்லலாம். இந்த உணர்வுகளின் விளைவாகக் குழந்தையின் பாதுகாப்பையே பிரதானப் படுத்துகிறார்கள். இதனால் குழந்தை எப்போதும் தங்களுடைய கண்முன்னால், கண்காணிப்பிலேயே இருக்க வேண்டும் என்று விரும்புகிறார்கள். குழந்தை வெளியே சென்று விளையாடினால் ஏதாவது நிகழ்ந்து விடுமோ? என்ற நிரந்தர அச்சம் எல்லா பெற்றோர்களிடமும் இருக்கிறது. அதிலும் குறிப்பாக தாய்மார்கள் இந்தப் பதட்டம் காரணமாக நிறைய மன அழுத்தத்திற்கு ஆளாகிறார்கள். இதற்கு உளவியல் ரீதியாக வேறொரு காரணமும் இருக்கிறது. முன்பு எல்லாக் குடும்பங்களிலும் மூன்றுக்கு மேள்பட்ட குழந்தைகள் இருந்ததினாலும், சமூக, பொருளாதார வசதிக்குறைவினாலும் குழந்தைகள் மீது இப்போதிருக்கும் அளவுக்கு அக்கறை செலுத்த பெரியவர்களால் முடியவில்லை. ஆனால் குழந்தைகள் பெரும்பாலும் வீட்டிலிருந்ததை விட வெளியில், தெருவில், மைதானத்தில் இருந்தது அதிகம். இதனால் ஏழ்மையின்,இல்லாமையின் நெருக்கடிகளினூடேயும் குழந்தைகள் சற்று சுதந்திரமாக இருக்க முடிந்தது. ஆனால் இப்போது அநேகமாக எல்லா குடும்பங்களிலும் ஒன்று அல்லது இரண்டு குழந்தைகளுக்கு மேல் கிடையாது. மத்தியதர வர்க்கத்தினரின் சற்றே மேம்பட்ட சமூகப்பொருளாதார வசதியும், தாங்கள் தங்களுடைய இளம் வயதில் அனுபவிக்காதது, ஆசைப்பட்டது, எல்லாவற்றையும் தங்களுடைய குழந்தைகள் அநுபவிக்கவேண்டும் என்ற ஆசையும் சேர்ந்து குழந்தைகளின் சுதந்திரத்தை அதிலும் குறிப்பாக விளையாடும் சுதந்திரத்தை பறித்துவிட்டது. இந்தச் சித்திரம் முழுமையானதில்லை. இன்னமும் மைதானங்களில், கிராமங்களில் தெருக்களில் குழந்தைகள் விளையாடுவதைப் பார்க்க முடிகிறது. ஆனால் கொஞ்சம், கொஞ்சமாக குறைந்து கொண்டே வருவதென்பது கவலையளிக்கிற விஷயமாக இருக்கிறது.

குழந்தைகள் வெளியே சென்று விளையாடி அடிபட்டால், காயம்பட்டால், மற்ற குழந்தைகளுடன் சேர்ந்து கெட்டுப்போய் விட்டால், விளையாட்டிலேயே கவனம் குவிந்து படிப்பில் அக்கறை குறைந்து போய் விட்டால், என்று ஏராளமான பயங்கள் பெரியவர்களுக்கு. எனவே என்ன செய்கிறார்கள் தெரியுமா? பேசாமல் தொலைக்காட்சி பெட்டிக்கு முன்னால் உட்கார வைத்து விடுகிறார்கள். கார்ட்டுன் சேனலோ, சுட்டியோ, போகோவோ, ஏதோ ஒரு சேனலின் கையில் குழந்தைகளை ஒப்படைத்துவிட்டு அதோடு கையில் டைரி மில்க், எக்ளேர், சாக்லேட் வகையறா, குர்க்குறே, லே°, லிட்டில் °கார்ட்ஸ்° வகையறா என்று எல்லாவித பாக்கெட் நொறுக்குத் தீனிகளையும் கையில் கொடுத்துவிட்டு °°..... அப்பாடா என்று பெருமூச்சு விடுகிறார்கள். குழந்தைகள் தங்கள் இயல்பான இயற்கைத் தூண்டுதல்களுக்கு மாறாக ஒரே இடத்தில் அசையாமல் உட்கார்ந்திருக்கிறது. அது மட்டுமல்ல எந்த உடல் உழைப்புமின்றி சர்க்கரையும், எண்ணெயும் கொழுப்பும், புரதமும் கூடவே அன்பளிப்புகளாக கெமிக்கல்ஸ் லையும் உட்கொண்டு குண்டாகிக்கொண்டே வருகிறார்கள். தாங்கள் தங்கள் அருமைக்குழந்தைகளை எதிர்கால நோயாளிகளாக உருவாக்கிக் கொண்டிருக்கிறோம் என்று அறியாமல் பெரியவர்கள் குழந்தைகளின் பருமனை “கொழுகொழுன்னு எப்படி இருக்கு குழந்தை” என்று மற்றவர்கள் பாராட்டைப் பெரிதாக நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்.

ஓடியாடி விளையாடாமல் உடலில் சேரும் சர்க்கரையும், கொழுப்பும் எப்படி வளர்சிதை மாற்றமடையும்? உடலோடு சேர்ந்து உரம் தருமா? யோசிக்கவேண்டாமா? பள்ளிக்கூடங்கள் அதிலும் பல மெட்ரிக் பள்ளிக்கூடங்கள் பெற்றோர்களின் உளவியலை தெரிந்து கொண்டதால் மைதானங்கள் இல்லாமல் பள்ளிக்கூடங்களைக் கட்டுகின்றனர். பி.டி. பீரியட், என்ற வகுப்பு அட்டவணையில் மட்டும் இருக்கிறது. பெற்றோர்களும் அதைப்பற்றிக் கவலைப்படுவதில்லை. குழந்தைகள் தான் பாவம் தவித்துப்போகிறார்கள். குழந்தைகள் நம்முடைய எதிர்கால சமுதாயம் என்பதை முதலில் பெரியவர்கள் உணரவேண்டும். ஆரோக்கியமான, தன்னம்பிக்கை மிக்க, தீரமிக்க, சமூகம் ஆரோக்கியமான, தீரமிக்க, குடிமகன்களாலேயே உருவாகும். இன்றைய குழந்தைகள்தான் நாளைய குடிமக்கள் என்பதை உணர்ந்து அவர்கள் ஆரோக்கியமாக வளர அவர்களை விளையாட விடுங்கள். வீணான பயங்களை விரட்டியடியுங்கள்.

1 comment:

  1. குழந்தைகளை சுதந்திரமாக விளையாடவிட்டால் அது அவர்களுக்கு மட்டுமல்ல எதிர்கால அவர்களின் சந்ததிகளும் ஆரோக்கியமானவையாக பிறக்கும் என மருத்துவம் சொல்கிறது.

    ReplyDelete