Sunday 27 May 2012

நான் ஏன் எழுதுகிறேன்?

220px-Kamala_das

கமலாசுரய்யா

தமிழில்- உதயசங்கர்

சமூகம் அங்கீகரித்துள்ள ஆசார அனுஷ்டானங்களை நான் விமரிசிப்பதற்கு பல காரணங்களிருக்கிறது. அழிகின்ற மனிதசரீரம் தான் இந்த ஆசாரங்களுக்கு அடிப்படை. அழியாத மனிதஆத்மாவில் அதை கண்டறிய முடியாதென்றால் மனித மனத்திலாவது இறுகிவிடாத உத்தமும் வந்தனமும் கூடிய ஆசாரத்தையே நான் நம்புகிறேன். சமூகத்தை ஒரு குரூபியாகவும், ஒரு மூதாட்டியாகவும், நான் பார்க்கிறேன். துவேஷம் நிறைந்த மனதுள்ளவர்களையும், பொய் சொல்லுகிறவர்களையும், வஞ்சிப்பவர்களையும், சுயநலமிகளையும், மிகவும் ரகசியமாகக் கொலை செய்தவர்களையும், இந்தக் கிழவி ஒரு கம்பிளியினால் அன்போடு போர்த்தி விடுவாள். இந்தக் கம்பிளியின் தயவை வெறுப்பவர்கள் வெளியில் குளிரில் விரைத்து விடுகின்றனர். பொய்கள் சொல்லியும், நடித்தும், நம்பிக்கைத் துரோகம் செய்தும், பலரையும் வெறுத்தும், இந்த ஆசாரப் போர்வைக்கடியில் சூடும், சுகமும், உள்ள ஓரிடம் எனக்கும் கிடைக்கும் என்று இருந்தது. ஆனால் நான் ஒரு எழுத்தாளராகியிருக்க மாட்டேன். என்னுடைய நெஞ்சில் அடைத்துக் கொண்டு நிற்கிற சத்தியங்கள் ஒரு நாளும் வெளிச்சத்தைப் பார்த்திருக்காது. இலக்கியவாதியினுடைய முதல் கடமை அவனே அவனை ஒரு பரிசோதனை மிருகமாக்குவது தான்( guinea pig ) . வாழ்க்கையனுபவங்களிலிருந்து தப்பித்துப் போக அவன் ஒருபோதும் முயற்சிக்கக் கூடாது. பனியின் குளிர்மையையும், தீயின் வெம்மையையும், அவன் அனுபவிக்க வேண்டும். அவனுடைய கால்களுக்கு நோக்கம் கிடையாது. அவை கொலைகாரியின் இடத்திற்கும் கூட்டிச் செல்லும். அவனுடைய புலன்கள் உறுதி குறைந்தே இருக்கும். அவன் சிரிக்கவும், ப்போதையில் மிதக்கவும், சுகிக்கவும், நோய் பீடித்து சுயநினைவின்றி கிடக்கவும், ஏங்கி ஏங்கி அழவும் செய்வான். மனிதவாழ்வின் நாலாபக்கங்களைப் பற்றி எழுத வேண்டியது தான் அவனுடைய முக்கியமான காரியம். மனிதசரீரம், முடிவில் நெருப்புக்கோ, மண்புழுக்களுக்கோ, இரையாகி விடும். மனிதன் பூமியின் இரை. பூமியை அவன் தன்னுடைய எலும்பினால் ஊட்டப் படுத்துகிறான். ஆனால் அவனுடைய வார்த்தைகள் அழிவில்லாதது. காலத்தினால் விழுங்கமுடியாத சத்திய வாசகங்கள். அவனை இடையிடையே நினைவு படுத்திக் கொண்டேயிருக்கும்.

இலக்கியவாதி எதிர்காலத்தோடு மோதிரம் மாற்றிக் கலியாணநிச்சயம் முடிந்த ஒரு ஆள். அவன் பேசுவது உங்களோடு இல்லை. உங்களுடைய பின்தலைமுறைக்காரர்களோடு. அந்த ஞானம் என் மனதில் இருப்பதினால் மட்டும் தான் உங்களில் சிலர் எறிகின்ற கற்கள் அவனுடைய உடலைக் காயப்படுத்தினாலும் அவன் அமைதியாக இருக்கிறான்.

No comments:

Post a Comment