செல்லச்சண்டை
மலையாளத்தில் - அஷீதா
தமிழில் - உதயசங்கர்
கதைப்பாட்டி உட்கார்ந்திருக்கும்
ஆலமரத்தின் அடியில், கிராமத்துத்தலைவரான மொட்டை மாதவன் அவருடைய பசுமாட்டை மேய்வதற்காக
அழைத்து வருவார். உச்சிப்பகல் நேரம் வரை புல்லைச் சாப்பிடும் பசுமாடு. அதன்பிறகு அசை
போட்டுக் கொண்டே அங்கே படுத்துக்கிடக்கும். மொட்டை மாதவன் பசுவை கல்யாணி என்று பெயரிட்டு
அழைப்பான். கல்யாணிப்பசு அப்படி அசை போட்டுக் கொண்டு இருக்கும்போது காக்கா பறந்து போய்
கல்யாணிப்பசுவின் உடலிலும் காதுகளிலும் உள்ள உண்ணிகளைக் கொத்திச் சாப்பிடும்.
கல்யாணிக்கு அது ரொம்பப் பிடிக்கும்.
நாய்க்குட்டி கல்யாணிப்பசுவின் பால்மடியில் தலை வைத்துப் படுக்கும். மிகுந்த அன்பினால்
“ என் குட்டி நாயே” என்று அழைத்து கல்யாணிப்பசு தன் பால்மடியிலிருந்து பாலைச் சுரக்கும்.
அதைப் பார்த்த பூனைக்குட்டிக்கு கோபம் வரும். ஆனாலும் எதுவும் பேசாது. முகத்தைத் தூக்கி
வைத்துக் கொண்டு இருக்கும்.
சின்னுவும் அருகில் போய் உட்கார்ந்திருப்பாள்.
கல்யாணிப்பசு அசைபோட்டுக் கொண்டே தன்னுடைய குழந்தைப்பருவத்தில் நடந்த கதைகளைச் சொல்வாள்.
“ நான் குழந்தையாக இருந்தபோது,
இந்தக் காட்டில் ஒரு யானைக்குட்டி இருந்தது. அவ்வப்போது இங்கே வரும். நாங்கள் நல்ல
நண்பர்களாக இருந்தோம். அப்படி ஒருநாள் நாங்கள் சேர்ந்து இருந்தபோது, நான் சொன்னேன்,
“ ஏ.. யானைக்குட்டி அங்கே பாரு..மொட்டை
மாதவனின் வாழைத் தோட்டத்தில் பழக்குலை.யைப் பாரு..”
யானைக்குட்டி உடனே அதை பறித்து
விட்டான். அப்போது நான் சொன்னேன்,
“ நான் தானே உனக்குச் சொன்னேன்..
அதனால் அது எனக்குத்தான்.. கொடுத்துரு..”
யானைக்குட்டி சொன்னது,
“ இது எங்கே உள்ள நியாயம் கல்யாணியக்கா?
மாமரத்தில் காய்த்த மாம்பழம் பார்த்தவருக்குச் சொந்தமா? கல் வீசிப் பறித்தவருக்குச்
சொந்தமா? ”
எங்கள் இருவருக்கும் சண்டை. அடியும்
பிடியும் தள்ளும் முள்ளுமாய் இருந்தபோது காட்டிலிருந்து குரங்குக்கூட்டத்தின் தலைவன்
பஞ்சாயத்து செய்ய வந்த்து. வாழைப்பழக்குலையின் எடையைப் பார்க்கிறேன் என்று சொல்லி கையில்
வாங்கியது அந்தக் குரங்கு.
அப்படியும் இப்படியுமாகப் பார்த்துக்
கொண்டிருந்த குரங்கு திடீரென அதைத் தூக்கிக் கொண்டு ஒரே ஓட்டமாக காட்டுக்குப் போய்
விட்டது.”
அந்தக் கதையைக் கேட்டு எல்லாரும்
கை தட்டிச் சிரித்தார்கள். நாய்க்குட்டி மட்டும் கை தட்டவில்லை. அது கல்யாணிப்பசுவின்
பால்மடியில் பாலைக் குடித்துவிட்டு உறங்கிக் கொண்டிருந்தது.
நன்றி - புக் டே
பறயாம் நமுக்கு கதகள்
No comments:
Post a Comment