Friday, 28 February 2025

பெருமைக்குரிய நல்வரவு ஈரோடு சர்மிளா!

 

பெருமைக்குரிய நல்வரவு ஈரோடு சர்மிளா!



இலக்கிய வகைமைகளில் மிகவும் கடினமானதென்று சிறார் இலக்கியத்தையே சொல்லமுடியும். மற்ற நாவல், சிறுகதை, கவிதை, கட்டுரை, போன்ற வடிவங்களை எதிர்கொள்கிற வாசகர்கள் அவர்களுடைய உலக அனுபவங்களின் வழியே இலக்கியத்தை உரசிப்பார்த்து அதை எடுத்துக்கொள்ளவோ, விட்டுத்தள்ளவோ முடியும். ஆனால் சிறார் இலக்கியத்தின் வாசகர்களாக உள்ள குழந்தைகள் இந்த உலகத்தில் இப்போது தான் பூத்திருக்கிற மலர்கள். அவர்கள் பார்க்கிற, கேட்கிற, வாசிக்கிற, உணர்கிற, எல்லாவற்றையும் நுகர்ந்து தங்களுடைய ஆழ்மனதில் உணர்வுகளாகப் பதிந்து கொள்வார்கள். அவர்கள் இன்னும் எழுதப்படாத வெள்ளைத்தாள். அதில் எழுதுகிற ஒவ்வொரு எழுத்தும் அவர்களுடைய ஆளுமைத்திறனுக்கு அடிப்படையாக அமையும். குழந்தைகளுக்கு எழுதும்போது மிகுந்த கவனத்துடனும், எச்சரிக்கையுடனும், பயத்துடனும், எழுத வேண்டும் என்று நினைக்கிறேன்.

குழந்தைகள் எப்போதும் தங்களுக்கான கற்பனையுலகினைப் படைப்பதில் நிகரற்றவர்கள். படைப்பூக்கம் அவர்களுடைய இயல்பாக இருக்கும். யாராலும் கற்பனை செய்யமுடியாத விநோதமான உலகை அவர்களால் படைக்க முடியும். அதனால் தான் அவர்கள் யதார்த்தத்திலில்லாத விந்தையான உலகத்தையும், விநோதமான உயிர்களையும், அதிசயமான செயல்களையும் நம்புகிறார்கள். நேரடியான எந்த விஷயமும் அவர்களுக்கு சலிப்பூட்டுகிறது. கற்பனைகளின் வழியே அவர்கள் தங்களுக்கென ஒரு பிரத்யேகமான புதிய உலகைப் படைத்துக் கொள்கிறார்கள். அந்த உலகத்தில் அவர்கள் மகிழ்ச்சியுடன் ஒரு வண்ணத்துப்பூச்சியைப் போல பறந்து திரிகிறார்கள். குழந்தைகளை மகிழ்ச்சியடையச் செய்வதென்பதே குழந்தை இலக்கியத்தின் முதலும் முடிவுமான நோக்கமாக இருக்கவேண்டும்.

குழந்தைகள் மகிழ்ச்சியடையும்போது தான் அவர்களுக்கு தாங்கள் வாழும் இந்த பூமியைக் குறித்தான மதிப்பு, தங்களுடைய வாழ்க்கை குறித்தான பெருமிதம், தோன்றும். எனவே குழந்தைகளுக்குக் கருத்துகள் சொல்வதையே நோக்கமாகக் கொண்டு வரும் படைப்புகளை குழந்தைகள் பாடப்புத்தகமாகவே கருதுவார்களென்பதை சிறார்களுக்காக எழுதுகிறவர்கள் கவனத்தில் கொள்ளவேண்டும்.

இன்றைய நவீன சிறார் இலக்கியத்தில் புதிய காற்று வீசத் தொடங்கியிருக்கிறது. ஏராளமான பெண் எழுத்தாளர்கள் எழுதத் தொடங்கியிருக்கிறார்கள். குழந்தைகளின் உலகத்தில் பிரிக்கமுடியாத ஒரு அங்கமான பெண்கள் எழுதும்போது இன்னும் குழந்தைகளின் மனவுலகத்துக்குள் முக்குளித்து செய்து இலக்கிய முத்துகளை எடுக்க முடியும். அத்தகைய முயற்சிகளைப் பெண் எழுத்தாளர்கள் மேற்கொண்டு விட்டார்களென்பதற்கான உதாரணமாக சர்மிளாவின் இந்தத் தொகுப்பிலுள்ள கதைகள் கட்டியம் கூறுகின்றன.

ஒவ்வொரு கதையும் ஒவ்வொரு விதமாக வண்ணவண்ணப்பலூன்களைச் சேர்த்துக் கட்டியது போல வாசகர்களை ஈர்க்கும் விதத்தில் எழுதப்பட்டிருப்பது மிகச்சிறப்பு. எந்த ஒரு கதையிலும் இன்னொரு கதையின் எந்தச் சாயலுமில்லையென்பது சாதாரண விஷயமில்லை.

மனிதர்களின் கனவைப் போலவே விலங்குகளும் கனவு காணும் பாக்கியலட்சுமியின் கனவாகட்டும், சொந்த ஊரை விட்டு வேறு ஊருக்குப் பிழைப்புக்காகப் போய்ச்சேரும் குடும்பத்திலுள்ள பாப்பு தன்னுடைய தனிமையில் வானத்திலேயே தனக்குப் பிரியமான எல்லாவற்றையும் காண்கிற பாப்பு வானத்தில் கண்ட காட்சியாகட்டும், மரங்கொத்தியும் ஆந்தையும் ஒருவருக்கொருவர் உதவி செய்து கொள்கிற மூக்கழகி மரங்கொத்தியும், கண்ணழகி ஆந்தையும் கதையாகட்டும், காட்டு மரங்களை வெட்டித்தள்ளுகிற மனிதர்களை விரட்ட புலியின் உதவியை நாடுகிற பட்டுவும் சிட்டுவும் கதையாகட்டும், அபூர்வக்குளத்தில் பார்க்கிற கொக்குகள் பூத்திருக்கிற கொக்கு மரம் கதையாகட்டும், கூண்டுகளில் சிறைப்பட்ட விலங்குகள் தங்களுடைய சொந்த வாழ்விடத்துக்குத் தப்பித்துச் செல்கிற தப்பிக்குமா தங்க மீன் கதையாகட்டும், நாயின் நன்றியைச் சொல்கிற பார்த்தியும் மணியின் நன்றியும் கதையாகட்டும், கதைகளில் ராஜாவாகவே சொல்லப்படுகிற சிங்கம் புலம்புகிற புலப்பத்தில் நமக்கு பல வெளிச்சம் கிடைக்கிற எவஞ்சொன்னது நான் ராஜான்னு கதையாகட்டும், எதிர்காலத்தில் பறவைக்காதலனாக மாறவேண்டுமென்று ஆசைப்படுகிற அன்புராஜின் அன்பு கதையாகட்டும், நவீன கேட்ஜெட்டுகளின் பிடியில் மாட்டிக்கொண்ட குழந்தைகளிடம் உரிமையோடு கோபப்படுகிற மரப்பாச்சியின் கோபம் கதையாகட்டும், சாதாரணப்பொருட்களின் மீது அசாதாரணமான மூடநம்பிக்கைகளை ஏற்றிப் பின்பற்றுபவர்களை அந்தப் பொருட்களே சாடுகிற வழக்கு எண் 005 கதையாகட்டும், எல்லாக்கதைகளும் ஒரு புதிய காற்றைச் சுவாசிப்ப்பதைப் போல புத்துணர்வூட்டுகிறது.

குழந்தைகள் விரும்பிப்படிக்கிற கதைகளாக இந்த முதல் தொகுப்பிலேயே எழுதியிருக்கிறார் சர்மிளா. இன்னும் தொடர்ந்து எழுதும்போது பல சாதனைகளைப் படைக்கும் வல்லமை சர்மிளாவுக்குக் கிடைக்குமென்று நம்புகிறேன். அதற்கான நம்பிக்கையை தருகின்ற தொகுப்பு என்ற வகையில் என்னுடைய வாழ்த்துகளை நான் தெரிவித்துக் கொள்கிறேன்.



 ( 10-11-21 - ல் எவஞ்சொன்னது ராஜான்னு நூலுக்கு எழுதிய முன்னுரை )

சிங்கமும் வரிக்குதிரையும்

 

சிங்கமும் வரிக்குதிரையும்

மலையாளத்தில் - அஷீதா

தமிழில் - உதயசங்கர்



ஒரு நாள் காட்டில் ஒரு வயதான சிங்கம் அப்படியே நடந்து போய்க் கொண்டிருந்தது. வழியில் ஒரு வரிக்குதிரையும் சேர்ந்து நடந்தது. வரிக்குதிரை வயதான சிங்கத்திடம்,

“ எங்கே அப்படியே பொடி நடையாகப் புறப்பட்டாச்சு மாமா? “

என்று கேட்டது. அதற்கு சிங்கம்,

“ ஆற்றங்கரை போனால் ஒரு நாய்க்குட்டியும் ஒரு பூனைக்குட்டியும், குண்டான அழகுப்பாப்பாவும் சேர்ந்து விளையாடிக் கொண்டிருப்பார்கள் அல்லது கள்ளன் போலீஸ் விளையாடுவார்கள். அவர்கள் மூணு பேரில் ஒருத்தரைப் பிடித்தால் போதும் இன்றைய இரவு சாப்பாடு கழிந்து விடும்.. பசியினால் கண் தெரியவில்லை..”

என்று சொன்னது.

“ பசியினால் இல்லை மாமா வயதானால் கண்ணு தெரியாது..” என்று வரிக்குதிரை சொன்னது. அது சிங்கத்துக்குப் பிடிக்கவில்லை. ஆனாலும் எதுவும் பேசவில்லை. பேசாமல் வந்தது.

ஆற்றின் அந்தக்கரையில் சின்னுவும், நாய்க்குட்டியும் பூனைக்குட்டியும் விளையாடிக் கொண்டிருந்தார்கள். அவர்களைப் பார்த்து,

“ ஹோய் ஹோய் குழந்தைகளே! “ என்று கத்தியது. அவர்கள் மூன்றுபேரும் விளையாட்டை நிறுத்திவிட்டுத் திரும்பிப் பார்த்தார்கள்.

“ எனக்குப் பயங்கரப்பசி.. ஏதாவது உணவு இருந்தால் பொட்டலம் கட்டிக் கொண்டு வரலாமா? “

என்று சிங்கம் கேட்டது.

“ ஒவ்வொருத்தராக வந்தால் போதும்.. நான் காட்டுக்குள் போய்ச் சாப்பிட்டுக் கொள்வேன்.. பசியினால் கண்ணு தெரியவில்லை.. குழந்தைகளே..”

என்று மறுபடியும் சொன்னது. அப்போது வரிக்குதிரை விழுந்து விழுந்து சிரித்தபடி சொன்னது,

“ பசியினால் இல்லை கேட்டீர்களா? வயதாகி விட்டதில்லையா? “

என்று சொன்னது. சிங்கத்துக்கு கண்மண் தெரியாத கோபம் வந்தது. ஒரே அடியில் வரிக்குதிரை கொன்றது. காட்டுக்குள் இழுத்துக் கொண்டு போய் விட்டது. அதைப் பார்த்துப் பயந்து நின்ற சின்னுவும், நாய்க்குட்டியும் பூனைக்குட்டியும் கதைப்பாட்டியைத் தேடி ஒரே ஓட்டமாக ஓடினார்கள்.

நன்றி - புக் டே

பறயாம் நமுக்கு கதகள்

 

Thursday, 27 February 2025

குழந்தைமையின் ரகசியங்களைக் காட்டும் அற்புத விளக்கு

 

குழந்தைமையின் ரகசியங்களைக் காட்டும் அற்புத விளக்கு -- ஒண்ணாப்பு அலப்பறைகள்!

உதயசங்கர்



    மானுட வாழ்க்கையின் அற்புதமான பொற்காலம் குழந்தைப்பருவம் . ஒரு போதும் திரும்பிவராத அந்தப் பருவத்தில் குழந்தைகள் தாங்கள் எதைச் செய்கிறார்களோ அதுவாகவே மாறிவிடுகிறார்கள். எந்தத் தயக்கமோ, தடைகளோ இன்றி தங்கள் உணர்வுகளை வெளிப்படுத்துகிறார்கள். தாங்கள் நினைப்பதைச் சொல்கிறார்கள். புதிய புதிய படைப்புகளைப் படைக்கிறார்கள். புதிது புதிதாய் மொழிக்குச் சொற்களைச் சேர்க்கிறார்கள். கவிதையாய் பேசுகிறார்கள். கதைகளை நம்புகிறார்கள். இந்த உலகத்தை புதிதாக அறிந்து கொள்கிறார்கள். அதனால் இந்த உலகத்தைப் புதிதாய் படைக்கிறார்கள். எப்போதும் படைப்பூக்கத்தின் சிகரத்தில் வீற்றிருக்கிறார்கள்.

    குழந்தைமை என்பது படைப்பூக்கம். அந்தப் படைப்பூக்கத்தின் பெருமழையில் நனையும் பாக்கியம் ஆசிரியர்களுக்கு மட்டுமே கிடைக்கிறது. குழந்தைகள் அப்பா அம்மாவுக்குப் பிறகு முழுவதுமாக நம்புவதும், எந்த நிபந்தனையுமற்ற அன்பைச் செலுத்துவதும் ஆசிரியர்களிடம் மட்டும் தான். அதிலும் குறிப்பாக ஆரம்பப்பள்ளிக்கல்வி பயிலும் குழந்தைகளுக்கு ஆசிரியர்கள் தான் அவர்கள் வீட்டுக்கு வெளியே சந்திக்கின்ற முதல் கதாநாயகன் / கதாநாயகி. எனவே தான் எல்லாக்குழந்தைகளும் எத்தனை வயதானாலும் தங்களுக்கு முதல் முதலில் பாடம் எடுத்த ஆசிரியரை மறப்பதேயில்லை. குழந்தைகளின் ஆளுமையை உருவாக்கும் மிக முக்கியமான பணியை ஆசிரியர்கள் செய்கிறார்கள். பாடத்திட்டங்களைத் தாண்டி, குழந்தைகளுடைய தனித்திறமைகளைக் கண்டு உற்சாகப்படுத்தவும், வளர்ப்பதற்கும் ஒரு உற்ற தோழனைப் போல உதவுகிறார்கள்.

    குழந்தைகள் ஆசிரியர்களிடம் அன்பையே எதிர்பார்க்கிறார்கள். வேறு எதையும் இல்லை. அந்த அன்பிற்காக அவர்கள் எதையும் செய்யத் தயாராக இருக்கிறார்கள். அதனால் தான் பள்ளிக்கூடம் குழந்தைகளின் இரண்டாவது வெளியாகத் திகழ்கிறது. அந்த வெளியில் குழந்தைகளிடமிருந்து கிடைத்த அனுபவங்களை அப்படியே சிந்தாமல் சிதறாமல் நமக்குக் கடத்தியிருக்கிறார் கவிஞர்.ராஜிலாரிஜ்வான்.

    கவிதைகளில் தனக்கென தனித்துவமான இடத்தைப் பிடித்துள்ள கவிஞர்.ராஜிலாரிஜ்வான் குழந்தைகளின் அற்புத உலகத்துக்குள் மிக எளிதாகச் சென்று நமக்கு முத்துகளை அள்ளியள்ளிக் கொடுக்கிறார். ஒவ்வொரு அனுபவமும் குழந்தைமையின் பொக்கிஷ அறைகளைத் திறந்து பார்க்க உதவும்  சாவிகள் என்று கூடச் சொல்லலாம்.

    ஆமினாவின் கேள்விக்கு ஒரே மாதிரி பதிலைச் சொல்லிக் கொண்டேயிருக்கும் ஆசிரியரிடம் தயக்கமில்லாத அவளுடைய வார்த்தைகள் தான் அழகு. ஆதிரா எப்படி எழுதப்பழகினாள்? ராஜிலாரிஜ்வான் அதையே கவிதையாகச் சொல்கிறார். காமராஜரை உயிருடன் கொண்டு வரும் மாணவன் ஆசிரியரிடம் சொல்லும் விளக்கத்தைப் பார்க்கும்போது, மிக எளிமையாகப் புரிந்து கொள்ளும் குழந்தையின் மனது பளிச்சிடுகிறது. முன்னிபின்னியில் தமிழுக்கு ஒரு புதிய சொல்லைத் தருகிறார் அஸ்மா என்ற மாணவி.

    பவித்ரன் என்ற மாணவனின் பொய்களைக் கேட்கும்போது மிகச்சிறந்த எழுத்தாளனாவதற்கான எல்லாவிதமான குணாதிசயங்களும் இருப்பதைப் பார்க்கமுடிகிறது. கடைசி வரியில் கவிஞரான ஆசிரியரையேப் பயப்பட வைக்கிறார் பவித்ரன்.

    ஆப்பிள் ஆரஞ்சு அத்தியாயம் நம்முடைய பொட்டில் அறைந்த மாதிரி அந்நியமொழிக்கலப்பை குழந்தைகளே கண்டு சொல்லும் காட்சியை விவரிக்கிறது. கொசுவின் ரத்தம் எந்த குரூப்? உண்மையை ஆசிரியரும் மாணவர்களும் சேர்ந்து கண்டுபிடிக்கிறார்கள். வழக்கு மொழிக்கும் உரைநடை மொழிக்குமான வேறுபாட்டை மிக அழகாகச் சொல்கிற அத்தியாயம் தவளை- தவக்களை. ஆதில்

     இப்பதான் நீங்க சரியாத் தவக்களைன்னு சொல்றீங்க? என்று ஆசிரியரிடம் சொல்லும்போது சிரிக்காமல் இருக்க முடியவில்லை. வகுப்பில் பேசினால் ஐந்து மார்க் குறைப்பேனென்று ஆசிரியர் சொல்லும்போது பேசாமலிருந்தால் ஐந்து மார்க் சேர்த்துப் போடச் சொல்வது நியாயம் தானே. குழந்தைகளின் நியாயம் உண்மையில் அழகு.

    இந்த உலகத்தில் பிரியாணியை விட உயர்ந்தது ஏதாவது இருக்கிறதா? ஆஃபியின் வெகுளித்தனம் மனதைக் கொள்ளைக் கொள்கிறது. திருமண அழைப்பிதழை தானே எழுதிக் கொண்டு வரும் நஜீமிடம் ஆசிரியர் ராஜிலாரிஜ்வான் நடந்து கொள்ளும்விதம் முன்னுதாரணமானது. குழந்தைகள் போலச் செய்பவர்கள். அவர்கள் கேட்டதையே பேசுகிறார்கள். எனவே பேசும் சொற்களில் கவனம் தேவை என்றொரு அத்தியாயம் சொல்கிறது.

    குடிப்பழக்கம் உள்ள தந்தை செய்வதைப் போல தண்ணீர் பாட்டிலைத் திறக்கும் மாணவனிடம் பக்குவமாக நடந்து கொள்கிறார் ஆசிரியர். ஏன் தமிழில் பெயர் வைக்கவில்லை? என்று ஒரு மாணவன் கேள்வி கேட்கிறான். அது நமக்கான முக்கியமான பாடம். அமீன் என்னும் மாணவரின் கவனமின்மைக்கும், அலட்சியத்துக்கும் காரணம் தெரியாமல் திகைக்கும் ஆசிரியர் அவனுடைய தனித்திறமையைக் கண்டுபிடித்து பாராட்டும் அங்கீகாரமும் கொடுக்கும்போது அவன் மலர்ந்து மணம் வீசத் தொடங்குகிறான்.

    ஒண்ணாப்பு அலப்பறைகள் அனுபவங்களில் குழந்தைகளின் மனதை அப்படியே நம் கண்முன்னால் காட்டுகிறார் கவிஞர்.ராஜிலாரிஜ்வான். இந்த அனுபவங்கள் ஒவ்வொன்றும் குழந்தைகளின் உளவியலைப் பேசுகிறது. கற்றலைப் பேசுகிறது. கற்பித்தலைப் பேசுகிறது. குழந்தைமையின் வெகுளித்தனத்தைப் பேசுகிறது. குழந்தைகளிடம் ஆசிரியர்கள் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென்று சொல்கிறது. குழந்தைகளுக்கு சிறிய அங்கீகாரமும் பாராட்டும் எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தென்று பேசுகிறது.

    குழந்தைகளின் உளவியல் குறித்த நூறு தத்துவநூல்களின் பணியை கவிஞர்.ராஜிலாரிஜ்வானின் ஒண்ணாப்பு அலப்பறைகள் என்ற ஒரே நூல் செய்து விடுகிறது.

    குழந்தைகளை மையமாக வைத்து பெரியவர்களுக்காக எழுதப்படும் இலக்கியத்தில் இந்த நூல் முத்திரை பதிக்கும். நம்முடைய குழந்தைகளைப் புரிந்து கொள்ள பெற்றோர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் நிச்சயமாக உதவும்.

 ) ஒண்ணாப்பு அலப்பறைகள் - ராஜிலா ரிஜ்வான் நூலுக்கு எழுதிய முன்னுரை )

வெளியீடு - புக் ஃபார் சில்ட்ரென்

Wednesday, 26 February 2025

கோழியும் குள்ளநரியும்

 

கோழியும் குள்ளநரியும்

மலையாளத்தில் - அஷீதா

தமிழில் - உதயசங்கர்




சின்னுவின் பக்கத்து வீட்டில் மெகர்பா என்ற கோழி இருந்தது.

“ மெகர்பா..” என்று கதைப்பாட்டி நீட்டி முழக்கிக் கூப்பிட்டால் போதும், இந்த உலகத்தில் எங்கிருந்தாலும் சரி மெகர்பா பறந்து வரும்.

“ .. மெகர்பா என்ற பெயருக்கு என்ன அர்த்தம் கதைப்பாட்டி? “ என்று பொறாமையுடன் பூனைக்குட்டி கேட்கும்.

“ மெகர்பா.. என்று சொன்னால் இரக்கமுள்ளது  என்று அர்த்தம்..” என்று கதைப்பாட்டி சொன்னாள். கோழியிடம் என்ன இரக்கம்? அடுத்த வீட்டில் குடியிருந்தாலும் முட்டைகள் முழுவதுமாக சின்னுவின் வீட்டில் தான் இடும் மெகர்பா. அதனால் தான் கதைப்பாட்டி கோழியை மெகர்பா என்று அழைத்தாள்.

ஒரு நாள் கதைப்பாட்டி மதிய நேரம் படுத்துறங்கிக் கொண்டிருந்தாள். அப்போது கோழி அங்கே வந்தது. கதைப்பாட்டிக்குத் தானமாகக் கிடைத்த காய்ந்த நெல்லைக் கொத்திச் சாப்பிடத் தொடங்கியது. அப்போது கதைப்பாட்டியின் கால்களில் தலைவைத்து உறங்கிக் கொண்டிருந்த நாய்க்குட்டி துள்ளி எழுந்தது.

“ யாரது? “ என்று கேட்டது.

“ நான் தான் மெகர்பா..”

“ எதுக்கு வந்தே? “

“ நெல்லு சாப்பிட வந்தேன்..”

அதைக் கேட்ட பூனைக்குட்டி குதித்து,

“ நீ நெல்லு கொத்தாதே..” என்று சொன்னது. அப்போது சின்னு சொன்னாள்,

“ உன்னை விரட்டிப் பிடிப்பேன்..”

“ உனக்கு தொப்பை வைக்கும்..” என்று நாய்க்குட்டி சொன்னது. அருகில் இருந்த பூனைக்குட்டி,

“ மேசைக்கு வந்து நீயும் நெல்லைக் கொத்தாதே..” என்று பூனை சொன்னது.

சற்று தூரத்தில் இருந்த புதருக்குள் இருந்த ஒரு குள்ளநரி. இதை எல்லாம் பார்த்துக் கொண்டும் கேட்டுக்கொண்டும் இருந்தது.

என்ன ஒரு அழகான கோழி மெகர்பா! நல்ல இளம் பருவம். கிடைத்தால் ஒரு வாரத்துக்கு வைத்துச் சாப்பிடலாம். இரை தேடிப்போக வேண்டாம்.

பூனைக்குட்டி கோழியை விரட்டியபோது அது புதருக்கு அருகில் வந்து விட்டது. குள்ளநரி தலையை வெளியே நீட்டி,

“ மெகர்பா.. மெகர்பா.. கொஞ்சம் வாயேன் மெகர்பா.. எதற்காக இவர்களோடு சேர்ந்து சுத்தறே.. காட்டுக்கு வா.. உன்னை நான் காட்டுக்கு ராணியாக்குகிறேன்.. யானை கூட உன் கால்களில் விழுந்து கும்பிடும்.. சோளவயல் முழுவதும் நீ அலைந்து திரிந்து சாப்பிடலாம்..”

குள்ளநரியைப் பார்த்து பயந்து நடுங்கியபடி நின்றது மெகர்பா.

“ ஐய்யோ குள்ளநரியண்ணே.. ஒரு நிமிடம் நில்லு.. நான் கதைப்பாட்டியிடம் சொல்றேன்..” என்று சொல்லிய மெகர்பா “ க்க்கோ க்க்கோ கொகொகொ “ என்று கத்தியபடி ஒரே ஓட்டம்.

கதைப்பாட்டி விழித்து எழுந்தார். கையில் வைத்திருந்த கம்பைத் தூக்கி குள்ளநரியை நோக்கி எறிந்தாள். குள்ளநரியின் காலில் பட்டது கம்பு. காலை நொண்டியபடி ஊளையிட்டுக் கொண்டே குள்ளநரி காட்டுக்குள் ஓடியே போய் விட்டது.

இப்போதும் சின்னுவும் பூனைக்குட்டியும் நாய்க்குட்டியும் அவ்வப்போது கோழியைச் சுற்றி வந்து பாட்டுப்பாடிக் கேலி செய்வார்கள்.

“ மெகர்பா.. மெகர்பா

கோழிப்பெண்ணே மெகர்பா

காட்டுக்குப் போனால் குள்ளநரி

உன்னைச் சூப்பு வைக்கும் மெகர்பா..”

அதைக் கேட்டு கோழி தலையைக் குனிந்து கொள்ளும்.

நன்றி - புக் டே

பறயாம் நமுக்கு கதகள்

Tuesday, 25 February 2025

குழந்தைமையெனும் அற்புத உலகின் சாவிகள்

 

குழந்தைமையெனும் அற்புத உலகின் சாவிகள்

உதயசங்கர்



இந்தப் பூவுலகின் உயிர்களுக்கு இயற்கையின் ஆகச்சிறந்த கொடை என்னவென்றால் குழந்தமை தான். ஒவ்வொரு குழந்தையும் பிறக்கும் போதும் இந்த உலகம் புதிதாகப் பிறக்கிறது. சூரியனிலிருந்து பிரிந்த கோளத்துண்டு பூமியாகி நானூற்றிஎண்பத்திநான்கு ஆண்டுகளும், முதல் உயிர் தோன்றி முன்னூற்றிஎண்பத்திநான்கு ஆண்டுகளும் ஆகின்றன. ஆனால் இந்த பூமி ஒவ்வொரு நாளும் புதிது புதிதாகப் பிறந்து கொண்டேயிருக்கிறது. அப்படி எத்தனை கோடி முறை பிறந்திருக்குமென்று யோசித்துப் பாருங்கள். குழந்தைமையின் அற்புதம் விளங்கும்.

பிறந்ததிலிருந்து குழந்தைகள் இந்த உலகை, இயற்கையை, புழுவை, பூச்சியை, எறும்பை, மனிதர்களை, ஏன் அவர்களையே கூட புதிதாகக் கண்டுபிடிக்கிறார்கள்.  அவர்களுக்கேயுரிய தனித்துவமான கட்டற்ற புனைவு மொழியில் பேசுகிறார்கள். அந்த புனைவின் அதிசயத்தைப் பொதுவாகப் பெரியவர்கள் கவனிப்பதில்லை. அவர்கள் குழந்தைகளை நல்வழிப்படுத்தும் அத்தனை முயற்சிகளில் மட்டுமே ஈடுபடுகிறார்கள். அதாவது சர்க்கஸில் விலங்குகளைப் பழக்குவதைப் போல குழந்தைகளை இந்த சமூகமென்ற சர்க்கஸ் கூடாரத்தில் மூன்றுவேளை உணவுக்காகப் பழக்குகிறார்கள். ஆனால் எழுத்தாளர். தேனி சுந்தர் குழந்தைகளின் குழந்தைமையைப் புரிந்து கொள்ள முயற்சிக்கிறார். அந்தக் குழந்தைமையெனும் அற்புத உலகின் கதவுகளைத் திறந்து காட்டுகிறார். அந்தக் கதவுகளைத் திறந்த சாவிகளை அவர் மட்டும் ரகசியமாகப் பூட்டி வைக்கவில்லை. நம்மிடமும் கொடுத்து திறந்து பாருங்கள் என்கிறார்.

அவர் கண்டடைந்த உலகத்தின் பக்கங்களே ” நட்சத்திரங்கள் எட்டிப்பார்க்கின்றன” என்ற குழந்தைக்கவிதை நூல். நவீனத் தமிழ் சிறார் இலக்கிய வகைமைகளை மூன்றாகப்பிரிக்கலாம். முதலாவதாக குழந்தைகளே எழுதும் குழந்தை இலக்கியம். இரண்டாவதாக குழந்தைகளுக்காகப் பெரியவர்கள் எழுதும் குழந்தை இலக்கியம், மூன்றாவதாக குழந்தைகளை மையமாக வைத்து பெரியவர்களுக்காக எழுதும் குழந்தை இலக்கியம் என்று வகை பிரிக்கலாம். அந்த வகையில் எழுத்தாளர் தேனிசுந்தர் மூன்றாவது வகைமையான பெரியவர்களுக்காக எழுதும் குழந்தை இலக்கியத்தில் போற்றத்தக்க பங்களிப்புகளைத் தொடர்ந்து செய்து வருகிறார்.

இதை நவீன பிள்ளைத்தமிழ் நூல் என்று சொல்லலாம். ஏற்கனவே தமிழ் இலக்கிய மரபில் பிள்ளைத்தமிழ் என்ற வகைமை இருந்தாலும் அதன் நாயகர்கள் பெரியவர்களே. அவர்கள் குழந்தையாக இருந்தபோது எப்படியெல்லாம் இருந்திருப்பார்களென்பதைச் சொல்வதாகவே அமைந்திருக்கும். அதனால் தான் அழ.வள்ளியப்பா போன்ற நம் முன்னோடிகள் பிள்ளைத்தமிழை சிறார் இலக்கியம் இல்லை என்று உறுதியாகச் சொன்னார்கள். ஆனால் தேனிசுந்தரின் குழந்தைக்கவிதைகள் பிள்ளைத்தமிழ் என்ற சொல்லின் முழு அர்த்தத்துடன் திகழ்கிறது. இந்த நூல் புகழ்மதி பிள்ளைத்தமிழ் என்று கூடச் சொல்லலாம்.

குழந்தைகள் எதையும் யோசிப்பதில்லை. அவர்களுக்கு உடனே தோன்றுவதை உடனே சொல்லிவிடுவார்கள். பெரியவர்களைப் போல இடம் காலநேரம் ஆள் அதனால் கிடைக்கும் பலாபலன் என்று மனதைக் கறைப்படுத்தாத வெள்ளையுள்ளம் கொண்டவர்களென்பதால் எல்லாம் உடனுக்குடன் தெறித்து வருகின்றன. அந்தத் தெறிப்புகளைச் சரியாகக் கண்டுணர்ந்து சொல்வது ஒரு கலைஞனால் மட்டுமே முடிகிற காரியம். அப்படிப்ப்பட்ட கலைஞனாக தேனி சுந்தர் இந்தத் தொகுப்பில் மிளிர்கிறார்.

 பள்ளியில் கற்பவர்களாக இருக்கும் குழந்தைகள் வீட்டில் ஆசிரியராக மாறுகிரார்கள். அம்மாவை எழுத வைக்கிறார்கள். விளையாட வந்த பக்கத்து வீட்டுச் சிறுவனை எழுத வைக்கிறார்கள்.  தான் கண்டுபிடித்த தன்னுடைய நான்கு பெயர்களை எல்லோரிடமும் சொல்லிச் சொல்லிப் பெருமைப் படுகிறார்கள்.

வீட்டுக்குள்ள

ரொம்ப வெக்கையா இருந்துச்சு

நானும் பாப்பாவும்

மாடிக்குப் போனோம்

புகழ்மதி சொன்னாங்க

வானத்துல பாருப்பா

எவ்ளோ நச்சத்திரம் இருக்குன்னு?!

நான் சொன்னேன்

சரி பாப்பா

எத்தனை இருக்குன்னு

எண்ணிச்சொல்லு பாக்கலாம்!

பத்து பதினாலு

எட்டு அஞ்சு பத்தொம்பது!

இப்டி எண்ணிட்டு

அடுத்துச் சொன்னது தான்

ஹைலைட்டு

எல்லா நச்சத்திரமும்

நம்மளவே தான்ம்ப்பா

பாத்துக்கிட்ருக்கு

இது தான் குழந்தைமையின் அற்புதகணம். அதைக் குழந்தை மொழியிலே நமக்குக் கடத்துகிறார் கவிஞர். பேயாக இருந்தாலும் கண்ணைக்குத்துவது சும்மாச்சுக்கும் என்று சொல்லும் மனம் குழந்தைகளுக்கு மட்டுமே வாய்க்கும்.ஆங்கில ஏ ஃபாரை வைத்து குழந்தை சொல்லும் வார்த்தைகளை வாசித்தால் நீங்கள் புன்னகைக்காமல் இருக்க முடியாது. எல்லாக்குழந்தைகளும் விவரம் தெரிந்த நாளிலிருந்தே பெரியவர்களாக ஆசைப்படுகிறார்கள். எல்லாப்பெரியவர்களுமே குழந்தைகளாக ஆசைப்படுகிறார்கள். இதுதான் வாழ்க்கையின் முரண். நேற்றுவரை சின்னப்பிள்ளையாகவும் இன்று பெருசாகவும் விவரமாகவும் ஆகிவிட்டதாகச் சொல்லும் குழந்தையின் சொற்களில் என்ன ஒரு ஆனந்தம்!

குழந்தைகள் எப்படியெல்லாம் மற்றவர்களை அடையாளம் காண்கிறார்கள் தெரியுமா?. சீட்டா என்ற நாயின் அம்மா என்று ஒரு வீட்டம்மாவை அடையாளம் காண்கிறார்கள். ஏடிஎம்முக்குள்ளே போய்த் திரும்பி வரும் அப்பா கையில் பணம் இருப்பதைப் பார்த்த குழந்தை கேட்கிறது.

உள்ள யாருமே இல்ல..

களவாண்டுக்கு வந்துட்டியா?

குழந்தைகளின் பள்ளி அனுபவங்களும் கவிதையாகி இருக்கின்றன. அதில் குழந்தைகளின் கசப்புணர்ச்சி தெரிகிறது. விமர்சனமும் தெரிகிறது.

ரொம்பதூரம் நடந்தா எரிமலைக்கு கால் வலிக்கும்னு குழந்தை கண்டுபிடிக்கிறாள். கேள்விகளைக் கேட்டுப் பதிலையும் சொல்கிற குழந்தையின் சொற்களில் அன்பு வழிந்தோடுகிறது. குழந்தையின் சில கேள்விகளுக்குப் பதிலே சொல்ல முடியாது. அந்தக் கேள்விகளையும் குழந்தை கேட்கிறார். பல்லி இறந்தால் சொந்தக்காரங்க வந்து அழுதுட்டு போயிட்டாங்களா ன்னு கேட்கிறது குழந்தை. யதார்த்த உலகத்தை எப்படிப் பிரதிபலிக்கிறது குழந்தை என்று பாருங்கள். தோத்ததுக்கும் பரிசு கொடுத்தாங்கன்னு குழந்தை சொல்கிறாள். போட்டிகளே கவனியுங்கள். வீடு கட்ட பணம் இல்லையா? பெரிய வீடு கட்டியிருக்கிறவங்ககிட்டே போய் கேட்கலாம் என்கிறது குழந்தை.

இப்படி சின்னச்சின்னக்கவிதைகளின் வழியே குழந்தையின் மனதைப் புரிய வைக்கிறார். இன்னும் சொல்லப்போனால் குழந்தைகள் எப்படிச் சிந்திக்கிறார்களென்பதை அவர்களுடைய சொற்களிலிருந்தே நமக்குக் காட்டுகிறார் தேனிசுந்தர். ஒவ்வொரு கவிதையையும் வாசித்து அனுபவிக்கவேண்டும். அப்போது தான் நம்முடைய கடந்து போன குழந்தைமையின் பழைய நினைவுகளை அசைபோடவும் மனம் ததும்பித் திளைக்கவும் முடியும்.

ஒவ்வொரு குழந்தையும் தனித்துவமானவர்கள். உங்கள் குழந்தையும் இப்படியான கவித்துவத்தருணங்களில் வாழ்ந்து கொண்டிருப்பார்கள். அதைக் கண்டு அனுபவிக்க நமக்குப் பொறுமை வேண்டும். குழந்தை மனம் வேண்டும்.

தேனி சுந்தர் இந்தக் கவிதைகளின் வழியே நவீனத் தமிழ்ச்சிறார் இலக்கியத்துக்கு வளம் சேர்த்திருக்கிறார். இன்னும் குழந்தமையின் அற்புதவெளியில் அலைந்து திரிந்து புதையலை நமக்கு அள்ளியள்ளிக் கொடுக்க வேண்டுமென நெஞ்சார வாழ்த்துகிறேன்.


( நட்சத்திரங்கள் எட்டிப்பார்க்கின்றன - தேனி சுந்தர் நூலுக்கான முன்னுரை )

 

Monday, 24 February 2025

செல்லச்சண்டை

 

செல்லச்சண்டை

மலையாளத்தில் - அஷீதா

தமிழில் - உதயசங்கர்



கதைப்பாட்டி உட்கார்ந்திருக்கும் ஆலமரத்தின் அடியில், கிராமத்துத்தலைவரான மொட்டை மாதவன் அவருடைய பசுமாட்டை மேய்வதற்காக அழைத்து வருவார். உச்சிப்பகல் நேரம் வரை புல்லைச் சாப்பிடும் பசுமாடு. அதன்பிறகு அசை போட்டுக் கொண்டே அங்கே படுத்துக்கிடக்கும். மொட்டை மாதவன் பசுவை கல்யாணி என்று பெயரிட்டு அழைப்பான். கல்யாணிப்பசு அப்படி அசை போட்டுக் கொண்டு இருக்கும்போது காக்கா பறந்து போய் கல்யாணிப்பசுவின் உடலிலும் காதுகளிலும் உள்ள உண்ணிகளைக் கொத்திச் சாப்பிடும்.

கல்யாணிக்கு அது ரொம்பப் பிடிக்கும். நாய்க்குட்டி கல்யாணிப்பசுவின் பால்மடியில் தலை வைத்துப் படுக்கும். மிகுந்த அன்பினால் “ என் குட்டி நாயே” என்று அழைத்து கல்யாணிப்பசு தன் பால்மடியிலிருந்து பாலைச் சுரக்கும். அதைப் பார்த்த பூனைக்குட்டிக்கு கோபம் வரும். ஆனாலும் எதுவும் பேசாது. முகத்தைத் தூக்கி வைத்துக் கொண்டு இருக்கும்.

சின்னுவும் அருகில் போய் உட்கார்ந்திருப்பாள். கல்யாணிப்பசு அசைபோட்டுக் கொண்டே தன்னுடைய குழந்தைப்பருவத்தில் நடந்த கதைகளைச் சொல்வாள்.

“ நான் குழந்தையாக இருந்தபோது, இந்தக் காட்டில் ஒரு யானைக்குட்டி இருந்தது. அவ்வப்போது இங்கே வரும். நாங்கள் நல்ல நண்பர்களாக இருந்தோம். அப்படி ஒருநாள் நாங்கள் சேர்ந்து இருந்தபோது, நான் சொன்னேன்,

“ ஏ.. யானைக்குட்டி அங்கே பாரு..மொட்டை மாதவனின் வாழைத் தோட்டத்தில் பழக்குலை.யைப் பாரு..”

யானைக்குட்டி உடனே அதை பறித்து விட்டான். அப்போது நான் சொன்னேன்,

“ நான் தானே உனக்குச் சொன்னேன்.. அதனால் அது எனக்குத்தான்.. கொடுத்துரு..”

யானைக்குட்டி சொன்னது,

“ இது எங்கே உள்ள நியாயம் கல்யாணியக்கா? மாமரத்தில் காய்த்த மாம்பழம் பார்த்தவருக்குச் சொந்தமா? கல் வீசிப் பறித்தவருக்குச் சொந்தமா? ”

எங்கள் இருவருக்கும் சண்டை. அடியும் பிடியும் தள்ளும் முள்ளுமாய் இருந்தபோது காட்டிலிருந்து குரங்குக்கூட்டத்தின் தலைவன் பஞ்சாயத்து செய்ய வந்த்து. வாழைப்பழக்குலையின் எடையைப் பார்க்கிறேன் என்று சொல்லி கையில் வாங்கியது அந்தக் குரங்கு.

அப்படியும் இப்படியுமாகப் பார்த்துக் கொண்டிருந்த குரங்கு திடீரென அதைத் தூக்கிக் கொண்டு ஒரே ஓட்டமாக காட்டுக்குப் போய் விட்டது.”

அந்தக் கதையைக் கேட்டு எல்லாரும் கை தட்டிச் சிரித்தார்கள். நாய்க்குட்டி மட்டும் கை தட்டவில்லை. அது கல்யாணிப்பசுவின் பால்மடியில் பாலைக் குடித்துவிட்டு உறங்கிக் கொண்டிருந்தது.

நன்றி - புக் டே

பறயாம் நமுக்கு கதகள்

 

Sunday, 23 February 2025

குழந்தை இலக்கியத்தின் புதுவரவு சரிதா ஜோ

 

குழந்தை இலக்கியத்தின் புதுவரவு சரிதா ஜோ



குழந்தை இலக்கியத்தின் மிக முக்கியமான காலகட்டத்தில் நாம் இருக்கிறோம். யாராலும் கவனிக்கப்படாமல் ஒரு ஓரமாய் கிடந்த குழந்தை இலக்கியத்துக்கு நீண்ட காலத்துக்குப் பிறகு மீண்டும் கவனம் கிடைத்திருக்கிறது. நிறைய எழுத்தாளர்கள் குழந்தை இலக்கியம் படைப்பதில் ஈடுபாடு காட்டுகிறார்கள். நிறைய குழந்தைகள் தங்களுக்கான படைப்புகளை தாங்களே எழுதத் தொடங்கியிருக்கிறார்கள். சமூக ஊடகத்தின் நற்பயனாக ஏராளமான கதைசொல்லிகள் உருவாகியிருக்கிறார்கள். நிறையக் குழந்தைகள் புத்தகங்களை வாசிக்கத் தொடங்கியிருக்கிறார்கள். வெளிநாடு வாழ் தமிழ்க்குழந்தைகள் வாசிக்கவும் எழுதவும் ஆரம்பித்திருக்கிறார்கள். ஏராளமான ஆசிரியர்கள் குழந்தை இலக்கியத்தின் பக்கம் கடைக்கண் வைத்திருக்கிறார்கள். பழைய, புதிய பதிப்பகங்கள் குழந்தை இலக்கிய நூல்களை வெளியிடுகிறார்கள். இப்படி ஒரு ஆரோக்கியமான சூழல் உருவாகியிருக்கிறதென்றால் அதற்கு கடந்த பத்து ஆண்டுகளுக்கு மேல் தொடர்ந்து குழந்தைகளுக்கான மொழிபெயர்ப்பு நூல்களையும், சுய நூல்களையும் லாபநோக்கின்றி வெளியிட்ட பாரதி புத்தகாலயத்தின் புக்ஸ் ஃபார் சில்ட்ரென் பதிப்பகத்துக்கு மிக மிக காத்திரமான பங்கு உண்டு.

குழந்தை இலக்கியத்தின் மறுமலர்ச்சிகாலத்தின் முதல் அலை அடித்துக் கொண்டிருக்கிறது. இந்த அலையின் புதிய வீச்சாக பெண்கள் குழந்தைகளுக்கான கதைகளை எழுத முன்வந்திருக்கிறார்கள். எப்போதும் குழந்தைகளுடனே இருந்த வரும் பெண்களுக்குத் தான் குழந்தைகளின் ஒவ்வொரு அசைவின் அர்த்தபாவங்களும் தெரியும். ஆனாலும் பொது இலக்கியவெளியில் இருப்பதைப்போலவே குழந்தை இலக்கியத்தில் எழுதுகிற பெண்கள் மிக மிகக்குறைவு. அப்படிப்பட்ட சூழலில் சர்க்கரை இல்லாத ஊரில் தேன்மழை பொழிந்தது போல, குழந்தைகளுக்கான கதைகளைச் சொல்வதில் மிகச்சிறந்தவரான சரிதாஜோ இப்போது தன்னுடைய கதைகளுடன் குழந்தை இலக்கியவெளியில் நுழைந்திருக்கிறார்.  குழந்தை இலக்கியத்தில் ஒர் எடுத்துக்காட்டாக பிரவேசித்திருக்கிற அவருக்கு முதலில் ஆயிரம் வாழ்த்துகள்!

குழந்தைகளின் உலகம் கனவு மயமானது. அதிசயங்களும் ஆச்சரியங்களும் நிறைந்தது. அதீதங்களின் ( ஃபேண்டசி ) ருசிக்காகவே குழந்தைகள் கதைகளை வாசிக்கிறார்கள். பேசுகிற விலங்குகளையும், பறவைகளையும் நம்புகிறார்கள். பறக்கிற யானைகளையும் இரண்டு கால்களால் ஓடுகிற முதலைகளையும், உருமாறும் பூதங்களையும், கூடுவிட்டு கூடு பாயும் தேவதைகளையும் ராட்சசர்களையும் இளவரசர்களையும், இளவரசிகளையும் ஏற்றுக்கொள்கிறார்கள். குழந்தைகளின் உலகம் விந்தைகளின் உலகம். எனவே தான் குழந்தைகள் அதீதங்களை ஆனந்தத்துடன் அனுபவிக்கிறார்கள். அந்த மகிழ்ச்சியூட்டல் தான் குழந்தை இலக்கியத்தின் அடிப்படை. அதன்பிறகே மற்ர சங்கதிகளான கருத்து, செய்தி, நீதி, நன்னெறி எல்லாம் வாலைப் போன்று நீண்டு கொண்டு வரும். அந்தவகையில் சரிதாஜோவின் எட்டுக்கதைகள் அடங்கிய இந்தத் தொகுப்பு அந்த ஆனந்தத்தைக் குழந்தைகளுக்கு நிச்சயமாகக் கொடுக்கும்.

சரிதாஜோவின் இந்தத் தொகுப்பில் உள்ள கதைகளில் எல்லாம் கதைகள் குழந்தை இலக்கியத்தின் அனைத்து வகைமையிலும் எழுதப்பட்டுள்ள கதைகள். ஒரே நேரத்தில் அறிவியலையும், இயற்கையையும், அதீதங்களையும் குழைத்து அழகான சிற்பங்களாக வடித்திருக்கிறார். அனைத்துமே குழந்தைகளின் மனதில் மிகச்சிறந்த பாதிப்பை ஏற்படுத்தும் என்பதில் ஐயமில்லை.

பூமிக்கு வந்த நிலாவில் நட்சத்திரங்கள் நிலாவில் வடைசுடும் பாட்டியிடம் வடை கேட்டு கிடைக்காமல் கோபித்துக் கொண்டு பூமிக்கு வந்து பள்ளிக்கூடத்தில் குழந்தைகளுடன் சேர்ந்து விளையாட வானத்தில் நட்சத்திரங்களைக் காணாமல் அல்லோலகல்லோலப்படுகிற சூரியன் பிரச்னையைக் கேள்விப்பட்டு நிலாவுக்குத் தேடிக்கண்டுபிடிக்க உத்திரவு போடுகிறது. நிலாவும் பூமிக்கு வந்து நட்சத்திரங்களைக் கண்டுபிடிக்கிறது என்பதோடு கதை முடியவில்லை. கதையின் முடிவில் வடைசுடும் பாட்டி என்னவானாள்? என்பதில் தான் சரிதாஜோவின் கலைத்திறன் மிளிர்கிறது.

இயற்கையின் காலநிலை மாற்றத்தினால் மனிதர்களை விட விலங்குகள் எப்படி பாதிக்கப்படுகின்றன என்பதைச் சொல்லும் கதை டோலி லாலி. தாங்கள் செய்த முற்பகல்வினைக்கு பிற்பகல் அனுபவிக்கிற மனிதர்களுக்குச் சரிதான். ஆனால் எதுவுமே செய்யாமல் பாதிக்கப்படுகிற விலங்குகளைப் பற்றி பாடல்களுடன் உள்ள கதை. நாடகப்பிரதியாக மாற்றமுடிகிற நல்லகதை டோலி லாலி.

கிளியே கிளியே வெட்டுக்கிளியே சமீபத்தில் இந்தியாவில் பரபரப்பாகப் பேசப்பட்ட் பாலைவனவெட்டுக்கிளிகளைப் பற்றிய கதை. கதை வழக்கமான பாணியிலிருந்து மாற்றி எழுதப்பட்டிருப்பது சிறப்பு. வெட்டுக்கிளிகளே திட்டமிட்டு மனிதர்களுக்குப் பாடம்புகட்ட படையெடுப்பதாக எழுதியிருப்பது நல்ல கற்பனை.

மரங்களின் ஆட்டம் கதையில் மரங்கள் நடமாடுகின்றன. ஓடுகின்றன. ஆடுகின்றன. ஏன் அப்படிச் செய்கின்றன? அப்படி நடந்தால் என்ன ஆகும்? ஒரு குழந்தையின் மனநிலை இருந்தால் மட்டுமே இப்படியான கதைகளை எழுதமுடியும். சரிதாஜோ குழந்தையாகவே மாறி கதை சொல்கிறார்.

காட்டுக்குள்ளே என்ற கதையில் மனிதர்களின் காடழிப்பைப் பற்றியும் விலங்குகள் காட்டைக் காப்பாற்றப் போடுகிற திட்டங்களைப் பற்றியும் அதற்குள் நடக்கிற திடீர்திருப்பங்களைப் பற்றியும் சுவாரசியமாக எழுதப்பட்டிருக்கிற கதை. வாசிக்கும்போது நமக்கு காடழிப்புக்கெதிரான எண்ணத்தைத் தோற்றுவிக்கும் கதை.

சின்னா லட்டு தின்ன ஆசையா கதையில் எலிகளுக்கிடையில் நடக்கிற போட்டியில் கபடமாக எதிரியை வீழ்த்தி எப்போதும் வெற்றி பெறுகிற கபியின் தந்திரம் எப்படி முறியடிக்கப்படுகிறது. வெற்றி பெற்ற சின்னா என்ன செய்கிறது? என்பதை உங்கள் வாசிப்பில் அனுபவிக்கலாம்.

நீலமரமும் தங்க இறக்கைகளும் கதையில் பறவைகளின் ராஜாவாக ஆவதற்காக நீண்ட பயணம் போகிற காகங்களான அபி சிபி ஆகியவற்றைப் பற்றிய கதை. ஏழு கடல் ஏழு மலை இவற்றை எப்படித் தாண்டிச் செல்கின்றன. அங்கே யாரைச் சந்திக்கிறார்கள்? யார் ராஜாவானார்கள்? உங்கள் எதிர்பார்ப்புக்கு நல்ல தீனி போடும் கதை. இடையில் குழந்தைகளுக்குப் புதிய விஷயங்களையும் அறிமுகப்படுத்துகிறார் சரிதாஜோ.

வானவில்லும் வாண்டுகளும் கதை, முழுக்கமுழுக்க அறிவியல் கதை. அதுவும் மிகசமீபத்தில் கண்டுபிடிக்கப்பட்ட புதிய கண்டுபிடிப்பின் அடிப்படையில் எழுதப்பட்டிருக்கிற கதை. ஒரு அறிவியல் விஷயத்தை எப்படி அழகாக, யதார்த்தமாகச் சொல்ல முடியும் என்பதற்கு எடுத்துக்காட்டாக இந்தக்கதையை சொல்லலாம்.

இந்தக்கதைகளின் வழியாக சரிதாஜோ குழந்தைகளுக்கு நிறைய அற்புதங்களை நிகழ்த்திக்காட்டுகிறார். அவர்களுக்குச் சிறகுகள் கொடுத்து மாயஜால உலகத்துக்குள் அவர்களைப் பறக்கச்செய்கிறார். வண்ணமயமான பூக்களை அவர்களுக்குக் காட்டி வண்ணத்துப்பூச்சிகளாக்கி மகிழ்ச்சியடைகிறார். அவரே ஒரு குழந்தையாகி குழந்தைகளோடு கதையுலகில் ஆனந்தமாக நீந்துகிறார். குழந்தைகளுக்கான கதைகள் எழுதுவதற்கான அனைத்துத்திறமைகளும் கைவரப்பெற்றிருக்கிறார் சரிதாஜோ.

இந்தக்கதைகளின் வழியாக தமிழ்க்குழந்தை இலக்கியத்துக்கு காத்திரமான ஒரு படைப்பாளி கிடைத்திருக்கிறார். அவருடைய வரவு நல்வரவு. தொடர்ந்து எழுதுவதின் மூலம் பல சிகரங்களை அடைய என்னுடைய இதயப்பூர்வ வாழ்த்துகள்.


( 2021 - ல் நீல மரமும் தங்க இறக்கைகளும் நூலுக்கு எழுதிய முன்னுரை )

ஆட்டுக்குட்டியின் கதை

ஆட்டுக்குட்டியின் கதை

மலையாளத்தில் - அஷீதா

தமிழில் - உதயசங்கர்



சின்னு கூட விளையாடுவதற்கு வழக்கமாக ஒரு ஆட்டுக்குட்டியும் வரும். ஆட்டுக்குட்டியின் பெயர் சூசனா. பார்க்க அவ்வளவு அழகு. அவளுடைய கழுத்தில் ஒரு மணி கட்டியிருக்கும். துள்ளிக்குதித்தே சூசனா நடப்பாள். அதனால் சூசனா வருவது தூரத்திலேயே தெரிந்து விடும்.

ஒரு நாள் ஆற்றங்கரையில் சின்னுவும் நாய்க்குட்டியும் பூனைக்குட்டியும் சூசனா ஆட்டுக்குட்டியும் கள்ளன் போலீஸ் விளையாட்டு விளையாடிக் கொண்டிருந்தார்கள். ஒளிந்து கொள்வதற்காக எல்லாரும் நான்கு திசைகளிலும் பாய்ந்து சென்றனர். சூசனா ஆட்டுக்குட்டி கொஞ்ச தூரத்தில் இருந்த புதர்ச்செடிகளுக்குள் பின்னால் ஒளிந்து கொண்டது.

ஆற்றின் அக்கரையிலிருந்து வந்த ஒரு செந்நாய் சூசனா ஆட்டுக்குட்டியைப் பார்த்து விட்டது. செந்நாய்க்கு ஆசை அதிகமானது.

எவ்வளவு அழகான ஆடு! அது மட்டும் கிடைத்தால் இரவு உணவு முடிந்தது. பாதியை கிழட்டுச்சிங்கத்துக்குக் கொடுத்து விட்டால் ஒரு வாரத்துக்கு எதுவும் கேட்காது. யாருக்கும் பயப்படாமல் காட்டில் சுற்றலாம். வசதியாக இருக்கும் என்று நினைத்தது செந்நாய்.

உடனே செந்நாய் சூசனா ஆட்டுக்குட்டியை அழைத்து,

“ அழகுப்பெண்ணே! செந்நாய் மாமா உனக்குக் காட்டைச் சுற்றிப்பார்க்க அழைத்துப் போகிறேன்.. வா.. அந்தப் பிள்ளைகளுடன் சேர்ந்து உன் அழகே கெட்டுப்போச்சு.. செந்நாய் மாமா உன்னைக் குளிப்பாட்டி புத்தம் புது ஆடைகள் வாங்கித் தருகிறேன்..”

என்று சொன்னது. அதைக் கேட்ட சூசனா ஆட்டுக்குட்டி நடுங்கி விட்டது. உடனே துள்ளிக்குதித்து பாய்ந்து போகும்போது,

“ வேண்டாம் மாமா.. நான் இங்கே இன்னும் கொஞ்சநாட்கள்.உயிரோடு இருக்கிறேன்..”

என்று சொல்லியபடியே ஓடியது.

ஓடி வந்த சூசனா ஆட்டுக்குட்டியை சின்னு கட்டி அணைத்துக் கொண்டாள். நாய்க்குட்டி நக்கிக் கொடுத்து அன்பைக் காட்டியது. அவர்கள் எல்லாரும் கதைப்பாட்டியை நோக்கி ஓடினார்கள்.

  நன்றி - புக் டே

பறயாம் நமுக்கு கதகள்

Saturday, 22 February 2025

பெதோஸ்யா, எங்கள் மதிப்புக்குரியவரே,

 

 

பெதோஸ்யா, எங்கள் மதிப்புக்குரியவரே, இன்னும் கெட்டியான கருப்புத் தேநீரைத் தயாரியுங்கள்!

உதயசங்கர்



இன்று அன்னாவிடம் தன்னுடைய காதலைத் தெரிவித்து விட்டார் எங்கள் பிரியத்துக்குரிய தாஸ்தயேவ்ஸ்கி.

பெதோஸ்யா! எங்கள் மதிப்புக்குரியவரே! சீக்கிரம்.. சமையலறைக்குச் சென்று தாஸ்தயேவ்ஸ்கிக்கு மிகவும் பிடித்த கெட்டியான கருப்புத் தேநீரைத் தயாரியுங்கள்! நாம் எல்லோரும் அருந்துவோம்.

சற்றுப் பொறுங்கள்! என்று சைகை செய்வது புரிகிறது. அந்தக் காட்சியிலிருந்து இன்னும் நீங்கள் வெளியே வரவில்லை. உங்களுடைய சொந்த மகனின் வாழ்வில் போல கிடைத்த நற்பேறான கணங்களைத் தரிசிக்க விரும்பினீர்கள் இல்லையா? புரிந்து கொள்கிறேன்.

தாஸ்தயேவ்ஸ்கி எப்போதும் உட்கார்ந்து எழுதும் நாற்காலியில் அன்னா உட்கார்ந்திருந்தார். தாஸ்தயேவ்ஸ்கி அன்னாவின் முகத்தைப் பார்க்கவில்லை. முன்னும் பின்னும் நடந்து கொண்டிருந்தார். அவருடைய கையில் அன்னா அறைக்குள் வந்ததிலிருந்து புகைக்கும் ஐந்தாவது சிகரெட். அன்னா வருவதற்கு முன்பு அவர் புகைத்துப் போட்ட சிகரெட்டுத் துண்டுகள் ஆங்காங்கே சிதறிக்கிடந்தன. அறைக்குள் சிகரெட் புகையிலை நாற்றம். பொதுவாக தீவிர்மாக எழுதும்போது மட்டும் தான் தாஸ்தயேவ்ஸ்கி அவ்வளவு சிகரெட்டுகளைப் புகைப்பார். அவர் எழுதும் நாவலின் சம்பங்களிலும் கதாபாத்திரங்களிலும் ஆழ்ந்து போய் விடுவார். சில நேரம் கோபமாகப் பேசுவார். அழுவதைப் போல முகம் கோணும். உறுமுவார். யாரையோ திட்டித்தீர்ப்ப்பார். சிரிப்பார்.

1866 – ஆம் ஆண்டு எழுத்தாளர்களைச் சுரண்டிக் கொஞ்சம் கொஞ்சமாகச் சாப்பிட்டுக்கொண்டிருக்கும் எல்லாப்பதிப்பாளர்களையும் போல டெல்லோவ்ஸ்கி என்ற வஞ்சகமான பதிப்பாளரும் தாஸ்தயேவ்ஸ்கியின் அவரசத்தைத் தெரிந்து கொண்டு அவருக்குப் பண உதவிச் செய்வது போல செய்து வேண்டுமென்றே சாதாரணமாகச் செய்யமுடியாத சில நிபந்தனைகளை விதித்தான். ஒரு மாத காலத்துக்குள் ஒரு நாவலை எழுதிக் கொடுக்க வேண்டும். அப்படி கொடுக்க முடியாவிட்டால் அந்த நாவலுக்கான உரிமை மட்டுமல்ல: அவருடைய மொத்தப்படைப்புகளின் உரிமையையும் அவனுக்கு எழுதித் தரவேண்டும்.

பாவம்! தாஸ்தயேவ்ஸ்கி.. என்ன செய்வார்? அந்த ஏற்பாட்டுக்கு சம்மதித்தார்.

நாவல் எழுதும்பணிக்காகத் தான் சுருக்கெழுத்து தெரிந்த அன்னாவை அக்டோபர் மாதம் 4 ஆம் தேதி முதல் முறையாகச் சந்திக்கிறார். அப்போதெல்லாம் அவருடைய மனதில் வேறெந்த சிந்தனைகளுமில்லை. நாவலை முடித்துக் கொடுத்து அவருடைய படைப்புகளைக் காப்பாற்ற வேண்டுமே என்ற எண்ணம் மட்டுமே அவரை அலைக்கழித்துக் கொண்டிருந்தது.

அக் 4 ஆம் தேதி முதல் 27 ஆம் தேதிவரை இருபத்தியாறு நாட்களில் சூதாடி நாவல் முடிந்தது. அதன் பிறகு அன்னாவை நவம்பர் மூன்றாம் தேதி தான் சந்திக்கிறார். இப்போது அறை ஒழுங்கில்லாமல் கலைந்து கிடந்தது. படுக்கையிலுறக்கம் வராமல் புரண்டு புரண்டு படுத்த அடையாளங்கள் தெரிந்தன. தாஸ்தயேவ்ஸ்கியின் முகத்தைப் பார்க்க்க வேண்டுமே. நாற்பந்தைந்து வயது மனிதரைப் போலவா தெரிந்தார். வாழ்க்கையில் மரணத்தின் விளிம்புவரை சென்று, வாழ்வின் அனைத்துத் துயரங்களையும் அனுபவித்த, ஆன்மாவில் காயங்களினால் ஏற்பட்ட தளர்ந்த பலவீனமான இதயத்தைக் கொண்டவராகவா தெரிந்தார். இருபந்தைந்து வயதில் வாழ்வின் வசந்தத்தை அள்ளியள்ளைப் பருகத்துடிக்கும் ஒரு வலிமை மிக்க இளைஞனாக அல்லவா தெரிந்தார்.

அந்த அறையில் அவரையும் அன்னாவையும் தவிர வேறு யாரும் இல்லை என்று தாஸ்தயேவ்ஸ்கி நினைத்திருந்தாரில்லையா? காதலிக்கும் போது எல்லோருக்கும் அப்படித்தானே எண்ணத்தோன்றும். அவர்களிருவரையும் தவிர இந்த உலகத்தில் யாருமே இல்லை. ஏன் உலகமே இல்லை என்று கூடத் தொன்றும். அப்படித்தான் எவ்வளவு பெரிய எழுத்தாளராக இருந்தாலும் எத்தனையோ காதல்களைச் சந்தித்துக் கடந்திருந்தாலும், ஒரு பெண்ணிடம் காதலைச் சொல்வதென்பது லேசான காரியமா? அப்போது தோன்றும் உணர்ச்சிச்சுழிப்புகளை எந்த எழுத்தாளராலும் எழுதி விட முடியுமா? முகத்தில் ரத்தம் பாய்ந்து சிவந்து எதிர்கொள்ளப்போவது ஆனந்தத்தையா அவமானத்தையா என்று தெரியாமல் மரணத்தின் முன்னால் கையாலாகாமல் நிற்பதைப் போன்றல்லவா நின்று கொண்டிருந்தார் எங்கள் அருமை தாஸ்தயேவ்ஸ்கி.

 முகத்தில் வழியும் அசட்டுத்தனத்தை மறைக்க எவ்வளவோ முயற்சிகள் செய்தும் முடியவில்லை. எத்தனையோ பெண்களைச் சந்தித்தவர் தான். சூதாடியில் வரும் பொலீனாவுக்காக சூதாட்டவெறியில் ஒரு போதும் மீளமுடியாதபடி வீழ்ந்தவர் தான். ஆனால் இப்போது அந்தச் சின்னஞ்சிறுபெண், அவரை விட இருபத்தைந்து வயது குறைந்த, வசந்தத்தின் வாசலில் நின்று கொண்ட ஒளிவீசும் எதிர்காலத்தைக் கனவு கண்டு கொண்டிருந்த அந்தப் பெண்ணிடம் சொல்லும்போது ஏன் இந்தத் தடுமாற்றம்? ஏன் இந்தத் தயக்கம்? குரலில் ஏன் நடுக்கம்?

“ தைரியமாகச் சொல்லுங்கள் தாஸ்தயேவ்ஸ்கி! இது தான் சமயம்.. இவள் தான் உங்கள் வாழ்க்கையில் நீங்கள் கண்ட உண்மையான காதல்.. தைரியமாகச் சொல்லுங்கள் தாஸ்தயேவ்ஸ்கி “ என்று அறையின் வாசலில் ஓரமாக இப்படித்தான் நடக்கும் என்று முன்னுணர்ந்தவராக தாஸ்தயேவ்ஸ்கியை உள்ளும்புறமும் அறிந்த பெதோஸ்யா நின்று மானசீகமாக வேண்டிக் கொண்டிருந்தார். அவர் அப்படி நின்று கொண்டிருப்பது தாஸ்தயேவ்ஸ்கிக்குத் தெரியாது. அன்னாவுக்கும் தெரியாது.

உங்களுக்கு மட்டும் யாருக்கும் தெரியாத ஒரு ரகசியத்தைச் சொல்கிறேன். ஆமாம. பெதோஸ்யாவுக்குப் பின்னால் நிழலாய் ஒரு உருவத்தைப் பார்த்தீர்களா? இந்த அமர கணத்தை எதிர்காலத்தில் ஒரு சங்கீர்த்தனம் போல என்ற நாவலாக எழுதி மலையாள இலக்கியத்தில் சாதனை படைக்கப்போகும் பெரும்படவம் ஸ்ரீதரன் தான் அது.

ஏன் பெதோஸ்யாவின் கண்களில் கண்ணீர் கரை புரண்ட ஓடுகிறது? தாஸ்தயேவ்ஸ்கியின் வாழ்வில் ஏதாவது அற்புதம் நிகழ்ந்து விடாதா என்று பிரார்த்தனை செய்து கொண்டே இருக்கும் பெதோஸ்யாவுக்கு இதை விட ஆனந்தம் இருக்கிறதா என்ன? எப்போதும் கெட்டியான தேநீர் தயாரித்துக் கொடுக்கும் வேலைக்காரி மட்டுமல்ல. சமையல்காரி மட்டுமல்ல. தாஸ்தயேவ்ஸ்கியின் ஒவ்வொரு அசைவுக்கும் தெரிந்தவர். அவருடைய இருமலுக்கும் செருமலுக்கும் கோபத்துக்கும், மகிழ்ச்சிக்கும், என்ன காரணம் என்று தெரியும்.

அவ்வளவு ஏன் ? சிறுவயது முதலே தாஸ்தயேவ்ஸ்கியைத் துன்புறுத்தும் அந்தப் பரவச வலிப்பு நோய் எப்போது வரும்? என்பதைக் கூட அறிந்தவர் தான் பெதோஸ்யா. தாஸ்தயேவ்ஸ்கி நேரிடையாகச் சொல்லவில்லை. அடுத்த நாவலுக்கான கதைச்சுருக்கத்தைச் சொல்வதைப் போலச் சொன்னார். அவர் சொன்ன கதையைக் கேட்டதும் உள்ளுக்குள் அன்னாவின் இதயம் துடித்தது. உணர்ச்சியால் கொந்தளித்தது. உடலில் ஒரு பரவசம் தோன்றி மறைந்தது. ஆனாலும் அன்னா தாஸ்தயேவ்ஸ்கியைப் போல உணர்ச்சிகளை வெளிக்காட்டுபவரல்ல. அமைதியாக இருந்தார். இன்று இப்போது இந்த அறையில் நடக்கும் ஒவ்வொரு அசைவுக்கும் அவருக்கு அர்த்தம் தெரிந்தாலும் தாஸ்தயேவ்ஸ்கியின் வாயினால் அதைச் சொல்லவேண்டுமென்று நினைத்தார். அந்த வார்த்தைகளுக்காகவே அமைதி காத்தார்.

தாஸ்தயேவ்ஸ்கி சொல்லியே விட்டார்.

“ அந்த ஓவியன் நான் தான் என்று நினைத்துக் கொள். நான் உன்னிடம் என் காதலைச் சொல்லவும் செய்கிறேன். நீ வாழ்வு முழுவதும் என்னுடன் இருப்பாயா? சொல். உன் பதில் என்னவாக இருக்கும்? “

“ என் பதில் இதுவாக இருக்கும். நான் உங்களை நேசிப்பேன். அந்த நேசம் வாழ்வின் முடிவு வரை நிலைத்திருக்கும்..”

அதன்பிறகு என்ன நடந்திருக்குமென்பதைச் சொல்ல முடியுமா? தாஸ்தயேவ்ஸ்கியின் கண்கள் கசிந்தன. அன்னா தன் மகிழ்ச்சியை மறைக்க முகத்தை மூடிக் கொண்டாள். அறை வாசலில் நின்ற பெதோஸ்யாவுக்குத் தன் கன்னங்களில் வழிந்தோடும் கண்ணீரைத் துடைக்கத் தோன்றவில்லை. பின்னால் இலக்கியச்சாட்சியாக நின்ற பெரும்படவம் ஸ்ரீதரன்.

அட! அவர் கண்களிலும் கண்ணீர் ஒடுகிறது.

அந்தக் கணத்தில் ஒரு சங்கீர்த்தனம் போல என்ற நாவலின் களம் முடிவாகி விட்டது. மலையாளத்தில் முப்பதுக்கும் மேற்பட்ட பதிப்புகளைக் கண்டு லட்சக்கணக்கான பிரதிகள் விற்றுக் கொண்டிருக்கும் அந்தப் புகழ்பெற்ற நாவலை எழுத முடிவு செய்கிறார். அதற்கு அன்னா தன்னுடைய நாட்குறிப்புகளின் வழியே வழி நடத்துகிறார். இது தான் இலக்கியத்தின் அற்புதம்!

அன்னாவும் தாஸ்தயேவ்ஸ்கியும் சந்தித்த முதல்நாள் முதல் அவர்கள் தங்களுக்குள் காதலைப் பரிமாறிக் கொண்ட கடைசிநாள் வரையிலான கதையைச் சொல்வதென்று முடிவு செய்கிறார் பெரும்படவம். எழுதத்தொடங்கிய நாள் முதல் நாவல் முடியும்வரை ஏதோ தாஸ்தயேவ்ஸ்கியின் ஆவி உள்ளே புகுந்ததைப் போல எழுதுகிறார். தாஸ்தயேவ்ஸ்கியின் நடை, உடை, பாவனை, அவருடைய பழக்கவழக்கங்கள், அவருடைய கடந்தகால வாழ்க்கை, நிகழ்காலவாழ்க்கை, அவரது முரண்பட்ட சிந்தனைகள், முரண்பட்ட ஆளுமையின் உள்ளுரு, எல்லாவற்றையும் அப்படியே கலையாக்கியிருக்கிறார். கிட்டத்தட்ட 130 வருடங்களுக்கு முன்னால் நடந்த நிகழ்வை, அந்தக் காலச்சூழலை, கதாபாத்திரங்களை அப்படியே கண்முன்னால் நிகழ்த்திக் காட்டுகிற மகத்தான கலைஞனாகியிருக்கிறார் பெரும்படவம்.

பதினாறு அத்தியாயங்களில் ஒரு காதல் காவியத்தைப் படைத்திருக்கிறாரென்றால், அதுவும் தாஸ்தயேவ்ஸ்கி போன்ற உணர்ச்சிக்கொந்தளிப்பு மிகுந்த எழுத்தாளரின் வாழ்க்கையிலிருந்து முக்கியமான பகுதியை எழுதுவதென்பது எவ்வளவு பெரிய சவால்? தாஸ்தயேவ்ஸ்கியின் அனைத்து நூல்களையும் வாசித்து அவரைப் பற்றியே யோசித்து, அவரைப் பற்றியே சிந்தித்து, அவராகவே மாறியிருக்கிறார் என்று சொல்வது மிகையில்லை. பல அதிசயங்களைக் கொண்ட கேரளாவில் தாஸ்தயேவ்ஸ்கியின் படைப்புகளை மட்டுமே பதிப்பிக்கும் பதிப்பகம் இருப்பதும் ஆச்சரியமில்லை.

கடவுள் கையொப்பமிட்ட இதயத்துக்குச் சொந்தக்காரரான தாஸ்தயேவ்ஸ்கியின் வாழ்க்கையில் இந்த நாட்கள் மிக முக்கியமானவை. EVIL GENIUS என்று மாகிசிம் கார்க்கியால் அழைக்கப்பட்ட தாஸ்தயேவ்ஸ்கி தன் படைப்புகளில் மனித மனதின் இருண்ட பகுதிகளை வெளிச்சமாக்கிக் காட்டியவர்.  தன்னையே வாழ்வுக்கும் இலக்கியத்துக்கும் ஒப்புக் கொடுத்து பரிசோதனை செய்தவரென்று கூடச் சொல்லலாம். எப்போதும் அதீத உணர்ச்சிகளிலெயே உழன்று கொண்டிருந்த தாஸ்தயேவ்ஸ்கியை வறுமையும், துரோகங்களும், தோல்விகளும், உறவினர்களின் சுரண்டலும் சேர்ந்து உழட்டின. அத்தனைக்கும் தன்னை ஒப்புக்கொடுத்து மேதைமை தாஸ்தயேவ்ஸ்கிக்கு அன்னாவின் காதல் ஒன்று கடைசிவரை கிடைத்த ஒரே ஆறுதல். தாஸ்தயேவ்ஸ்கி நிலைதடுமாறி நிற்கும்போது தன்னுடைய கைப்பணத்தைக் கொடுத்து அவரைச் சூதாட அனுப்புகிற அந்தக் காட்சி உண்மையில் நெகிழவைப்பது. ஏனெனில் சூதாட்டம் அவரைச் சமநிலைப் படுத்துகிறதென்பதை மிகக்குறைந்த நாள் பழக்கத்திலேயே தெரிந்து கொண்டவர் அன்னா.

உண்மையில் அன்னா உலக இலக்கியத்தில் சித்தரிக்கப்பட்ட எந்தக் கதாபாத்திரத்தையும் விட அற்புதமான மனுஷி..

தன்னைவிட இரண்டு மடங்கு வயதுடைய எப்போதும் அதீதங்களிலியே வாழ்ந்து கொண்டிருக்கும் தாஸ்தயேவ்ஸ்கியைக் காதலித்து மணம்முடித்து அவரையும் அவரது படைப்பு மனதையும் காப்பாற்றிய அன்னாவுக்கு மிகச்சிறந்த இலக்கியவெகுமதியைக் கொடுத்திருக்கிறார் ஒரு சங்கீர்த்தனம் போல நாவலில் பெரும்படவம்..

இந்தப் புகழ்பெற்ற நாவலை அதன் உணர்ச்சிவெள்ளத்தைச் சிந்தாமல் சிதறாமல் அப்படியே அழகாகத் தமிழில் தந்திருக்கிறார் கவிஞர் சிற்பி.

அதோ.. பாருங்கள்! தாஸ்தயேவ்ஸ்கியின் சமையலறையில் பெதோஸ்யா அவருடைய இளமையில் அவர் காதலித்த அந்த முரடனை நினைத்து ஒரு பாடலை முணுமுணுத்துக் கொண்டே கெட்டியான கருப்புத் தேநீரைத் தயாரிக்கிறார். இனி தினமும் தாஸ்தயேவ்ஸ்கிக்கு மட்டுமல்ல, அன்னாவுக்க்கும் சேர்த்துத் தேநீர் தயாரிக்கவேண்டும். அதை நினைக்கும்போதே பெதோஸ்யாவுக்கு இனம் புரியாத மகிழ்ச்சி தோன்றுகிறது. ஏதோ ஒரு நிம்மதி. எப்போதும் கனவில் எதையோ தேடிக் கொண்டிருப்பார் தாஸ்தயேவ்ஸ்கி. ஆனால் இதுவரை கிடைத்ததில்லை. ஆனால் இப்போது அவர் தேடியது கிடைத்து விட்டது. அந்தச் சிறிய வைரம் தான் அன்னா.

இனி தாஸ்தயேவ்ஸ்கியின் வாழ்வில் வசந்தம் வீசும். அந்தப்பாவப்பட்ட ஆத்மா கொஞ்சமேனும் உண்மையான அன்பில் திளைக்குமென்று நினைத்த பெதோஸ்யாவுக்கு ஏனோ தன்னுடைய தாயின் நினைவுகள் பொங்கி வந்தன.

கெட்டியான கருப்புத்தேநீரைத் தயாரித்து முடித்து விட்டாள் பெதோஸ்யா. நான்கு கோப்பைகளில் ஊற்றினாள். இரண்டு கோப்பைகளை அன்புக்குரிய அன்னாவுக்கும், தாஸ்தயேவ்ஸ்கிக்கும் கொடுத்தாள்.

ஒரு கோப்பை கெட்டியான கருப்புத் தேநீரை நிழலாய் மறைந்திருந்து பார்த்துக் கொண்டிருந்த பெரும்படவம் ஸ்ரீதரனிடம் கொடுத்தாள்.

மீதமிருக்கும் இன்னொரு கோப்பையை எடுத்து நீட்டுகிறாள் பெதோஸ்யா..

வாங்கி அருந்துங்கள்!

எங்கள் தாஸ்தயேவ்ஸ்கியையும் அன்னாவையும் வாழ்த்துங்கள்!

 

ஒரு சங்கீர்த்தனம் போல

மலையாளத்தில் – பெரும்படவம் ஸ்ரீதரன்

தமிழில் – சிற்பி

வெளியீடு – அருட்செல்வர்.நா. மகாலிங்கம் மொழிபெயர்ப்பு மையம்

தொடர்புக்கு – 9976144451

நன்றி - புக் டே

.

Friday, 21 February 2025

புளிக்கும் திராட்சை

புளிக்கும் திராட்சை

மலையாளத்தில் - அஷீதா

தமிழில் - உதயசங்கர்



சின்னுவும், நாய்க்குட்டியும் பூனைக்குட்டியும் விளையாடுகிற ஆற்றங்கரைக்குச் சற்று தூரத்தில் ஒரு திராட்சைத்தோட்டம் இருக்கிறது. கிராமத்தலைவரான மொட்டை மாதவனின் தோட்டம். அந்தத் தோட்டத்திலிருந்து திராட்சைப்பழத்தைப் பறிக்க முடியாது என்று கதைப்பாட்டி சொன்னார்.

 போய்ப்பார்த்தால் தெரியும் என்று பதுங்கிப்பதுங்கிப் போய்ப் பார்த்துவிட்ட வந்த பூனைக்குட்டி சின்னுவிடமும் நாய்க்குட்டியிடமும் சொன்னது,

“ பயங்கரம்.. மொட்டை மாதவன் அங்கே ஒரு பெரிய வேட்டை நாயை அவிழ்த்து விட்டிருக்கிறான்.. ஒரு தடவை பார்த்தால் போதும்.. ராத்திரி தூக்கம் வராது.. கெட்ட கனவுகள் வந்து கூப்பாடு போட வேண்டி வரும்.. அப்படிப் பயங்கரமாக இருக்கு..”

என்று சொன்னது.

ஒரு நாள் நடுமதியத்தில், பசியால் வாடிய குள்ளநரி பம்மி, பம்மி, திராட்சைத்தோட்டத்துக்குள் ஒளிந்து பதுங்கி போவதைப் பார்த்தார்கள். மூன்று பேரும் குள்ளநரியின் பின்னாலேயே போனார்கள்.

கசுமலா காக்காவும் பின்னால் பறந்தது. குலைகுலையாகத் தொங்கிக் கொண்டிருந்த திராட்சைப்பழங்களைப் பார்த்த குள்ளநரியின் வாயில் எச்சில் ஊறியது. பிறகு ஐந்தாறு முறை குதித்துப் பார்த்தது. திராட்சைப்பழத்தைப் பறிக்கமுடியாதென்று தெரிந்து விட்டது.

திரும்பி வரும்போது தான் சின்னுவும் நாய்க்குட்டியும் பூனைக்குட்டியும் கவனித்துக் கொண்டிருப்பதைப் பார்த்தது.

” நரியண்ணே.. திராட்சைப்பழம் கிடைக்கலையா? “ என்று நாய்க்குட்டி கேட்டது.

“ யாருக்கு வேணும் புளிப்பாய் இருக்கிற திராட்சைப்பழம்? “ என்று குள்ளநரி சொன்னது. அப்போது கசுமலா காக்கா சொன்னது,

“ நரியண்ணே நில்லுங்க.. நான் இரண்டுமூன்று கொத்திக் கொண்டு வருகிறேன்..”

கசுமலா காக்கா நிறைய திராட்சைப்பழங்களைக் கொத்திக் கொண்டு வந்தது. எல்லாரும் சேர்ந்து பாட்டுப்பாடி தின்று முடித்தார்கள். அவர்களுடைய ஆட்டத்தையும் பாட்டையும் வேட்டை நாய் கேட்டது. மூக்குமுட்ட இறைச்சி சாப்பிட்டு தூக்கமயக்கத்தில் இருந்தது. ஒரு முறை உறுமிவிட்டு அப்படியே திரும்பிப் படுத்து உறங்கி விட்டது. அந்த முழக்கத்தைக் கேட்ட உடனே மீதி இருந்த திராட்சைப்பழங்களைப் பொறுக்கினார்கள்.சத்தம் போடாமல் எல்லாரும் அந்த இடத்தை விட்டு ஓடியே போய் விட்டனர்.

 நன்றி - புக் டே

பறயாம் நமுக்கு கதகள் 

Thursday, 20 February 2025

குள்ளநரியின் தந்திரம்

 

குள்ளநரியின் தந்திரம்

மலையாளத்தில் - அஷீதா

தமிழில் - உதயசங்கர்


ஒரு நாள் ஆலமரத்தடியில் சின்னுவும், நாய்க்குட்டியும் பூனைக்குட்டியும் விளையாடிக் கொண்டிருந்தார்கள். அப்போது குள்ளநரி மூச்சுவாங்க வேகமாக ஓடி வந்து தலைகுப்புற விழுந்தது. மூன்று பேரும் விளையாட்டை நிறுத்தினார்கள். குள்ளநரியிடம் கேட்டார்கள்,

“ என்னாச்சு? ஏன் இப்படி மூச்சு வாங்க ஓடி வாரே..”

குள்ளநரி எழுந்து, உட்கார்ந்துகொண்டு சொன்னது.

“ என்ன சொல்றது நண்பர்களே! காலையில் நண்டைப்பிடிக்க காத்திருந்தபோது பின்னாலே ஒரு சிங்கம் பாய்ந்து பிடித்து விட்டது. என்னைச் சுத்தப்படுத்தி பொரித்துச் சாப்பிடுவதற்காக இழுத்துக் கொண்டு போனது.  அங்கே சிங்கத்தி பெரிய சைனாப்பாத்திரத்தை வைத்து எண்ணெய் ஊற்றி மசாலா அரைத்து ரெடியாக்கிக் கொண்டிருந்தது. அதைப் பார்த்தபோது நான் சிங்கத்தியிடம் சொன்னேன்.

“ என்னைக் கடவுள் தான் காட்டுக்கு ராஜாவாக்கினார்.. சும்மா கடவுளோடு விளையாட வேண்டாம்.. நம்பிக்கை இல்லை என்றால் என் கூட சும்மா ஒரு உலா வா.. அதைக் காட்டுறேன்..”

சிங்கம் எண்ணெயை கையில் எடுத்துக் கொண்டு குள்லநரியுடன் நடந்தது. எல்லாவிலங்குகளும் வழியிலிருந்து ஒதுங்கிப் போவதைக் கண்டது. பறவைகள் பயத்தில் அலறின. எல்லாவற்றையும் சிங்கம் பார்த்தது.

சிங்கத்தைப் பார்த்துத் தான் அவர்கள் பயந்தார்கள் என்பது முட்டாள் சிங்கத்துக்குப் புரியவில்லை.

கடைசியில் யானையும் அலறிக்கூப்பாடு போட்டு திரும்பி ஓடுவதைப் பார்த்தது சிங்கம். உடனே அப்படியே நிலத்தில் விழுந்து என்னிடம் மன்னிப்பு கேட்டது.

நான் என் உயிரைக்கையில் பிடித்துக் கொண்டு ஓட்டமாக ஓடி வந்து விட்டேன்.

நன்றி - புக் டே

பறயாம் நமுக்கு கதகள்

 

Wednesday, 19 February 2025

குழந்தைகளைக் கொண்டாடும் இளங்காற்று!

 

குழந்தைகளைக் கொண்டாடும் இளங்காற்று!

உதயசங்கர்



மனிதனுடைய வாழ்க்கையில் எந்த ஒருபருவத்தையும் மீண்டும் மீட்டெடுக்கவோ, வாழ்ந்து அனுபவிக்கவோ முடியாது என்பதை மனிதன் தன் வாழ்வின் அந்திப்பொழுதிலேயே அறிந்து கொள்கிறானென்பது அவனுடைய துர்வாய்ப்பு. ஒருவேளை அவன் அதை முன்பே அறிந்திருந்தால் தன் வாழ்வின் ஒவ்வொரு பருவத்தையும் பெருஞ்செல்வந்தனொருவன் கஞ்சத்தனமாய் எண்ணியெண்ணிப் பிதுக்கித்தள்ளும் நாணயங்களைப் போல தன் நாட்களைப் பொக்கிசமாகப் பாதுகாத்து, எச்சரிக்கையாக செலவழித்து, மனங்குளிர அனுபவித்து, நினைக்கும்போதெல்லாம் நெகிழ்ந்து, வாழ்வை ஒரு பேராலினைப் போல ஆனந்தமாய் வாழ்ந்திருப்பான் என்று தோன்றுகிறது. அவன் மட்டுமல்ல சமூகமும் இன்னும் இன்னும் உயர்ந்திருக்கும்.

மற்றெல்லாப்பருவத்தை விடவும் குழந்தைப்பருவமே ஒருபோதும் திரும்பாத பருவம் மட்டுமல்ல. ஒரு மனிதனின் ஆளுமை உள்ளுறைந்து வளர்கிற பருவம். சமூகத்தில் அவன் என்னவாகப்போகிறான் என்பதை சிற்பியின் கலையுருவாய் உருக்கொள்ளும் பருவம். அன்பும், நம்பிக்கையும், பாசமும், நேசமும், படைப்பூக்கமும் ஊற்றென பொங்கித் ததும்புகிற பருவம். குழந்தைகள் ஒவ்வொருவரும் தான் எதிர்கொள்கிற சாதாரணத்தைத் தங்களுடைய மாயவித்தையால், தங்களுடைய படைப்பூக்கத்தால் அற்புதமான உலகமாய் மாற்றுகிறார்கள். அந்த உலகத்தைப் புரிந்துகொள்ளாமல் தான் பெரியவர்கள் குழந்தைகளை சாதாரணத்துக்குள் கரகரவென இழுத்து வந்து கட்டிப்போடுகிறார்கள். இன்றைய உலகின் அத்தனை கண்டுபிடிப்புகளும் குழந்தைப்பருவக்கற்பனைகளின் வளர்ச்சியென்பதை பெரியவர்கள் புரிந்து கொள்வதில்லை.

காயையும் பழத்தையும் ஒன்றெனப்பாவிப்பதாலேயே குழந்தைகள் எதையும் நீண்டநேரம் மனதில் வன்மமாய் தேக்குவதில்லை. அவர்கள் அன்புமயமானவர்கள். அவர்கள் பெரியவர்களை நம்புகிறார்கள். பெற்றோர்களை நம்புகிறார்கள். ஆசிரியர்களை நம்புகிறார்கள். அவர்களுடைய அந்த நம்பிக்கையே அவர்களுடைய கண்களின் வழியே அன்பின் பேரருவியாகக் கொட்டுகிறது. ஆனால் பெரியவர்களின் லாபநட்ட, காரணகாரிய நடைமுறை வாழ்க்கை அந்தப் பேரருவியைக் காணமறுக்கிறது. அதுமட்டுமல்ல. குழந்தைகளை அவமானப்படுத்தவும், மட்டம் தட்டவும், தண்டிக்கவும், செய்வதன் மூலம் வெறும் களிமண்ணைப் போல நினைக்கிறது. குழந்தைகள் குட்டி மனிதர்கள் என்பதை நாம் ஒருபோதும் மறந்து விடக்கூடாது. நாம் அவர்களுக்கு மகிழ்ச்சியைக் கொடுத்தால் அவர்கள் நமக்கு மட்டுமல்ல இந்த உலகத்துக்கும் மகிழ்ச்சியையே கொடுப்பார்கள். குழந்தைகளின் மகிழ்ச்சியைக் குறிக்கோளாகக் கொள்ளாத சமூகம், கல்வி, பெற்றோர், ஒருபோதும் குழந்தைகள் தங்களுக்கு மகிழ்ச்சியையே கொடுக்க வேண்டுமென்று எதிர்பார்க்க உரிமையில்லை.

நாம் கற்றுக்கொள்ளவும் கடைப்பிடிக்கவுமான ஏராளமான விஷயங்களை குழந்தைகள் தங்கள் இயல்பிலேயே கொண்டிருக்கிறார்கள். நாம் தான் அந்த நல்லியல்புகளை பிழைப்புவாதத் தந்திரங்களினால் மாற்றுகிறோம். குழந்தைகளின் உலகத்தில் இருக்கும் வெகுளித்தனமும், அறியாமையும், நம்பிக்கையும், விட்டுக்கொடுத்தலும், அல்லன மறத்தலும், எல்லையில்லாக்கற்பனையுமே பெரியவர்கள் கற்றுக் கொள்ளவேண்டிய நற்பண்புகள். ஆனால் நாம் குழந்தைகளுக்கு நற்பண்புகளை நீதிநெறிகளை, அறவிழுமியங்களை போதித்து நல்வழிப்படுத்தப் படுத்தவேண்டுமென்று நினைக்கிறோம். நாம் ஒருபோதும் கடைப்பிடிக்காத அந்த விழுமியங்களைக் குழந்தைகளிடம் திணிக்கும்போது அவர்கள் இந்த உலகத்தின் போலித்தனத்தைக் கண்டு அதிர்ந்து போகிறார்கள். தங்களுடைய சிறப்பான பண்புநலன்களைக் கொஞ்சம் கொஞ்சமாக இழந்து விடுகிறார்கள். குழந்தைகளைப் பற்றிய நம் சமூகத்தின் பார்வை தலைகீழாக மாறவேண்டியுள்ளது.

குழந்தைகள் எதைச் செய்யவேண்டுமென்று நாம் நினைக்கிறோமோ அதை நாம் செய்யவேண்டும். அவர்கள் எதைச் செய்யக்கூடாதென்று நாம் நினைப்பதை ஒருபோதும் அவர்கள் முன்னால் செய்யக்கூடாது. இதைச் சமூகமும், பெற்றோர்களும், ஆசிரியர்களும், கடைப்பிடித்தாலே குழந்தைகள் தங்களுடைய ஆளுமைத்திறனுக்குத் தேவையானதைஎ நம்மிடமிருந்து எடுத்துக்கொள்வார்கள்.

பா.தென்றல் எழுதியுள்ள வண்ணத்துப்பூச்சிகளும் வானவில்லும் நூலின் சிறப்புகள் என்னவென்றால் முதலில் அது எழுதப்பட்டிருக்கும் பாணி. நம்முடைய தோளில் கை போட்டுக்கொண்டு ஒரு நண்பரைப் போலப் பேசுகிறது. குழந்தைகளுக்கு மட்டுமல்ல பெரியவர்களுக்குமே அறிவுரை என்ற வார்த்தையே பிடிக்காது. அதை ஆசிரியர் உள்ளும் புறமாக உணர்ந்ததினாலேயே எந்த இடத்திலும் குரலை உயர்த்தாமல் மனதுக்கு நெருக்கமாகப் பேசும் அந்தக் குரலைக் கேட்காமலிருக்க யாராலும் முடியாது. அந்தக் குரலிலுள்ள நம்பிக்கை, குழந்தைகளின் மீதான பேரன்பு, நம் சமூகத்தின் மீதான மெல்லிய விமரிசனம், அனுபவங்களிலிருந்து பெற்ற படிப்பினைகள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் எல்லோரும் கடைப்பிடிக்க வேண்டிய நடைமுறைகள் குறித்த யோசனைகள், புறக்கணிக்க முடியாத முக்கியத்துவத்தைக் கோருகிறது.

பா.தென்றல் ஆசிரியராக இருந்து இந்த நூலை எழுதியிருப்பதால் அன்றாடம் அவருடைய பள்ளி அனுபவங்களிலிருந்து குழந்தைகளின் உளவியல் குறித்த பார்வையை வெளிப்படுத்துவதால், குழந்தையியலாளர்கள், கல்வியாளர்கள், எழுத்தாளர்கள், குழந்தை செயல்பாட்டாளர்கள் அனைவரும் கவனிக்க வேண்டிய நூலாகவும் மாறியிருக்கிறது. நூலின் எளிமை குறித்துச் சொல்லியாகவேண்டும். நூல் நெடுக ஆங்காங்கே எழுதப்பட்டிருக்கும் கவிதைகள், பாடல்கள், மேற்கோள்கள், சினிமா, சுயமுன்னேற்றமடைந்தவர்களின் பதிவுகள், இவை மட்டுமல்லாமல் நம்முடைய அன்றாடநாளின் அனுபவங்களையே தான் சொல்லவந்த கருத்துக்குச் சாதகமாக்கி எழுதியிருக்கிற பாங்கு, எடுத்ததும் படித்து முடித்துவிடும் ஆர்வத்தைத் தூண்டுகிறது.

ஒவ்வொரு அத்தியாயத்திலும் குழந்தைகளின் கல்வி, வகுப்பறை அரசியல், குழந்தைகளின் உளப்பாங்கு, ஆசிரியர்களின் வறட்டுத்தனமான அதிகாரம், பெற்றோர்களின் அலட்சியம், என்று ஏராளமான சிந்தனை விதைகளைத் தூவிச் செல்கிறார். ஊருக்கு உபதேசம் என்றில்லாமல் நடைமுறையில் அவருடைய வகுப்பறையை எப்படி ஜனநாயகப்பூர்வமாக இயக்குகிறார் என்பதையும் சொல்கிறார். குழந்தைகள் நலன் சார்ந்த பல பிரச்னைகளுக்கு எளிய தீர்வுகளையும் சொல்வது மிகுந்த சிறப்பு.

தினமும் பூ கொண்டு வந்து கொடுத்து டீச்சரை அழகு பார்க்கும் குழந்தையும், தன்னுடைய தோழியை அழைப்பது போல ஹாய் தென்றல் அழைக்கும் சிறுவனும் வெளிக்காட்டுவது மாசற்ற அன்பையல்லவா. இப்படித்தானே குழந்தைகளிடம் பெரியவர்கள் ஒவ்வொருவரும் இருக்கவேண்டும். எப்போதும் அதிகாரச்சவுக்கைச் சொடுக்கியபடியே குழந்தைகளைப் பயமுறுத்துவது எந்த வகையில் நியாயமாக இருக்கமுடியும்? அப்படியென்றால் குழந்தைகள் அவர்கள் விருப்பப்படி நடந்துகொள்ள விட்டு விடுவதா? என்று சட்டாம்பிள்ளைகள் வந்துவிடுவார்கள். அவர்களையும் மனக்கண்ணில் கண்டே, குழந்தைகளின் மீதான பார்வை எப்படிப்பட்டதாக இருக்கவேண்டுமென்பதையும் கூடச் சொல்லி விடுகிறார்.

குழந்தைகளுக்கு கதை சொல்வதின் அவசியம், குழந்தைகள் கதைப்புத்தகங்களை வாசிப்பதின் அவசியம், அவை குழந்தைகளிடம் ஏற்படுத்தும் மாற்றங்களைப் பற்றியும் பேசுகிறார். குழந்தைகள் ரோபோக்களல்ல. நிறைவேறாத நம்முடைய ஆசைகளின் குப்பைக்கிடங்குகளுமல்ல. அவர்கள் தனித்துவமிக்கவர்கள். அவர்களை ஆற்றுப்படுத்துவதும், வழிகாட்டுவதும் மட்டுமே நாம் செய்யவேண்டிய முதலும் முடிவுமான வேலையென்று மயிலிறகால் வருடுவதைப் போலச் சொல்லியிருக்கிறார் பா.தென்றல்.

“ குழந்தைகளை வளர்க்காதீர்கள், அவர்களை வளரவிடுங்கள் ” என்ற மாமேதை லெனினின் பொன்மொழியை நாம் உணரவேண்டும். அந்த வகையில் இந்த நூல்  பெற்றோர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் ஒரு கையேடாக விளங்கும்.

 இந்த நூலில் குறிப்பிட்டிருப்பதைப்போல உலகப்புகழ்பெற்ற ருஷ்ய எழுத்தாளர் தாஸ்தயேவ்ஸ்கி, “ மிக மிகச்சிக்கலான விஷயத்தில் கூட அற்புதமான நல்லதொரு ஆலோசனையை ஒரு குழந்தையால் தரமுடியும் என்பது பெரியவர்களுக்குத் தெரிவதில்லை..” என்று சொல்கிறார். எவ்வளவு உண்மை!

நாம் பெரியவர்கள் தான் சாதாரண விஷயங்களைக் கூடச் சிக்கலாக்கி விடுகிறோம். சில வார்த்தைகளில், சில சைகைகளில், சில மணித்துளி நேரச் செலவழிப்பில், சில செய்கைகளில், சரிசெய்ய வேண்டியவற்றை இடியாப்பச்சிக்கலாக்கி விரோதம் பாராட்டுகிறோம். வண்ணத்துப்பூச்சிகளும் வானவில்லும் நூலின் முதல் அத்தியாயத்தில் புத்தகப்பை மாறிப்போனதால் வீட்டுப்பாடம் எழுதமுடியாதே என்று அழுதுகொண்டிருக்கும் குழந்தையிடம் தென்றல் சொல்கிறார்,

“ பாப்பா.. இன்னிக்கு உனக்கு வீட்டுப்பாடம் கிடையாது.. ஒன்னும் படிக்க வேணாம் ஜாலியா விளையாடிட்டு வா.. நாளைக்கு உன் பையை வாங்கித் தாரேன்..”

முதலில் நம்ப முடியாத குழந்தை ஆசிரியரின் ஹைபையைப் பார்த்துச் சிரிக்கிறது. அந்தக் கணத்தில் தென்றல் குழந்தையாகியிருக்கிறார். அதனால் தான் எளிய தீர்வை அவரால் சொல்லமுடிந்திருக்கிறது. இப்படித்தான் ஆசிரியர்கள் குழந்தைகளைப்போலவே யோசித்தார்களென்றால் குழந்தைகளுக்குப் பள்ளிக்கூடம் இனிப்பாக இருக்கும்.

இன்னும் நிறைய நிறைய எழுதுங்கள் பா.தென்றல்!

வாழ்த்துகளுடன்

உதயசங்கர்.

( வானவில்லும் வண்ணத்துப்பூச்சியும் நூலுக்கு எழுதிய முன்னுரை )