Monday 9 April 2012

வெயில் மழையெனப் பொழியும்

 
வெயில் மstock-photo-5790293-arid-dry-desert-landscape-black-and-whiteழையெனப் பொழியும் நிலவெ ளியிலிருந்து...

ஒவ்வொரு ஊரும் பேசிக்கொண்டேயிருக்கிறது. ஆனால், யாரும் அதைக் கேட்பதில்லை. அவசரங்களின் சக்கரத்தை காலில் கட்டிக்கொண்டு, எப்போதும் ஓடிக்கொண்டேயிருக்கும்நமக்கு, யார் பேசுவதை கேட்கத்தான் நேரமிருக்கிறது? அல்லது பொறுமை இருக்கிறது? வீட்டில்மனைவி பேசிக்கொண்டிருக்கிறாள். குழந்தைகள் பேசிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், யாரும்கேட்பதில்லை. வெளியே ஊர் பேசிக்கொண்டிருக்கிறது. நம்முடைய தெரு பேசிக்கொண்டிருக்கிறது.நாம் பார்த்து, பார்த்து கட்டிய வீடு பேசிக் கொண்டிருக்கிறது. வாடகைக் குடியிருப்புகளும்கூடவாய் ஓயாது சலசலவென பேசிக்கொண்டிருக்கின்றன. ஆனால், கேட்பதற்குத்தான் யாரும் இல்லை.
ஒட்டுமொத்த வாழ்க்கையையும்,அலைபேசிகளும், தொலைக்காட்சிகளும், சினிமாக்களும் சுருட்டி வைத்தக் கொண்டிருக்கின்றன. நம்முடைய பெரும்பாலான பொழுதுகளைஅங்குதான் சலவழிக்கிறோம். உயிருள்ள, ஜீவத் துடிப்புமிக்க வாழ்வின் நொடிகளை அங்கே இழந்த கொண்டிருக்கிறோம்.ஒரு ஊர் என்பது வெறும் பூகோள வரைபடமோ,வருவாய்த்துறை வரைபடமோதேர்தலுக்கான வார்டுகளோ, தெருக்கள லல. ஊர் என்பது உயிருள்ள ஒரு ஆன்மா.முதன்முதலாகஒரு இடத்தைத் தேர்ந்தெடத்து,அதில் குடியேறி, காட்டைத் திருத்தி கழனியாக்கிய மக்கள்கூட்டத்தின் ஆன்மா அதில் இருக்கிறது. நாம் குடியிருக்கும் ஊரின் ஒரு துளி மண் கூட வரலாற்றைப்பேசும். என்றாவது நாம் அதைக் கேட்டிருப்போமா. ஒவ்வொரு ஊருக்கும் ஒரு மணம் இருக்கிறது.

சென்னையில் இறங்கியவுடன் சுண்டவைத்த பழைய கறியும், பேக்கரியின்புதிய சுவையும் கலந்த ஒரு நெடி வீசுவதைப் பார்க்கலாம். மதுரையின் எல்லையில் வரலாற்றின்பழைய வாசம் வீசும் மலர் மணத்தை நுகரலாம். பலசரக்குக் கடையின்மணம் விருதுநகரென்றால்,கரிமருந்தும் சாக்கடையும் கலந்து வீசும் சாத்தூர். கரிசல் விருவுகள் விட்ட வெப்ப மூச்சுஉடலில் வருட, வெயிலின் தீய்ந்த வாடை வீசும் கோவில்பட்டி.

திருநெல்வேலி எல்லை வந்ததும், வயக்காட்டிலிருந்து எழுந்து வரும்நீர்மையான குளிர்காற்றில் மனசு கரைந்துவிடும். தூத்துக்குடியில் உயிர்மீனின் கவிச்சிவீசும். கருவாட்டின் தீவிர வாசனை ராமேஸ்வரத்தில். இப்படிச் சொல்லிக் கொண்டேயிருக்கலாம்.ஒவ்வொரு ஊருக்கு ஒரு மணம் இருப்பதைப்போல, ஒவ்வொரு ஊருக்கும் ஒரு குணமும் இருக்கிறது.என்றாவது இதையெல்லாம் யோசித்திருப்போமா? ஆனால், எல்லாவற்றையும் சொல்வதற்கு ஊர் துடித்துக் கொண்டிருக்கிறது.
இப்படித்தான் ஒரு நாள் என்னுடைய சொந்த ஊரான கோவில்பட்டியிலுள்ளகதிரேசன் கோவில்மலையில் அந்திசாயும் பொழுதில் உட்கார்ந்திருந்தேன். சூரியனின் கடைசிக் கிரணம் அடிவானத்துக்குள் மறைந்து கொண்டிருப்பது தெரிகிறது. திடீரென ஒரு காற்று தரையிலிருந்துமலையை நோக்கி எழும்பி வருகிறது. கரிசல் வெளியின் விருவுகள், பகலில் வெயிலைத் தின்றுமுடித்து, பின் விட்ட ஏப்பம்தான் அது. காற்று, உடலெங்கும் வீசியடங்கியதும் பேரமைதிவந்து என்னருகில் உட்கார்ந்து கொண்டது.
எனக்கெதிரே கவிந்து வரும் இருளில், நகரம் ஒவ்வொரு கண்ணாய் இமைமூடி, திறந்தும் விழித்தும் பார்க்கிறது. எங்கும் நிசப்தம் தன் போர்வையை விரித்துக் கொண்டிருந்தது. தூரத்தில் எங்கோ கேட்கும் ஒரு பாடலோ, தேசிய நெடுஞ்சாலையில் விரைந்துசெல்லும் ஒரு வாகனத்தின் ஹாரன் சத்தமோ நிசப்தப் போர்வையின் ஓரங்களை உலைத்துக் கொண்டிருக்க,மனம் சலனமற்றிருந்தது.
அப்போதுதான் அந்த முணுமுணுப்பு கேட்டது. மெல்ல அங்கமிங்கும்திரும்பிப் பார்த்தேன். எந்த அரவமும் இல்லை. சில நொடிகள் அமைதி.மறுபடியும் அதே முணுமுணுப்பு.இப்போது இன்னும் தெளிவாய் பேசத் துடித்துக் கொண்டேயிருக்கிற என் ஊரின் குரல்.
‘‘இரவில் மட்டும் எப்படி நீ இவ்வளவு அழகாக இருக்கிறாய்?’’ எனக்குள்ளாக
அதனிடம் கேட்கிறேன்.
‘‘இரவில்தான் நான் பிறக்கிறேன். இரவில்தான் நான் வளர்கிறேன்..இரவில்தான் நான் பருவமடைகிறேன்.. இரவில்தான் நான் என் காயங்களை, வலியை, வேதனையை ஆற்றிக்கொள்கிறேன். என் வரலாற்றை திரும்பிப் பார்க்கிறேன். என் மக்களோடு ஆத்மார்த்தமாக உறவுகொள்கிறேன். இரவுதான் உயிர்களின் சூட்சுமம் பொதிந்த ரகசியவெளி...’’
நான் எதுவும் பேசவில்லை. அதன் குரலில், வெக்கையினால் ஏற்பட்டகமறல் குறைந்து, ஈரம் கூடியிருந்தது. அப்படியே அது எனக்குள்ளாக இறங்க, இப்போது நான் பாறையாகிவிட்டிருந்தேன். நான் கதிரேசன் மலையாகிவிட்டேன். நான் என் நகரமாகிவிட்டேன்.என் குரலே மாறிவிட்டது. என் உடல், என் ஊரின் மீது அந்தரத்தில் மிதந்து கொண்டிருந்தது.
மதுரையை ஆண்ட ராணி மங்கம்மாள் ஆட்சிக்காலத்தில், மதுரையிலிருந்துதெற்கு நோக்கி போடப்பட்ட மண்சாலை, கோவில்பட்டி என்ற பெயரறியா கிராமத்தை ஊடறுத்துச்சென்றது. அன்றிலிருந்து வளரத் தொடங்கிய ஊர், இன்னும் இன்னும் வளர்ந்து கொண்டேயிருக்கிறது.அருகிலிருந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த எட்டையபுரம், கயத்தாறு, கங்கைகொண்டான்,கடம்பூர், இளையரசனேந்தல் போன்ற ஊர்களைத் தாண்டி வளரத் தொடங்கியது.
பிரிட்டிஷாரின் தண்டவாளங்கள், மேலும் முக்கியத்துவம் பெற வைத்தன.பருத்தி அமோகமாக விளையும் மானாவாரி விவசாயம் என்பதால், லாயல் மில்லும் லட்சுமி மில்லும்வந்தன. பொய்த்த மழை, உழைப்பை மலிவாக்கியது. சிவகாசியிலிருந்து சாத்தூர் வழியாக தீப்பெட்டியாபீஸ்மெல்ல மெல்ல நடந்து வருகிறது. கிராமம் நகரெமென அரிதாரம் பூசிக்கொள்கிறது.
மகாகவி போகும்போதும் வரும்போதும் இந்த ஊரில்தான் ரயிலேறுகிறான்.இது, ஞானச்செருக்கின் சுவடுகள் படிந்த பூமி. தியாகத் திருவுருவாம் வ.உ.சி.கூட இங்கு அமைந்திருந்த முன்சீப் கோர்ட்டில் வக்கீல் தொழில் பார்த்தவர்தான். அவரது சுவாசம் இந்தஊரில் கலந்திருக்கிறது. இசைமேதை விளாத்திகுளம் சாமிகளும், நாதஸ்வர இசையின் மகத்தானகலைஞன் காருக்குறிச்சி அருணாசலமும் இங்கே வாழ்ந்து, இசையின் ஸ்வரங்களை காற்றில் கலக்கச்செய்துள்ளனர். திருவாதிரை இசைவிழா மூலம், எண்ணற்ற சங்கீத மேதைகள் கோவில்பட்டிக்கு வந்துபோயுள்ளனர். ஓவிய மேதை கொண்டைய ராஜு வாழ்ந்த பெருமையும் கோவில்பட்டிக்கு உண்டு. அவருடையசீடர்களான டி.எஸ்.சுப்பையாவும், ராமலிங்கமும் புகழ்பெற்றது இந்த நகரத்தில்தான்.
ஒன்றா, இரண்டா? பிரிட்டிஷாருக்கு எதிரான போராட்டங்களையும், சுதேசிசர்க்காருக்கு எதிரான போராட்டங்களையும்ம் வளர்த்தெடுத்த இந்நகரம், வெயிலோடு பிறந்து, வெயிலோடு வளர்ந்து போராடும் மக்களின் போராட்ட குணத்தோடு வளர்ந்து கொண்டேயிருந்தது.மின் உயர்வுக்கு எதிரான விவசாயிகளின் மாட்டுவண்டி போராட்டத்தில், போலீஸ் துப்பாக்கிச்சூட்டில்குறிஞ்சாக்குளம் கந்தசாமி நாயக்கர் தியாகியானார். கூப்பிட்ட குரலுக்கு நடந்தோ, சைக்கிளிலோவரும் மக்கள் தொண்டன் சோ. அழகர்சாமியை, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஐந்து முறைசட்டமன்றத்துக்கு அனுப்பிய பெருமைமிகு நகரம் இந்நகரம்.
காலம் மாறுகிறது. புதிய தலைமுறைகளுடன், புதியனவும் வந்து சேர்ந்தன.தமிழ்ச் சிறுகதை மேதை கு.அழகிரிசாமி தமிழிலக்கியத்துக்கு பெருமை சேர்க்கிறார். கரிசல் இலக்கியப் பதாகை தாங்கி, கி.ராஜநாராயணன் புறப்படுகிறார். அவருக்குப் பின்னால் ஒரு பெரும்படையேகிளம்பிற்று. பூமணி, தேவதச்சன், கௌரிஷங்கர், தமிழ்ச்செல்வன், வித்யாஷங்கர், ஜோதிவிநாயகம்,சமயவேல், சொ.தர்மன், கோணங்கி, உதயசங்கர், அப்பாஸ், நாறும்பூநாதன், அப்பணசாமி, ஓவியர்மாரீஸ், நடிகர் சார்லி என பெரும் கூட்டமே தமிழ் கலை இலக்கிய வெளியை ஆக்கிரமித்துக்கொள்கிறார்கள்.
இதன் விளைவு, நவீன ஓவியர் பிகாசோ கோவில்பட்டிக்கு வந்து சேர்கிறார்.தொடர்ந்து டால்ஸ்டாயும், தாஸ்தயேவ்ஸ்கியும், கார்க்கியும், எமிலிஜோலாவும், நட்ஹாம்சனும், மாப்பசானும், செல்மாலாகர்லவ்வும், தாமஸ்மானும், பால்சாக்கும் நகரத்துத் தெருக்களில்டீ குடித்துக் கொண்டு சிகரெட் புகைத்துக் கொண்டு திரிந்தனர். பாரீஸ் நகரத்து வீதிகளைப்போலகோவில்பட்டியெங்கும் கலையும், இலக்கியமும், காதலும் நிறைந்திருந்தது.
ஊர் என்பது கடைவீதிகளின் எண்ணிக்கையோ, சினிமா தியேட்டர்களின் எண்ணிக்கையோ, தெருக்களின் எண்ணிக்கையோ இல்லை. அதுவேறு. அதன் ஆன்மாவில் மண்ணின் சுவை,மொழி, பண்பாடு, பழக்க வழக்கங்கள், உணவுமுறைகள், இசை, கலை இலக்கியம், விளையாட்டு, வியாபாரம்என்று எல்லாம் கலந்திருக்கிறது. இப்படியாக நாம் வாழும் மண்ணின் குணம்தான் நமக்கும்இருக்கும்.பிரயாணத்தின்போது, சொந்த ஊரின் எல்லையைத் தாண்டுகிறபோது ஏற்படும்பிரிவாற்றாமையும், திரும்பி வரும்போது சொந்த ஊரின் எல்லை கண்களில் படும்போது ஏற்படும்மகிழ்ச்சியையும் சொற்களில் அடக்க முடியுமா?
பேச்சின் லயம் இன்னும் என் காதுகளில் ஒலித்துக் கொண்டேயிருக்கிறது.நான் மீண்டும் ஒருமுறை என் இனிய ஊரான கோவில்பட்டியைப் பார்க்கிறேன். அதன் இதயத்துடிப்பைஉணர்கிறேன். என் மனம் விம்முகிறது. அதுவரை என்னைச் சூழ்ந்திருந்த இருளும் உறங்க ஆரம்பிக்கிறது.என் இரண்டு கைகளையும் விரித்து, மானசீகமாக என் ஊரை அணைத்துக் கொள்கிறேன். கையை விரித்துஅணைப்பது ஊரை நேசிப்பவர்களுக்கு மட்டுமே சாத்தியப்படும். மெல்ல நகரத்தை நோக்கி காலடிஎடுத்து வைக்கிறேன்.
அதோ, கேட்கிறதா? உங்கள் ஊரின் முணுமுணுப்பு. காதுகளுக்கருகில்கேட்கும் கிசுகிசுப்பு, உங்கள் ஊரின் இதயத்துடிப்பு.

2 comments:

  1. ஈரம் பூத்த மண்ணில் விளைவது செடிகளும்,
    கொடிகளும்,மரங்களும் பூக்களும் மட்டுமல்ல,மனித மனதும்தான்.அருமையான கட்டுரை வாழ்த்துக்கள்.

    ReplyDelete