Saturday, 28 June 2025

படைப்பின் அரசியல்

 



படைப்பின் அரசியல்



 


1. மனிதகுல வரலாற்றில் வேட்டைச் சமூகத்தின் வேட்டை வாழ்வனுபங்களைப் பகிர்ந்து கொள்ளும் மனவெழுச்சியே கலையின் ஆதி வித்தென கொள்ளலாம்.


2.  குகைச்சுவர்களிலும் கற்பாறைகளிலும் விலங்குகளின் தோலிலும் துவங்கிய கலையின் பயணம் தன்னுணர்வுமிக்க உழைப்பினால் மொழியைத் தோற்றுவித்திருக்கிறது. 


3. இயற்கையின் உற்பாதங்களும் மரணமும் ஆவியுலக நம்பிக்கையை வளர்த்தெடுக்க தொன்மங்களும் மந்திரச்சடங்குகளும் தோன்றியிருக்கின்றன.


4.  தொன்மங்களைப் புனையும் சிந்தனை ஆதிமனிதர்களுக்கேயுரிய சிந்தனை முறையாகும்.அது புலனறிவு சார்ந்தும் அகவயமாகவும் நெகிழ்ச்சியானதுமாகும். இப்படி தொன்மம் கலைக்கான மூலப்பொருளாக மாறிவிட்டது.


5. தொன்மங்கள் முழுவதும் இயற்கை சக்திகளை முழுக்க கற்பனையிலே கீழ்ப்படுத்தியும் கட்டுப்படுத்தியும் அவற்றை மாற்றியமைக்கின்றன. எனவே தொன்மங்களுக்கு மந்திர் ஆற்றல் இருப்பதாக நம்பப்பட்டது.


6.  தொன்மங்களிலிருந்து தோன்றிய ஆவியுலகக்கோட்பாடும் அதிலிருந்து உருவான மந்திரச்சடங்குகளிலிருந்தே ஆதியில் உழைப்பிலிருந்து பிரிந்து கலை தோன்றியிருக்கிறது.


7.  மந்திரச்சடங்குகளை நடத்தியவர்களே ஆதிக்கலைஞர்களாக இருந்திருக்கிறார்கள். வர்க்கமற்ற சமுதாயத்திலும் வர்க்கசமுதாயத்தின் தொடக்க காலத்திலும் ஒரு தீர்க்கதரிசியைப் போல கலைஞனும் மக்களால் போற்றி வணங்கப்படுபவனாக இருந்தான். 


8. அவனுடைய வாழ்த்துக்களுக்கும் சாபங்களுக்கும் தனி ஆற்றல் இருப்பதாகவும் அது ஆவியுலகத்தோடு அவனுக்கிருந்த ஊடாடல் காரணமாக கிடைத்தது என்று நம்பினார்கள்.


9. மனிதசமுதாயம் பழங்குடிஅமைப்பிலிருந்து அரசமைப்பு உருவான போது ஆதி மனித உணர்வு சமூக அழுத்தங்களுக்கும், நெருக்கடிகளுக்கும் உட்பட்டது. இந்த அழுத்தங்கள் மனநோய், காக்காய்வலிப்பு, பிளவுண்ட ஆளுமை, ஆகியவற்றுடன் ஒப்பிடத்தக்க பல்வேறு மனநோய்களாக வெளிப்பட்டன.


10.  உணர்வுபூர்வமான கட்டுப்பாட்டை இழக்கவைக்கும் இந்த மனநோய்கள் ஒரு கடவுளோ அல்லது ஆவியோ மனிதனின் உடலில் புகுந்து அவனை ஆட்கொண்டு விட்டது என்ற நம்பிக்கை தோன்ற வழிவகுத்தன. 


11. இப்படித்தான் மந்திரச்சடங்குகளை நடத்திய மனிதர்கள் தனித்துவமும், அசாதாரணமான வாழ்க்கைமுறையும் கொண்டவர்களாக மாறுகிறார்கள். ஆக கலையின் தோற்றுவாயில் உளவியல்நோய்களும் காரணமாக இருந்திருக்கின்றன.


12.  இந்த வித்தியாசமான மந்திரவாதிகள் தங்கள் வாழ்க்கையை ரகசியமாக, மறைஞானத்தன்மை கொண்டதாக, சடங்குகள்பூர்வமாக, வைத்துக் கொண்டனர்.


13. மந்திரச்சடங்குகளிலிருந்து கலை வளர்ந்தது. தன்னுணர்வுமிக்க கலைஞன் சடங்குவடிவத்தை கையிலெடுத்து உருவத்துக்கும் உள்ளடக்கத்துக்கும் இடையே ஒரு புதிய இணைவை, ஒற்றுமையை உருவாக்குகிறான். இதன் மூலம் கலை இயங்கியல்பூர்வமாக வளர்கிறது.


14. வேட்டைசமூகத்திலும், வர்க்கமற்ற சமூகத்திலும், வர்க்கசமூகத்தின் ஆரம்பகட்டத்திலும் கலை, தொடர்பு ஊடகமாகவும், இயற்கையைக்கீழ்ப்படுத்தும் தொன்மச்சடங்குகளாகவும், ஆவிகளைக் கட்டுப்படுத்தும் மருத்துவமாகவும் சமூகத்தோடு இரண்டறக்கலந்தே வளர்ந்து வந்திருக்கிறது. என்றால் ஆதியில் கலை மக்கள் கலையாகவே இருந்திருக்கிறது.


15. அரசு என்ற அமைப்பு உருவானபிறகு, கலை உழைப்பிலிருந்து முற்றிலுமாகப் பிரிக்கப்பட்டு, பொழுதுபோக்கு சாதனமாகவும், அரசின் பிரச்சார பீரங்கியாகவும், அந்தந்த காலகட்ட அரசின் சட்டங்கள், சநாதன மதங்களின் விதிகளை, சடங்குகளை, சாதிய அமைப்பை, வாழ்க்கை மதிப்பீடுகளை மக்கள் மனதில் நிலைநிறுத்தவும், மக்கள் மனங்களை வென்றெடுக்கவும், கலைப்படைப்புகள் உருவாக்கப்பட்டிருக்கின்றன


16. . அந்தக் கலைப்படைப்புகளை உருவாக்கிய படைப்பாளிகள் அந்தந்தக் காலகட்டத்தினை தங்கள் படைப்புகளில் பிரதிபலிக்கவே செய்திருக்கிறார்கள். எனவே என்றுமே படைப்புகள் அந்தந்த காலகட்ட அரசின், அரசியலை, வர்க்கச்சார்பை, மக்கள் வாழ்வைப் பிரதிபலித்துக் கொண்டிருக்கின்றன.


17. எந்தவொரு படைப்பின் அடிப்படைஆதாரசுருதி வெளிப்பாடு ( expression ) தான். இது தான் படைப்பரசியலின் அரிச்சுவடி. தன்னை, தன்வாழ்வனுபவங்களை, தான் வாழும் சமூகத்தை, மானுடவிழுமியங்களை, வெளிப்படுத்துகிறது படைப்பு.


18. அரசு என்ற அமைப்பு உருவானதிலிருந்து படைப்பு அரசதிகாரத்தினை முன்மொழிவதாக மாற்றமடைந்தது தான் படைப்பரசியலின் வளர்ச்சி. எனவே படைப்பின் அரசியல் என்பது அதிகாரத்தின் அரசியலை நேரிடையாகவோ, மறைமுகமாகவோ மக்கள் மனதில் ஏற்றி அவர்கள் ஒப்புதலைப் பெறுவது தான். அரசு என்ற அமைப்பு இருக்கும்வரை கலையின் சுயேச்சையான வளர்ச்சியோ மலர்ச்சியோ சாத்தியமில்லை.


19. நிலப்பிரபுத்துவகாலத்தில் அரசவையில் அரசர்களுக்காக மட்டுமே படைக்கப்பட்ட கலை பூர்ஷ்வா சமூகம் உருவானபிறகு, முதலாளித்துவசந்தை உருவான பிறகு கலையையும் சந்தைவிதிகளுக்கு உட்படுத்தவும், நிலப்பிரபுத்துவத்தளைகளிலிருந்து கலையை விடுவிக்கவும் உருவாக்கிய கோட்பாடு தான் கலை கலைக்காக என்ற கோட்பாடு.


20. முதலாளித்துவம் தன் ஆயிரக்கணக்கான கரங்களால் கலையை திருதாஷ்டிராலிங்கனம் செய்து கொண்டேயிருக்கிறது. கலையின் அரசியலும் வேறு வேறு ரூபங்களில் தன்னை வெளிப்படுத்திக்கொண்டேயிருக்கிறது.


21. சமத்துவமற்ற, வர்க்கபேத சமூகத்தில் கலையும் வர்க்கபேதமுடனே இருக்கும். அறவிழுமியங்கள் எல்லாம் அரசு தன் நலனுக்காக சமூகத்தின்மீது ஏற்றி வைத்துள்ள வாழ்க்கை மதிப்பீடுகள். எல்லாஅறவிழுமியங்களுக்கும் பின்னால் அரசியலதிகாரத்தின் முகம் நேரிடையாகவும், மறைமுகமாகவும் இருப்பதை அவதானிக்கமுடியும். அதே போல எல்லாபடைப்புகளிலும் இந்த அறவிழுமியங்களை ஏற்று முன்மொழிவதையும் நாம் கட்டுடைத்துப்பார்க்கலாம். இதில் முற்போக்கு படைப்புகளும் பலியாகும் அபாயத்தைக் காணலாம். 


22. ஏனெனில் எல்லோருக்கும் பொதுவான அறம் என்று வர்க்கபேத சமூகத்தில் இருக்கமுடியாது. இன்றைய படைப்புகளின் அரசியல் என்பதை வர்க்கசார்பான அறவிழுமியங்களை வர்க்கபேதமில்லாமல் எல்லோரையும் ஏற்றுக் கொள்ளவைக்கிற ஆளும்வர்க்கத்தின் தந்திரங்கள் இருப்பதை நாம் உணரலாம்.


23. படைப்பு அரசியலின் இன்னொரு இரு பிளவாக படைப்பை ஜனநாயகப்படுத்துதலும் அதற்கெதிராக சர்வாதிகாரப்படுத்துதலும் என்று கூறலாம்.


24. படைப்பில் ஜனநாயகம் என்பது ஒரு படைப்பு யாருக்காக எழுதப்படுகிறது. யாரைப்பற்றி எழுதப்படுகிறது. எதற்காக எழுதப்படுகிறது என்ற அடிப்படைகளைக் கொண்டது.

25. 

 26.  படைப்பில் கலை இன்பமும் நோக்கமும் ஜனநாயகப்படுத்தப்பட்டு எல்லோரையும் சென்றடைய வேண்டும்.  


26. . இந்த வகையான படைப்புகளில் படைப்பாளியின் தான் என்னும் அகம் கரைந்து சமூக அகமாக மாறிவிடுகிறது. எனவே படைப்பு இயங்கியல்ரீதியாக வளர்ந்து கொண்டேயிருக்கும்.


27. இதற்கு மாறாக படைப்பில் தான் என்னும் அகங்காரம் சர்வாதிகாரத்துடன் இயங்கும்போது அது வாசகனை மறுதலிக்கிறது. தன்னைத் தவிர மற்றமை என்று ஒன்று இருப்பதை வெறுக்கிறது. தன்படைப்புமொழியை இறுக்குகிறது. குழூஉக்குறியைப் போல படைப்பதிலும் யாராலும் வாசிக்கப்படவோ, புரிந்துகொள்ளப்படவோ இயலவில்லையெனில் மகிழ்ச்சியடைகிறது.


28. ஆதிகால மந்திரவாதிகள் போல வெகுமக்களிடமிருந்து தங்கள் படைப்புகளைத் தூரவிலக்கி வைப்பது என்று படைப்பின் இயங்கியலை மறுத்து படைப்பின் ஜனநாயகத்தை தன் சர்வாதிகாரத்தினால் நசுக்க நினைக்கிறது. அனுபூதி, தியானம், வேள்வி, என்றும், கலைக்கு நோக்கம் தேவையில்லை, கலைக்கு எந்த லட்சியமும் கிடையாதென்றோ தன்னைச் சிம்மாசனத்தில் நிலை நிறுத்திக் கொள்ளப் பார்க்கிறது.


29. முதலாளித்துவத்தின் ஒவ்வொரு காலகட்டத்திலும் படைப்பரசியல் தன் முகங்களை மாற்றிக் கொண்டே வந்திருக்கிறது. தன் தேவைகளுக்கேற்ப படைப்புகளை உருவாக்க ஏராளமான தத்துவக் கோட்பாடுகளைப் படைக்கிறது. அது சர்ரியலிசமாக இருக்கலாம். இருத்தலியமாக இருக்கலாம். ஸ்டரட்சுரலிசமாக இருக்கலாம். நவீனத்துவமாக இருக்கலாம். பின்நவீனத்துவமாக இருக்கலாம். அடையாள அரசியலாக இருக்கலாம்.


30. எல்லாக்கோட்பாடுகளிலும் வரைமுறையற்ற முதலாளித்துவத்தின் கொள்ளையினாலும் சூதாட்டத்தினாலும் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்து கொண்டிருப்பவர்களை மடைமாற்றவும், தனிமைப்படுத்தவும் விரக்தியடையவைக்கவும், இறந்துபோன கடவுளுக்குப் பதிலாக புதிய கடவுள்களை உற்பத்திசெய்யவும், சநாதன, பழைய, இற்றுப்போன, காலாவதியான மரபுகளுக்குள் சரணடையவும் செய்கிறது.


31. படைப்பின் அரசியலைப் புரிந்து கொள்ள மார்க்சீய இயங்கியல் பார்வையின் அடிப்படைகளைத் தெரிந்து கொள்ள வேண்டும்.


32. இன்றைய படைப்புகள் அனைத்தையும் இந்த அடிப்படைப்பார்வையுடன் அணுகிப்பார்க்க வேண்டும்.

Friday, 27 June 2025

படைப்பும் படைப்பாளியும் வாசகனும்



படைப்பும் படைப்பாளியும் வாசகனும் – சில குறிப்புகள் 





1. எந்தவொரு கலைப்படைப்பின் முதல் நோக்கம் கலை இன்பமே. அந்தக் கலையின் இன்பமே வாசகனை படைப்புக்குள் ஈர்க்கிறது.


2. வாசகனின் மனதில் மெல்லுணர்வுகளை மீடடி படைப்பு அனுபவத்தை அவனுக்கு கடத்துகிறது.


3.  படைப்பிலிருந்து கிடைக்கும்  அநுபவப்பகிர்வின் வழியாக நாம் புரிந்து கொள்கிற சிந்தனைத்தளம்.


4.  இது ஒரு படைப்பை வாசிக்கிற வாசகனின் பயணம் என்று சொல்லலாம். இந்தப் பயணத்தின் முடிவில் படைப்பாளியும் வாசகனும் ஒரே இடத்தில் சந்திக்கலாம். சந்திக்காமலும் போகலாம்.


5.  படைப்பாளி - வாசகன் உறவு நீண்ட பிரயாணத்தில் உடன் வரும் சகபயணியைப் போன்றது. முதலில் சாதாரணமாகத் துவங்கும் உறவு ஒரு கட்டத்தில் மிக முக்கியமானதாகி விடுகிறது. 


6. வாசகன் இல்லையெனில் உலகச்செவ்வியல் படைப்பேயானாலும் அது வெறும் காகிதக் குப்பை தான்.


7. இன்னொரு வகையில் வாசகன் தன்னுடைய வாசிப்பின்வழி படைப்பாளியின் கைகோர்த்து பயணம் செய்கிறான். 


8. கலைஞன் தன்னுடைய வாழ்வில் எதிர் கொள்ள நேரிடும் நிகழ்வுகளில் சில அநுபவப்பொறிகள் மின்னலெனக் கருக்கொண்டு மனதில் வளர்கின்றன.


9. வளர்ச்சியின் வேகமும், ஆழமும், கலைஞனின் மொழி ஆளுமை, படைப்பாற்றலில் உள்ள தீவிர வேட்கை, வாசிப்பு அநுபவம், அவனுடைய அழகியல் கோட்பாடு, இவற்றின் அடிப்படையிலேயே இருக்கும். 

 

10. வெளிப்பாட்டுக்குத் தேவையான உத்வேகம் புறவயமாகவோ, அகவயமாகவோ, எந்த நிலையிலும், எந்த நேரத்திலும் பிறக்கலாம். அப்போது காகிததில், கணிணியில் பதிவு செய்யும் நிகழ்வு நடக்கிறது. 


11. கலைஞன் சுய அநுபங்களிருந்தோ, அறிவனுபவங்களிலிருந்தோ, புராணிக, சரித்திர, தொல்கதை வாசிப்பனுபவங்களிலிருந்தோ, தத்துவார்த்த அனுபவங்களிலிருந்தோ, தன் படைப்புக்கான உத்வேகத்தைப் பெறலாம். 

12.  அந்த உத்வேகம், படைப்பின்சிறு பொறி நின்று நிதானித்து நன்றாக அடைகாக்கப்பட்டு, முழு உருவம் அடைந்த பிறகு வெளிவந்திருக்கிறதா அல்லது அவசரமாக, அரைகுறையாக வெளிவந்திருக்கிறதா என்பதை எந்த எளிய வாசகனும் கண்டுபிடித்து விடுவான். இதற்கு ஒரளவு வாசிப்பனுபவமும், நுண்ணுணர்வும் இருந்தாலே போதுமானது.


13. கலைஞனிடம் பிறந்த படைப்பு வாசகனிடமே நிறைவடைகிறது. 


14. ஒவ்வொரு வாசகர் வாசிக்கும் போதும் அது அவரிடத்தில் அவருடைய உணர்ச்சித் தளம், சிந்தனைத்தளம், ஆகியவற்றில் செயல்பட்டு பௌதீகசக்தியாக மாறுகின்ற வல்லமை கொண்டதாகிறது.

 

15.  கலைஞனித்திலிருந்து வெளிப்படும் படைப்பு தன் வெளிப்பாட்டுச் செயல் முடிந்ததும் தாயிடமிருந்து தொப்புள்க்கொடி அறுந்த குழந்தையைப் போல சுயம்புவாகி விடுகிறது. அந்தப் படைப்பின் மீது படைப்பாளிக்கு தன் படைப்பு என்ற உரிமையைத் தவிர வேறு ஒன்றும் இல்லை. 


16.  படைப்பாளியிடமிருந்து வெளிப்பட்ட படைப்பு உறைநிலையிலேயே இருக்கிறது. வாசகன் அதை வாசிக்கும் போதே அது உயிர்பெறுகிறது. படைப்பு முழுமையடைகிற இடமாக வாசகனே இருக்கிறான். வாசகன் கரங்களால் தொடும் வரை படைப்பு மண்ணில் புதைந்த விதையே போல்  தற்காலிக உறக்கம் கொள்கிறது. மண்ணைக் கீறி மலரச் செய்வது வாசகனே.


17. படைப்பு வாசகனால் வாசிக்கப்படும்போது ஒரே தளத்தில் அர்த்தத்தையும் தரலாம். பல தளங்களில் பல அர்த்தங்களையும் தரலாம். பலருக்கு பலவிதமாகவும் அர்த்தம் தரலாம். இதற்கு வாசகனின் நுண்ணுணர்வு, இலக்கியப்பயிற்சி, சமூக அக்கறை, இவை காரணங்களாக இருக்கும். எனவே ஒரே படைப்பு காலந்தோறும் வெவ்வேறு மாதிரியாக வாசிக்கப்படுவதும் நிகழும்.


18. பாதைகள் தெரியாத கும்மிருளாய் படைப்பு இருந்து அதில் பல்வேறு அர்த்தங்கள் இருப்பதாகப் பாவனை செய்யும் படைப்பாளிகளும், படைப்புகளும் உண்டு. 


19.  படைப்பின் அடிப்படை கலை அழகியல் முறைமையிலிருந்து பிறழ்ந்து வெறும் சொற்கோர்வையாகவோ, நேரடியான,செய்தியாகவோ, பிரச்சாரமாகவோ, படைப்பு விளங்குமானால் அது காலத்தால் நிராகரிக்கப்படும்.


20. எல்லாவெளிப்பாடும் அடிப்படையில் பிரச்சாரமே. ஆனால் அந்த வெளிப்பாட்டுமுறைகளில் கலையின் விதிகள் தொழிற்பட்டிருக்கும்போதே அது கலையாக மாறுகிறது. கலையின் விதிகளே அல்லது கலைத்துவமே அந்த வெளிப்பாட்டை செய்தி எனவும், பேச்சு எனவும், கவிதை எனவும், கதை எனவும், இன்ன பிற கலைவடிவங்கள் எனவும் வகை பிரிக்கிறது.


21. படைப்பு எளிமையானதாக இருக்க வேண்டும். ஆனால் அதைப் படைப்பிற்கான அடிப்படை விதியாகக் கொள்ள முடியாது. மொழியின் மீதும், தன் கலைச்சிந்தனைகளின் மீதும் ஆளுமையும் தெளிவும் சித்திக்கும்போது படைப்பில் எளிமை உருவாகும். 


22. ஆனால் எளிமையானதெல்லாம் கலையாகி விடாது என்ற எச்சரிக்கையுணர்வும் தேவைப்படுகிறது.


23. ஒரு படைப்பு படைக்கப்படும்போது தன்னுணர்வுப்பூர்வமானது. அறிவும் உணர்வும் ஊடாடி நெசவு செய்கிற காரியமாக படைப்பு திகழ்கிறது.


24.  அனுபவப்பொறி பற்றித் தீயாய் எரியும்வரை வேண்டுமானால் தன்னுணர்வும், தன்னுணர்வுமற்ற நிலையில் படைப்பு தன் உருவத்தையும் உள்ளடக்கத்தையும் உருவாக்கிக் கொண்டிருக்கலாம். ஆனால் அதுவுமே முன்னனுபவங்களின், வாசிப்பனுபபவங்களின் சாரம் ஊறிக் கிடக்கும் ஊற்றின் கண் தான். மற்றபடி, அநுபூதிநிலை, தெய்வீக உணர்வு, என்பதெல்லாம் மூட நம்பிக்கைகளே.


25. எல்லா அறிவுத்துறைகளையும் போலவே படைப்பிலக்கிய அறிவுத்துறையிலும் படைப்பின் நுட்பங்கள் குறித்தான ஆய்வும், அடிப்படை அலகுகள் குறித்த உரையாடலும் அவசியம். அப்போது தான் வாசகனுக்கும் ஏன் படைப்பாளிக்கும் கூட படைப்பின் சூட்சுமங்களை விளங்கிக் கொள்ளமுடியும். 


26. படைப்பிற்கும் வாசகனுக்குமான உணர்வு விதைக்கும் விளைவதற்குமான ஒப்புமையுடன் உள்ளது.ஒரு வைரஸ் புறவய நிலையில் உயிரற்றும் ஒரு தாங்கு (ஹோஸ்ட் )உயிரியினுள் உயிர்ப்புடன் இயங்குவதையும் போல என்று சொல்லலாம்.


27. ஒரு படைப்பாளி படைப்பை தன்வய உணர்வில் ( subjective ) படைத்தாலும்,   படைப்பாக வெளிவந்தபின்பு ( objective )  தார்மீகமாக அது சமூகத்தின் உடமையாகிவிடும். 


28. படைப்பின் மீதான வாசகனின் கண்ணோட்டங்களும் விமர்சனங்களும் சமூகப்பார்வையை உருவாக்கவும் மதிப்பீடுகளை மாற்றவும் செய்யும். இதற்கு படைப்பாளி தன் படைப்பின்வழி ஒரு சிந்தனை மற்றும் உணர்வூக்கியாக இருக்கிறான். 


29. படைப்பாளி குருபீடத்தில் இருக்க வேண்டியதில்லை. அவன் படைப்பும் அவனுடைய சுயமான படைப்பும் அல்ல. சமூகமே படைப்பையும் படைப்பாளிகளையும் வாசகர்களையும் உருவாக்குகின்றது. 


30. தன்னைக் குருவாகவும் வாசகர்களைச் சீடர்களாகவும் நினைக்கின்ற சிந்தனை சநாதன நிலப்பிரப்புத்துவத்தின் மிச்ச்ச சொச்சமே.


31. முதலாளித்துவம் எல்லாவற்றையும் விற்பனைப்பொருளாக்கி விடும். எனவே விளம்பரங்களின் மூலம் விற்பனையை பெருக்கிக் கொள்ளும். அதில் படைப்பும், படைப்பாளியும், வாசகர்களும் கூட அடங்குவர்.


32. நவீன முதலாளித்துவம் இப்போது பொருட்களுக்காக மனிதர்களை படைத்து கொண்டு இருக்கிறது. அதாவது படைப்புகளுக்காக வாசகர்களையும் திட்டமிட்டு உருவாக்குகிறது. அந்த முதலாளித்துவ விதிக்கு கலை இலக்கியமும் தப்புவதில்லை


32. படைப்பின் இயக்கவியல் விதிகளை நாம் எப்படிப் புரிந்து கொள்கிறோம் என்பதில் தான் நம்முடைய தத்துவப்பார்வை இருக்கிறது.

Wednesday, 25 June 2025

கலையும் அறிவியலும்

 

1.   கலையும் அறிவியலும்



                


1.
கலை என்பதே கட்டற்ற புனைவு தான். அது ஆராய்ந்து நிருபிக்கப்படுகிற உண்மையல்ல.

2.
கலை மனதில் வினை புரிகிறது. அறிவில் அல்ல. எனவே கலையின் செயல்தளம் உணர்வுத்தளம் என்பதால் தான் கட்டற்ற புனைவுவெளியை உருவாக்க முடிகிறது.

3.
நம்ப முடியாததையெல்லாம் நம்ப வைக்கிறது. நடக்க முடியாததையெல்லாம் நடக்க வைக்கிறது. அதீதத்தை யதார்த்தம் போலும் யதார்த்தத்தை அதீதம் போலும் சித்தரிக்கிறது. ஆக கலை தனக்கான பிரபஞ்சத்தில் இந்த அண்டத்தையே கற்பனையாகப் படைக்கிறது.

4.
கலை யதார்த்தத்தை அடிப்படையாகக்கொண்டு புனைவாக படைப்பாளியின் நோக்கத்துக்காக கட்டமைக்கப்படுகிறது. எனவே தான் கலையில் உண்மை இருக்கலாம். ஆனால் கலையே உண்மை கிடையாது.


5.
அப்படிப் பார்க்கும்போது சிறார் மனம் கட்டற்ற புனைவு வெளியில் சிறகடிப்பது.. பிறந்ததிலிருந்தே குழந்தைகளுக்கு இந்த உலகம் ஆச்சரியங்களையும் அற்புதங்களையும் தந்து கொண்டேயிருக்கிறது.

6.
வளர வளரத்தான் அவர்கள் வாழ்வின் யதார்த்தங்களைப் புரிந்து கொள்கிறார்கள். உலகம் முழுவதும் சிறார் செவ்வியல் புனைவு நூல்களிலெல்லாம் விலங்குகள் மனித குணங்களுடனும், விசித்திர உருவங்களுடன் படைக்கப்பட்டிருக்கின்றன என்ற யதார்த்தத்தையும் கணக்கிலெடுத்துக்கொண்டால் படைப்புகளில் விலங்குகள் பேசுவதோ, மனிதர்களைப்போல குணபாவங்களைக் கொண்டிருப்பதில் தவறில்லை என்றே தோன்றுகிறது.

7.
ஆனால் விலங்குகளின் இயல்புகளிலிருந்து அவற்றை மாறுபடுத்திக் காட்டுவது உதாரணத்துக்கு பாம்பு ஞாபகம் வைத்திருந்து கொத்தும். பாம்புகளை வணங்கினால் அது நமக்கு ஆசீர்வாதம் தரும். வயதான பாம்புகள் நாகரத்தினம் தரும். என்பது போன்ற மூட நம்பிக்கைகளைச் சொல்வது குழந்தைகளிடம் பாரதுரமான விளைவுகளை ஏற்படுத்தும்.

8. 
அத்துடன் கலையைத் தாண்டிய நடைமுறை அறிவுரைகளை உதாரணத்துக்கு முகமூடி அணியவேண்டும், ஹெல்மெட் போட வேண்டும், என்கிற மாதிரியான படைப்புகளும் குழந்தைகளுக்கானதில்லை

9..
எனவே புனைவுகளில் விலங்குகள் மனித குணங்களைப் பிரதிபலிக்கலாம். அதன் நோக்கங்கள் முக்கியமானவை என்று நினைக்கிறேன்.

10.
ஒவ்வொரு விலங்கும் தன்னுடைய இருத்தலுக்காக தனித்துவமான நிறம், குணம், வாழ்க்கை ஆகியவற்றைக் கொண்டிருக்கின்றன. இந்த தனித்துவமே அவை வாழ்வதற்கான போராட்டத்தில் முக்கியமான பங்கு வகிக்கின்றன. இதற்கு மனிதகுணங்களை ஏற்றிச்சொல்வது என்பது உடன்பாடானதில்லை.

11.
உயிரியல் பற்றிய அறிவியல் வளர்வதற்கு முன்னால் ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பிருந்தே அதாவது பஞ்சதந்திரக்கதைகள் ( Fables ) தோன்றிய காலத்திலிருந்தே உலகம் முழுவதும் இப்படியான கதைகளும் கருத்துகளும் பொதுப்புத்தியில் உறைந்து விட்டன. இன்றைய நவீன அறிவியல் யுகத்தில் இத்தகைய கதைகளின் கருத்துத்தளம் கேள்விக்குரியது தான்.
12.
ஆனால் விலங்குகளின் உண்மையான இயல்போடு புனைகதைகளில் எழுதுவது ஒரு சவாலாகவே இருக்கும். புனைவின் எல்லையிலிருந்து அறிவியலின் எல்லைக்குள் புகுந்துவிடும் சாத்தியங்கள் அதிகம் என்றே தோன்றுகிறது. அதனால் புனைவின் அழகு குறைந்துவிடும் அபாயமும் ஏற்படும்.


13.
அறிவியல் புனைகதைகளில் விலங்குகளைப்பற்றி இயல்பாக எழுதலாம். அதற்கு முன்னுதாரணங்கள் இருக்கிறதா என்று தெரியவில்லை.

14. சிறார் படைப்புகளில் கலையும் அறிவியலும் இணைதலும் விலகலும் எப்போதுமே சவாலானதாகவே இருக்கும். 


14.
புதிய சவால்களை சிறார் எழுத்தாளர்கள் எதிர்கொள்ள வேண்டிய காலத்தில் இருக்கிறோம்.