Monday 4 September 2017

மாயக்கண்ணாடிக்கு மூன்றாவது விருது

மாயக்கண்ணாடிக்கு மூன்றாவது விருது


தமுஎகச வழங்கும் கு.சி.பா. சிறுவர் இலக்கிய விருது

” பத்து வயதுக்குட்பட்ட குழந்தையின் உளவியலில் நம்ப முடியாத கற்பனைகளும், அதிசயங்களும் அற்புதங்களும் இன்பத்தை ஏற்படுத்துகின்றன. கிளர்ச்சியடைய வைக்கின்றன. மனதில் திருப்தியை ஏற்படுத்துகின்றன. குழந்தைகளின் படைப்பூக்கத்தைத் தூண்டி விடுகின்றன. குழந்தைகளின் தனித்துவமான ஆளுமைக்கு அஸ்திவாரம் போடுகின்றன. வண்ணங்களும், விசித்திரமான, கோமாளித்தனமான, நம்பமுடியாத, கதாபாத்திரங்களும் கதைகளும் குழந்தையின் உணர்வு உலகை விரிக்கின்றன. குழந்தைகள் யதார்த்தத்தில் போலச்செய்வதின் மூலம் தன் படைப்புணர்வை வெளிப்படுத்துகின்றன. அந்தக்கதைகளில் உள்ள கருத்துகளும், அறவிழுமியங்களும் குழந்தைகளின் ஆழ்மனதில் மறைமுகமான கல்வெட்டாய் பதிந்து விடுகின்றன.
பத்து வயதிலிருந்து தர்க்க அறிவு முளைவிடத்தொடங்கிறது. அது வரை உணர்ச்சிமயமாக இருந்த குழந்தைகள் இப்போது தங்களுடைய அறிவு முளைவிடுவதைப் பார்க்கின்றனர். கொஞ்சம் கொஞ்சமாக அறிவின் துணையுடன் எல்லாவற்றையும் புரிந்து கொள்ளத்தொடங்குகின்றனர். உலகைப்பற்றி, சமூகம்பற்றி, வாழ்க்கையைப் பற்றி, தனக்கு நேரும் அநுபவங்களைப் பற்றி நல்லது கெட்டது பற்றி கருத்துகளை உருவாக்கத் தொடங்குகின்றனர். வாழ்க்கை, சமூகம், உறவுகள், இவற்றிலுள்ள நுண் அரசியலைப் புரிந்து கொள்ளத்தொடங்குகின்றனர். உடலும் உள்ளமும் உரம் பெறும் பதினைந்து வயதில் தன்னைப் பற்றிய தன்னுணர்வு அதிகமாகிறது. அதுவரை யாரையாவது சார்ந்தே இருந்த குழந்தை தன்னை ஒரு தனிமனிதனாக, தனித்துவமுள்ளவனாக உணரத்தொடங்குகிறது. அந்தத் தன்னுணர்வு  சாகசத்தையும், சவால்களையும், சாதனைகளையும் எதிர்கொள்ளும் துணிவைத் தருகின்றன. அதற்கேற்ற கதைகளையும், படைப்புகளையும் அவர்கள் எதிர்பார்க்கிறார்கள்.
அதிகாரம் மோசமானது. அதிலும் அளவற்ற அதிகாரம் மிகமிக மோசமானது. இந்த உலகம் அதிகாரத்தின் படிநிலைகளால் கட்டப்பட்டிருக்கிறது. அரசு, சமூகம், குடும்பம், அனைத்திலுமே அதிகாரம் நிரம்பிவழிகிறது. அதிகாரத்தைப் பற்றிய உணர்வின்றி எல்லோரையும் அதிகாரம் செய்ய வைக்கிற நுட்பம் அதிகாரத்துக்கு இருக்கிறது. அதிகாரத்தின் மீதான பேரவா எல்லோர் மனதிலும் ஊற்று நீரென பெருக்கெடுத்து ஓடிக்கொண்டிருக்கிறது. அதிகாரத்தின் மூலம் எல்லாவற்றையும் சாதிக்க முடியும் என்ற எண்ணம் குழந்தைப்பருவத்திலிருந்தே குழந்தைகளுக்குக் கற்பிக்கப்படுகிறது அல்லது உணர்த்தப்படுகிறது.
பிறந்தவுடன் குழந்தைக்குத் தாயிடமிருந்து கிடைக்கும் அன்பு குழந்தை எதிர்கொள்ளும் முதல் நல்லுணர்வு. என்றால் அதற்கு நேரெதிரான தீய உணர்வாக அதிகாரத்தின் கொடுக்குகளால் கொட்டப்பட்டுக்கொண்டிருப்பது தான். சார்ந்து இருப்பதினாலேயே அதிகாரத்துக்குக் கீழ்ப்படிவது என்பது சின்னஞ்சிறு பருவத்திலேயே தொடங்கி விடுகிறது. அந்தக்குழந்தைப் பருவத்திலிருந்தே எல்லா இடங்களிலும், எப்போதும், ஏதாவது ஒரு வகையில் அதிகாரத்தின் கோமாளித்தனங்களையும், கொடூரங்களையும் அநுபவிப்பவர்களாக குழந்தைகள் ஆகின்றார்கள்.  இதைச் செய்யாதே, இதைச்செய், என்று அதிகாரம் ஆணையிட்டுக்கொண்டேயிருக்கிறது. பெற்றோர்கள், ஆசிரியர்கள், உறவினர்கள், வயது மூத்தவர்கள், போவோர், வருவோர், எல்லோரும் குழந்தைகள் மீது அதிகாரம் செலுத்துகிறார்கள். கெடுவாய்ப்பு என்னவென்றால் இதை குழந்தைகளை நல்வழிப்படுத்துவதற்காகச் செய்கிறோம் என்று சொல்லிக்கொள்கிறார்கள். ஆனால் உண்மையில் நடப்பது என்னவென்றால் குழந்தைகள் தங்களிடம் உள்ள இயல்பான படைப்பூக்கத்தினால் இந்த அதிகாரத்தைப் பகிடி செய்கிறார்கள். வக்கணை செய்கிறார்கள். அதிகாரமே வெட்கப்படும் அளவுக்கு அவர்கள் கேலி செய்கிறார்கள்.

மாயக்கண்ணாடி தொகுப்பிலுள்ள கதைகள் சிறுவர்களுக்கான கதைகள். அதிகாரத்தின் கோமாளித்தனங்களைப் பற்றிய கதைகள். அதிகாரம் பற்றிய நுண்ணுணர்வினை குழந்தைகளுக்குச் சொல்ல முயற்சிக்கிற கதைகள். அதன் மூலம் அதிகாரத்தின் மீதான விழிப்புணர்வை ஏற்படுத்த யத்தனிக்கும் கதைகள். அந்த விழிப்புணர்வே அன்பெனும் பெருநதியில் குழந்தைகள் எப்போதும் மூழ்கித்திளைக்க வைக்கும் என்ற நம்பிக்கையில் எழுதப்பட்ட கதைகள். இந்தத் தொகுப்பிலுள்ள பெரும்பாலான கதைகளை தமிழ் இந்து இணைப்பிதழான மாயாபஜாரில் வெளியிட்ட திரு. ஆதிவள்ளியப்பன், மிகக்குறைந்த காலஅவகாசத்தில் அற்புதமாக ஓவியங்கள் வரைந்து கொடுத்த ஓவியர் ஆர்.கே.பிள்ளை, அதிசயமான அட்டையை வடிவமைத்து பதிப்பிக்கும் நூல்வனம் பதிப்பாளர் என் அன்புத்தம்பி மணிகண்டன், அனைவருக்கும் என் நன்றி!”

No comments:

Post a Comment