Wednesday 6 September 2017

நல்லி-திசைஎட்டும் மொழிபெயர்ப்பு விருது

இயற்கையின் அற்புத உலகில்
மலையாளத்தில் - பேரா.எஸ்.சிவதாஸ்
தமிழில் – உதயசங்கர்

1.   குட்டிப்பாப்பாவின் கண்டுபிடிப்பு

குட்டிப்பாப்பாவுக்கு சிரிப்பு வந்தது. குட்டிப்பாப்பா அப்படித்தான். எப்போதும் சிரிப்பாள். சிரிப்பு வந்தால் சிரிக்காமல் இருக்க முடியுமா? குட்டிப்பாப்பா சிரித்தாள். குட்டிப்பாப்பா பால் குடித்துக் கொண்டிருந்தாள். அதற்கு மத்தியில் தான் இந்த சிரிப்பு வந்தது. பாலும் பல்லும் அப்போது வெளியில் வந்தது. அதைக் கண்ணாடியில் பார்த்த குட்டிப்பாப்பா மறுபடியும் சிரித்தாள். சிரித்துக் கொண்டு, சிரிப்பைப் பார்த்துக் கொண்டு, இருந்தபோது குட்டிப்பாப்பாவுக்கு ஒரு சந்தேகம் வந்தது. சிரிப்பு பால் போன்றதா? பாலைப்போல வெள்ளையா? சந்தேகம் வந்ததும் சிரிப்பும் அதிகமானது. குட்டிப்பாப்பாவுக்கு ஒரு கருத்த மாமன் இருந்தான். கருத்த மாமனுடைய மனைவியான மாமி வெள்ளையாக இருப்பாள். மாமனும் மாமியும் சிரிக்கும்போது வெள்ளை வெள்ளையான பற்கள் வெளியே வரும். முல்லை மொட்டுகளைப் போல உள்ள பற்களைப் பார்க்கலாம். கருத்தமனிதனின் சிரிப்பும், வெளுத்த மனிதனின் சிரிப்பும் வெள்ளை வெள்ளையான பால் சிரிப்பு. சிரிப்பு வெள்ளை தான். புதிய ஒன்றைக் கண்டுபிடித்த கர்வத்தோடு குட்டிப்பாப்பா பால் முழுவதையும் குடித்து முடித்தாள். மறுபடியும் சிரித்தாள். பால் வடியும் முல்லை மொட்டு சிரிப்பு. சிரித்துக் கொண்டே குட்டிப்பாப்பா முற்றத்தில் இறங்கினாள்.”

- இந்த நூலை சிறப்பாக வடிவமைத்த வானம் பதிப்பக உரிமையாளர் அன்புத்தம்பி மணிகண்டனுக்கும், அழகான ஓவியங்கள் வரைந்த ஓவியர் ராஜனுக்கும் மிக்க நன்றி.
நல்லி-திசை எட்டும் விருதுக்குத் தேர்வு செய்த தேர்வுக்குழுவினருக்கும் மிக்க நன்றி.

No comments:

Post a Comment