Thursday 3 December 2015

சிரிப்பு தந்த சிரிப்பு

( சிறுவர் கதை )fat-king-cartoon-fantasy-character-illustration-funny-fairytale-36067727

உதயசங்கர்

 

சிரிப்பூர் நாட்டு ராஜாவின் அலம்பல்களுக்கு ஒரு அளவே இல்லாமல் போய்விட்டது. அவருடைய அட்டகாசம் தாங்கமுடியாமல் கொஞ்சப்பேர் கிமெரிக்கா, கிங்கிலாந்து போன்ற நாடுகளுக்குப் போய் குடியேறி விட்டனர். சாதாரண மக்கள் வேறுவழியில்லாமல் ராஜாவின் கோமாளித்தனங்களைப் பொறுத்துக் கொண்டிருந்தனர். அரசவையில் ஒரு நாள் ராஜா தன்னுடைய பருத்த உடம்பைத் தூக்கிக் கொண்டு வந்து அரியணையில் உட்காரப்போன சமயத்தில் கால்கள் பின்னி கீழே விழுந்து விட்டார். அத்தாப்பெரிய உடம்பு ஒரு சிறு மலையைப் போல படிக்கட்டுகளில் உருண்டு கீழே விழுந்ததைப் பார்த்த அரசவையிலிருந்த முதல் மந்திரி, துணை மந்திரிகள், இணை மந்திரிகள், சேனாதிபதி, தளபதி, அரசவையிலிருந்த ஆளுங்கட்சி உறுப்பினர்கள், எதிர்க்கட்சி உறுப்பினர்கள், அரசவை புலவர்கள், விதூஷகர்கள், கோமாளிகள், சேவகர்கள், சேடிப்பெண்கள், அரசவை நடவடிக்கைகளைப் பார்க்க வந்திருந்த பொது மக்கள், பொது மக்கள் பொழுது போவதற்காக தேங்காய், மாங்காய்,பட்டாணி சுண்டல், பொரிகடலை, நிலக்கடலை, உருளைக்கிழங்கு சிப்ஸ், குர் குர்ரே, லேஸ், லிட்டில் பால்ஸ், விற்பனை செய்ய வந்திருந்த வியாபாரிகள், வாங்கித் தின்பவர்கள் சிந்துகிற தின்பண்டங்களைப் பொறுக்கித் தின்ன வந்திருந்த சில நாய்கள், பூனைகள், அரண்மனை தோட்டத்திலிருந்து வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த குருவிகள், மைனாக்கள், புறாக்கள், என்று எல்லோரும் சிரித்து விட்டார்கள்,

அந்தச் சிரிப்பினால் அந்த நாடே குலுங்கியது. வீடுகள் ஆடியது. வீட்டிலிருந்த மக்கள் ஆடினர். அந்த ஆட்டத்தைப் பார்த்து ஒருவருக்கொருவர் சிரித்தனர். அந்தச் சிரிப்பினால் சாலையில் போய்க்கொண்டிருந்த வாகனங்கள் குதித்தன. மரங்கள் தலையாட்டி ஹா ஹா ஹா வென சிரித்தன. இத்தனை சத்தத்தில் ஏற்கனவே படிக்கட்டுகளில் உருண்டு கொண்டிருந்த ராஜா மேலும் மேலும் உருண்டு அரண்மனையின் வாசலுக்கே வந்து விட்டார். அவர் உருள உருள அரசவையின் தரை அதிர்ந்தது. அந்த அதிர்ச்சியினால் சிரித்துக் கொண்டிருந்தவர்களும் கீழே விழுந்து உருண்டனர். உருண்டவர்கள் அப்படியே ராஜாவை நோக்கி போய்க் கொண்டிருந்தனர். அப்போது தான் அந்த அபாயத்தை உணர்ந்த சேவகர்கள் தட்டுத்தடுமாறி எழுந்து உருண்டவர்களைத் தடுத்து அணை போட்டனர். உருண்டு கொண்டிருந்தவர்களிடையே ராஜாவைத் தேடினார்கள். ராஜாவைக் காணவில்லை. அவர் தான் அரண்மனை வாசலில் கிடந்தாரே.

கடைசியில் ராஜாவை அரண்மனை வாசல் படிக்கட்டுகளில் கடைசிப்படிக்கட்டில் குப்புறக்கிடந்ததைப் பார்த்தார்கள். அவரால் அசையக் கூட முடியவில்லை. ஐம்பது சேவகர்கள் சேர்ந்து அவரைத் தூக்கிக் கொண்டு வந்து அந்தப்புரத்தில் படுக்க வைத்தார்கள். பதினெட்டு நாட்டு மருத்துவர்களும் வந்து அவருக்கு பண்டுவம் பார்த்தார்கள்.

ஒரு மாதத்திற்குப் பிறகு அரண்மனைக்கு வந்த ராஜா ஒரு சட்டம் போட்டார். என்ன சட்டம் தெரியுமா? இனிமேல் நாட்டில் யாரும் வாயைத்திறந்து சிரிக்கக் கூடாது. என்ன நடந்தாலும் சரி. என்ன பேசினாலும் சரி. என்ன விழுந்தாலும் சரி. என்ன எழுந்தாலும் சரி. யாரும் சிரிக்கக்கூடாது. அப்படிச் சிரிப்பவர்களுக்கு ஐம்பது கசையடிகள் தண்டனை என்று தண்டோரா போடச் சொன்னார். அரண்மனையிலிருந்த விதூஷகர்களையும், கோமாளிகளையும் நாடு கடத்த உத்தரவிட்டார். நகைச்சுவையாக எழுதுகிற எழுத்தாளர்களை சிறையில் அடைத்தார். அது மட்டுமல்லாமல் அவர்களை பத்து கோடி தடவை இனி நான் சிரிப்புக்கதை எழுத மாட்டேன் இனி நான் சிரிப்புக்கதை எழுத மாட்டேன் என்று இம்போஷிசன் எழுதச் சொன்னார்.

இந்தச் சட்டம் போட்ட பிறகு தினசரி மக்கள் கூட்டம் கூட்டமாக கசையடிகள் வாங்கினர். கசையடி கொடுக்க ஆட்கள் போதவில்லை. மேலும் கசையடி கொடுக்கும்போதே அடிக்கிற ஆட்கள் சிரித்து விட அவர்களும் கசையடி வாங்கினார்கள். இப்படி கசையடி வாங்கியவர்கள் இரண்டு நாட்களுக்கு எந்த வேலையும் செய்ய முடியவில்லை. விவசாயம் நடக்க வில்லை. தொழிற்சாலைகள் ஓடவில்லை. பள்ளிக்கூடங்கள் நடக்க வில்லை. கல்லூரிகள் மூடிக்கிடந்தன. வீடுகளில் சமையல் செய்ய ஆளில்லை. எல்லோரும் ஏதோ ஒரு ஆசுபத்திரியில் கிடந்தார்கள். உடம்பு சரியாகி வந்ததும் ஏதாவது ஒரு காரணத்துக்காகச் சிரித்து விடுவார்கள். ஏன் முதல்மந்திரியே இரண்டு தடவை கசையடி வாங்கினார் என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன். அதிலிருந்து முதல் மந்திரி தொடங்கி அதிகாரிகள், ஊழியர்கள், சேவகர்கள், பொதுமக்கள் என்று எல்லோரும் ராத்திரியில் சத்தமாக ரேடியோ, தொலைக்காட்சி சேனல்களை போட்டு சிரியோ சிரியென்று சிரிப்பார்கள். ரேடியோ தொலைக்காட்சி சத்தத்தில் சிரிப்புச் சத்தம் வெளியே கேட்காது. இப்படியெல்லாம் சிரிப்பூர் மக்கள் சிரிக்க முடியாமல் சங்கடப்பட்டார்கள். நீங்களே சொல்லுங்கள். யாராலாவது சிரிக்காமல் இருக்க முடியுமா?

ஆனால் தொடர்ந்து வாங்கிய தண்டனையால் மக்கள் சிரிப்பை மறந்து அழத்தொடங்கினார்கள். முன்பு எதற்கெல்லாம் சிரித்தார்களோ அதற்கெல்லாம் இப்போது அழுதார்கள். வீடே அழுதது. தெருவே அழுதது. ஊரே அழுதது. நாடே அழுதது. பகலும் இரவும் அழுகைச் சத்தம் கேட்டுக் கொண்டிருந்தது.

ராஜா ஒரு நாள் அவருடைய மந்திரிகளுக்கு விருந்து வைத்தார். அந்த விருந்தில் முதல் மந்திரி வறுத்த கோழிக்குஞ்சு ஒன்றை அப்படியே விழுங்க முயற்சித்து வாயை அகலமாகத் திறந்தார். கோழிக்குஞ்சு உள்ளேயும் போகாமல் வெளியேயும் வராமல் வாய்க்குள்ளே நின்று விட்டது. முதல்மந்திரியின் வாய் தவளையின் வாய் மாதிரி ஆகி விட்டது. அந்த நேரம் பார்த்து ராஜா முதல்மந்திரியிடம் ” எப்படி விருந்து?” என்று கேட்க, அதற்கு முதல்மந்திரி ” விழ்ந்து பிழ்மாதம் “ என்று சொன்னார். அதைக் கேட்ட ராஜா சிரிப்பு பொங்கி வர சிரித்து விட்டார். உடனே விருந்தில் கலந்து கொண்டவர்கள் “ ஹேய்.. ராஜா சிரித்து விட்டார் ராஜா சிரித்து விட்டார்..” என்று கத்தினார்கள். உடனே ராஜா சேவகர்களைக் கூப்பிட்டு,

“ யாராயிருந்தாலும் சட்டம் சட்டம் தான்.. நிறைவேற்றுங்கள்..” என்று சொன்னார். எல்லோரும் வேண்டாம் வேண்டாம் என்று சொன்னார்கள். ஆனால் ராஜா பிடிவாதம் பிடித்தார். சரி என்று சேவகர்களில் ஒருவன் ராஜாவை திருப்பி நிறுத்தி முதுகிலும் பிட்டத்திலும் ஐம்பது கசையடிகள் கொடுத்தான். அவ்வளவு தான் ராஜா துடித்து உடம்பெல்லாம் தடித்து உருண்டு புரண்டு விட்டார். ராஜா துடிப்பதைப் பார்த்து எல்லோருக்கும் சிரிப்பு வந்தாலும் யாரும் சிரிக்கவில்லை. மறுநாள் ராஜா முதல்வேலையாக முதல் மந்திரியைக் கூப்பிட்டு அவருடைய சிரிப்புத்தடைச்சட்டத்தை உடனே நீக்கி விடச் சொன்னார். முதல் மந்திரி ராஜாவின் வீங்கிப் போன உடம்பைப் பார்த்து சிரிப்பு பொங்கி வரச் சிரித்தார். ராஜாவும் அந்தச் சிரிப்பில் கலந்து கொண்டார். சிரிப்பூர் நாட்டிலிருந்த மக்களும் அன்றிலிருந்து சுதந்திரமாகச் சிரித்தார்கள்

நன்றி- தமிழ் இந்து மாயாபஜார்

No comments:

Post a Comment