Saturday 14 April 2012

புரட்சியின் கண்ணீர்


 

lenin
அவரை நான் மறந்தே போயிருந்தேன்.பார்த்துப் பதினைந்து வருடங்கள் இருக்கும். நான் கோவில்பட்டியை விட்டு, வட மாவட்டங்களில்வேலை பார்த்துவிட்டு இப்போதுதான் சொந்த ஊருக்குத் திரும்பியிருந்தேன். திடீரென அவரைப்பார்த்தபோது அடையாளமே தெரியவில்லை. எங்கோ பார்த்த ஞாபகம் இருந்தாலும், யார் என்று பிடிபடவில்லை.அவரே என்னைப் பார்த்து, ஏத்துப்பல் சிரிப்புடன் சாலையைக் கடந்து ஓடிவந்தார்.
‘‘தோழர்... என்னைத் தெரியலயா...’’
ஏக்கத்தோடு கேட்டார். அவர்கைகளைத் தொட்டதுதான். எனக்குள் மின்னல் வெட்டியது மாதிரி ஞாபகம் வந்துவிட்டது.
‘‘தோழர் புரட்சி! எப்படிஇருக்கீங்க... ஆளே மாறிட்டீங்க...’’
ஆனால், உண்மை அதுவல்ல. அவர்மாறவேயில்லை. காலம் தன் கரத்தால் தலைமுடியில் வெள்ளையையும், உடலில் சில சுருக்கங்களையும்ஏற்படுத்தியிருந்தது. அவ்வளவுதான். மற்றபடி அதே மெலிந்த உடல், பளீரென்ற சிரிப்பு. அழுக்குதெரிந்தும் தெரியாத ஒரு வேட்டி சட்டை. தோளில் சிறிய சிவப்புத்துண்டு. அப்படியேதான்இருந்தார்.
அருகிலிருந்த டீக்கடையில்டீ குடித்தோம். தோழர், கணேஷ் பீடி வாங்கிப் புகைத்தார். நான், வில்ஸ் பில்டர் வாங்கினேன்.அவர் மாறவில்லை. அப்போதும் டீயும் கணேஷ் பீடியும்தான் அவர் உணவு. புரட்சி என்று எல்லோரும்கூப்பிட்டார்கள், நாங்களும் அப்படியே கூப்பிட்டோம். எங்களுக்குப் பின்னால் வந்த இளைஞர்களும்கூடஅப்படியே கூப்பிட்டார்கள். ஒருநாள், அவருடைய உண்மையான பெயரை பாலுவிடம் கேட்டபோதுதான்தெரிந்தது, கந்தசாமி என்ற பெயர், எப்படி புரட்சியாக மாறியது என்று. புரட்சி என்ற சொல்லைக்கேட்டால் போதும், அங்கே தோழர் புரட்சி நின்று கொண்டிருப்பார்.
இந்தியாவில் எமர்ஜென்சி முடிந்துஜனதா ஆட்சிக்கு வந்தபோது, இடதுசாரிகளுக்கு எழுச்சிக் காலமாக இருந்தது. இளைஞர்கள் பல்வேறுஇடதுசாரி சிந்தனைப் பள்ளிகளில் வளர்ந்தார்கள். ஆனால், எல்லோருக்கும் ஒரே ஒரு சிந்தனைதான்.அது, ‘புரட்சியை எப்போது நடத்துவது?’ இரவுகள் இவர்களுடைய விவாதச் சூட்டினால், பகலைவிடவெக்கையாக மாறிவிட்டிருந்தது. யார் புரட்சியைப் பற்றிப் பேசினாலும் புரட்சி அங்கிருப்பார்.தோழர்கள் பேசிக்கொண்டிருப்பதை உன்னிப்பாகக் கவனிப்பார். யாராவது, ‘‘கோவில்பட்டியில்புரட்சி வந்தால்...’’ என்று ஆரம்பித்தால் போதும். கந்தசாமி உற்சாக மிகுதியில் தன் கைகளைத்தட்டி, ‘‘அப்படிப் போடு!’’ என்று உரக்கக் கூவுவார்.
தோழர்கள் பேசுகிற எந்த ஒருசொல்லும், கீழே சிந்திவிடாத வண்ணம் அப்படியே அவர் விழுங்கிக் கொண்டிருந்தார். தோழர்களுக்குடீ வேண்டுமென்றால், ஓடிப்போய் வாங்கி வருவார். சிகரெட், பீடி வேண்டுமென்றால் வாங்கிவந்து தருவார். விவாதம் அறுபடாமலிருக்க, என்னென்ன உதவிகள் வேண்டுமோ அத்தனையும் செய்வார்.யாராவது அவரிடம்,
‘‘எதுக்குத் தோழர் உங்களுக்குவீண்சிரமம்?’’ என்று கேட்டால்,
‘‘தோழர், எனக்கு ஒரு சிரமமுமில்லை.நீங்க எவ்வளவு முக்கியமான விஷயத்தைப் பத்திப் பேசிக்கிட்டிருக்கீங்க.. ந்தா... ஒருநிமிஷத்துல வாங்கிட்டு வாரேன்...’’ என்று சொல்வார்.
மற்ற விஷயங்களைக் குறித்துஅவருக்கு ஆர்வம் இல்லை. இலக்கியம் பற்றியோ, சினிமா பற்றியோ, வேலையின்றி சுற்றிக்கொண்டிருந்தஎங்கள் குழாம், வேலையின்மை பற்றியோ பேசிக்கொண்டிருந்தால், அருகில் வந்து சிறிது நேரம்உட்கார்ந்திருப்பார். பின்பு, அதிருப்தியான ஒரு பார்வையை எங்கள் மீது வீசிவிட்டு, அங்கிருந்துஅகன்றுவிடுவார். பகலில் எங்கு போகிறார், என்ன வேலை செய்கிறார் என்று தெரியாது. ஆனால்,இரவானதும் நாங்கள் கூடிப்பேசுகிற காந்தி மைதானத்துக்கு வந்துவிடுவார்.
சிலநாட்களில், விடிய விடியபேசிக்கொண்டிருப்போம். நடுநிசியில் எங்களுடைய உரத்த குரல்கள் நகரமெங்கும் அலையடிக்கும்.ஒரு மணிக்கு மேல் டீயோ, சிகரெட், பீடியோ கிடைக்காதென்பதால், தோழர் புரட்சிதான் எங்களுக்குபீடி சப்ளை செய்வார். எல்லோரும் தங்களுடைய பேச்சில் ‘ஜான் ரீடு’ எழுதிய ‘உலகைக் குலுக்கியபத்து நாட்கள்’ என்ற நூலைப் பற்றிப் பேசுகிறார்களே என்று என்னிடம் கேட்டுவிட்டு,‘‘அந்தப் புத்தகம் வேண்டும்’’ என்றார்.
எனக்கு ஆச்சரியமாய் இருந்தது.அவர் எழுத்துக்கூட்டி வாசிப்பதைத்தான் நான் பார்த்திருக்கிறேன். இருந்தாலும், மறுநாள்அந்தப் புத்தகத்தை எடுத்துக் கொண்டுபோய் அவரிடம் நீட்டினேன். அதை வாங்கி, அட்டையிலிருந்தபுரட்சியின் காட்சிப் படத்தையே ரொம்பநேரம் பார்த்துக் கொண்டிருந்தார். அவ்வப்போது அவரைஓரக்கண்ணால் பார்ப்பேன். தோழர் புரட்சி, உலகைக் குலுக்கிய பத்து நாட்கள் புத்தகத்தின்பக்கங்கள் ஒவ்வொன்றாய் புரட்டிக் கொண்டிருந்தார்.
அதை வாசிக்க முயற்சி செய்யவில்லை.அந்தப் பக்கங்களைத் தடவிக் கொடுத்துக் கொண்டிருந்தார். அப்போது அவருடைய முகம் அபூர்வமானஒளியுடன் துலங்கியது. கண்களில் கனவின் ரசம் இறங்கி, மெய்மறந்த நிலையில் இருந்தார் அவர்.அந்தப் புத்தகத்தின் பக்கங்களைத் தடவுவதின் மூலம், அவர் ரஷ்யப் புரட்சியின் காலத்துக்குள்சென்று கொண்டிருந்தார். புரட்சியின் பதாகை ஏந்தி, அவரே பீட்டர்ஸ்பர்க் நகரில் கூவிக்களித்தபடி ஓடிக்கொண்டிருந்தார்.
நாங்கள் பேசிக் கலைந்தபோது,நானே எதிர்பாராதவாறு அந்தப் புத்தகத்தை என்னிடம் திருப்பிக் கொடுத்தார். பேருவகை முகத்தில்கொப்பளிக்க,
‘‘அடடா! என்னமா புரட்சி நடத்தியிருக்கான்!’’
உண்மைதான். தோழர் புரட்சியைப்போலவே நாங்களும் கனவு கண்டு கொண்டிருந்தோம். தீவிரமான அரசியல், தத்துவ விவாதங்கள்,கலை இலக்கியச் சர்ச்சைகள் நடந்து கொண்டிருந்த காலம் அது. புரட்சிக்கான தருணம் நெருங்கிவிட்டதுஎன்றுதான் நாங்களும் நினைத்தோம். அதனால், இந்த அமைப்பில் போட்டித் தேர்வுகள் எழுதிவேலைக்குச் செல்வது வீண் என்று நினைத்தோம். எப்படியும் எல்லாம் மாறத்தான் போகிறது.அன்று சுதந்திரப் போராட்டத்தில் படிப்பை, வேலையை உதறித் தள்ளி, வீதிகளில் இறங்கிய இளைஞர்களைப்போல புரட்சியின்போது எல்லோரும் வீதிகளுக்கு வந்துதான் தீரவேண்டும். பின் எதற்காக வேலைக்குப்போகவேண்டும்? புரட்சிக்கான தயாரிப்பு வேலைகளைச் செய்வதற்கு ஆட்கள் வேண்டாமா?
ஆனால், வீட்டில் கடும் நெருக்கடிகொடுப்பார்கள். எனவே, போட்டித் தேர்வுகளுக்கு விண்ணப்பம் அனுப்பி ஹால் டிக்கெட் வாங்குவோம்.தேர்வு மையம் மதுரையோ, திருச்சியோ, திருநெல்வேலியோ, திருவனந்தபுரமோ, தூத்துக்குடியோ,எங்கு இருந்தாலும் அந்த ஊருக்குச் சென்றுவிடுவோம். அங்கிருந்தபடி, பரீட்சை எழுதாமல்ஊரைச் சுற்றிவிட்டுத் திரும்பிவிடுவோம்.
வரப்போகும் புரட்சியின்போதுகோவில்பட்டி நகரை எதிரிகளிடமிருந்து எப்படிப் பாதுகாப்பது? கேந்திரமான சாலைகள் எவை?எந்தெந்த வழிகளை யார், யார் தலைமையில் பாதுகாக்க வேண்டும்? மக்களுக்கான புரட்சியின்செய்திகளைக் கொடுப்பதற்கான கமிட்டியில், யார் யார் இருக்கவேண்டும்? உணவு சப்ளை, குடிநீர்சப்ளை என்று விலாவாரியாகப் பேசிக் கொண்டிருந்தோம். மாற்றத்தின் கனவுகளைச் சுமந்துகொண்டு,மண்டை வீங்கித் திரிந்தோம். நாங்கள் பேசிய அத்தனை இரவுகளில் உதிர்த்த சொற்களுக்கு வல்லமைஇருந்தால், அவையே புரட்சியை நடத்தியிருக்கும்.
ஆனால், காலம் மாறிவிட்டது.பழைய கனவுகளின் சாயல் மட்டுமே இப்போது மீந்திருக்கிறது. தலைகீழான வாழ்க்கை முறைகளில்,எல்லாவற்றையும் அவசரகதியில் செய்துகொண்டே ஓடவேண்டியிருக்கிறது. அன்று கூடிப் பேசியகாந்தி மைதானத்தைக் கடக்கும்போதெல்லாம், ஆச்சரியத்தின் ஒரு சிறகு என் மேல் வீசிச்செல்வதைஉணர்ந்திருக்கிறேன். அத்தனை வருடங்கள், அத்தனை இரவுகள், பேசித்திரிந்த இடம்தானா? இன்றுஅந்த இரவுகள் இல்லை. அந்த இரவுகளில் கூடிப்பேசிய நண்பர்களும் இல்லை. எல்லோருக்கும்அவரவர் பாடு. நானும்கூட பஜாருக்குப் போகவேண்டும். ரைஸ் மில்லில் கொடுத்திருந்த கேப்பைமாவை வாங்கி வரவேண்டும். துணைவியாரின் முகம் ஒருகணம் மின்னி மறைந்தது.
நான் தோழர் புரட்சியை நிமிர்ந்துபார்த்தேன். தோழர் புரட்சி எங்கோ வெறித்தபடி பீடியைச் சுண்டி இழுத்துக் கொண்டிருந்தார்.திடீரென வெயில் மறைந்து, மேகம் கூடி மூடாக்கு போட்டது. மழை வருவதற்குள் வீடு போய்ச்சேரவேண்டும்.
‘‘அப்புறம் தோழர்?’’
விடைபெறும் தோரணையில் கேட்டேன்.
தோழர் புரட்சி என்னை நிமிர்ந்துபார்த்தார். முகம் மாறியிருந்தது. அமைதி கூடி, முகத்தின் சுருக்கங்கள் ஆழமாகின. ஆனால்,அவர் எதுவும் பேசவில்லை. நான் என்னுடைய டி.வி.எஸ். வண்டியில் சாவியைப் போட்டுவிட்டுஅவரைப் பார்த்து சிரிக்க முயன்றேன். நான் புறப்படுவதை உணர்ந்தவர், ஒரு அடி முன்னால்வந்தார். என்னுடைய இடது கையைப் பிடித்துக்கொண்டு,
‘‘தோழர்.. அப்ப புரட்சி வரவேவராதா...?’’
குரல் தழுதழுக்கத் தொடங்கியிருந்தது.அப்படி ஒரு கேள்வியை நான் சற்றும் எதிர்பார்க்கவே இல்லை. அதைப்பற்றி யோசித்ததும் இல்லை.ஒருகணம் தடுமாறிவிட்டேன். என்ன பதில் சொல்வதென்று யோசித்துக் கொண்டிருக்கும்போதே என்வாய்,
‘‘தெரியல.. தோழர்...’’ என்று முணுமுணுத்தது.
புரட்சியின் கண்களில் களகள வென கண்ணீர் வழிந்தது.

3 comments:

  1. வழிந்த கண்ணீரின் சுவடுகள் மீட்டிச்செல்கிற நினைவுகளாய் புரட்சியும் அது பற்றிய நினைவுகளுமாய் என ஆகிப்போன நாட்களை சுமந்து கொண்டு காலன் நடை போட்டுக்கொண்டு பெரு நகர வீதிகளிலும்,சிறுநகர வீதிகளிலும் காந்திமைதானங்களிலும்/

    ReplyDelete
  2. தோழா ! அப்ப புரட்சி வரவே வராதா? என்று நீ,நான், அதோ அவன், அவர்கள் என்று எல்லாரும் கேட்கும் காலம் வந்தே தீரும் என் தோழனே! அன்று நிச்சயமாய் வரும்!---காஸ்யபன்

    ReplyDelete
  3. ஒவ்வொருவரின் கேரக்டரும் வித்தியாசமானதாகவே... ஆனால் இறுதி கேள்வி நச்.. எவ்வளவு நம்பிக்கையுடன் இருந்திருக்கிறார்.

    ReplyDelete