Thursday 18 May 2017

ரகசியக்கோழி 001

ரகசியக்கோழி 001

உதயசங்கர்

கரும்பூரில் முத்தம்மா என்ற அம்மாள் தன்னுடைய இரண்டு குழந்தைகளுடன் வாழ்ந்து வந்தாள். பெரிய பெண்ணின் பெயர் பெரியமாரி. அடுத்த பையனின் பெயர் சின்னமாரி. இரண்டு குழந்தைகளும் பள்ளியில் நன்றாகப்படித்து வந்தார்கள். அவர்களுடைய அப்பா கட்டிட வேலை செய்து வந்தார். ஒரு நாள் சாரத்திலிருந்து தவறி விழுந்து இறந்து போனார். அதன்பிறகு முத்தம்மா வீட்டுவேலை, காட்டு வேலை என்று எல்லாவேலைகளையும் செய்து வந்தாள். எப்படியாவது பிள்ளைகளைப்படிக்க வைக்க வேண்டும் என்று ஆசைப்பட்டாள். அவர்கள் வீட்டில் ஒரு சேவலும் நான்கு கோழிகளும் இருந்தன. கோழிகள் இடும் முட்டைகளை அருகில் இருந்த பெட்டிக்கடையில் கொடுத்து சமையலுக்குத் தேவையான சாமான்களை வாங்கிக் கொள்வாள். சிலசமயம் அவளுடைய பையன் சின்னமாரிக்கும் அவித்தோ, பொரித்தோ கொடுப்பாள். சின்னமாரி என்ன சாப்பிட்டாலும் ஒல்லியாகவே இருந்தான். ஆனால் அறிவாளி. பள்ளிக்கூடத்தில் நன்றாகப்படிப்பான். கணக்குப்பாடம் என்றால் அவனுக்கு இனிக்கும். துப்பறியும் கதைகள், காமிக்ஸ் கதைகள், எல்லாவற்றையும் விழுந்து விழுந்து படிப்பான். அவனுக்கு துப்பறியும் நிபுணர் ஆக வேண்டும் என்பது தான் ஆசை.
அதனால் எப்போதும் எதையாவது தேடிக்கொண்டேயிருப்பான். ஒரு நாள் பள்ளிக்கூடம் விட்டு வந்த சின்னமாரி அம்மா கவலையோடு குடிசை வாசலில் உட்கார்ந்திருப்பதைப் பார்த்தான். அம்மா வளர்க்கும் செவலைக்கோழி மட்டும் தினசரி காலையில் திறந்து விட்டதும் காணாமல் போய் விடுகிறது. ஆனால் சாயங்காலம் அடைகிற நேரம் வந்து சேர்ந்து விடும். முத்தம்மாவுக்கு இது தான் கவலை. அது மட்டுமல்லாமல் முட்டை இடுவதுமில்லை. திறந்து விடும்போது முட்டை இருப்பதைப் பார்த்துத் தான் மேயவிடுவாள். மற்றகோழிகள் முட்டையிடும் நேரம் எங்கே மேய்ந்து கொண்டிருந்தாலும் நேரே வீட்டுக்கு வந்துவிடும். ஆனால் செவலைக்கோழி மட்டும் வரவில்லை.
 அன்று இரவு சின்னமாரியிடம் முத்தம்மா சொல்லிக் கொண்டிருந்தாள். சின்னமாரியின் துப்பறியும் மூளை வேலை செய்தது. நாளைக்குப் பள்ளிக்கூடம் கிடையாது. அந்தச் செவலைக்கோழி எப்படி காணாமல் போய் திரும்பி வருகிறது என்று துப்பறிந்து பார்க்கலாம். உடனே அம்மாவிடம் ரகசியமான குரலில் ( துப்பறியும் நிபுணர்கள் சத்தமாய் பேசக்கூடாதில்லையா! ) தன்னுடைய திட்டத்தைச் சொன்னான்.
அம்மா காலையில் கோழிகளை அடைத்து வைத்திருக்கும் பஞ்சாரத்தைத் தூக்கி கோழிகளைத் திறந்து விட்டாள். கோழிகள் கேக்க்க்கேக்க்கேக்க்க்க்கே என்று மாறி மாறிக் குரல் கொடுத்தன. உறக்கம் கலைந்து இறக்கைகளை விரித்து நீட்டி சோம்பல் முறித்தன. கருப்புவெள்ளைக் கோழி, வெள்ளைக்கருப்புக்கோழி, சாம்பல்கோழி, செவலைக்கோழி, எல்லாம் முற்றத்தில் அம்மா விசிறியிருந்த குருணை அரிசியை அவசர அவசரமாக கொத்தின. செவலைக்கோழி மட்டும் ரெண்டு வாய் சாப்பிட்டு விட்டு மெல்ல முற்றத்தை விட்டு இறங்கியது. அப்படியே தலையைத் திருப்பித் திருப்பிப் பார்த்தபடியே எதிரே இருந்த குப்பை மேட்டைப்பார்த்து போனது.
இப்போது சின்னமாரி குடிசை வாசலில் வந்து நின்று செவலைக்கோழி போவதையே பார்த்துக் கொண்டு நின்றான். குப்பை மேட்டின் உச்சியில் நின்று திரும்பிப்பார்த்தது செவலைக்கோழி. சின்னமாரியைப் பார்த்ததும் அப்படியே அப்பாவி மாதிரி கீழே குனிந்து இரையைக் கொத்துவது போல சும்மா கொத்திக் கொத்திப் போட்டது. அப்படியே கண்ணை உருட்டி உருட்டி சின்னமாரி நிற்கிறானா என்று பார்த்தது. சின்னமாரி செவலைக்கோழியைப் பார்க்காத மாதிரி நின்றான். அப்படியே பராக்கு பார்ப்பது மாதிரி குப்பை மேட்டை நோக்கி நடந்தான். செவலைக்கோழி அவன் வருவதைப் பார்த்ததும் சுதாரித்துக் கொண்டது. குப்பை மேட்டிலிருந்து இறங்கி குடிசை முற்றத்துக்கே வந்தது. இப்போது சின்னமாரி குப்பை மேட்டிலிருந்து வீட்டு முற்றத்தில் தனியே மேய்ந்து கொண்டிருக்கும் செவலைக்கோழியைக் கவனித்தான். செவலைக்கோழி ஒரு நொடிக்கொருமுறை தலையைக் குனிவதும் நிமிர்ந்து சின்னமாரியைப் பார்ப்பதுமாக இருந்தது. அப்போது சின்னமாரியின் பின்னாலிருந்து இரண்டு கைகள் அவனுடைய கண்களைப் பொத்தின.
“ யாருன்னு சொல்லு பாக்கலாம்..” என்று தகரக்குரலில் பரமசிவன் கத்தினான். மற்றநேரம் என்றால் சின்னமாரியும் தெரியாத மாதிரி  கணேசன் தானே… ரமேஷு… இல்லையில்லை.. குண்டு ரமணி… என்று விளையாட்டு காட்டுவான். ஆனால் இப்போது அவன் துப்பறிந்து கொண்டிருக்கும்போது அதை இடைஞ்சலாகவே நினைத்தான்.
“ சரி.. சரி.. விடுறா..பரமா..” என்று கத்தினான். அதைக்கேட்ட பரமசிவனுக்கு ஏமாற்றமாகி விட்டது. ஆனால் கைகளை எடுக்காமல்
“ இல்லை..பரமசிவன் இல்லை..” என்று அடம் பிடித்தான். சின்னமாரிக்குக் கோபம் வந்தது. உடனே அவனுடைய கைகளைத் தட்டி விட்டான். திரும்பிப்பார்த்தால் செவலைக்கோழியைக் காணவில்லை. வீட்டைச்சுற்றி ஓடிப் போய்ப் பார்த்தான். காணவில்லை. தெருவுக்கு ஓடிப் போய்ப் பார்த்தான். காணவில்லை. எப்படி மாயமாக மறைஞ்சது? என்று யோசித்தான்.
குப்பைமேட்டிலிருந்து பார்த்தால் தெருவில் நாலைந்து வீடுகள் தான். தெரியும். பரமசிவன் வீட்டில் மாடு வளர்க்கிறார்கள். அவனுடைய வீட்டில் வைக்கோல்படப்பு இருக்கும். வீட்டைச்சுற்றி கோட்டைச்சுவர் கட்டியிருப்பார்கள்.  அதைத் தவிர ஒளியவோ, மறையவோ இடம் கிடையாது. சின்னமாரி அப்படியே தெருவுக்குள் மேலும் கீழும் நடந்தான். மற்ற வீடுகளை நோட்டம் விட்டான். எங்கும் காணவில்லை.
பரமசிவன் வீட்டிற்குப் போனான். அவன் இல்லை. கடைக்குப் போயிருந்தான். அவன் வரட்டும் என்று வீட்டு வாசலில் காத்திருந்தான். கருப்புவெள்ளைக்கோழி, வெள்ளைக்கருப்புக்கோழி ,சாம்பல்கோழி, எல்லாம் தெருவில் உள்ள சாக்கடையில் கிண்டி மேய்ந்து கொண்டிருந்தன. செவலைக்கோழியை மட்டும் தான் காணவில்லை. இன்னிக்குக் கண்டுபிடிக்காமல் விடக்கூடாது என்று நாலாபக்கமும் பார்த்துக் கொண்டிருந்தான். பரமசிவன் வீட்டு வாசலில் ஒரு சின்ன இறகு கிடந்தது. அதைக் கையில் எடுத்தான். அது செவலைக்கோழி இறகுதான். இங்கேதான் பக்கத்தில் எங்கேயோ இருக்கிறது.
அப்போது பரமசிவன் வீட்டு வைக்கோல்படப்பிலிருந்து சிறகடிக்கும் சத்தம் மெல்லக் கேட்டது. சின்னதாக க்கெ என்ற கோழியின் சத்தமும் கேட்டது. சின்னமாரிக்குச் சந்தேகம். எல்லாக்கோழியும் மேய்ந்து கொண்டிருக்கும்போது இது மட்டும் ஏன் தனியாக அலைகிறது? ஆனால் கோழி இருக்கும்போது போய் கலவரப்படுத்தக்கூடாது என்று நினைத்தான். மாலை வரை காத்திருக்கலாம் என்று நினைத்தபடியே வீட்டுக்கு வந்து மறுநாள் படிக்க வேண்டிய பாடங்களைப் படித்தான். அம்மா கேட்டதுக்கு “ பொறு..பொறு.. சாயங்காலம் வரை பொறு..” என்று சொன்னான்.
மாலையில் சின்னமாரி, பரமசிவன் வீட்டுக்கு முன்னாடி எல்லோரையும் கூட்டி வைத்து விளையாடினான். வழக்கமாக கோழிகள் அடைகிற நேரம் வந்து விட்டது. அப்போதும் செவலைக்கோழி வரவில்லை. மற்ற கோழிகள் எல்லாம் வீட்டைப் பார்த்து போய்க் கொண்டிருந்தன. இனியும் தாமதித்தால் இருட்டி விடும். இது தான் சரியான சமயம் என்று சின்னமாரி நினைத்தான். பரமசிவனிடம் சொன்னான். இரண்டுபேரும் உள்ளே வைக்கோல்படப்பு இருந்த இடத்திற்குப் போனார்கள். ஒரு சத்தமும் இல்லை. அமைதியாக இருந்தது. வைக்கோல்படப்பின் தெற்குமூலையில் ஒரு சிறிய பொந்து மாதிரி இருந்தது. சின்னமாரி உற்றுப்பார்த்தான். ஒரு கோழியின் கால்தடம் தெரிந்தது. அந்த இடத்திற்கு அருகில் போய் நின்றான். பரமசிவன் வாயைத் திறந்தான். அப்படியே அவன் வாயில் கையை வைத்து பொத்தினான். இருவரும் அமைதியாக நின்றார்கள்.
என்ன ஆச்சரியம்?
அந்தப்பொந்திலிருந்து கிய்யா கிய்யா என்ற சத்தம் கேட்டது. சின்னமாரி உட்கார்ந்து குனிந்து பார்த்தான். அந்தப் பொந்தின் நுழைவாயில் தாண்டி செவலைக்கோழி உட்கார்ந்திருந்தது. அதைச் சுற்றி அன்று தான் பொரித்திருந்த ஏழு கோழிக்குஞ்சுகள் நின்று கொண்டிருந்தன. சின்னமாரிக்குச் சந்தோசமாக இருந்தது. ஓடிப்போய் அம்மாவைக்கூட்டிக் கொண்டு வந்தான். அம்மாவுக்கு ஏகத்துக்கு மகிழ்ச்சி.

“ அட திருட்டுக்கள்ளி குஞ்சு பொரிக்கதுக்குத்தான் இப்படி ஒளிஞ்சி ஒளிஞ்சி போனியாக்கும்.. “ என்று செவலைக்கோழி கழுத்தைத் தடவிக்கொண்டு கொஞ்சினாள். செவலைக்கோழி ‘ கெக்க்கேக்க்கேக்கே  “ என்று சொல்லி ஒத்துக்கொண்டது. அன்று செவலைக்கோழிக்கு ரகசியக்கோழி 001 என்று சின்னமாரி பெயர் சூட்டு விழா நடத்தினான். எல்லோருக்கும் குருணை அரிசியும், கூடவே தவிடும் கஞ்சித்தண்ணியும் விருந்தாக அளித்தான். எல்லாக்கோழிகளும் போட்டி போட்டுக்கொண்டு விருந்தைச் சாப்பிட்டன. மகிழ்ச்சியில் கெக்கெக்க்கேக்க்கே என்று மாறி மாறி செவலைக்கோழியை வாழ்த்தின.
நன்றி - தமிழ் இந்து மாயாபஜார்

No comments:

Post a Comment