Thursday 13 April 2017

மாயாஜாலம் செய்யும் தத்தாவின் தாடி

மாயாஜாலம் செய்யும் தத்தாவின் தாடி

ஆதி
வணக்கம் நேயா, பரீட்சையெல்லாம் முடிஞ்சிடுச்சா. பள்ளிக்கூடம் லீவு விட்டாச்சா?”
“ஓ புத்தகப் புழு! நீ திரும்ப வந்திட்டியா? இவ்வளவு நாள் காணாமப் போயிருந்தியே... ம்... ஆமா நீயும் உன்னோட பள்ளிக்கூடத்துல படிக்கப் போறதா சொல்லியிருந்தேயில்ல, மறந்தே போயிட்டேன்”
“ஆமா நேயா, நானும் படிக்கத்தான் போயிருந்தேன். எனக்கு ஏப்ரல் மாசம் முதல் வாரம் லீவு விட்டுட்டாங்க. அதன் புதுசா ஒரு புத்தகம் வாசிச்சிட்டு நேரா உன்னைப் பார்க்க வந்தி்ட்டேன்.”
“சரி, இந்த தடவ என்ன புத்தகம் வாசிச்ச?”
“அந்தப் புத்தகம் பேரு ‘பேசும் தாடி’, குழந்தைகளுக்கான எழுத்தாளர் உதயசங்கர் எழுதினது”
“பேசும் தாடியா? தாடி எப்படிப் பேசும்?”
“ஏன் பேசக் கூடாது? தாவரங்கள் தங்களோட மொழில பேசுது. உயிரினங்கள் தங்களோட மொழில குரல் கொடுக்குது. அதே வகையைச் சேர்ந்த உயிரினத்துக்கு அதெல்லாம் புரியுதே.”
“நீ சொல்றதெல்லாம் அறிவியல்.”
“ஆமா, அறிவியல்தான். ஆனா, இந்தக் கதை நிஜமும் மாயாஜாலமும் நிரம்பிய கதை.”
“ஆஹா! மாயாஜாலமா, எனக்கு ரொம்பப் பிடிக்குமே”
“அப்படீன்னா, இந்தக் கதையில வர்ற தாத்தாவ உனக்குப் பிடிக்கும். ஏன்னா அவருடைய தாடி பல மாயாஜாலங்களைச் செய்யுது.”
“ஓ! அதான் கதையோட பேரு ‘பேசும் தாடி’யா?”
“சரியா கண்டுபிடிச்சிட்டீயே. அந்தத் தாடி மட்டுமில்ல, இன்னும் நிறைய சுவாரசியங்கள், இந்தப் புத்தகத்துல நிரம்பியிருக்கு. எல்லாத்துக்கும் ஒரு ‘சொலவடை’ சொல்லுற பாட்டியும் இந்தக் கதையில வர்றாங்க”
“அது என்ன ‘வடை’?”
“படிப்பறிவு இல்லாதவங்கன்னு நம்பப்படுற கிராமத்து மக்கள் பழமொழிகளைப் போல நிறைய சொற்றொடர்களை உருவாக்கியிருக்காங்க. கிண்டலும் கேலியுமா அவங்க உருவாக்கின பல சொலவடைகள் இந்தக் கதையில வருது. நெஜமாவே கிராமத்து மக்கள் இப்படித்தான் பேசிக்குவாங்க.”
“ஓ, சொலவடைன்னா இதுதானா?”
“அப்புறம் நீ ரொம்பக் கவலைப்படாத, சாப்பாடு பத்தியும் நிறைய பேசிக்கிறாங்க. ஆரோக்கியமான சாப்பாடு பத்தியும் இந்தப் புத்தகம் சொல்லுது.”
“சாப்பாடு பத்தியும் இருக்கா, சூப்பர். அப்புறம் என்னவெல்லாம் அந்தக் கதையில இருக்கு?”
“நிறைய இருக்கு. அதுல ரொம்ப முக்கியமா வண்ணத்துப்பூச்சிகள், தேனீக்கள், எறும்புகள், பறவைகள்ளோட உலகத்துக்கே கூட்டிட்டுப் போயிடுறாங்க”
“அதெப்படி முடியும்?”
“முடியும். ‘அற்புத உலகில் ஆலிஸ்’ கதையில ஒரு திரவத்தைக் குடிச்சா ஆலிஸ் குட்டியாகிடுவா, அப்புறம் ஒரு கேக்கைச் சாப்பிட்டா மீண்டும் பெருசாகிடுவா இல்ல”
“ஆமா, அந்தக் கதைய நான் படிச்சிருக்கேனே.”
“அதேமாதிரிதான் அப்புறம் சொல்ல மறந்துட்டனே. பேசும் தாடி புத்தகத்துல கறுப்புவெள்ளை ஓவியங்கள் நிறைஞ்சிருக்கு. அழகா வரைஞ்சிருக்கிறாரு டி.என். ராஜன். வடிவமைப்பும் ரொம்ப நல்லாயிருக்கு. சின்னப் பசங்க கையில வைச்சு வாசிக்கிற மாதிரி புத்தகத்தோட அளவும் சின்னதா இருக்கு.”
“எழுத்தாளர் உதயசங்கரின் ஒரு சில கதைகளை ஏற்கெனவே வாசிச்சிருக்கேன். அந்தக் கதைகள் எனக்கு ரொம்பப் பிடிச்சிருந்தது.”
“அப்படீன்னா, இந்த மாயாஜாலக் கதையும் உனக்குப் பிடிக்கும்.”
“இவ்வளவு சொன்ன பிறகும் தாமதப்படுத்துவேனா, நாளைக்கே வாங்கிடுறேன்” என்று சொல்லி புத்தகப் புழுவிடம் இருந்து விடைபெற்றாள் நேயா.
நன்றி - மாயாபஜார்



No comments:

Post a Comment