Wednesday 3 September 2014

பதட்டநோயும் மானுட சமூகமும்

 

உதயசங்கர்

மனிதகுலம் தோன்றிய காலந்தொட்டு காலங்காலமாக நோய்களினாலும், இனக்குழுச் சண்டைகளினாலும், இயற்கைப்பேரிடர்களினாலும், இறந்தவர்களை விட கடந்த நூற்றாண்டில் இறந்தவர்கள் அதிகம். கடந்த நூற்றாண்டில் தொடங்கிய அந்தத் துயரம் இன்னும் தீர்ந்தபாடில்லை. கடந்த நூற்றாண்டில் வளர்ந்து வந்த முதலாளித்துவ நாடுகள் தங்களது வியாபாரச்சந்தையை விரிவுபடுத்துவதற்காக நாடுகளைப் பிடிக்க போர்களை நடத்தினர். முதலாம், இரண்டாம் உலக யுத்தங்களில் கோடிக்கணக்கான மக்களைக் கொன்றொழித்தனர். அப்போதிருந்து இப்போது வரை உலகமுழுவதும் மக்கள் நிரந்தரமான அச்சத்திலேயே வாழும்படி நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளனர். இனம், மொழி, மதம், சாதி, பிரதேசம், என என்னென்ன வழிகளில் எல்லாம் பிரிவினைகளை ஏற்படுத்த முடியுமோ அந்த வழிகளிலெல்லாம் பிரிவினைகளை ஏற்படுத்தி வாழ்வை நிச்சயமின்மையின் கொடுங்கரங்களில் கொடுத்து விட்டிருக்கின்றனர். ஒவ்வொரு பெருந்துயரிலிருந்தும் மீண்டு மறுபடியும் இன்னொரு பெருந்துயரில் தங்கள் இன்னுயிரை விடுகின்றனர் மக்கள். சுழன்றடிக்கும் சுனாமி அலைகள் போல தொடர்ந்து நிரந்தரமான பயத்திலும், துன்பத்திலும் தள்ளப்பட்டுள்ள மக்கள் எப்போதும் பதட்டத்திலேயே இருக்கும்படி வைக்கப்பட்டுள்ளார்கள்.

 

பதட்டநோயின் அறிகுறிகள்

பதட்டநோய் ஒரு வித மனதில் ஒருவித இறுக்கத்தை உருவாக்குகிறது. அதோடு ஒரு முட்டுச்சந்துக்குள் மாட்டிய உணர்வு, திசை தெரியாத வெளியில் தனியே இருப்பதான உணர்வு, உயிர்பயம், அடிவயிற்றில் வலி, மூச்சுத்திணறல், படபடப்பு, நெஞ்சிலோ அடிவயிற்றிலோ பாரம், எப்போதும் பய உணர்வு, அழுத்தும் கவலைகள், எல்லாவிதமான பயங்கள் ( phobias ) அசுத்தத்தின் மீதான ஒவ்வாமையுணர்வு, என்று பலவிதமான அறிகுறிகள் இருக்கலாம். ஒன்றோ அல்லது ஒன்றுக்கும் மேற்பட்ட காரணிகள் இருக்கும் வாய்ப்புகள் உண்டு.

சிக்மண்ட் ஃபிராய்ட் எல்லாவிதமான உளவியல் நோய்களுக்கும் பதட்டநோயே காரணம் என்று சொல்கிறார். பதட்டநோய் நாம் நினைப்பதை விட மிக நுட்பமாக, மிக வலிமையாக நமது ஆழ்மனதில் நுழைந்து நம்முடைய உடல் நிலைகளிலும், உளவியலிலும் பெரும் மாற்றங்களை உருவாக்க வல்லது. பதட்டநோயின் அறிகுறிகளென சொல்லப்பட்டிருப்பதை விட எண்ணிலடங்கா அவதாரங்களை எடுக்கக்கூடியது.

 

பதட்டநோயின் பரிணாமம்

வரக்கூடிய ஆபத்தை முன்னுணரும் மூளையின் எதிர்வினையே பதட்டநோய்வேராக இருந்திருக்க முடியும்.. பாலூட்டிகளின் மாறிக் கொண்டேயிருக்கும் மூளை வளர்ச்சியின் விளைவாகவும், அச்சுறுத்தல் அகற்றப்பட்ட பின்பும் ஞாபகச்சில்லுகளில் பதிந்து விட்ட அநுபவச்சிற்பங்களாகவும் பதட்டநோய் இருக்கிறது. பதட்டநோய் உயர்பாலூட்டி இனங்களில் பரிணாமவளர்ச்சி அடைவதற்கு முன்பே புதிய ( நியோ ) - பாலூட்டிகளின் மூளையிலே பதிந்திருக்கிறது. புதிய ( நியோ ) பாலூட்டிகளே பகுத்தறிவையும், முடிவெடுக்கும் குணாதிசயத்தையும் கொண்டிருந்தவை. அதனாலேயே மனிதமூளை தொழில்நுட்பம், சட்டதிட்டம், போன்ற நவீனப்பிரச்னைகளைத் தாங்குகிற சக்தியைப் பெற்றிருக்கின்றன. அதேவேளையில் ஊர்வனவும் தொல்பாலூட்டிகள் சந்தித்த பிரச்னைகளான ஆபத்தைத் தவிர்த்தல், போட்டி, இணைவிழைச்சு, போன்றவற்றை எதிர்கொள்ளும் சக்தியையும் பெற்றிருக்கின்றன. இந்த மூன்று மூளைகளின் பரிணாமவளர்ச்சியும் ஒருங்கிணைந்தும் சுதந்திரமாகவும் இன்றைய உயர்நிலை பாலூட்டிகளான மனிதனிடம் செயல்படுகின்றன.

 

எது பதட்டநோய்?

பதட்டநோயை வரையறுப்பது கொஞ்சம் கஷ்டமான விஷயம் தான். ஒரு வகையில் சாதாரண தற்காலிக உணர்ச்சிநிலை தான் பதட்டநோயாக மாறுகிறது என்று சொல்லலாம். உணர்ச்சிகளின்அழுத்தத்தைத் தாங்கிக் கொள்ள உயிரியக்கம் மேற்கொள்ளும் ஒரு தற்காப்பு நடவடிக்கையே பதட்டம் என்று சொல்லலாம். அது ஒவ்வாத உணர்ச்சிநிலையாக இருக்கலாம். மிகச்சிறந்த சாதனைகளைத் தருவதற்கான நேர்மறையான ஊக்கசக்தியாகவும் பதட்டநோய் இருக்கக்கூடும். எந்தக் கட்டத்தில் ஒரு உணர்ச்சி நேர்மறையான பதட்டநோயாகவும், எதிர்மறையான பதட்டநோயாகவும் மாறுகிறது என்பது ஆராய்ச்சிக்குரிய விஷயம். வாழ்க்கை சூழ்நிலைக்கு அல்லது நெருக்கடிக்கு பொருத்தமற்ற எதிர்வினையை உயிரியக்கம் எடுப்பதே இத்தகைய பதட்டநோய்க்குக் காரணம். இளமைக்காலத்தில் மீண்டும் மீண்டும் ஏற்படும் வாழ்க்கை அழுத்தங்கள் பதட்டநோயைக் கட்டமைக்கின்றன.

 

பதட்டநோயின் வகைகள்

PicsArt_22-03-2014 09_06_07 PM

புறவயமாகவோ அகவயமாகவோ ஏற்படும் அழுத்தத்தினால் உணர்ச்சிநிலையில் உருவாகும் தற்காப்புநிலை உடல் செயல்பாடுகளிலும் மாற்றங்களை உண்டாக்கும். இது நீண்டநாள் நோயாகவும் மாறும். பதட்டநோயைப் பொறுத்தவரை பொதுவாக மூன்று விதமாக பிரிக்கலாம். பரம்பரையாக உயிரியல் ரீதியாக சுலபத்தில் இலக்காகும் தன்மை. வாழ்வில் ஏற்பட்ட அநுபங்களினால் உளவியல் ரீதியாக சுலபத்தில் இலக்காகும் தன்மை, சில குறிப்பிட்ட வாழ்வநுபவங்கள் அல்லது சம்பவங்களினால் ஏற்படும் குறிப்பிட்ட உளவியல் பாதிப்புக்கு இலக்காகும் தன்மை, இவற்றுள் கடைசியாக வகைப்படுத்தப்பட்ட பதட்டநோய் சமூகபயம், ஆட்கொள்ளப்படும் உளவெறி, குறிப்பிட்ட பயங்கள், பீதி, இவற்றின் காரணமாக உருவாகிறது.

மேலும் பல காரணங்களாக, சுயபாதுகாப்புக்கு ஆபத்து, மனசாட்சியின் நெருக்கடியின் விளைவாக தோன்றும் முரண்பாடு, கொள்கையில் தோல்வி, சுயமரியாதை இழப்பு, அன்றாடம் ஏற்படும் சிறிய அல்லது பெரிய அழுத்தங்கள், தவறான நம்பிக்கைகள், தவறான சிந்தனைகள், உடல் நோய்கள், சமூகமுரண்பாடுகள், பாலுறவு பிரச்னைகள், பேராசை, உளவியல் விபத்து, போன்றவையினால் பதட்டநோய் தோன்றும்.

 

பதட்டநோய் மருத்துவ வரலாறு

முதன்முதலாக வரலாற்றில் உளவியல்-உடற்கூறியல் நோய் மத்திய கால இஸ்லாமிய வரலாற்றில் பெர்சிய உளவியல் மருத்துவர்களான அகமது இபின் சாகுல் அல்-பல்கியும், காலி அப்பாஸும் இந்த நோயைப் பற்றிக் குறிப்பிட்டிருக்கின்றனர். அவர்களே முதன்முதலாக ஒரு மனிதனது மனமும் உடலும் ஒன்றையொன்று பாதிக்கின்றது என்று கண்டுணர்ந்தார்கள். இருபதாம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் ஃபிரான்ஸ் அலெக்சாண்டர் உடலுக்கும் மனதுக்கும் இடையே உள்ள தொடர்புகளைப் பற்றிய ஆய்வுகளை முன்னெடுத்தார். ஜார்ஜ் குரோட்டெக்குடன் ஏற்பட்ட தொடர்பினால் சிக்மண்ட் ஃபிராய்ட் உளவியல்-உடலியல் நோய்களைப் பற்றி ஆழ்ந்த ஈடுபாடு காட்டத்தொடங்கினார். அந்தக் காலத்தில் ஜார்ஜ் குரோட்டெக் உடல்நோய்களை உளவியல் சிகிச்சையின் மூலம் குணமாக்கும் சாத்தியங்களைப் பற்றி ஆய்வு செய்து கொண்டிருந்தார்.ஹோமியோபதியின் பிதாமகரான ஹானிமன் தன்னுடைய ஆர்கனான் நூலில் மனதுக்கும் உடலுக்கும் உள்ள தொடர்புகளைப் பற்றி நோயில் காணப்படும் எல்லாக்குறிகளையும் ( symptoms ) அதாவது உடற்குறிகளுடன் முக்கியமான மனக்குறிகளையும் ஒரு மருத்துவர் தெரிந்து கொள்ளவேண்டும். அப்போது தான் அந்நோயை அழிக்கச் சரியான ஒத்த மருந்தை தேர்ந்தெடுக்க முடியும். அதாவது எந்த மருந்து இயற்கை நோய் தோற்றுவித்த உடற்குறிகளையும், மனக்குறிகளையும் நோயற்ற ஒருவரின் உடலில் தோற்றுவிக்கிறது என்று கண்டுபிடிக்க வேண்டும், என்று அழகாக விவரித்துள்ளார். ஆக மனம் உடலையும், உடல் மனதையும் பாதிக்கவே செய்கிறது. பதட்டநோய் மனதில் ஏற்படும் நெருக்கடியினால் மட்டுமல்ல, உடலில் ஏற்படும் மாறுபாடுகளினாலும் வரும்..

கற்காலத்துக்கு முன்பிருந்தே உயிர்பயத்தினால் ஏற்பட்ட பதட்டநோய் மனித நாகரிகம் வளர்ச்சியடைய வளர்ச்சியடைய விசுவரூபம் எடுத்திருக்கிறது. நவீன சமூகத்தின் சிக்கல்கள், இன்னும் மனிதனை பதட்டமுள்ளவனாக்கியிருக்கிறது. வேற்றுமையின்மை, ஏற்றதாழ்வின்மை, சமத்துவம், நிச்சயத்தன்மை, பாதுகாப்புணர்வு, வாழ்வுக்கான உத்திரவாதம், எல்லோருக்கும் சமவாய்ப்பு, என்று மானுட சமூகம் முன்னேறிச் செல்லும் போது தான் பதட்டநோய் மனிதர்களிடமிருந்து முற்றிலும் ஒழிந்து போகும்.

No comments:

Post a Comment