Wednesday, 30 July 2025

இந்திய நாடோடிக்கதை 3

 

இந்திய நாடோடிக்கதை 3

பூனையைக் கொல்ல முடியாது.

ஆங்கிலம் வழி தமிழில்உதயசங்கர்




முன்பு ஒரு காலத்தில் ஒரு நாயும் பூனையும் எப்போதும் சண்டை போட்டுக் கொண்டேயிருந்தன. பூனையை நாய் அடிக்கும். ஆனால் பூனைக்குக் காயம் ஏற்படாது. அதுமட்டுமல்ல, பூனை துள்ளிக்குதித்து,

எனக்குத் தான் வலிக்கலையே.. எனக்குத்தான் வலிக்கலையே.. தோள்பட்டை வலி போயே போச்சே..இப்ப எனக்கு வலிக்கலையே

என்று நடனம் ஆடும். நாய்க்குப் புரியவில்லை. மைனாவிடம் சென்ற நாய்,

இந்தப் பூனையை என்ன செய்வது? அடிச்சுட்டேன்.. கடிச்சுட்டேன்.. ஆனாலும் அதுக்கு வலிக்கலை.. நானும் பெரிய நாய் தான் அதுவும் பெரிய பூனை தான்..ஆனாலும் அதுக்கு வலிக்கலை.. ஆனால் அது என்னை அடிச்சா எனக்குப் பயங்கரமா வலிக்குது..”

என்று சொல்லி வருந்தியது. மைனா,

பூனையின் வாயை பயங்கரமாக் கடிச்சு வைச்சிரு.. நிச்சயம் அதுக்கு வலிக்கும்..”

என்று சொன்னது. மைனா சொன்ன மாதிரியே நாயும் பூனையின் வாயைப் பயங்கரமாகக் கடித்தது..ஆனால் பூனையோ,

எனக்கு வலிக்கலையே.. “ என்று துள்ளிக்குதித்து நடனம் ஆடியது. மறுபடியும் நாய் மைனாவிடம் சென்று,

என்ன செய்வது? “ என்று கேட்டது.

பூனையின் காதுகளைக் கடி..” என்றது மைனா. நாய் பூனையின் காதுகளைக் கடித்தது. அப்போதும் பூனை,

இப்பவும் வலிக்கலையே.. காதுல நான் கம்மல் போட்டுக்குவேனே..” என்று சொல்லி ஆட்டம் போட்ட்து.

நாய் யானையிடம் சென்றது.

உன்னால் இந்தப் பூனையைக் கொல்ல முடியுமா? எனக்குப் பெரிய தொந்திரவா இருக்குஎன்று கேட்டது.

இது என்ன பெரிய விஷயம்.. நான் கொன்னுருவேன்..நான் ரொம்ப்ப்பெரியவன் அது ரொம்பச்சின்னதுஎன்றது யானை.

யானை பூனையைத் தும்பிக்கையால் தூக்கி தூரமாய் வீசியது. தூரத்தில் விழுந்த பூனை மறுபடியும் துள்ளிக்குதித்து ஆடியது.

எனக்குக் கொஞ்சம் கூட வலிக்கலையே..” என்றது பூனை. யானைக்குக் கோபம் வந்து விட்டது.

உனக்கு நல்ல பாடம் கத்துக் கொடுக்கிறேன்..” என்று சொல்லிய படியே, பூனையைக் கீழே போட்டு தன்னுடைய பெரிய காலினால் ஓங்கி மிதித்தது. பூனை தரையிலிருந்து துள்ளி,

எனக்கு வலிக்கலையே..” என்று சொல்லிக்கொண்டே தன்னுடைய கூர்மையான நகங்களால் யானையின் தும்பிக்கையைக் கீறிவிட்டது. யானை வலியினால் கத்திக் கொண்டே ஓடியே போய் விட்டது.

நாய்க்கு மிகுந்த கோபம்.

பூனையைக் கொல்வதற்கு என்ன செய்வது ? “ என்று யோசித்தது. பூனையின் மூக்கைப் பலமாகக் கடித்தது. மூக்கிலிருந்து ரத்தம் வழிந்தது. ஆனால் பூனை இப்போதும் ஆடிக் கொண்டே,

எனக்கு வலிக்கலையே.. இப்போ நான் மூக்குத்தி மாட்டிக்குவேன்..” என்றது. நாய் பூனையின் வாலைக் கடித்து இரண்டு துண்டாக்கியது. அப்போதும் பூனை ஆடிக் கொண்டிருந்தது.

பிறகு நாய் ஒரு சிறுத்தையிடம் சென்றது.

நீ இந்தப் பூனையைக் கொன்று விட்டால் நீ என்ன கேட்டாலும் தருவேன்..” என்றது. உடனே சிறுத்தையும், “ நான் கொல்றேன்..” என்று கத்தியது. இரண்டும் பூனையைத் தேடிப் போயின.

பூனை சிறுத்தையைப் பார்த்ததும்,

நில்லு..உங்கிட்டே கொஞ்சம் பேசணும்.. முதல்ல உனக்குச் சாப்பிட ஏதாச்சும் கொடுக்கிறேன்.. பிறகு என்ன சொல்லணுமோ சொல்றேன்..” என்று சொல்லிவிட்டு வெகுதூரம் ஓடிச் சென்றது. தூரத்தில் நின்று கொண்டு ,

நான் உனக்கு எதுவும் கொடுக்க மாட்டேன்.. இப்ப நீ என்னைக் கொல்லமுடியாதே..” என்று சொல்லியபடியே ஆடியது.

சிறுத்தைக்குக் கோபமான கோபம். “ எவ்வளவு புத்திசாலியாக இருக்கிறது இந்தப் பூனைஎன்று நினைத்தபடியே காட்டுக்குள் ஓடி விட்டது.

நாய் ஒரு மனிதனிடம் சென்று கேட்டது. மனிதனும்,

நான் கத்தியால பூனையின் வயிற்றைக் கிழிச்சிருவேன்..” என்று சொன்னான். சொன்னமாதிரியே பூனையின் வயிற்றில் குத்தினான். ஆனால் குத்திய இடம் மூடிக் கொண்ட்து. பூனையும் குதித்து எழுந்து ஆடியது. மனிதன் அப்படியே பயந்து போய் ஓடி விட்டான்.

நாய் ஒரு கரடியிடம் சென்றது.

உன்னால் கொல்லமுடியுமா? “ என்று கேட்டது.

நான் நிச்சயம் கொல்வேன்..” என்று சொன்ன கரடி தன்னுடைய நகங்களால் பூனையின் உடலைக் கிழித்தது. ஆனால் பூனையை எதுவும் செய்ய முடியவில்லை. பூனை தன்னுடைய நகங்களால் கரடியின் மூக்கைப் பலமாக்க் கிழித்து விட்டது. கரடி அங்கேயே செத்து விட்டது.

இதைப் பார்த்த நாய் விரக்தியுடன் ஓடிச் சென்று மலையிலிருந்து விழுந்து இறந்து போனது.

பூனை தன்னுடைய நண்பர்களுடன் மகிழ்ச்சியாக வாழ்ந்தது.

 

சிம்லாவில் கேட்ட கதைகி.பி. 1876

 

 

Tuesday, 29 July 2025

இந்திய நாடோடிக்கதை - 2

 இந்திய நாடோடிக்கதை - 2

பூனை ஏன் புலியைப் பார்த்துப் பயப்படுகிறது?

ஆங்கிலம் வழி தமிழில் - உதயசங்கர்



 

முன்னொரு காலத்தில் புலியும் பூனையும் அக்கா தங்கையாக இருந்தன. புலி அக்காவின் குட்டிக்கு சித்தியாக பூனை இருந்தது. புலிக்குட்டிக்கு பூனைச்சித்தியை மிகவும் பிடிக்கும். உருவத்தில் சிறியதாக இருந்த பூனைச்சித்தியுடன் புலிக்குட்டி கட்டிப்புரண்டு விளையாடும். துரத்தும். பொய்க்கடி கடிக்கும். வாயில் கவ்விக் கொண்டு அங்குமிங்கும் ஓடும். பூனைச்சித்தி தூங்கிக் கொண்டிருக்கும் போது காதுக்கருகில் போய் உறுமும்.

சில சமயம் பூனைச்சித்திக்கு வலிக்கும். அது,

மியாவ் மியாவ்.. என்னை விடறா..குண்டுப்பையா..மியாவ்என்று கத்தினாலும் அந்தச் சத்தம் புலிக்குட்டிக்கோ புலி அக்காவுக்கோ கேட்காது. ஆனாலும் பூனைச்சித்திக்கு புலிக்குட்டியை அவ்வளவு பிடிக்கும்.

ஒருநாள் புலி அக்கா இரை தேடப் போகும்போது காலில் மிகப்பெரிய முள் குத்திவிட்டது. நொண்டிக்கொண்டே வந்த்து. மறுநாள் நடக்கமுடியவில்லை. இரண்டாவது நாள் காய்ச்சல் வந்தது. மூன்றாவது நாள் புலி அக்கா இறந்து விட்டது. இறப்பதற்கு முன்னால் பூனைத்தங்கையை அழைத்து அதனுடைய முன்னங்காலைத் தூக்கித் தன் கையில் வைத்துக் கொண்டு,

தங்கச்சி.. என் பையனை நீ தான் பத்திரமாகப் பார்த்துக் கொள்ள வேண்டும்..” என்று கேட்டது. அதைக் கேட்ட பூனைத்தங்கை உருகிவிட்ட்து.

நிச்சயமாக அக்கா.. நான் அவனைப் பத்திரமாகப் பார்த்துக் கொள்கிறேன்..” என்று உறுதிமொழி கொடுத்தது. புலி அக்கா இறந்து விட்டது.

இப்போது புலிக்குட்டிக்கு வயிறு பசித்தது.

பூனைச்சித்தி.. பூனைச்சித்தி.. வயிறு பசிக்குது..கர்ர்ர்என்று உறுமியது.

இதோ உனக்கு உணவு கொண்டு வர்ரேன் செல்லம்..” என்று சொல்லிவிட்டு பூனைச்சித்தி புறப்பட்டது. இரை தேடி இரை தேடி காட்டின் எல்லைக்கே வந்து விட்டது. அப்போது இரவாகி விட்டது.

 அங்கே ஒரு வீடு இருந்தது. அந்த வீட்டிலிருந்த மனிதர்கள் இரவு சாப்பாடு சாப்பிட்டுக் கொண்டிருந்தார்கள். சாப்பிட்டு முடித்து மீதியிருந்த உணவையும் எலும்புகளையும் வெளியே கொட்டினார்கள்.

அந்த உணவைப் பார்த்ததும் பூனைச்சித்திக்கு எல்லாம் மறந்து விட்டது. புலி அக்காவுக்குக் கொடுத்த உறுதிமொழியை மறந்து விட்டது. புலிக்குட்டியை மறந்து விட்டது. ஆசை ஆசையாக எலும்பைக் கடித்துச் சாப்பிடத் தொடங்கியது.

பூனைச்சித்தியைக் காணவில்லையே என்று புலிக்குட்டி வழிமேல் விழி வைத்து பார்த்துக் கொண்டிருந்தது. பசி தாங்க முடியவில்லை. புலிக்குட்டி அப்படியே பூனைச்சித்தியைத் தேடி நடந்தது. புலிக்குட்டியும் காட்டின் விளிம்பில் இருந்த வீட்டையும் பார்த்தது.

அங்கே பூனைச்சித்தி நிதானமாக எலும்புகளைக் கடித்துக் கொண்டிருப்பதையும் பார்த்தது. புலிக்குட்டி வந்ததைப் பூனைச்சித்தி பார்க்கவில்லை. அது கண்களை மூடி ருசித்துச் சாப்பிட்டுக் கொண்டிருந்தது. அவ்வளவு தான்!

புலிக்குட்டிக்கு வந்ததே கோபம்!

கர்ர்ர் உன்னை என்ன செய்கிறேன்.. பார்..” என்று ஒரு பெரிய உறுமலுடன் பூனைச்சித்தியின் மீது பாய்ந்தது.

நல்லவேளை! புலிக்குட்டியின் உறுமலைக் கேட்டதும், பூனைச்சித்தி பாய்ந்து இருட்டுக்குள் ஓடி விட்டது.

பாருங்கள்! அன்றிலிருந்து புலிக்குப் பூனையைக் கண்டாலே ஆகாது. பூனைக்கும் புலியைப் பார்த்தால் பிடிக்காது. 

இப்போது கூடப் பாருங்கள்! இந்தக் கதையைக் கேட்ட பூனை ஓடியே போய்விட்டது.

ஹ்ஹ்ஹ்ஹா ஹாஹா

1876 ஆம் ஆண்டு சிம்லாவில் கேட்ட கதை

Monday, 28 July 2025

இந்திய நாடோடிக்கதை 1

 

இந்திய நாடோடிக்கதை 1

நியாயமான தீர்ப்பு..

ஆங்கிலம் வழி தமிழில்- உதயசங்கர்



ஒரு ஊரில் ஒரு நாயும் பூனையும் இருந்தன. அது ஒரு மழைநாள் வீட்டுக்குள் மனிதர்கள் சாப்பிட்டுக் கொண்டிருந்தனர். வீட்டுக்குள் உட்கார்ந்து பூனை சாப்பிட்டுக் கொண்டிருந்தது. நாய் வாசலில் உட்கார்ந்திருந்தது. பூனை நாயிடம்,

நான் உயர்ந்தவன்.. அதனால் எனக்கு வீட்டுக்குள் உணவு வைக்கிறார்கள்.. நீ சாதாரணமானவன் அதனால் தான் உன்னை வெளியே நிற்க வைத்திருக்கிறார்கள்..”

என்றது. உடனே நாய்,

இல்லவே இல்லை.. நான் தான் உயர்ந்தவன்.. நீ தான் மோசமானவன்.. மனிதர்களின் கையிலிருப்பதைப் பிடுங்கித் தின்கிறாய்.. பிறகு அவர்களிடம் அடி வாங்குகிறாய்.. நான் பாரு அவர்களிடம் இருந்து தூரமாய் இருக்கிறேன்.. அதனால் அவர்கள் என்னை அடிக்க முடியாது.. அவர்கள் உணவு கொடுத்தால் சாப்பிடுவேன்.. இல்லை என்றாலும் கவலைப்பட மாட்டேன்..”

என்று சொன்னது. உடனே பூனை,

இல்லை.. நான் சுத்தமான உணவைச் சாப்பிடுகிறேன்.. நீ சுத்தமில்லாத உணவைச் சாப்பிடுகிறாய்.. நான் தான் உயர்ந்தவன்..”

என்று கத்தியது. இரண்டுக்கும் வாக்குவாதம் முற்றியது. கடைசியில், இரண்டுபேரும் புத்திசாலி குள்ளநரியிடம் போய் கேட்போம் என்று முடிவு செய்தன. நாயும் பூனையும் புத்திசாலி குள்ளநரியைத் தேடிப்போயின.

குள்ள நரியைப் பார்த்ததும் தங்களுடைய வழக்கைச் சொல்லி தீர்ப்பைக் கேட்டன.  நாய்க்குத் தூரத்துச் சொந்தம் குள்ளநரி. அதனால் குள்ளநரி,

இதில் என்ன சந்தேகம்? நாய் தான் உயர்ந்ததுஅதனுடைய ஓட்டம், உயரம், குரல், கம்பீரம், காவல் என்று எப்படிப் பார்த்தாலும் நாய் தான் உயர்ந்தது

என்றது. பூனையால் அதை ஏற்றுக் கொள்ள முடியவில்லை. உடனே அது,

சரி.. வாங்க.. பெரிய புத்திசாலிகிட்டே போய்க் கேட்போம்.. “

என்றது. அதற்கு குள்ளநரி,

என்னை விட பெரிய புத்திசாலி யார் இந்தக் காட்டில் இருக்கா? “

என்று கேட்டது.

வாங்க காட்டறேன்..” என்று சொல்லிக் கொண்டே காட்டுக்குள் கூட்டிக் கொண்டு போனது பூனை.

ஒரு பெரிய குகைக்கு முன்னால் போய் நின்றது.

மியாவ்.. மியாவ்.. அத்தை வெளியில் வா.. வந்து நான் உயர்ந்தவனா? இல்லை.. நாய் உயர்ந்ததா ன்னு சொல்லிட்டுப் போ..”

என்று கத்தியது. எந்தச் சத்தமுமில்லை. நாயும் பூனையும் குள்ளநரியும் காத்திருந்தன. சில நிமிடம் கழித்து இருட்டுக்குள்ளிருந்து இரண்டு கண்கள் மட்டும் தெரிந்தன. நெருப்புக் கோளங்களைப் போல் இருந்தன. நாயும் குள்ளநரியும் ஆவலுடன் பார்த்துக் கொண்டிருந்தன.

க்ஹ்ர்ர்ர்ர்

என்று உறுமலுடன் புலி குகை வாசலுக்கு வந்தது. அவ்வளவு தான்.

நாயும் குள்ளநரியும் தலைகால் தெரியாமல் பாய்ந்தோடின. பின்னாலேயே ஓடிச் சென்ற பூனை கேட்ட்து,

இப்பச் சொல்லுங்க.. யார் உயர்ந்தவன்? “

நீ தான் நீ தான்..” என்று சொல்லிக் கொண்டே இரண்டும் பின்னங்கால் பிடதியில் பட ஓடின. 

எப்போதும் தீர்ப்பு நியாயமா இருக்கணும்.. தெரிஞ்சிதா..”

என்று சொல்லியபடி பூனை திரும்பி வீட்டுக்குப் போனது. நாயும் குள்ளநரியும் ஓடியே போய் விட்டன.

( 1876 – ஆம் ஆண்டு சிம்லாவில் கேட்ட கதை )