Wednesday 17 May 2023

நிர்வாணக் குரல்கள் - சதத் ஹசன் மண்டோ







நிர்வாணக் குரல்கள்

சதத் ஹசன் மண்டோ

தமிழில் : உதயசங்கர்

பதிப்பகம் : நூல்வனம்
விலை : 220
பக்கங்கள் : 144
வகைமை :மொழிபெயர்ப்பு (சிறுகதை தொகுப்பு)
நூலுக்குள்..
எழுதுங்கள் என் கல்லறையில்
இங்கே கிடக்கிறான் சதத் ஹாசன் மண்டோ அவனுடன் சேர்ந்து சிறுகதைக் கலையின் அத்தனை மர்மங்களும் கலைத்திறன்களும் புதைக்கப்பட்டு விட்டன டன் கணக்கிலான மண்ணுக்கடியில் கிடக்கும் அவன் கடவுளை விட மிகச்சிறந்த சிறுகதை எழுத்தாளர் அவன் தானோ என்று வியந்து கொண்டிருக்கிறான்...
இந்த வாசகத்தை இறப்பதற்கு ஒரு வருடத்திற்கு முன் கூறிவிட்டு இன்று அந்த மாபெரும் உன்னத எழுத்தாளன் உறங்கிக் கொண்டிருக்கிறான்.
ஆனால் அவன் எழுத்துக்கள் இன்றும் பாதிக்கப்பட்ட சமூகத்தால் வெறுக்கப்பட்டு ஒடுக்கப்பட்ட சாமானிய மனிதர்களுக்கு நியாயம் கேட்டுக் கொண்டிருக்கின்றன.
இடதுசாரி ஆகவும் சோஸலிஸ்ட்டாகவும் முற்போக்கு வாதியாகவும் இருந்த மண்டோ எழுதிய முதல் கதை தமாஷா என்ற ஜாலியன் வாலாபாக் பற்றிய கதை.
சினிமாவிற்கு எழுதிய முதல் கதை தோல்வி. ஆனாலும் தொடர்ந்து சினிமாவிற்கு கதை எழுதினார். பத்திரிகைகளில் எழுதினார். 1940ல் முதல் தொகுப்பும் 1942ல் இரண்டாம் தொகுப்பு 1943 மூன்றாம் தொகுப்பு பிறகு வாழ்நாளில் இரு பெரும் இழப்புகள்.
அம்மாவையும் மூத்த மகனையும் இழந்தபின் அந்த இழப்பின் வலியை வாழ்நாள் முழுவதும் தூக்கி சுமந்தபடியே வாழ்ந்தார்.
நாடு கொந்தளித்துக் கொண்டிருந்த காலம் மண்டோ மனைவி குழந்தைகளுடன் பாகிஸ்தானுக்குப் போய்விட்டார்.
1948 ஆம் ஆண்டிலிருந்து 1955 ஆம் ஆண்டு வரை மிகத் தீவிரமான எழுத்தாளராக இயங்கினார். கிட்டத்தட்ட ஒரு நாளைக்கு ஒரு கதை என்ற வீதத்தில் எழுதி இருக்கிறார்.
ஒரே கதையை வேறு வேறு மாதிரி எழுதியிருக்கிறார். ஒரே கதையின் முடிவுகளை மாற்றி மாற்றி எழுதியிருக்கிறார். இப்படி புது புது யுக்திகளை தன்னுடைய கதைகளில் நுழைத்திருக்கிறார்.
இந்தியா பாகிஸ்தான் இடையே இருந்த பகைமை தீவிரமாக இருந்த காலத்தில் மிகுந்த மன உளைச்சலுடன் மனதின் உணர்ச்சிகளை தாங்க முடியாமல் அதீத குடியுடன் அலைக்கழிந்திருக்கிறார் மண்டோ.
குடி வெற்றி கொள்ள முடியாத சந்தர்ப்பங்களில் மனநல மருத்துவமனையில் உள்நோயாளியாக சிகிச்சை எடுத்திருக்கிறார். உணர்ச்சியின் உக்கிரத்தை அவர் எழுதுவதின் மூலமே சமாதானப்படுத்தி இருக்கிறார். அதற்கு குடி தேவைப்பட்டிருக்கிறது.
அவரை சதாகாலமும் போலியான மனித சமூக மனிதர் இருந்த நாகரிகமான ஆடைகளுக்கு பின்னால் இருக்கும் அழுகிய புண்களின் வடிந்து கொண்டிருக்கும் சீல் தொந்தரவு செய்து கொண்டே இருந்தது.
அவருடைய கதைகளுக்கு நீதிமன்றத்தில் ஏறி இருக்கிறார்.
ஒருமுறை தண்டிக்கவும் பட்டிருக்கிறார். ஆனால் இந்தியா பாகிஸ்தான் பிரிவினையில் நடந்த இருண்ட காலத்தின் கதைகளை மட்டுமே மண்டோ பதிவு செய்திருக்கிறார்.
மண்டோவின் கதைகள் நுட்பங்கள் நிறைந்தது. இருளை வெளிச்சம் போட்டுக் காட்டக் கூடியது.
ஆனால் அந்த வெளிச்சத்தில் இந்த உலகம் பைத்தியக்காரத்தனமாக தெரிந்தது.
எல்லா கதைகளும் துல்லியமான விவரங்களை நேர்த்தியான கதை சொலலுடன் அழுத்தமான கதாபாத்திரங்களுடன் எழுதப்பட்டிருப்பது மண்டோவின் மேதமைக்குச் சான்று.
மீண்டும் மீண்டும் வாசிப்பதன் மூலமே புது சமூகம் தன்னுடைய மனப்பிறழ்வுகளை கண்டு உணர்ந்து சரி செய்து கொள்ள முடியும். முன்போதிலும் காட்டிலும் இப்பொழுது மண்டோ அதிகம் தேவைப்படுகிறார்.
எழுத்தாளர் உதயசங்கர் அவர்கள் நிர்வாணக் குரலுக்கு எழுதிய இந்த முன்னுரை மண்டோவின் வாழ்க்கையை நமக்கு படம் பிடித்து காட்டுகிறது.
கதைகளுக்குள்..
பிஸ்மில்லாவைப் பற்றி கூறியாக வேண்டும். திரைப்படத் தயாரிப்புக்காக ஜாகீரைச் சந்திக்கச் செல்கிறார் சையத். இருவரும் விரைவில் நண்பர்களாகி விடுகிறார்கள். ஜாகிரின் மனைவி பிஸ்மில்லாதான் அவர் எடுக்கவிருக்கும் படத்தின் கதாநாயகி என்று கூறுகிறார்.
பிஸ்மில்லாவின் அந்த பெரிய கண்களில் சோகம் ஒளிந்து இருப்பதை சையத் உணர்கிறார்.
அந்த சோகம் நிறைந்த கண்களுக்குள் பலமுறை பாய்ந்து விழுந்திருக்கிறான் சையத்.
அவனை பல முறை மூழ்கடித்ததும் அவளுடைய பெரிய சோகமான கண்கள்தான். கண்களில் உள்ள சோகத்தின் எல்லாத் தடயங்களையும் கழுவி சுத்தப்படுத்தும் வரை அந்த கண்களை முத்தமிட வேண்டும் என்று தீராத ஆசை அவனுக்கு.
அந்த பெரிய சோகம் நிறைந்த கண்கள் எப்பொழுதும் தூக்க கலக்கத்துடனே இருப்பதை சையத் கவனிக்கிறான். அன்றும் அப்படித்தான் ஜாஹிரே காணச் சென்ற சையத் பிஸ்மில்லாவோடு பேசிக் கொண்டிருக்கும் பொழுதே பிஸ்மில்லா உறங்கி விடுகிறார்.
அடுத்த நாள் அவர்களின் வீட்டிற்கு செல்லும் பொழுது பிஸ்மில்லாவைப் பற்றி ஊர் மக்கள் பேசியதும் ஜாகிரை போலீஸ் பிடித்ததும் இந்தக் கதையின் எதிர்பாராத ஒரு திருப்பம் என்னவாக இருக்கும்?
****†***
ஆறுதல் கதையில் சாரதாவுக்கு நேர்ந்த அவமானம் அதன் பிறகான ஆறுதல் வரிகளும் அந்த ஆறுதல் படுத்தும் பொழுது பேசிய பேச்சுக்களும் உளவியல் ரீதியாக நுட்பமாக மனதை படம்பிடித்தது மிக சரியான வார்த்தைகள்.
ஆறுதல் என்பது என்றுமே மிகப்பெரிய தத்துவம் நிறைந்த வார்த்தைகளைத் தேடுவதில்லை.
மிக எளிமையான அன்பு கூறும் வார்த்தைகளையே எதிர்பார்க்கிறது. சில நேரங்களில் மௌனம் கூட ஆறுதல் ஆகிவிடும். சில நேரங்களில் காது கொடுத்தலே அவர்களுக்கு ஆறுதலாகிவிடும்.
நிர்வாணக் குரல்கள் கதை வியப்பின் உச்சம். இப்படி கூட ஒரு மனிதனால் சிந்திக்க முடியுமா? கட்டில்கள் பேசுமா? குரல்கள் துரத்துமா? காமம் ஒரு மனிதனை இப்படி அலைக்கழிக்குமா? ஒரு மனித வாழ்வில் காமத்திற்கான இடம் என்ன?
சுற்றி இருந்து எழுப்பும் குரல்கள் ஒருவனை இப்படித் துரத்துமா? முடிவில் அவனுக்கு மனப்பிறழ்வை ஏற்படுத்துமா? கற்பனைக்கும் அப்பாற்பட்ட கதை.
*********
ஒரு மனிதன் எல்லா இடங்களிலும் பயம் கொண்டே இருக்கிறான். தெனாலி படத்தில் வருவது போல எதற்கெடுத்தாலும் அவனுக்கு பயம் பயம் பயம்.
இந்த பயத்தை எல்லாம் உடைத்து ஒரு நாள் பாலியல் தொழிலாளியிடம் செல்ல நினைக்கிறான். முடிவில் போவானா போவானா என்ற பதட்டத்தோடு கதையை நகர்த்துகிறார். எதுக்குடா இப்படி பயப்படுற என்று நமக்குள்ளே கேள்விகள் எழும் அளவிற்கான கதை நகர்த்துதல்..
அவன் மனது செல்கிறது. அதை அவன் தடுத்துப் பார்க்கிறேன் முடியவில்லை முடிவில் அந்த பயத்தை உடைத்து சென்றானா?
என்பதை அறிய கோழைக்கதை..
***********
திருமணம் ஆகி 5 வருடம் குழந்தை இல்லாத நிலையில் சலிமாவிடம் அவள் தோழி ஒரு கோயிலைப் பற்றிக் கூறுகிறார். அந்தக் கோயிலுக்குச் சென்று எனக்கு பிறக்கும் முதல் குழந்தையை உங்களிடம் கொடுத்து விடுகிறேன் என்று வேண்டினால் குழந்தை பிறக்கும் என்று கூறுகிறார்.
அந்தக் குழந்தை சிறிய தலையுடன் பிறக்கும் என்று கூறுகிறார். சலிமா வேண்டிக் கொள்கிறார். அது போலவே அவளுக்கு குழந்தை பிறக்கிறது.
கன்னத்தில் கருப்பு நிற மசாசத்துடன். வலியோடும் வேதனையோடும் அந்தக் குழந்தையை அந்தக் கோவிலில் கொண்டு சென்று விட்டு விடுகிறார். ஆனாலும் அந்தக் குழந்தையின் நினைவு அலைக்கழிக்கிறது. திரும்பவும் சென்று அங்கு பார்க்கிறார்.
ஆனால் அந்தக் குழந்தை அங்கு இல்லை. அதன் பிறகு இரண்டு மூன்று குழந்தைகள் பிறக்கின்றன. ஆனாலும் அந்தக் கன்னத்தில் மச்சத்தோடு பிறந்த குழந்தையை மறக்க முடியாத வலியோடும் வேதனையோடும் சுற்றித் திரியும் பொழுது, அந்த ஊருக்கு வித்தை காண்பிக்க வருகிற ஒரு வித்தைக்கார சிறுவனைப் பார்க்கிறாள். அந்த வித்தைக்கார சிறுவன் கன்னத்தில் கருப்பு நிற மச்சத்தோடு இருக்கிறான்.
யாரவன்?.
குழந்தை இல்லை என்பதற்காக முதல் குழந்தையை தருகிறேன் என்று வேண்டிக் கொண்டாலும் எத்தனை குழந்தைகள் பிறந்தாலும் ஒரு குழந்தையின் இழப்பு என்பது ஒரு தாயின் மனதை எவ்வளவு அலைக்கழிப்பை ஏற்படுத்தும் என்று நுட்பமான உளவியலை உணர்ந்து ஒவ்வொரு வரியிலும் வலியையும் வேதனையும் கடத்தி இருக்கிறார் மண்டோ.
*********
தோற்றுக் கொண்டிருப்பவன் எல்லாவற்றையும் ஜெயித்த பிறகு அதையெல்லாம் தொலைத்து விடுவதில் மகிழ்ச்சி அடையும் ஒருவனான கதையின் நாயகன்.
அவன் எப்பொழுதும் ஜெயிப்பதற்கு கஷ்டப்படவே இல்லை.
ஆனால் அதை இழப்பதற்கு கடினமாக உழைக்க வேண்டி இருந்தது. இதை படிக்கும் பொழுது அருணாச்சலம் படத்தில் ரஜினியிடம் கொடுக்கப்பட்ட பணத்தைச் செலவு செய்ய வேண்டும் என்ற ஒரு நிபந்தனை விதிக்கப்படுகிறது அதை செலவழிக்க ரஜினி படம் கஷ்டம் நினைவுக்கு வருகிறது.
ஆனால் இந்த கதையின் நாயகனுக்கு எந்த நிபந்தனையும் விதிக்கப்படுவதில்லை. ஆனால் இவர் சம்பாதித்த இலட்சக்கணக்கான பணங்களைத் தொடர்ந்து செலவழித்துக் கொண்டே இருக்கிறார் .அதற்காக எவ்வளவு மெனக்கடல்களையும் செய்வார். ஆனாலும் இவருக்கு செல்வம் குவிந்து கொண்டிருக்கிறது. தினமும் கண்டிப்பாக 200 ரூபாயை சூதாட்டத்தில் இழந்தே ஆக வேண்டும் என்று என்ற ஒரு கட்டுப்பாட்டை தனக்குள்ளே விதைத்து கொண்டு வாழ்ந்து கொண்டிருக்கிறார்.
சூதாட்டத்திற்கு போகும் வழியில் ஒரு அசிங்கமான முகத்துடன் கூடிய பாலியல் தொழிலாளி பெண்ணைப் பார்க்கிறார் இனிமேல் நீ இதில் ஈடுபடக்கூடாது நீ சம்பாதிப்பதற்கு மேல் நான் பணம் தருகிறேன் என்று கூறி தினமும் பத்து ரூபாயை அவருக்குக் கொடுக்கிறார்.
ஒரு வாரம் அந்த பெண் அந்த விளக்கிற்கு கீழே வந்து அமரவில்லை ஒரு வாரத்திற்கு பின் வழக்கம்போல தன்னுடைய வாடிக்கையாளர்களை அழைக்கும் இடமான அந்த விளக்கு கம்பத்துக்கு கீழ் வந்து அமர்கிறார். இதைப் பார்த்து எரிச்சல் அடைந்து கோபத்தோடு அவளிடம் சென்று கேட்கிறான்.
அப்பொழுது அந்த பாலியல் தொழிலாளி கைக்காட்டும் இடத்தில் ஏராளமான விளக்குகள் எரிந்து கொண்டிருக்கின்றன.
**************
யாசித் அதை இந்தியா பாகிஸ்தான் பிரிவினைக்கு பிறகு நடந்த மறைமுகமான யுத்தத்தை பற்றிய கதை.
இந்தியாவிலிருந்து ஆற்று நீரை பாகிஸ்தானுக்கு வர அனுமதிக்க மறுக்கிறார்கள் இந்தியர்கள் என்ற ஒரு செய்தி பாகிஸ்தானுக்குப் பரவுகிறது.
அங்கு இருக்கும் மக்கள் இந்தியாவில் இருக்கும் மனிதர்கள் கொடூரமானவர்கள் என்று பேசிக் கொண்டிருக்கும் பொழுது ஒரே ஒருவர் மட்டும் அப்படி பேசக்கூடாது எனும்பொழுது அவரை எதிர்த்து அனைவரும் பேசுகிறார்கள்.
அவருடைய மனைவி நிறைமாத கர்ப்பிணியாக இருக்கிறார்.
அவர்களுக்கு குழந்தை பிறக்கிறது வீட்டிற்கு வந்து குழந்தையைப் பார்த்தவுடன் அந்தக் குழந்தைக்கு யாசித் என்ற பெயர் வைக்கிறார். அந்த யாசிப் அங்கு இருக்கும் புராணக் கதைகளில் வில்லனாக சித்தரிக்கப்பட்ட கதாபாத்திரம்.
பெயரைக் கேட்டதும் மனைவி அதிர்ந்து போக அந்த யாசித் அப்படி இருந்தால் என்ன இந்த ஆசை ஒரு வேலை ஆற்றிலிருந்து நீரை வர வைக்கும் நல்லவனாக இருப்பானோ என்று கூறுகிறார்.
**********
கேள்விக்குறியான கௌரவம் படிக்கும் பொழுது நகைச்சுவை உணர்வு தழும்பி ஓடினாலும் கடைசியாக மீசைக்காக எவ்வளவோ கஷ்டப்பட்டு மீசையை இழந்தவுடன் அவருடைய கௌரவம் முற்றிலும் அழிந்து விட்டதாக நினைப்பது.
மீசை என்பது மம்மது பாய்க்கு வெறும் மயிர் அல்ல அது அவரின் கௌரவம்..
***************
இப்படி இந்த தொகுப்பில் இருக்கும் ஒவ்வொரு கதையைப் பற்றியும் எழுதிக் கொண்டே போகலாம்.
மனித மனங்களின் நுட்பமான உணர்வுகளையும் உளவியல் ரீதியான பல்வேறு சிக்கல்களையும் அந்த சிக்கலுக்குள் மனித மனங்கள் மாட்டிக் கொண்டு விடுபட முடியாமல் தவித்துக் கொண்டிருப்பதையும் வாசிக்கும் பொழுது மண்டோ ஒரு மகத்தான எழுத்தாளர் மட்டுமல்ல ஒரு மகத்தான உன்னதமான மனிதனும் கூட என்பதை உணர முடிகிறது.
குறிப்பாக பெரும்பாலான கதைகளில் விளக்கு வந்து செல்கிறது ஒளி அற்றவர்களின் வாழ்க்கைக்கு வெளிச்சம் வருகிறது.
இந்த விளக்காவது அவர்களின் வாழ்க்கையில் வெளிச்சம் தரும் என்று நினைத்தாரோ என்னவோ.
மனதைக் குத்தி கிழிக்கும் நேரத்தில் தெறித்த ரத்தக்கங்களால் வரையப்பட்ட ஓவியங்கள் மண்டோ படைப்புகள்.
மொழிபெயர்ப்பு என்று சொல்ல முடியாத அளவிற்கு மிகச் சிறந்த மொழிபெயர்ப்பு.
வாசிக்க வாசிக்க ஆக்டோபஸ் கரங்களால் கதைகள் நம்மை உள்ளே இழுத்துக் கொள்கின்றன.
நன்றி - சரிதாஜோ


No comments:

Post a Comment