Monday 11 May 2020

ஆறுதல் - சாதத் ஹசன் மண்ட்டோ


1.   ஆறுதல் 

சாதத் ஹசன் மண்ட்டோ



எட்டு வருடங்களுக்கு முன்னால் நடந்தது. என்னுடைய நண்பன் விஸ்வேஷ்வரநாத்தின் திருமணவிருந்து இந்து சபை கல்லூரியின் முன்னாலிருந்த அழகான விருந்து மண்டபத்தில் நடந்தது. அந்த விருந்தில் முந்நூறு முந்நூற்றைம்பது விருந்தினர்கள் கலந்து கொண்டார்கள். அவர்கள் லாகூரின் மிகப்பிரபலமான பாடகிகளின் பாடல்களைக் கேட்டுக் கொண்டிருந்தார்கள். இப்போது அந்தப்பாடகிகள் அந்த விருந்து மண்டபத்திலுள்ள பல்வேறு அறைகளில் அவர்களுடைய கட்டில்களில் உறங்கிக் கொண்டிருந்தார்கள்.
அதிகாலை நான்கு மணி. எனக்கு இன்னும் மயக்கமாக இருந்தது. சிறிய நண்பர்கள் குழுவுடன் சேர்ந்து குடித்த விஸ்கியின் வேலை. நான் கல்யாண மாப்பிள்ளையுடன் சேர்ந்து தனியாக ஒரு அறையில் குடித்தேன். ஹாலில் இருந்த வட்டக்கடிகாரத்தில் நான்கு மணி அடித்தபோது நான் என் கண்களைத் திறந்தேன். ஒருவேளை நான் கனவு கண்டு கொண்டிருந்திருக்கலாம் ஏனெனில் என்னுடைய கண்ணிமைகளில் ஏதோ குடியிருந்தது.
நான் ஒரு கண்ணைத் திறந்து ஹாலுக்குப் போகும் பாதையைப் பார்த்தேன். அப்போது மற்றொரு கண்ணை மூடியே வைத்திருந்தேன். அது இன்னும் கொஞ்சநேரம் தூங்கும். எல்லோரும் உறங்கிக்கொண்டிருந்தார்கள். சிலர் குப்புறப்படுத்திருந்தார்கள், சிலர் மல்லாந்து படுத்திருந்தார்கள். சிலர் குண்டக்கமண்டக்க படுத்திருந்தார்கள். நான் என்னுடைய அடுத்த கண்ணையும் திறந்தேன். நேற்று ராத்திரி அஸ்கர் அலி பெரிய தலையணையில் படுக்கச்சொல்லி வற்புறுத்தியது நினைவு கூர்ந்தேன். அந்தத் தலையணை என்னுடைய தலையிலிருந்து நழுவி கொஞ்சதூரத்தில் கிடந்தது. ஆனால் அஸ்கர் அலி இருப்பதற்கான எந்த அறிகுறியுமில்லை.
ஒருவேளை இரவு முழுவதும் அவன் முழித்திருந்ததால், இப்போது ராம்பாக்கிலுள்ள மலிவான விபச்சாரியின் அழுக்கான படுக்கையில் தூங்கிக்கொண்டிருப்பான்.
விஸ்கி அது லோக்கலாக இருந்தாலும் சரி ஃபாரினாக இருந்தாலும் சரி ஆஸ்கரைப் பொறுத்தவரை விரைவு ரயிலைப்போல நேரே ஒரு பெண்ணிடம் போய் தான் நிற்கும். கிட்டத்தட்ட தொண்ணூற்றியொன்பது சதவீத மனிதர்களுக்கு இரண்டு பெக் உள்ளே இறங்கியவுடன் அழகான பொருட்களை நோக்கி ஈர்க்கப்படுவார்கள். அப்படியிருக்கும்போது அஸ்கர் – அவன் மிகச்சிறந்த ஓவியர் புகைப்படக்கலைஞர், அவனுக்கு எப்படி கோடுகளையும் நிறங்களையும் பயன்படுத்தவேண்டுமென்று தெரியும் – குடித்த பிறகு எப்போதும் மிக மோசமான படங்களையே வரைவான்.
கனவின் துண்டு துணுக்குகள் என்னுடைய கண்களிலிருந்து வெளியேறின. அஸ்கர் அலிக்கு கண்டிப்பாக கனவே இருக்காது என்று நான் நினைக்கத்தொடங்கினேன். என்னால், அவனுடைய கனத்த நீண்ட தலைமுடியுடனான உடலின் அடையாளத்தை தலையணையில் பார்க்க முடிகிறது.
அவனை மிக நெருக்கமாக கவனித்துக்கொண்டிருந்தாலும் கூட பல சமயங்களில் இரண்டு பெக் குடித்தவுடன் அஸ்கர் ஏன் முட்டாள் மாதிரி மாறி விடுகிறான் என்பதை என்னால் ஆராய்ந்து கண்டுபிடிக்க முடியவில்லை. முட்டாள் என்று கூடச் சொல்ல முடியாது அவன் உண்மையில் பயங்கர முரட்டுத்தனமாகவும், கீழ்த்தரமானவனாகவும் மாறி விடுவான். இருண்ட தெருக்களின் வழியாகவும், சந்துகளின் வழியாகவும் தன்னுடலை விற்கும் ஏதாவது ஒரு பெண்ணிருக்கும் இடத்தைத் தேடி தட்டுத்தடுமாறி ஓடுவான். அடுத்த நாள் காலை அவளுடைய அழுக்கான படுக்கையிலிருந்து எழுந்து வீட்டுக்குப் போவான். குளித்து விட்டு அவனுடைய ஸ்டுடியோவுக்குப் போய் அங்கே அழகான, நாகரிகமான இளம் பெண்களை புகைப்படங்கள் எடுத்துக் கொண்டிருப்பான். அப்போது முந்தைய இரவின் மிருகத்தனத்தின் சிறு தடயத்தைக் கூட பார்க்க முடியாது. ஆனால் அது குடிபோதையில் ரொம்ப வெளிப்படையாகத் தெரியும்.
என்னை நம்புங்கள். நான் சொல்கிறேன். அவன் குடிக்கும்போது பேய் பிடித்தவனைப் போலாகி விடுகிறான். சுருக்கமான குறுகிய நேரத்துக்கு அவனுடைய மூளை சிந்திக்கவும் உணரவுமான சக்தியை இழந்து விடுகிறது. ஒரு மனிதனால் எவ்வளவு குடிக்கமுடியும்? ஆறு, ஏழு, எட்டு பெக்குகள்? அவனைப் பொறுத்தவரை ஆறேழு தடவை உறிஞ்சினாலே போதும் அது அவனை ஆழமறிய முடியாத மறதியின் கடலுக்குள் தள்ளி விடும். நீங்கள் விஸ்கியை தண்ணீருடனோ, சோடாவுடனோ கலக்கலாம். ஆனால் ஒரு பெண்ணுடன் கலப்பது என்பது என்னுடைய புரிந்து கொள்ளலுக்கு அப்பாற்பட்டது. சில அவர்களுடைய சோகங்களை மறப்பதற்காகக் குடிப்பார்கள். ஆனால் ஒரு பெண்ணை சோகம் என்று சொல்லமுடியாது. சிலர் கூச்சல்,குழப்பம் போடவே குடிப்பார்கள். ஆனால் ஒரு பெண்ணைக் கூச்சல், குழப்பம் என்று சொல்லமுடியாது.
நேற்றிரவு அஸ்கர் பயங்கரமாகக் குடித்து விட்டு சத்தம்போட்டுக் கொண்டிருந்தான். பெரும்பாலான திருமணங்களே சத்தக்காடு தான் ஆகையால் அஸ்கரின் கூச்சல் பொதுவான இரைச்சலில் அமிழ்ந்து விட்டது. அப்படியில்லாமலிருந்தால் நரகத்தையே விலையாகக் கொடுக்கவேண்டியதிருந்திருக்கும். அந்த மாலைப்பொழுதின் ஒரு நேரத்தில் அவன் கிளாஸ் நிறைய விஸ்கியை ஊற்றியெடுத்து அறைக்கு வெளியே சென்று,
“ நான் உயர்ந்த மனிதன். அதற்கேத்தமாதிரி உயரமான இடத்தில் உட்கார்ந்து நான் குடிப்பேன்..” என்று சொன்னான்.
அவன் ராம்பாக்கில் எங்கேயோ அவனுக்குப் பொருத்தமான உயர்ந்த விபச்சாரியைத் தேடி அலைந்திருப்பான் என்று நான் நினைத்தேன். ஆனால் சிறிது நேரம் கழித்து, கதவு திறந்தது. அவன் அறைக்குள் ஒரு ஏணியைத் தூக்கிக் கொண்டு வந்தான். அதைச் சுவரில் சாய்த்துப் போட்டான். அதில் ஏறி உயரமான ஏணிப்படியில் உட்கார்ந்து கொண்டு விஸ்கியை உறிஞ்சினான். அப்போது அவனுடைய தலை கூரை முகட்டை நெருங்கித் தொட்டுக் கொண்டிருந்தது.
கொஞ்சம் சிரமப்பட்டு நானும் விஸ்வேஸ்வரும் அவனைச் சமாதானப்படுத்தி கீழே இறங்கிவரச் செய்தோம். அத்துடன் அவனிடம் இந்தமாதிரி கோணங்கித்தனமெல்லாம் சுற்றிலும் யாரும் இல்லாதபோது சரியாக இருக்கும் என்று சொல்லிக்கொண்டிருந்தோம். விருந்து மண்டபம் நிறைய விருந்தினர்கள் இருக்கிறார்கள். அதனால் அவன் அமைதியாகவும் மரியாதையாகவும் நடந்து கொள்ள வேண்டும். கடவுளுக்குத் தான் தெரியும் எங்களுடைய கெஞ்சல்கள் அவனுடைய மரமண்டைக்குள் எப்படி ஏறியதென்று. அதன்பிறகு விருந்து முழுவதும் அவன் அமைதியாக ஒரு மூலையில் அவனுடைய பங்கு விஸ்கியை உறிஞ்சிக்கொண்டு உட்கார்ந்திருந்தான்.
நேற்றிரவு நடந்த நிகழ்ச்சிகளை யோசித்துக் கொண்டே நான் எழுந்து வெளியிலிருந்த பால்கனியில் போய் நின்றேன். எனக்கு முன்னால் விடியலுக்கு முன்பிருந்த இருளில் சிவப்பு செங்கற்களால் கட்டபபட்டிருந்த இந்து சபைக்கல்லூரி அமைதியாக நின்று கொண்டிருந்தது. நான் வானத்தைப் பார்த்தேன். நட்சத்திரங்கள் குழம்பியிருந்த வானில் நடுங்கிக் கொண்டிருந்தன.
நான் நீண்ட அந்த வராண்டாவைக் கடந்து மாடிப்படியை அடைந்தேன். யாரோ கீழே இறங்கி வந்து கொண்டிருந்தார்கள். ஒரு சில நொடிகளுக்குப் பின்னர் அஸ்கர் பார்வையில் பட்டான். என்னைக்கடந்து வேகமாக என்பக்கம் பார்க்காதமாதிரியே போனான். இருட்டாக இருந்தது. நான் மெல்ல படியேறும்போது நினைத்தேன், ஒருவேளை அவன் என்னைப் பார்க்காமலிருந்திருக்கலாம்.
எப்பொழுதெல்லாம் நான் படியேறுகிறோனோ நான் படிகளை எண்ணுவேன். நான் இருபத்திநான்கு என்று வாய்க்குள் முணுமுணுத்தபோது, திடீரென கடைசிப்படியில் ஒரு பெண் நின்று கொண்டிருப்பதைப் பார்த்தேன். நான் நடுங்கிப்போனேன். ஏனெனில் கிட்டத்தட்ட நான் ஒரு பெண்ணின் மீது மோதிவிடத் தெரிந்தேன்.
“ மன்னித்துக்கொள்ளுங்கள்.. ஓ.. நீயா? “
அந்தப் பெண் சாரதா. அவள் எங்களுக்குப் பழக்கமான ஹர்னாம் கவுரின் மூத்தமகள். அவள் திருமணமான ஒரு வருடத்திலேயே விதவையாகி விட்டாள். நான் எதுவும் கேட்பதற்கு முன்னால் அவள் அவசர அவசரமாகக் கேட்டாள்,
“ யாரு அந்த ஆள்? இப்ப கீழே இறங்கிப் போனது? “
“ யாரு? “
“ இப்ப படியிறங்கிப் போனானே.. அவனை உங்களுக்குத் தெரியுமா? “
“ ஆமாம். தெரியும்.”
“ யார் அவன்? “
“ அஸ்கர் “
“ அஸ்கர் “ அவள் கிட்டத்தட்ட பற்களைக் கடித்துக் கொண்டு அந்தப் பெயரைச் சொன்னாள். ஒரு கணத்தில் அவர்களுக்குள் என்ன நடந்திருக்கும் என்று எனக்குப் புரிந்து விட்டது.
“ அவன் ஏதாச்சும் மரியாதைக்குறைவா நடந்துக்கிட்டானா? “
“ மரியாதைக்குறைவா? “ அவளுடைய உடல் ஆத்திரத்தில் நடுங்கியது.
“ என்னை யாருன்னு நெனைச்சிக்கிட்டிருக்கான் அவன்? “  அவளுடைய சிறிய கண்களிலிருந்து கண்ணீர் பெருகியது.
“ அவன்.. அவன்.. “ அவளுடைய தொண்டை இறுகி விட்டது. இரண்டு கைகளாலும் முகத்தை மூடிக்கொண்டு சத்தமாக அழ ஆரம்பித்தாள். முழுமையாகக் கைவிடப்பட்டவளைப் போல.
நான் விசித்திரமான நெருக்கடியில் இருந்தேன். இப்போது யாராவது அவளுடைய அழுகையைக் கேட்டு மேலே வந்து விட்டால் பெரிய கலவரமாகி விடும். சாரதாவுக்கு நான்கு சகோதரர்கள். நான்குபேரும் அந்தக் கட்டிடத்தில் வேறு எங்கேயோ தூங்கிக் கொண்டிருக்கிறார்கள். அவர்களில் இரண்டுபேர் வன்முறைச்சண்டைகளில் மிகவும் விருப்பமுள்ளவர்கள். நிச்சயமாக அஸ்கர் அலியை எதுவும் காப்பாற்றமுடியாது.
நான் அவளுக்குப் புத்தி சொல்ல ஆரம்பித்தேன்.
“ இங்க பாரு.. நான் சொல்றேன்.. அழுகையை நிறுத்து.. யாராவது கேட்டுருவாங்க..”
அவள் முகத்திலிருந்து கைகளை விலக்கினாள். கடுப்பான குரலில் சத்தமாக,
“ கேட்கட்டும்.. ஆட்கள் கேட்கட்டும்.. அவன் என்னை யாருன்னு நெனச்சுக்கிட்டான்? தேவடியான்னா? நான் நான் ..” என்று கத்தினாள்.
மறுபடியும் அவளுடைய குரல் தொண்டையில் இறுகிக்கொண்டது.
“ இங்கேயே இப்போதே இந்த விஷயத்தை புதைச்சிர்றது நல்லதுன்னு நினைக்கிறேன்..”
“ ஏன்? “
“ அது அவமானத்தைத் தரும்..”
“ யாருக்கு? அவனுக்கா? எனக்கா? “
“ அது அவனுக்குத் தான் அவமானம்.. ஆனாலும் சகதியில கை வைக்கிறது உனக்கும் நல்லதில்ல.... ” என்று சொல்லிக்கொண்டே என்னுடைய கைக்குட்டையை வெளியில் எடுத்து அவளிடம் கொடுத்தேன்.
“ இந்தா கண்ணீரைத் தொடைச்சுக்கோ..”
அவள் கைக்குட்டையை வீசி எறிந்து விட்டு அப்படியே தள்ளாடி மேல்படியில் உட்கார்ந்தாள். நான் என்னுடைய கைக்குட்டையை எடுத்து தூசி தட்டி மீண்டும் என்னுடைய பாக்கெட்டில் வைத்துக் கொண்டேன்.
“ சாரதா.. அஸ்கர் என்னுடைய நண்பன்.. அவன் என்ன தப்பு செய்ஞ்சிருந்தாலும் நான் உன்கிட்டே மன்னிப்பு கேட்டுக்கிறேன்..”
“ நீங்க எதுக்கு மன்னிப்பு கேட்கிறீங்க? “
“ ஏன்னா இந்த விஷயம் இங்கேயே முடிஞ்சிரணும்னு விரும்பறேன்.. ஒருவேளை நீ விரும்பினா நான் அவனை இஙே கூட்டிகிட்டு வாரேன்.. உன் கால்ல விழுந்து மன்னிப்பு கேக்கச் சொல்றேன்..”
அவள் வெறுப்புடன் முகத்தைத் திருப்பிக் கொண்டாள்.
“ வேண்டாம்..எனக்கு முன்னால அவனைக் கூட்டிட்டு வரவேண்டாம்.. அவன் என்னை மோசமா புண்படுத்திட்டான்..” மறுபடியும் அவளுடைய தொண்டை கட்டிக்கொண்டது. பளிங்குப் படியில் உட்கார்ந்திருந்த அவளுடைய முழங்கை குளிர்ந்த கல்தரையைத் தொட்டுக்கொண்டிருந்தது. அவளுக்குள் ஆழமாக ஊற்றெடுத்த வேதனையை அவள் அடக்கமுயற்சித்தும் பயனில்லை.
இந்த நேரத்தில் நான் கவலையினால் தன்வசமிழந்திருந்தேன். ஒரு கட்டுடல் கொண்ட இளம்பெண் என் முன்னால் அழுது கொண்டிருக்கிறாள். அவள் அழுகையை என்னால் நிறுத்தமுடியவில்லை. ஒரு தடவை நான் அதே அஸ்கரின் காரை ஓட்டிக்கொண்டு வரும்போது ஒரு நாயை விரட்ட ஹார்னை அடித்தேன். அந்த ஹார்ன் மாட்டிக்கொண்டது. அதன் ஒலி நிறுத்தவேமுடியாத அலறலாக மாறிவிட்டது. மக்கள் என்னை முறைத்துப்பார்த்தனர். நான் ஏலமாட்டதவனாக இருந்தேன்.
கடவுளுக்கு நன்றி என்னையும் சாரதாவையும் தவிர மேலே வேறு யாருமில்லை. ஹார்ன் சம்பவம் நடந்தபோது இருந்ததை விட இப்போது என் நிலைமை எதுவும் செய்ய முடியாமலிருந்தது. எனக்கு முன்னால் ஒரு பெண், மிக மோசமாக காயப்பட்ட பெண் அழுதுகொண்டிருக்கிறாள்.
வேறு யாராவது ஒரு பெண்ணாக இருந்தால் நான் என் வேலையைப் பார்த்துக் கொண்டு போயிருப்பேன். ஆனால் சாரதா எனக்குப் பழக்கமானவர்களின் மகள். அவளைக் குழந்தையிலிருந்தே எனக்குத் தெரியும்.
அவள் அருமையான பெண். அவளுடைய மூன்று சகோதரிகளை விட அழகில் கொஞ்சம் குறைவு என்றாலும் பெரிய புத்திசாலி.
அவள் வாசிப்பதிலும் தையல் தைப்பதிலும் கெட்டிக்காரி. போனவருடம், திருமணம் முடிந்து பதினொரு மாதங்களிலேயே அவள் கணவனை இழந்து விட்டாள் என்று கேள்விப்பட்டபோது எங்களுக்கு மிகுந்த வருத்தமாக இருந்தது. கணவனை இழந்த அவளுடைய துயரம் ஆழமானது. ஆனால் இப்போது உயிருள்ள நண்பனால் ஏற்பட்ட வேதனை வேறுவகையானது. அவளுடைய இத்தனை கடுந்துன்பத்துக்குக் காரணமாக இருப்பதை நான் பார்க்கிறேன்.
நான் மீண்டும் அவளை அமைதிப்படுத்த முயன்றேன். நானும் அவளுக்குப் பக்கமாக அந்தப்பளிங்குத் தரையில் உட்கார்ந்தேன்.
“ சாரதா தேவி! இப்படியே அழுதுகொண்டிருப்பதைப் பார்க்கமுடியவில்லை.. கீழே போ! என்ன நடந்திருந்தாலும் அதை மறப்பதற்கு முயற்சி செய்! அந்த ஈனப்பய குடித்திருந்தான்..இல்லைன்னா என்னை நம்பு.. அவன் அவ்வளவு மோசமானவனில்லை.. கடவுளுக்குத் தான் வெளிச்சம்! அவன் குடிச்சான்னா அவனுக்குள்ள என்ன நடக்குதுங்கிறது…”
சாரதாவின் கண்ணீர் நிற்கவில்லை.
அஸ்கர் என்ன செய்திருப்பான் என்று என்னால் யூகிக்கமுடிந்தது. ஆண்களுக்கு ஒரே ஒரு அணுகுமுறை தான் இருக்கிறது. உடலின் மூலம் தான். ஆனால் நான் சாரதாவின் வாயிலிருந்து கேட்க விரும்பினேன். அஸ்கர் அவள் மீது செய்த மிருகத்தனமான குற்றச்செயலின் தன்மையைத் தெரிந்துகொள்ள விரும்பினேன். ஆகையால் நான் அநுதாபத்துடன்,
“ உண்மையில் அவன் என்ன மாதிரியான அவமானத்தை உனக்கு செய்ஞ்சான்னு எனக்குத் தெரியாது… ஆனால் என்னால் யூகிக்கமுடிகிறது.. நீ ஏன் மேலே வந்தே? “
சாரதா நடுங்கிய குரலில்,
“ நான் கீழேயுள்ள அறையில் தூங்கிக்கொண்டிருந்தேன்.. இரண்டு பெண்கள் என்னைப் பற்றி பேச ஆரம்பிச்சாங்க..”
அவளுடைய குரல் தொண்டையிலேயே திணறியது.
“ அவங்க உன்னைய பத்தி என்ன சொன்னாங்க? “ என்று நான் கேட்டேன்.
சாரதா அவளுடைய முகத்தை குளிர்ந்த பளிங்குத் திண்டில் சாய்த்து சத்தமாக அழுதாள். நான் அவளுடைய அகன்ற தோள்களில் தட்டினேன்.
“ ஷ்..ஷ்.. சாரதா.. அமைதியா இரு..ஷ்ஷ்ஷ்..”
இரண்டு பெரிய விக்கல்களுக்கிடையில் அவள் மூச்சுத்திணறியது.
“ அவங்க சொன்னாங்க.. ஏன் இந்த அமங்கலியைக் கூப்பிட்டாங்க? ‘ அவள் அமங்கலி என்ற வார்த்தையைச் சொல்லும் போது கண்ணீரில் நனைந்த துப்பட்டாவின் ஒரு முனையை அவளுடைய வாயில் திணித்துக் கொண்டாள்.
“ நான் இந்த வார்த்தைகளைக் கேட்டவுடன் அறையை விட்டு வெளியேறி இங்கே மேலே வந்து விட்டேன்.. “
அவளுடைய வார்த்தைகள் என்னை வருத்தின. எப்படி பெண்கள் இவ்வளவு குரூரமாக இருக்கிறார்கள்? அதுவும் வயதான பெண்கள்! ஒருவருடைய காயம் புதிதாக இருந்தாலும் சரி  பழையதாக இருந்தாலும் சரி அதை பிறாண்டிப் பார்த்து இளிக்கிறார்கள். நான் சாரதாவின் கைகளை என் கையில் எடுத்துக்கொண்டேன். ஆழமான இதயபூர்வமான பரிவுடன் மெல்ல அழுத்திக் கொண்டு,
“ எப்பவும் இப்படிப்பட்ட விஷயங்களுக்குக் காது கொடுக்கக்கூடாது..”
அவள் ஒரு குழந்தையைப் போல இரைந்து அழ ஆரம்பித்தாள்.
“ நான் சரியாக அப்படியே தான் எனக்குள் சொல்லிக் கொண்டு மேலே தட்டடியில் வந்து உறங்கி விட்டேன்.. உங்களுடைய நண்பர் வந்து என்னுடைய துப்பட்டாவை இழுத்து, என்னுடைய குர்த்தாவின் பொத்தான்களை அவிழ்த்து….”
அவளுடைய குர்த்தாவின் பொத்தான்கள் இன்னும் அவிழ்ந்து கிடந்தன.
“ முடிஞ்சிருச்சு.. சாரதா.. என்ன நடந்திருந்தாலும் மறந்திரு..” என்னுடைய பையிலிருந்து கைக்குட்டையை உருவி அவளுடைய கண்ணீரைத் துடைத்தேன்.
துப்பட்டாவின் ஒரு முனை அவளுடைய வாயில் இன்னும் இருந்தது. அவள் பற்களினால் இறுகக்கடித்துக் கொண்டிருந்தாள். நான் அவளுடைய வாயிலிருந்து அதை இழுத்தேன். ஈரமான அந்த மூலையை விரல்களில் சுற்றிக் கொண்டு நிராதரவான குரலில்,
“ நான் அமங்கலிங்கிறதுனால தான் உங்க நண்பர் என்னை மானபங்கப்படுத்தினாரில்லையா? யாரு வந்து இந்தப்பொண்ணைக் காப்பாத்தப்போறாங்கன்னு நெனைச்சிருப்பார்..”
“ இல்லை சாரதா இல்லை.. “ நான் அவளுடைய தலையை இழுத்து என்னுடைய தோள்களில் சாய்த்துக் கொண்டேன்.
“ மறந்துரு! அவன் என்ன நெனச்சிருந்தாலும் சரி. என்ன செய்ஞ்சிருந்தாலும் சரி. இப்ப அமைதியா இரு..”
நான் அவளைத் தூங்கவைக்க தாலாட்டு பாடவிரும்பினேன்.
ஒரு நிமிடத்துக்கு முன்னால் தான் அவளுடைய கண்ணீரைத் துடைத்திருந்தேன். இப்போது புதிய கண்ணீர்த்துளிகளுடன் அந்தக் கண்கள் மின்னின. அவள் வாயில் திணித்திருந்த  துப்பட்டாவின் ஒரு முனையை இழுத்து மீண்டும் அவளுடைய கண்ணீரைத் துடைத்தேன். பிறகு மென்மையாக அவளுடைய கண்களில் முத்தமிட்டேன்.
“ போதும் இனி அழுகாதே “
அவள் தலையினால் என் நெஞ்சில் இடித்தாள். நான் அவளுடைய கன்னங்களில் மெல்லத்தட்டிக் கொண்டு,
“ போதும் போதும் போதும் “ என்று சொன்னேன்.
கொஞ்சநேரம் கழித்து நான் கீழே இறங்கி வரும்போது, மார்ச் மாத இறுதியில் காலைப்பொழுதில் வீசும் நறுமணமுள்ள காற்றில் மல்மல் துப்பட்டா அலைபாய சாரதா அந்தப் பளிங்குப் படிக்கட்டில் நின்று கொண்டிருந்தாள். அஸ்கரின் துர்நடத்தை முழுவதுமாக மறந்து விட்டது. அவள் ஒரு இறகைப்போல மிதந்தாள். அவளுடைய இதயத்திலிருந்த அதிர்ச்சியையும் வேதனையையும் இன்பமும் கிளர்ச்சியும் இடம் மாற்றிவிட்டன.

No comments:

Post a Comment