Friday 14 February 2020

இது யாருடைய முட்டை?


இது யாருடைய முட்டை?

உதயசங்கர்

வயலூரில் இந்த ஆண்டு நல்ல மழை. அதனால் நெல்வயலில் நல்ல விளைச்சல். அந்த ஊரில் இயற்கை விவசாயம் தான் நடக்கிறது. ரசாயன உரங்களை விவசாயிகள் பயன்படுத்துவதில்லை. அதே போல பாரம்பரியமான நெல் வகைகளை அவர்கள் பயிர் செய்தார்கள். மாப்பிள்ளை சம்பா, கட்டிச்சம்பா, சீரகச்சம்பா, கம்பஞ்சம்பா, காட்டுச்சம்பா, தேங்காய்ப்பூ சம்பா, புழுதிச்சம்பா, இலுப்பைப்பூ சம்பா, துளசிச்சம்பா, கொட்டாரச்சம்பா,சன்னச்சம்பா, கிச்சலி சம்பா, நீலச்சம்பா, கருடன் சம்பா, கட்டைச்சம்பா, மிளகுச்சம்பா, என்று நெல்வகைகளை விதைத்து நல்ல மகசூல் வந்தது.
அறுவடை முடிந்த வயலில் பறவைகளும், எலிகளும், எறும்புகளும் சுறுசுறுப்பாக அலைந்து கொண்டிருந்தன. எறும்புகள் எல்லாம் அறுவடையின்போது கீழே சிந்திய நெல்மணிகளை முதுகில் சுமந்து கொண்டு வரப்புகளில் இருந்த அவர்களுடைய புற்றுக்குள் கொண்டு போய் சேமித்து வைத்தனர். அப்போது சுள்ளான் எறும்பு தலையைக் குனிந்து கொண்டே போய் ஒரு பெரிய பாறை மீது மோதியது. முன்கால்களால் தலையைத் தடவிக் கொண்டது. அந்தப் பாறையின் மீது ஏறி மேலும் கீழும் அலைந்தது. அது பாறை கிடையாது. அந்தப்பொருளின் மீது ஒரு பறவையின் வாசனை வீசியது. உடனே சுள்ளான் கீழே இறங்கி அவர்களுடைய கூட்டத்தில் பெரியவரான குண்டுத்தாத்தாவை அழைத்து வந்தது. குண்டுத்தாத்தா அதைப் பார்த்தவுடன்,
அட கோட்டிக்காரா.. இது ஒரு பறவையின் முட்டை.. அறுவடை நடக்கும்போது அந்தப்பறவை இந்த முட்டையை விட்டு விட்டுப் போயிருக்கும்சரி வா.. நம்ம வேலையைப் பார்ப்போம்.. “ என்று சொல்லி விட்டு முன்னால் நடந்தது. ஒரு கணம் யோசித்த சுள்ளான்,
தாத்தா இந்த முட்டையை அதனுடைய அம்மாவிடம் சேர்த்தால் என்ன? பாவமில்லையா அந்தப்பறவை! “
யாருடைய முட்டைன்னு தெரியாமல் எப்படி சேர்ப்பாய்? “
பறக்கிற எல்லோரிடமும் கேட்போம்..”
குண்டுத்தாத்தாவுக்கு மனசில்லை. ஆனால் சுள்ளான் பேச்சைத் தட்டமுடியவில்லை. சுள்ளானைப்போல அறிவாளி எறும்பு அவர்களுடைய கூட்டத்தில் இல்லை. உடனே செய்தி பறந்தது. எறும்புகள் எல்லாம் சேர்ந்து அந்த முட்டையைத் தூக்கிக் கொண்டு நடந்தார்கள். முன்னால் சுள்ளான்
கொண்டு சேர்ப்போம் அண்ணே
கொண்டு சேர்ப்போம்
முட்டையை அம்மாவிடம்
கொண்டு சேர்ப்போம்..”
என்று பாடிக் கொண்டே போனது. அப்போது எதிரே ஒரு காகம் ஒரு வயல் எலியைப் பிடிப்பதற்காக பறந்து வந்தது. அது பிடிப்பதற்குள் அந்த எலி ஓடி வரப்பில் இருந்த வளைக்குள் ஒளிந்து கொண்டது. ஏமாந்து திரும்பிய காகத்திடம்,
அக்கா அக்கா காக்காக்கா
உங்க முட்டையா பாருக்கா..” என்று கேட்டது சுள்ளான். காகம் அந்த முட்டையைப் பார்த்தது.
கா கா காக்காஇல்லை தம்பிகளா.. என்னோட முட்டையில இளநீல நிறத்தில புள்ளி போட்டிருக்கும்..  ரொம்பப்பெரிசு.. நான் மரத்தில கூடு கட்டி முட்டையிடுவேன்.. இது என்னோட முட்டையில்லை தம்பிகளா?..கா காகா காஎன்று சொல்லிவிட்டு பறந்து விட்டது. எறும்புகள் மறுபடியும் முட்டையைச் சுமந்து கொண்டு முட்டையின் அம்மாவைத் தேடிப் போனார்கள். வயல் வரப்பில் ஒரு ஓணான் கண்களை உருட்டி ஆசையோடு எறும்புகளைப் பார்த்தது. நாக்கைச் சப்புக் கொட்டி, முதுகைத் தூக்கிக் கொண்டு தலையை ஆட்டியது. சுள்ளான் அதற்கு பக்கத்தில் போகாமல் தூரமாய் நின்று கொண்டு,
முட்டைக்கண்ணு ஓணானே
நாக்கு நீண்ட ஓணானே
முட்டையைப் பாரு ஓணானே
உன்னோடதா ஓணானே
என்று கேட்டது. உடனே ஓணான் திரும்பி முட்டையை ஒரு கண்ணாலும், எறும்புகளை இன்னொரு கண்ணாலும் பார்த்தது. வாலை ஆட்டிக் கொண்டு எங்கோ பார்ப்பது போல பார்த்துக் கொண்டு,
என்னோட முட்டை ரொம்பச்சிறுசுவெள்ளையா இருக்கும்.. பல்லிமுட்டையை விட கொஞ்சம் பெரிசா இருக்கும்இது என்னோட முட்டையில்லை… “ என்று சொல்லிக் கொண்டே எறும்புகளைப் பிடிக்க நாக்கை நீட்டியது. ஆனால் அதற்குள் எறும்புகள் வெகுதூரம் போய் விட்டன. நல்லவேளை பிழைத்தோம் என்று சுள்ளான் நினைத்தது. அப்போது எங்கிருந்தோ சர்ரென காட்டுப்புறாக்கள் கூட்டமாய் வயலில் வந்திறங்கின.
உயரே பறக்கும் புறாக்கா
உன்னைத் தானே பாருக்கா
உன்னோட முட்டையா பாருக்கா
உடனே தாரோம் சொல்லுக்கா..”
என்று சுள்ளான் பாடியது. புறாக்கள் குனிந்து நெல்லைக் கொத்துவதிலே  மும்முரமாக இருந்தன. சுள்ளான் காத்திருந்தது. தலை நிமிர்ந்த ஒரு புறா,
இல்லையில்லை தம்பிகளா
எங்க முட்டையில்லை..
அவ்வளவு பெரிசுமில்லை
இவ்வளவு சிறுசுமில்லை
இவ்வளவு அழுக்குமில்லை
அவ்வளவு வெள்ளையுமில்லை
எங்க முட்டையில்லை
இல்லையில்லை தம்பிகளா
என்று சொல்லி விட்டு மறுபடியும் நெல்லைக் கொத்தத்தொடங்கியது. எறும்புகள் மறுபடியும் தங்கள் பயணத்தைத் தொடர்ந்தன. வரப்பில் ஒரு கௌதாரி தன் குஞ்சுகளுடன் கரையான் புற்றைக் கிளைத்து, கெ கெ கெ என்று குஞ்சுகளை அழைத்து இரை எடுக்கக் கற்றுக் கொடுத்துக் கொண்டிருந்தது.
அம்மா அம்மா கௌதாரி
சும்மா கொஞ்சம் பாரும்மா
உன்னோட முட்டையா சொல்லும்மா
சொன்னா தாரோம் செல்லம்மா
என்று சுள்ளான் கேட்க, கௌதாரி நிமிர்ந்து பார்த்து,
முட்டையின் அம்மா நானில்லை
என் முட்டையில் புள்ளிகள் இருக்காது..
நான் இட்ட முட்டைகள் அஞ்சு
பொரிச்ச குஞ்சுகளும் அஞ்சு
முட்டையின் அம்மா நானில்லை..”
என்று சொல்லி விட்டு கரையானைப் பிடித்து குஞ்சுகள் அருகில் போட்டது. எறும்புகள் மீண்டும் தங்கள் பயணத்தைத் தொடர்ந்தன. அப்போது குண்டுத்தாத்தா சுள்ளானுக்கு முன்னால் போய்,
டேய் துடுக்குப்பயலே! நீ வேண்டாதவேலை பார்க்கிறாய்.. இப்படியே முட்டையை போட்டுட்டு போவோம்.. சொன்னாக்கேளு..”
என்று கத்தியது. அப்போது தான் ஒரு பறவையின் அழுகைக்குரல் கேட்டது.
நான் போட்ட தங்கமுட்டை காணலியே
நான் போட்ட வைரமுட்டை காணலியே
நான் போட்ட பட்டுமுட்டை காணலியே
எங்கதைய யார் கேப்பா
எங்கண்ணீரை யார் துடைப்பா
அந்தப் பாட்டைக்கேட்ட சுள்ளான் அழுது கொண்டிருக்கிற அந்தப்பறவையைத் தேடியது. ஒரு புதர்ச்செடிக்குள் தலையை புதைத்துக் கொண்டு ஒரு காடை தேம்பித் தேம்பி அழுது கொண்டிருந்தது. சுள்ளான் அதற்கு முன்னால் போய்,
அழாதே காடையக்கா
தேம்பாதே காடையக்கா
முட்டையைப் பாருக்கா
கண்ணீரை துடையக்கா
என்று சொன்னதைக் கேட்டதும் காடை உடனே தலையைத் திருப்பி அந்த முட்டையைப் பார்த்தது. புள்ளிபோட்ட அரக்கு கலர் முட்டையைப் பார்த்ததும் அதன் கண்கள் மின்னின. கீச் கீச் கீச் என்று கத்திக்கொண்டு அந்த முட்டையைச் சுற்றிச் சுற்றி வந்தது. சுள்ளானுக்கும், குண்டுத்தாத்தாவுக்கும் முட்டையைச் சுமந்து கொண்டு வந்த எறும்புகளுக்கும் நன்றி சொன்னது.
என்னோட தங்க முட்டை
என்னோட வைரமுட்டை
கொண்டு வந்த எறும்புகளே
உங்களுக்கு கோடி நன்றி
என்று மகிழ்ச்சியில் கூத்தாடியது. சுள்ளான் மற்ற எறும்புகளிடம்
இது காக்காமுட்டையில்லை.. ஓணான் முட்டையில்லை, புறா முட்டையில்லை, கௌதாரி முட்டையில்லை  இது ஒரு காடை முட்டை.. “ என்று சொல்லிக் கொண்டிருந்ததைப் பெருமையுடன் குண்டுத்தாத்தா பார்த்துக் கொண்டிருந்தது.

நன்றி - மாயாபஜார்





No comments:

Post a Comment