Tuesday 28 May 2019

குழந்தையின் கிறுக்கல்கள்


குழந்தையின் கிறுக்கல்கள்
உதயசங்கர்

1.   ஆதிமனிதனின் முதல் வெளிப்பாடே கிறுக்கல்கள் தான். குகைச்சித்திரங்கள் மொழி தோன்றுவதற்கு முன்பே ஓவியங்கள் உருவாகியிருப்பதைச் சொல்கின்றன. எனவே தான் குழந்தைகள் அந்த ஆதியுணர்வின் தூண்டுதலாலேயே கையில் கிடைத்தவற்றைக் கொண்டே கிறுக்கத்தொடங்குகின்றன.
2.   குழந்தைகள் கிறுக்குவதில் ஒரு சுதந்திர உணர்வை அடைகின்றனர். படைப்பூக்கத்தின் ஆரம்பவெளிப்பாடு தான் அந்தக்கிறுக்கலகள்.
3.   கிறுக்கல்களில் கிடைக்கும் சுதந்திரம் குழந்தைக்கு மகிழ்ச்சியைத் தருகிறது. தன்னால் ஒரு காரியத்தைச் செய்யமுடியும் என்ற தன்னம்பிக்கையைத் தருகிறது.
4.   கிறுக்கல்கள் குழந்தையின் மூளையில் முளைவிடும் சிந்தனாசக்தியின் துவக்கம் என்பதைப் புரிந்து கொள்ளவேண்டும்.
5.   கிறுக்கல்கள் குழந்தைகளின் மனஎழுச்சியின் வெளிப்பாடு. ஒழுங்கற்ற அந்தக்கோடுகள், கட்டங்கள், முக்கோணங்கள், வட்டங்கள், அரைவட்டங்கள் எல்லாம் குழந்தைகளுக்குப் பரவச உணர்வைத் தருபவை.
6.   குழந்தைகள் கிறுக்கும்போது அதன் முகத்தைக் கவனியுங்கள். அப்படி ஒரு தீவிரத்தன்மை தெரியும். அந்தத் தீவிரம் அந்தக்குழந்தையிடம் ஒருமையுணர்வை ஏற்படுத்தும்.
7.   குழந்தைகளைக் கிறுக்கவிடுங்கள். அந்தக் குழந்தை ஆளுமைத்திறன் கொண்டதாக மாறிவிடும்.
8.   சுவற்றிலோ, புத்தகத்திலோ, நோட்டிலோ, கிறுக்கியதற்காக ஒருபோதும் குழந்தைகளைத் திட்டாதீர்கள். குழந்தைகளிடம் முளைவிடும் படைப்பூக்கம் கருகிவிடும்.
9.   குழந்தைகள் கிறுக்குவதற்கென்று கரும்பலகை, நோட்டு, வெள்ளைத்தாள்களைக் கொடுங்கள். கிறுக்கும்போது தலையிடாதீர்கள். இப்படி எழுதவேண்டும், இப்படி வரைய வேண்டும் என்று திருத்தாதீர்கள்.
10.  குழந்தைகள் இயல்பிலேயே கற்றுக்கொள்வதில் தீராத பற்றுக் கொண்டவர்கள்.  பிறந்தநாளிலிருந்து ஒவ்வொரு கணமும் ஒவ்வொரு நொடியும் கற்றுக்கொண்டேயிருக்கிறார்கள். அவர்களை ஒழுங்குபடுத்துவதாக நினைத்து அவர்களுடைய படைப்புத்திறனைத் தடைசெய்யக்கூடாது.
11.  கிறுக்குகிற எல்லாக்குழந்தைகளும் ஓவியத்தைத் தங்கள் தொழிலாகக் ( பொதுவாக நமது சமூகம் கலை இலக்கியம் மீது கொண்டுள்ள அசூயை தான் காரணம் ) கொண்டுவிடுவார்களோ என்று பெற்றோர்கள் பயப்படவேண்டாம். அது தன்னை வெளிப்படுத்தும் ஒரு துவக்கநிலை. பல குழந்தைகள் வேறு வேறு ஆர்வத்தைக் கைக்கொண்டுவிடுவார்கள்.
12.  குழந்தைகள் கிறுக்குவதற்கு ஏற்ற வகையில் ஆபத்தில்லாத சுலபமாக அழிக்கக்கூடிய வண்ணப்பென்சில்களையோ, கிரேயான்களையோ கொடுங்கள்.
13.  தான் கிறுக்கியதைக் காட்டும் குழந்தையைக் கவனியுங்கள். அந்தக்கிறுக்கலை அங்கீகரியுங்கள். ஆமோதியுங்கள். பாராட்டுங்கள். குழந்தைகள் அங்கீகரித்தலை ( பெரியவர்கள் மட்டும் என்ன விதிவிலக்கா? ) மிகவும் விரும்புவார்கள்.
14.  குழந்தைகளை பழக்கப்படுத்தப்படாத விலங்குகளாக நினைக்காதீர்கள். அவர்களைப் பழக்கப்படுத்துவது, ஒழுக்கம், பண்பாடு, பழக்கவழக்கம், சொல்லித்தரவேண்டியது பெற்றோர், ஆசிரியர் கடமை என்று கற்பிதம் செய்யாதீர்கள். நீங்கள் அந்த ஒழுக்கம், பண்பாடு, பழக்கவழக்கம் இவற்றில் சரியாக இருங்கள். குழந்தைகள் கற்றுக்கொள்வார்கள்.
15.  குழந்தைகளுக்கு அறிமுகப்படுத்துங்கள். ஆர்வத்தைத் தூண்டுகிற புறச்சூழலை உருவாக்குங்கள். அழுத்தம் தரவோ, கண்டிக்கவோ, திட்டவோ, அடிக்கவோ செய்யாதீர்கள். ஏனெனில் ஒவ்வொரு செயலுக்கும் அதற்கு இணையான எதிர்ச்செயல் உண்டு.
16.  குழந்தைகள் குட்டி மனிதர்கள் என்று எப்போதும் கவனம் வையுங்கள்.

No comments:

Post a Comment