Tuesday 9 June 2015

எங்கிருந்து தொடங்குவது?

எங்கிருந்து தொடங்குவது?

உதயசங்கர்

இந்திய நாகரீகத்தை வேதகாலத்திலிருந்து தொடங்குகிறார்கள் பழமைவாதிகள். அதற்கு வேதங்களை ஆதாரமாகக் கொள்கிறார்கள். ஒரு சமூகத்தின் வரலாற்றை நாகரீகத்தை பண்பாட்டை, வாழ்க்கை முறையை, அதன் வழிபாட்டு முறையை, அறிந்து கொள்ள இலக்கியப் பிரதிகள் மட்டும் போதுமானவைதானா? அதற்கு துல்லியமான பொருள்சார் பண்பாட்டு சான்றுகள், அகழ்வாராய்ச்சிகள், தொல்லியல் சான்றுகள், மானிடவியல் சான்றுகள், இலக்கியச் சான்றுகள் என்று ஏராளமான தரவுகளை ஒருங்கிணைத்தே நாம் கடந்த கால வரலாற்றை, சமூகத்தைப் புரிந்து கொள்ள முடியும். பெரும்பாலும் இலக்கியத்தில் அந்தந்தக் கால வரலாறு எழுதப்படுவதில்லை. இலக்கியச்சான்றுகளில் அந்தந்தக் கால சமூகத்தின் அறவிழுமியங்கள், ஆசை, விருப்பம், வெற்றிகள், ( பெரும்பாலும் தோல்விகள் இருப்பதில்லை ) இல்லாமைகள், காதல், என்று உணர்வு சார்ந்த விழுமியங்களே மிகுந்திருக்கும். இந்த உணர்வுச்சித்தரிப்பிற்கு இடையில் ஆங்காங்கே விரவிக் கிடக்கும் சில பௌதீகச்சான்றுகளை துணையாக எடுத்துக் கொள்ளலாம். ஆனால் அதையே முழுவதுமாக வரலாற்றுத் தரவாக எடுக்கும் போது தவறான முடிவுகளுக்கே கொண்டு சேர்க்கும்.
சமகால அரசியல் பலன்களுக்காக பெரும்பாலான அரசியல் சக்திகள் தங்கள் பெருமைகளை வரலாற்றுக் காலத்துக்கும் முன்னால் கொண்டு செல்ல முயற்சிப்பதும், வரலாற்றின் பொன்னொளியில் தங்களுடைய முன்னோர்களை முழுக்காட்டி தற்காலப்பலன்களுக்கு அவர்களை முதலீடாக்குவதும் நிகழ்கிறது. இதனால் வரலாற்றை திரித்து அல்லது மறைத்து அல்லது உருமாற்றி எழுதுவது நடக்கிறது.
 ஒரே மொழியைப் பேசுபவர்கள் அல்லது அந்த மொழிக்குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் ஒரே இனமாக இருக்க வேண்டியதில்லை. இனம் என்பது ஒரே மொழி பேசுபவர்கள் அல்ல. அப்படி எடுத்துக் கொண்டால் இந்தியாவைப் பிற்காலத்தில் ஆராய்ச்சி செய்பவர்கள் இங்கே இந்தியா முழுவதும் இருக்கும் ஆங்கிலத்தின் செல்வாக்கைக் கண்டு இந்தியாவில் 20 ஆம் நூற்றாண்டிலிருந்து ஆங்கிலேய இனமே வாழ்ந்ததாகப் பிழையாக நினைக்கக்கூடும். எனவே ஆரிய மொழிக்குடும்பத்தைச் சேர்ந்த பல்வேறு மக்கள் திரள்  இந்தியாவுக்குள் அவ்வப்போது வந்திருக்கின்றனர். மேய்ச்சல் நிலங்களைத் தேடி வந்த இடையர்கள் கூட்டம் இந்தியாவில் குடியேறியவர்கள். அவர்கள் அனைவரும் ஒரே இனக்குழுவினர் அல்ல. குடியேறிய ஆரிய மொழி பேசும் அந்த இனங்களுக்கிடையிலும் பகைமையும் சண்டைகளும் நடந்திருக்கின்றன பகைக்கும் சண்டைகளுக்கும் அப்போதிருந்த காரணம் சமயக்கோட்பாட்டிலிருந்த வேறுபாடுகளே என்பதுவும் ரிக் வேதப்பாடல்களில் மிகத்தெளிவாகக் குறிப்பிடப்படுகின்றன. அந்தவேதகாலத்தில் சப்த சிந்து பிரதேசத்தில் புரு, யது, துர்வஷ், அணு, திருஹ்ய, என்ற ஐந்து ஆரிய இனக்குழுக்கள் இருந்ததாக ரிக் வேதம் ( 1-108-8 ) கூறுகிறது. பின்னர் இந்த ஐந்து இனக்குழுக்கள் 12 இனக்குழுக்களாகப் பிரிந்திருக்கிறார்கள்..  இந்தியாவுக்குள் ஆரியர்களின் வருகை கி.மு.1500 வாக்கில் .நிகழ்ந்திருக்கிறது. அதற்கு 1500 வருடங்களுக்கு முன்பு அதாவது கி.மு. 3000 மாவது ஆண்டுகளிலே மொகஞ்சோதரா, ஹரப்பா நாகரிகம் மிக முன்னேறியதாக இருந்திருக்கிறது என்று அகழ்வாராய்ச்சிகள் நிருபிக்கின்றன.
சிந்து சமவெளி மக்கள் தாமிரத்தையும் வெண்கலத்தையும் பயன்படுத்தினார்கள். தாமிரத்தினால் ஆன மோதிரங்கள், கோடாரிகள், ஈட்டிகள், கத்திகள், வேல்கம்புகள், மற்றும் காவி நிற மட்பாண்டங்களும் கிடைத்திருக்கின்றன. மிகச் சிறந்த கைவினைஞர்களும் அங்கிருந்திருக்கின்றனர். கல் வேலைப்பாட்டில் சிறந்து விளங்கியிருக்கிறார்கள்., பருத்தி ஆடை தயாரித்திருக்கிறார்கள். கண்ணாடி மணிகள், பாசி மணிகள், இவற்றைக் கோர்த்து மாலைகள் செய்திருக்கிறார்கள். தந்த வேலை, சுண்ணாம்பு உற்பத்தி, செய்பவர்கள் இருந்திருக்கிறார்கள். ஆடுகள், மாடுகள், பன்றிகள் ஆகியவற்றை வீட்டுப்பிராணிகளாக பழக்கியிருக்கிறார்கள். மாட்டிறைச்சி, சாப்பிட்டிருக்கிறார்கள். அரிசி, கோதுமை, ,கம்பு, அவரை, உளுந்து, பட்டாணி, போன்ற தானியங்களைப் பயிர் செய்திருக்கிறார்கள். கட்டிடக்கலையில் சிறந்தவர்களாக இருந்திருக்கிறார்கள். கோட்டைகள் கட்டப்படிருக்கின்றன. மதிற்சுவர்களின் மீது வீடுகள் கட்டப்பட்டிருக்கின்றன. வீடுகள் சுட்ட மற்றும் சுடப்படாத களிமண்ணால் கட்டப்பட்டிருக்கின்றன. அனைத்து வீடுகளிலும் தனித்தனி அறைகள் குளியலறைகள், குப்பைத்தொட்டிகள், இருந்திருக்கின்றன. பெரும்பாலான வீடுகள் இரண்டு மூன்று தளங்களைக் கொண்டதாக இருந்திருக்கின்றன. மாடமாளிகைகளும் சிறு வீடுகளும் அருகருகே இருந்திருப்பதைப் பார்க்கும்போது வர்க்க வேறுபாடு அங்கே நிலைகொண்டிருந்ததை அறிந்து கொள்ள முடிகிறது. ஒரு நகர நிர்மாணம் மிகவும் திட்டமிடப்பட்டு கட்டியதற்கான அனைத்துச் சான்றுகளும் இருக்கின்றன. நீர் வடிகால் வாய்க்கால்கள், சாக்கடை நீர் வடிகால் வாய்க்கால்கள், கட்டப்பட்டிருக்கின்றன. கழிவு நீர் வெளியேற்றம் ஹரப்பா நாகரிக மக்களின் குறிப்பிடத்தக்க சாதனையாகும்.
விவசாயத்திற்காக நீரைக்கட்டுப்படுத்தும் பல வழிமுறைகளைக் கையாண்டார்கள். மரக்கலப்பையைப் பயன்படுத்தியிருக்கிறார்கள். தாய்த்தெய்வ வழிபாடு இருந்திருக்கிறது என்பது அகழ்வாராய்ச்சியில் கண்டெடுக்கப்பட்ட பெண்ணின் நிர்வாணச்சிலையிலிருந்து தெரிகிறது.அதே போல லிங்கவழிபாடும் இருந்திருக்கிறது. ஹரப்பா மக்கள் இறந்தவர்களைப் புதைக்கும் வழக்கமிருந்திருக்கிறது. 2000 –க்கும் மேற்பட்ட ஹரப்பா முத்திரைகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. ஹரப்பா மக்களின் எழுத்துக்களை இன்னும் வாசித்தறிய முடியவில்லை. அந்த எழுத்துக்களை வாசித்தறியும் போது மேலும் பல விஷயங்கள் தெரியும்.
கி.மு.1800 வாக்கில் ஹரப்பா நகரங்கள் காலியாகி விட்டன. நகரில் வாழ்ந்த மக்கள் அழிந்திருக்க வேண்டும் அல்லது வேறு பகுதிகளை நோக்கி புலம் பெயர்ந்திருக்க வேண்டும். ஹரப்பா நாகரிகம் சிதைந்து அழிந்ததற்கு இரண்டு முக்கியக் காரணிகள் இருந்ததாகச் சொல்லப்படுகிறது. சிந்து மற்றும் ராவி நதிகளின் பாதைகள் மாறியதால் ஒருபுறம் வறட்சியும் மறுபுறம் வெள்ளமும் ஏற்பட்டு சிந்து சமவெளி நகரங்களும் மக்களும் அழிந்திருக்கலாம். அடுத்தது கி.மு.1500 வாக்கில் இந்தியாவுக்குள் வந்த ஆரியர்கள் தொடுத்த யுத்தங்களினால் அழிந்தன. அதற்கு சாட்சியாக குடியிருப்புகள் எரிந்த சாம்பலின் மொத்த அடுக்குகள் கண்டுபிடிக்கப்பட்டன. மொகஞ்சோதராவில் மனித எலும்புக்கூடுகளின் குவியல், ஒரு வீட்டில் கிடந்த எலும்புக்கூடுகளின் குவியல், கிணற்றடியில் கிடந்த பெண்ணின் எலும்புக்கூடு ஆகியவை இந்தப் படையெடுப்பு குறித்த ஆதாரங்களாக கிடைத்திருக்கின்றன. அதே போல ரிக் வேதத்தில் ஆரியர்கள் அல்லாதவர்களின் நகரங்கள் அழிக்கப்பட்டதைப் பற்றிய குறிப்புகள் இருக்கின்றன.
பொதுவாகவே ஆரியர்களை ஆரிய மொழி அதாவது சமஸ்கிருதம் பேசும் ஒரே பண்பாட்டு முறையைக் கொண்ட மக்கள் கூட்டத்தினர் என்றே பார்க்கப்பட்டனர். இந்திய மரபில் இனம் என்ற வரையறை முற்றிலும் அந்நியமானது. அது ஐரோப்பாவின் கருத்தாக்கம். இந்தியாவைப் பொறுத்தவரை மொழி வேறுபாடு, வர்ணாசிரம தர்மத்தின் படிநிலை வேறுபாடு, சமய வேறுபாடு இவையே மாறுபட்ட மக்கள் திரளைப் பிரிப்பதற்கான வரையறை. ஒரு முறை கூட இந்தியாவுக்கு வந்திராத இந்திய வரலாற்றியலாளர் மாக்ஸ்முல்லர்,தான் முதன்முதலில் ஆரிய இனக்கோட்பாட்டை உருவாக்கியவர். ஆரிய மொழிக்குடும்பமான, சமஸ்கிருதம், லத்தீன், கிரேக்கம், ஜெர்மானிக், ரோமான்ஸ்,ஆகிய மொழிகளிடையே இருந்த ஒப்புமையின் காரணமாக மாக்ஸ்முல்லர் இந்திய மற்றும் ஐரோப்பியப் பண்பாட்டின் வழியாக உலகமுழுவதும் விரிந்து பரந்த ஆரிய இனம் என்ற பார்வையை உருவாக்கினார்.
“ நமது மிக நெருங்கிய அறிவுலக உறவினர்களான இந்தியாவின் ஆரியர், சமஸ்கிருதம் என்ற அற்புத மொழியை உருவாக்கியவர்கள், நமது அடிப்படையான கருத்தாக்கங்களின் உருவாக்கத்தில் உடனுழைத்தவர்கள் இயற்கை மதங்களிலேயே மிக இயற்கையான மதத்தின் தந்தையர், மிக வெளிப்படையாகப் பொருள் உணர்த்தும் புராணங்களை இயற்றியவர்கள். மிக நுட்பமான மெய்யியலை உருவாக்கியவர்கள், மிக விரிவான சட்ட இயலைத் தந்தவர்கள்,  ”
என்ற லட்சியச்சித்திரத்தின் மூலம் வேதகாலத்திலிருந்தே இந்தியப்பண்பாடும் நாகரிகமும் தொடங்குவதாக கற்பிக்கப்பட்டது. அது மட்டுமல்லாமல் மொழியையும் இனத்தையும் ஒன்றாக்கிய அபத்தம் நிகழ்ந்தது.  வர்ணாசிரமத்தர்மத்தினை நடைமுறைப்படுத்தியதின்  மூலம் ஆரியர்களின் இனத்தூய்மை பாதுகாக்கப்பட்டதாக சொல்லப்பட்டது. இத்தைகைய கருத்தாக்கத்தின் விளைவே ஜெர்மனியின் ஹிட்லர் தூய ஆரிய இனக்கோட்பாட்டை முன் வைத்து யூதர்களை இன அழிப்பு செயதான். அதையே இந்தியாவின் ஆர்.எஸ்.எஸ். வழிமொழிந்தது..ஆர்.எஸ்.எஸ்ஸின் முகமூடிகளில் ஒன்றான பி.ஜே.பி. இன்று ஆட்சி அதிகாரத்தில் ஏறியதும் வேதகாலத்தை மீண்டும் கொண்டு வருவோம் என்று முழங்குகிறது. இதில் விசித்திரம் என்னவென்றால் வேதகாலத்திற்கு முன்பும் சரி பின்பும் சரி கலப்பில்லாத தூய ஆரிய இனம் என்று ஒன்று கிடையாது ஆரிய இனம் மட்டுமல்ல உலகின் எந்தவொரு இனமும் கலப்பின்றி பல்கிப் பெருகவில்லை என்பது அறிவியல் உண்மை. ஆனால் இந்த ஆரிய இனக்கோட்பாடு இந்தியாவின் மேல்சாதியினருக்கு வேதகாலத்தைப் பொற்காலமாகப் பார்க்கும் பார்வையைக் கொடுத்தது. இதுவே வேத காலத்தை கி.மு. 4000 ஆம் ஆண்டுகளுக்குப் பின் தள்ளவும் ஆரியர்களும் இந்தியாவிலிருந்த பூர்வகுடிகளே என்றும் நிறுவவும், இல்லாத சரஸ்வதி நதியைத் தேடிப்பார்க்கவும், மொகஞ்சோதரா முத்திரையில் உள்ள மாட்டை குதிரையாக மாற்றி வரலாற்றைத் திருத்தவும் தைரியத்தைக் கொடுத்திருக்கிறது. ஆனால் உண்மையில் இந்தியாவின் பண்பாடு ஹரப்பா, மொகஞ்சோதராவிலிருந்து ஆய்வுக்குள்ளாக்கப்பட வேண்டும்.  நாகரிகத்தில் மிக முன்னேறிய ஒரு சமூக அமைப்பு வேதகாலத்திற்கு முன்னால் இருந்திருக்கிறது என்பது நிருபணமாகியிருக்கிறது. இந்தியப் பண்பாட்டின் மூலம் ஹரப்பா அல்லவா? அதாவது கி.மு.3000 ஆண்டுகளிலிருந்தே தொடங்க வேண்டும் இல்லையா? அப்படியானால் ஏன் இந்தியப்பண்பாட்டின் துவக்ககாலம் வேதகாலம் என்றும் ஆரியர்களே அதன் மூலகர்த்தாக்கள் என்றும் நிறுவ முயற்சிப்பது ஏன்? சிவில் சொசைட்டியின் பொதுப்புத்தியில் வேதங்களை புனிதமானதாக, கேள்விக்கப்பாற்பட்ட தெய்வீக நிலைக்கு ஏற்றிவிட்டால் பிராமணியம் மீண்டும் அரியணையில் ஏறவும், சமூக,பொருளாதார, பண்பாட்டு, ஆன்மீக, அதிகாரத்தைக் கைப்பற்றவும் அதை நிரந்தரமாக்கவும் முடியும். இந்தத் திட்டங்களை முறியடிக்க வேதங்களின் உண்மையான உள்ளடக்கம் பற்றி, மநுதர்ம தந்திரங்களைப் பற்றி, இந்தியாவின் பன்முகத்தன்மை பற்றி, பொய்யான மேல்நிலையாக்கம் குறித்த மாயைகள் குறித்து மக்களின் பொதுப்புத்தியில் இருக்கும் சித்திரங்களை தகர்க்க மீண்டும் மீண்டும் தலையீடு செய்து கொண்டிருக்க வேண்டும்.
அப்போது தான் அறிவியல்பூர்வமற்ற பொய்யும் புனைசுருட்டும் புளுகு மூட்டைகளை அவிழ்த்து விடும் இந்திய வலது சாரிகளின் குரூரமுகம் சாமனிய மக்களுக்குப் புரியும். இந்திய நாகரீகத்தின் உண்மையான மதசார்பற்ற முகம் வரலாற்றின் வெளிச்சத்தில் ஒளிரும்.
துணை நூல்கள்- 1. பண்டைக்கால இந்தியா-டி.என்.ஜா
                 2.வரலாறும் கருத்தியலும் – ரொமிலா தாப்பர்

                  3. ரிக் வேதகால ஆரியர்கள்- ராகுல் சாங்கிருத்தியாயன்.

3 comments:

  1. This comment has been removed by the author.

    ReplyDelete
  2. இன்று மொழி, மதம் சார்ந்து இனவியல் முன்னிறுத்தப் படுகின்றது அனால் மரபியல் நோக்கில் இந்தியர்கள் அனைவரும் கலப்பினமாகவே உள்ளனர். ஆதி தென்னிந்திய குழு, ஆதி வட இந்திய குழு என்ற இரு குழுக்களின் கலவையே இன்றைய இந்திய சமூகம் என்பதே மரபியல் சான்று. ஆதி தென்னிந்திய குழு என்பது இந்திய பூர்விகம் உடைய பண்டைய மக்கள். இந்த குழுவின் மரபணு அதிகம் தென்னிந்தியாவில் காணப்படுவதால் ஆதி இந்திய சமூகம் கருப்பினமாகவும், திராவிட மொழி பேசுவோராகவும் இருந்திருக்கலாம் என கருதலாம். இதனை இரிக் வேதமும், சங்க இலக்கியங்களும், நாட்டார் கதைகளும் உறுதி செய்கின்றன. அதாவது இந்தியாவின் பெரும்பான்மை மக்கள் முக்கியமாக பிற்படுப்பத்தப் பட்டோர், தாழ்த்தப்பட்டோர், பழங்குடிகள் அனைவரும் ஒரே இனம் தான்.

    ReplyDelete