Saturday 10 May 2014

குழந்தைகளின் கதை உலகம் பெரிது….

DSC01118 புத்தக மதிப்புரை

குழந்தைகளின் கதை உலகம் பெரிது….

வீரபத்ர லெனின்

குழந்தைகள் நம்மிடம் கதை கேட்டால் ஒரு ஊருல ஒரு ராஜா என்று ஆரம்பித்து அவர்கள் தூங்கும் வரை பல கதைகளை அடுக்கிக் கொண்டே போவோம். இப்படிப் போகும்போது அவர்களும் சற்றும் மனம் தளராத விக்ரமாதித்தியன் போல பல கேள்விகளை கேட்பார்கள். அவற்றுக்கும் பதில்களைச் சொல்லிக் கொண்டே போவோம்.

நாம் சிறு வயதில் கேட்ட கதைகளை ஞாபகப்படுத்திக் கூறுவோம். இல்லையென்றால் படித்ததில் பிடித்ததைச் சொல்லுவோம். பலபேருக்கு ஒரு சில கதைகளுக்கு மேல் தெரியாது. சொன்ன கதைகளையே நாம் சொல்லும்போது, “ இதத்தான நேத்தும் சொன்னீங்க, அதத்தானே அன்னைக்கு சொன்னீங்க..” எனக் கேட்டு நம்மைத் துளைத்தெடுத்து விடுவார்கள்.

குழந்தைகள் கதைதானே கேட்கிறார்கள் நாம் ஏதாவது ஒன்றை அடித்து விட வேண்டியது தான் என்ற எண்ணமும் நமக்கு இருக்கக்கூடாது. ஏனென்றால் நாம் கூறிய கதைகள் அவர்கள் மனதில் பசுமரத்தில் ஆணிபோல் பதிந்து விடும். நாம் சொல்லும் கதைகள் பயனுள்ள அறிவை விரிவு செய்கிற விதத்தில் இருக்க வேண்டும்.

இப்படிச் சொல்லும் கதைகளுக்கு பாடப்புத்தகங்களில் உள்ள கதைகளோடு மற்ற பிற கதைப்புத்தகங்களையும் படிக்க வேண்டிய கட்டாயம் இருக்கிறது. இதை எளிமைப்படுத்தும் விதத்தில் பாரதி புத்தகாலயம் “ புக்ஸ் ஃபார் சில்ரன் “ என 15 தலைப்புகளில் வண்ணப்படங்களுடன் குழந்தைகளுக்கான கதைகளை சிறு புத்தகக்கொத்தாக வெளியிட்டுள்ளது.

என்னுடைய காக்கா, சின்னத்தேனீ பாடுது, மாடப்புறாவின் முட்டை தொலைந்து போன கதை, புலி வருது புலி, ஐந்து பூனைக்குட்டிகளின் கதை, கொள்ளு பிறந்த கதை, யானை வழி, யானையும் தையல்காரனும், மல்லனும் மகாதேவனும், யானையும் அணிலும், மண்ணாங்கட்டியும் காய்ந்த இலையும், வாலறுந்த குரங்கின் கதை, ஆமையும் குரங்கும் வாழை நட்ட கதை, கொக்கும், கொசுவும், மரங்கொத்தியும் உப்பு விற்ற கதை, இந்த 15 தலைப்புகளில், படித்தால் குழந்தைகளுக்கு எளிதில் புரிந்து கொள்ளும் விதத்தில் உதயசங்கர் அழகிய தமிழைக் கையாண்டுள்ளார். புத்தகத்தில் உள்ள ஓவியங்கள் அனைத்தும் சிறப்பு.

மல்லனும் மகாதேவனும் என்ற கதையில் இரண்டு நண்பர்கள் காட்டுவழியாகச் செல்லும்போது கரடி ஒன்று வந்து விடுகிறது. இதனால் இருவரும் பயந்து விடுகின்றனர். மல்லன் கரடியிடம் மாட்டிக் கொள்ளாமல் இருக்க ஒரு மரத்தின் மீது ஏறி அமர்ந்து கொள்கிறான். மகாதேவனோ என்ன செய்வது என்று தெரியாமல் தன் சிறுமூளையைக் கசக்கி இறந்தாற் போல் நடித்து தன் உயிரைப் பாதுகாத்துக் கொள்கிறான். இந்தக் கதையில் பிரச்னைகள் வந்தால் பயந்து விடாமல் அதை எப்படிச் சமாளிப்பது என்பதையும் ஆபத்து என்றால் நண்பனை விட்டு விட்டு நாம் மட்டும் தப்பித்தால் போதும் என்ற கெட்ட எண்ணம் இருக்கக்கூடாது என்பதையும் உணர்த்துகிறது.

இக்கதையைக் குழந்தைகள் கேட்டாலும், படித்தாலும், அவர்களுக்கு ஒரு தன்னம்பிக்கையும் மற்றவர்களை எந்தச் சந்தர்ப்பத்திலும் கைவிடாமல் பாதுகாக்க வேண்டும் என்ற எண்ணமும் அந்தப் பிஞ்சுகள் மனதில் பதியும்.

மண்ணாங்கட்டியும் காய்ந்த இலையும், என்ற கதை ஒருவருக்குப் பிரச்னை என்றால் அவரை எப்படி காப்பாற்றுவது என்று கூறுகிறது. சின்னத்தேனீ பாடுது என்ற சிறிய கொத்தில் பாடுது, கேளு பாப்பா கேளூ, என்று குழந்தைகளைக் கேள்வி கேட்கும் அறிவைப் பாடல் மூலம் தூண்டுகிறார் உதயசங்கர்.

குழந்தைகளின் படிப்பு ஆர்வத்தைத் தூண்ட பெற்றோர்கள் இந்த 15 புத்தகக்கொத்தை வாங்கித் தர வேண்டும். பாரதி புத்தகாலயம் ஏற்கனவே இதுபோல் சில கதைப் பூங்கொத்துகளை வெளியிட்டுள்ளன. நல்ல முயற்சி. தொடர வேண்டும். நாமும் குழந்தைகளுக்கு விளையாட்டுச் சாமான்கள் வாங்கிக் கொடுப்பதுபோல் புத்தகங்களை வாங்கிக் கொடுக்கும் கலாச்சாரத்தைப் பின்பற்ற வேண்டும். கதைகளை விரும்பாத குழந்தைகள் இல்லை. இத்தகைய புத்தகங்களின் தேவை வற்றுவதில்லை.

15 நாடோடிக் கதைகள்

ஆசிரியர்கள்- கெ.டி.ராதாகிருஷ்ணன், சுஜா,சூசன், ஜார்ஜ், இ.என்.ஷீஜா, விமலாமேனன், ராமகிருஷ்ணன்குமரநல்லூர்,

தமிழில்- உதயசங்கர்

வெளியீடு- புக்ஸ் ஃபார் சில்ரன்

7, இளங்கோ சாலை,

தேனாம்பேட்டை,

சென்னை-600018

விலை-ரூ.525/

3 comments:

  1. நூல் அறிமுகத்திற்கு நன்றி ஐயா

    ReplyDelete
  2. பகிர்வுக்கு நன்றி!

    ReplyDelete
  3. குழந்தைகளின் கதை உலகம் பெரிது…. = திரு உதயசங்கர் அவர்களின் புத்தக மதிப்புரை. எனது பக்கத்தில் பகிர்கிறேன். நன்றி சார் திரு உதயசங்கர்.

    ReplyDelete