Tuesday 4 September 2012

அமைதியின் வாழ்க்கை

Vector-mythical-creature-1 உதயசங்கர்

ஒரு பேரமைதி சிதறி

பல சிற்றமைதிகளாக

ஒடுங்கிக் கொண்டிருக்கிறது

எந்த ஒரு அமைதிக்கும்

தான் ஏன் அமைதியாக இருக்கிறோம்

என்று தெரியவில்லை

எந்த ஒரு அமைதிக்கும்

தான் எப்படி மௌனமாக்கப்பட்டோம்

என்று தெரியவில்லை

எந்த ஒரு அமைதிக்கும்

தான் எதற்காக ஒரு குண்டூசி

முனையளவும் சப்தம் எழுப்பாமல்

இருக்கிறோம் என்று தெரியவில்லை

அமைதி தன் துயரத்தை

அமைதி தன் அழுத்தத்தை

அமைதி தன் நெருக்கடியை

நாகரீகமாகக் கைக்குட்டையில்

துடைத்து மடித்து வைத்துக் கொண்டது.

வன்முறைகளின் சித்திரவதை பொங்கி

அலையடித்து உயிரைக் காவியபோதும்

கண்ணீரைக் கண்களால் விழுங்கி

யாரும் பார்த்துவிடாமல் மறைத்துக் கொண்டது

வாயிலிருந்து ஒரு சொல் வராமல்

கவனமாக இருந்தது

அமைதி அமைதியாக இருப்பது முக்கியம்

என்று அவர்கள் நினைத்தார்கள்

எனவே

அமைதி அமைதியாக இருந்தது.

பல சிற்றமைதிகள் சேர்ந்து

ஒரு பேரமைதியாகக் கவிந்து கொண்டிருந்தது.

புத்தரின் பல்லில் ரத்தக்கறை.

1 comment:

  1. அருமையான கவிதை.
    நன்றி திரு உதயசங்கர்.

    ReplyDelete