Thursday 27 September 2012

நெருப்போடு விளையாடினால்?

kids indian மலையாளம்- மாலி

தமிழில்- உதயசங்கர்

 

சாயங்காலம் ஆகி விட்டது. அம்மா குத்துவிளக்கு ஏற்றினாள். அதன் முன் உட்கார்ந்து நாமாவளி சொன்னாள். அவள் கூடவே மினியும் சொன்னாள்.

குத்துவிளக்கில் திரி இருந்தது. அதில் நெருப்பு எரிந்து கொண்டிருந்தது. காற்று வீசவில்லை. அதனால் தீபம் அசையாமல் நின்று எரிந்து கொண்டிருந்தது. பார்க்கும் போது எப்படி இருந்தது தெரியுமா? நெற்றியில் வைக்கிற கோபி பொட்டைப் போல இருந்தது. நிறமோ சிவந்த பவழம் போல இருந்தது. என்ன அழகு?

மினிக்கு தீயென்றால் எவ்வளவு இஷ்டம் தெரியுமா?

அம்மா நாமாவளி சொல்லி முடிந்த பிறகு எழுந்து உள்ளே போவதற்குத் தயாரானாள். மினி அங்கேயே இருந்தாள்.

“அம்மா நான் தீயைக் கொஞ்சம் தொட்டுப் பாக்கட்டா?” என்று கேட்டாள்.

“ வேண்டாம் கண்ணே! கை சுட்டுரும்..” என்று அம்மா எச்சரித்தாள்.

”அப்படின்னா என்ன?” என்று மினி யோசனையுடன் கேட்டாள்.

“கண்ணு, தோல் பொத்துப் போகும்.. ரெம்ப வலிக்கும்.. நீ உருண்டு புரண்டு அழுவே.. அதெல்லாம் வேண்டாம்..” என்று சொல்லிவிட்டு அம்மா உள்ளே போய் விட்டாள்.

மினி தீயையே பார்த்துக் கொண்டு உட்கார்ந்திருந்தாள். ஹா..என்ன அழகு! அருகில் போய் அதைப் பிடிக்க ஆசை வந்தது.

“தீயே உன்னைக் கொஞ்சம் தொட்டுக்கிடட்டுமா?” என்று மினி கேட்டாள். தீயின் சுடர் உச்சி கொஞ்சம் சிணுங்கியது.”வேண்டாம் மினி, என்னைத் தொடாதே..தொட்டால் சுடும்..” என்று தீ பதில் சொன்னது.

ஆனால் மினி கேட்கவில்லை. அவள் வலது கையை நீட்டினாள். சுண்டுவிரலை தீக்குள் நீட்டினாள். பட்டென ‘அய்யோ’ என்ற அலறல் கேட்டது. சத்தம் கேட்டு அம்மா பாய்ந்து வந்தாள்.அவள் பார்த்தது என்னதெரியுமா? மினி வலது கையை உதறுகிறாள். அங்கேயே குதிக்கிறாள். சத்தம் போட்டு அழுகிறாள்.!

”நான் அப்பவே சொன்னேன்ல..” என்று அம்மா கோபப்பட்டாள். உடனே அம்மாவின் கோபம் மாறிவிட்டது.அவள் உள்ளே ஓடினாள். தீப்புண்ணுக்கான மருந்தோடு திரும்பி வந்தாள்.

“வலது கையை நீட்டு!” என்று அவசரப்பட்டாள்.

மினி வலது கையைப் பின்னால் இழுத்தாள். அம்மா கையை இழுத்துப் பிடித்தாள். விரலில் மருந்து தேய்த்தாள். துணியைச் சுற்றிக் கட்டினாள்.

மினிக்கு இரவில் கொஞ்சம் வேதனை இருந்தது.விடியும் போது வேதனை இல்லை. ஆனால் ஒன்று மட்டும் மறக்கவில்லை. வேதனையின் ஞாபகம்.

மறுபடியும் மாலை வந்தது. அம்மா குத்துவிளக்கு ஏற்றினாள். நாமாவளி சொல்ல உட்கார்ந்தாள். மினி எங்கே இருந்தாள் தெரியுமா? குத்துவிளக்கிலிருந்து கொஞ்ச தூரம் தள்ளி உட்கார்ந்திருந்தாள். நாமாவளி சொல்லி முடிந்தது.

“மினி இடது கையில் சுண்டுவிரல் இருக்கில்ல..? அதைத் தீயில நீட்டு. இன்ன..” என்று அம்மா சிரித்துக் கொண்டே சொல்லிவிட்டு உள்ளே போனாள். மினி தீயையே பார்த்துக் கொண்டிருந்தாள்.

“அய்ய.ஆளைப்பாரு..எனக்கு வலிக்க வச்சில்ல..மோசமான தீ நீ!” என்று அவள் சொன்னாள். அப்போதும் தீ சொன்னது,” மினி நேத்து நான் உன்னை எச்சரிச்சேன்..நீ கேக்கலை..என்னைத் தொட்டவரை நான் காயப்படுத்துவேன்..எனக்கு அதில் விருப்பமில்லை..ஆனால் நான் அப்படி உருவாகியிருக்கிறேன்..நான் என்ன செய்யட்டும்..?”

அடுத்த நாள் மாலை அம்மா கேட்டாள்,” என்ன மினி தீயைத் தொடலையா?”

அதற்கு மினி,” இனி ஒருநாளும் நான் தீயைத் தொடமாட்டேன்.” என்றாள்.

No comments:

Post a Comment