Showing posts with label அப்பாஸ். Show all posts
Showing posts with label அப்பாஸ். Show all posts

Saturday, 12 December 2015

விந்தைவெளியில் சிறகுகள் விரித்த கவிஞன் அப்பாஸ்

 விந்தைவெளியில் சிறகுகள் விரித்த கவிஞன் அப்பாஸ்

உதயசங்கர்

கலை என்னும் மாயத்தை எப்படி புரிந்து கொள்வது?. கலை யதார்த்தத்தைப் பிரதிபலித்தாலும் யதார்த்தமல்ல. கலையில் யதார்த்ததின் சாயல் இருந்தாலும் கலை யதார்த்தத்துக்குப் பதிலியாக முடியாது. கலையினால் யதார்த்த உலகத்தை பொருண்மையாக மாற்றி விட முடியாது. அது அதன் வேலையுமில்லை. ஆனால் கலை மனித மனங்களில் உள்ளார்ந்து ஓடுகின்ற அறம் சார்ந்த உணர்வுகளை மீட்டும் வல்லமை கொண்டது. அந்த மீட்டலுக்காக தனக்கேயுரித்தான பிரத்யேகமான இசைக்கோர்வைகளைக் கொண்டிருக்கிறது. தனக்கேயுரித்தான வண்ணங்களைக் கொணடிருக்கிறது. தனக்கேயுரித்தான குழூஉக்குறிகளைக் கொண்டிருக்கிறது. அந்த இசையின் மீட்டலில் மனித மனம் வசீகரிக்கப் படுகிறது.
வசியப்படுத்தப்படுகிறது. மெய்ம்மை உணர்வுநிலையில் மிதக்கிறது. புதிய அநுபவங்களைப் பெறுகிறது. அந்த அநுபவங்களிலிருந்து தனக்கான அறநிலைபாடுகளை வகுத்துக் கொள்கிறது.
கலையின் வர்ணபேத தீற்றல்களில், மனித மனம் தன்னை அடையாளப்படுத்திக் கொள்கிறது. அந்த வண்ணக்கலவையின் ஒற்றைத்தீற்றல்களில் மனித மனவிகாரங்கள் விகசித்து ஒளிர்கிறது. கலை தன் மாயத்தை மனங்களில் நிகழ்த்துகிறது. மனிதன் மேன்மையுறுகிறான்.
கலையின் மாயலோகத்தில் யதார்த்ததில் உலவும் உயிர்கள், பொருட்கள், அதே அர்த்தத்தில் உலவுவதில்லை. ஆம். ஒரு பறவை கவிதையில் வெறும் பறவையில்லை. ஒரு நட்சத்திரம் வெறும் நட்சத்திரமல்ல. ஒரு மின்னலோ, ஒரு மரமோ, ஒரு மலரோ, ஒரு மலையோ அதே அர்த்தத்தில் கலையில் குறிப்பாகக் கவிதையில் புழங்குவதில்லை. பழக்கமான அநுபவங்களில் இருக்கும் விந்தையையும், விந்தை என்று நான் நினைப்பவற்றிலுள்ள பழக்கமான விஷயங்களையும் தன் கவிதைகளில் அநாயசமாக எழுதிச்செல்கிறார் கவிஞர் அப்பாஸ்.
வெளியில் இருந்து
அறை திரும்பிய நான்
லுங்கி மாற்றி பேனைத் தட்டிவிட்டு
மல்லாந்து சாய்ந்தேன்.
காற்று பரவ
தன் இடைவெளிகளில் விடுதலை கண்டது
மின்விசிறி
இடைவெளி என்பது சிறை. சுற்றிச் சுழலும்போது கிடைக்கும் சேர்ந்திருப்பதான மாயத்தோற்றமே விடுதலை என கவிஞர் சுழற்றிப் போடுகிறார்.
வீட்டிலிருந்து மலைகளை
சுதந்திரமாய் பார்த்தேன்
பின்
பாதை பற்றி மலை ஏறி
இறங்கும் நீர்வீழ்ச்சி என
வீடுகளைச் சுதந்திரமாய் பார்த்தேன்.
பார்த்தது விழித்துக் கொள்ள
இப்பொழுது
என் குழந்தையோடு விளையாடிக்
கொண்டிருக்கிறேன்.
மலையைப் பார்த்து வியத்தலும் இலமே, மடுவைப்பார்த்து பயத்தலும் இலமே. விழிப்புநிலை கிடைத்து விட்டால் நீங்களும் நானும் குழந்தைகளாகி விடுவோம். கவிஞரே அவருடைய முதலில் இறந்தவன் கவிதைத்தொகுதியில் “ கவிதைக் கண்ணாடியின் ரசம் புதுவித வடிவம் கொண்டு தன் பிரபஞ்சக்காட்சிகளின் மர்மங்களை, தத்துவங்களை, வேறு வடிவம் கொண்டு விதவித கோணங்களில் விரித்துக் கொண்டே செல்கிறது. வார்த்தைகளையும், அதன் சமூகத்தள அர்த்தங்களையும் பிளந்து அல்லது ஊடுவது கவிதை மொழியில் மட்டுமே சாத்தியமாக உள்ளது. யதார்த்தத்திலிருந்து விலகும் மனம் சென்றடையும் தத்துவ மனத்தை இயல்பாகவே கவிதை தன்னுள்ளே கொண்டிருக்கிறது. கவிதை வெளியின் பிரபஞ்சம் ஒரு புதிரிலிருந்து விடுபடுவதும் மீண்டும் ஒரு புதிருக்குள் நுழைவதுமான ஓர் அற்புதமான விளையாட்டு……” என்று தன் கவிதையியலைப் பற்றிச் சொல்லி விடுகிறார். தமிழில் தனக்கென ஒரு கவிதை மொழியை உருவாக்கியவர் அப்பாஸ். யதார்த்த சம்பவங்களின் வழியே தரிசனங்களை தன் கவிதை மொழியில் கட்டமைத்தவர்.
காகங்களின்
முட்டையத் திருடுவதற்காக
அது வெளியேறும் தருணத்தில்
மரத்தின்
உச்சிக்குச் சென்றேன்
அங்கே
ஒரு
பகல்
அமர்ந்திருந்தது.
கடைசி மூன்று வரிகளில் கவிஞர் கண்ட தரிசனத்தை நமக்கு காட்சியாகத் தருகிறார். நம்மால் வியப்பை அடக்க முடியவில்லை. திருட்டுக்கும் பகலுக்கும் என்ன சம்பந்தம்? பகல் காக்கையின் கூட்டில் இருக்கும்போது எப்படி திருட முடியும்? நம் மனதின் அடுக்குகளில் வேறு வேறு அர்த்தங்களையும் உண்டாக்கி விடுகிறது.
நான்
உன் கதவைத் தட்டுகிறேன்
வாசலின் அந்தப்பக்கம் இருந்து
நீ உன் வாசலின் மறுபக்கம்
திறந்து விட்டாய்
உனது கதவை
ஆனால்
நாம் இன்னும் சந்திக்கவேயில்லை.
இரண்டு பக்கமும் கதவுகள் திறந்தும் சந்திக்க முடியாதது துயரம் தானே எல்லோருக்கும். கவிஞர் அப்பாஸின் கவிதைகள் ஆழமான வாசிப்பைக் கோருபவை அவர் சாதாரணங்களிலிருந்து அசாதாரணங்களைக் கண்டு சொல்வதும், இது வரை யாரும் காணாத கோணத்தில் அநுபவங்களைத் தரிசன உணர்வாக மாற்றுவதும் கவிஞர் அப்பாஸின் கவிதைகளை வேறொரு தளத்திற்கு உயர்த்துகின்றன. நவீன தமிழ்க்கவிஞர்களில் முக்கியமானவராக எழுந்து வந்த அப்பாஸ், விந்தைகளைத் தேடி விந்தை வெளியில் தன் சிறகுகளை விரித்து பறந்து பறந்து மறைந்தே போய்விட்டார்; அவருடைய கவிதைகளைச் சாட்சியாக விட்டு விட்டு.

Monday, 16 July 2012

கரிசக்காட்டின் தனித்துவமிக்க கலைஞன் பூமணி

 

உதயசங்கர்

poomani2_thumb[4]

எண்பதுகளில் கோவில்பட்டியின் எந்தத் தெருவுக்குள் நுழைந்தாலும் அங்கே இரண்டு எழுத்தாளர்கள் காரசாரமாக விவாதித்துக் கொண்டிருப்பார்கள். டீக்கடைகளுக்குப் போனால் அங்கே இரண்டு எழுத்தாளர்கள் தாஸ்தயேவ்ஸ்கியின் குற்றமும் தண்டனையைப் பற்றியோ, நட் ஹாம்சனின் நிலவளம் பற்றியோ, செல்மா லாகர் லவ்வின் தேவமலரைப் பற்றியோ, நதானியல் ஹாத்தனின் அவமானச்சின்னம் பற்றியோ, கார்க்கியின் தாய் பற்றியோ, ஷோலக்கோவின் டான் நதி அமைதியாக ஓடிக்கொண்டிருக்கிறது பற்றியோ, தால்ஸ்தோயின் அன்னாகரீனினாவைப் பற்றியோ, அனடோல் ஃப்ரான்ஸின் தாசியும் தபசியும் பற்றியோ பேசிக் கொண்டிருப்பதைப் பார்க்கலாம். வாசிப்பின் தீவிரமும், விவாதங்களின் உக்கிரமும் கூடி நின்ற காலமாக அது இருந்தது.

கடுமையான வெயிலின் பொழிவு மாலை நெருங்க நெருங்க மெல்லத் தணியும். பகலில் புழுதி பறந்த தெருக்கள் அமைதியடையும். கசகசத்த வியர்வைப் புழுக்கத்தில் முகத்தைச் சுழித்தபடி அலைந்த மக்கள் தங்கள் முகங்களில் புன்னகையைச் சூடிக் கொண்டு உலாத்துகிற வேளை. பகலில் பார்த்த மனிதர்களா இவர்கள் என்று மாலைச் சூரியன் வியந்தபடியே மேற்கில் மறையத் தொடங்குவான். எப்போது சூரியன் மயங்குவான் என்று காத்திருந்தது போல மெல்லிய காற்று நகரமெங்கும் தன் சிறகுகளால் வருடத் தொடங்கும். அது வரை எங்கிருந்தார்கள் என்று வியக்கும்படி யுவன்களும் யுவதிகளும் வீதிகளில் உலா வருவார்கள். காதலர்கள் தங்களுடைய காதலிகள் வழக்கமாக வருகிற இடங்களில் நிலை கொண்டு காத்திருப்பார்கள். பகல் முழுவதும் நிழல் கிடைத்த இடங்களில் உட்கார்ந்து வாசித்துக் கொண்டிருந்த எழுத்தாளர்கள் காந்தி மைதானத்தை நோக்கி மெல்ல நடை பயிலுவார்கள். ஒவ்வொருவராக வந்து சேர்ந்து ஒரு பெரிய வட்டம் போட்டு மைதானத்தின் நடுவே உட்கார ஆரம்பிக்கும் கோவில்பட்டியின் இலக்கியக்கூட்டம். யாரும் யாருக்கும் அழைப்பு விடுப்பதில்லை. ஆனால் தினமும் கூடிப் பேசுவது என்பது ஒரு நாளும் நின்றதில்லை.

பேசும் பொருளோ, பேச்சின் திசையோ, யாருடைய தீர்மானத்திலும் இல்லை. யார் வேண்டுமானாலும் எதைப் பற்றி வேண்டுமானாலும் துவங்கி முன்னோட விவாதம் துவங்கும். அன்றைய அரசியல், தத்துவம், பெரும்பாலும் இலக்கியம் என்று பேச்சின் வெள்ளம் காந்திமைதானத்தை மூழ்கடிக்கும். பெரும் சண்டையோவென மற்றவர்கள் பயப்பட விவாதம் பகலின் வெம்மையை மிஞ்சும். அப்படியே ஒரே கணத்தில் பேச்சு சிரிப்பாகும். கிசுகிசுப்பாகும். சிகரெட்டுகளின் கனல் பொங்கும் நுனிகள் இருளில் துலங்கும். அன்று நாவல் பற்றிய உரையாடலாக இருக்கலாம். தமிழ்ச்சிறுகதைகள் பற்றியதாக இருக்கலாம். தான் எழுதிக் கொண்டு வந்த கவிதையை ஒருவர் வாசிக்கலாம். அப்போது தான் புத்தம் புதிதாய் வந்த புத்தகம் குறித்து இருக்கலாம். அன்று வெளியூரிலிருந்து வந்த எழுத்தாளரைப் பேட்டி காணலாம். நவீன நாடகங்களைப் பற்றிய கலந்துரையாடலாக இருக்கலாம். கலைப்படங்களைக் குறித்து விவாதமாக இருக்கலாம். இசங்கள் குறித்த பார்வைகளை பகிர்ந்து கொள்வதாக இருக்கலாம். இப்படி எதைக் குறித்தும் பேசுகின்ற இடமாக அந்த இலக்கியக் கூட்டம் இருந்தது.

இலக்கியவாசகனாக. புதுமைப்பித்தன், கு.ப.ரா, கு.அழகிரிசாமி, கி.ரா.என்ற வரிசைக்குப் பின் வண்ணநிலவன், வண்ணதாசன், அசோகமித்திரன், பூமணி என்ற வரிசையில் வாசிக்க நேர்ந்தது. என் பாலிய காலத்தின் நினைவுச் சுவடுகளென திருநெல்வேலி வயற்காட்டு வாசமும் தாமிரபரணித் தண்ணீரும் இருந்ததனால் வண்ணநிலவனும், வண்ணதாசனும் என் அன்புக்குரியவர்களாக ஆகி விட்டார்கள். அவர்களுடைய மொழியும் நடையும் என் மனதில் அப்படியே சம்மணம் போட்டு உட்கார்ந்து விட்டன. எத்தனை முறை கலைக்க முடியாத ஒப்பனைகளையும், எஸ்தரையும் வாசித்திருப்பேன் என்று சொல்லமுடியாது. அவர்களைப் போலவே எழுதவும் துணிந்தேன். ஆனால் கரிசல் மண்ணின் விருவுகள் விட்ட பெருமூச்சைக் குடித்தபடியே வளர்ந்த கோவில்பட்டியில் கி.ரா. என்ற முன்னத்தி ஏருக்குப் பின்னால் புத்தம் புதிதாய் உழவுசால் போட்ட பூமணியின் எழுத்து எனக்குப் பிரமிப்பூட்டியது.

வயிறுகள், ரீதி, என்ற சிறுகதைத் தொகுப்புகளை வாசித்த பிறகு பூமணி என்ற ஆகிருதி என் மனதில் பிரமாண்டமாக எழுந்து நின்றார். கரிசல் மண்ணின் மக்களை ரத்தமும் சதையுமாக தன் எழுத்தில் பதிவு செய்திருந்தார். கரிசல் மண்ணின் ருசியை கி.ரா. எல்லோரும் சுவைக்கக் கொடுத்தாரென்றால் அந்த மண்ணின் வெக்கையை, கோபத்தை, ஆக்ரோஷத்தை, அவலத்தைப் பூமணி கண்முன்னே நிறுத்தினார். கி.ரா. ஒரு அற்புதமான கதைசொல்லியென்றால் பூமணி கதை நடக்கும் இடத்தில் நம்மைப் பார்வையாளனாக இருத்தி வைக்கிறார். நம் கண் முன்னே நடக்கின்ற கதையை நடத்துகிற பூமணியைக் காணமுடிவதில்லை. அவர் நாம் எதைப் பார்க்கவேண்டும் என்று தீர்மானித்தாரோ அதைப் பார்க்கும் விதமாக தன் கலையின் வசீகரத்தால் நம்மை வசப்படுத்துகிறார். கதையின் நிகழ்வு துவங்கும் போது நாம் பூமணியை மறந்து விடுகிறோம். அவரும் தன்னடக்கத்தோடு தன்னை மறைத்துக் கொள்கிறார். வாசித்து முடியும்போது தான் தெரிகிறது பூமணி என்ற மகத்தான கலைஞனின் கலையாளுமை. தன் கலையின்கோணத்தில் தன் முற்போக்குப் பார்வையை தெளிவு படுத்துகிறார். இடையில் ஒரு சொல் சொல்வதில்லை. ஆனால் கதை நம்மை கோபம் கொள்ள வைக்கிறது. ஆவேசப்பட வைக்கிறது. சமூகவிமர்சனத்தைக் கூராக்குகிறது. சமூக மாற்றத்தைக் கோருகிறது.

கரிசலின் அந்திவானம் வர்ணங்களால் குழம்பியிருந்தது. அந்த இரவில் கோவில்பட்டி இலக்கியக்கூட்டத்தில் புதிதாய் ஒருவர் வந்து சேர்ந்திருந்தார். நான் சற்று தாமதமாகப் போய் வட்டத்தில் இணைந்திருந்தேன். மெலிந்து உயரமாக குட்டையான தலைமுடியுடன்,சிவந்த நிறத்துடன் ஒரு போலீஸ்காரரைப் போலவே தோற்றமளித்தார் அவர். மெல்லிய குரலில் அவர் பேச மற்றவர்கள் கேட்டுக் கொண்டிருந்தார்கள். என் அருகிலிருந்த கவிஞர் தேவதச்சனிடம் யார்? என்று கிசுகிசுத்தேன். அவர் பூமணி என்றார். என்னால் நம்பவே முடியவில்லை. எழுத்தின் வழியே நான் உருவகித்திருந்த பூமணி இல்லை இவர். சற்றே ஏமாற்றத்துடன் அவர் பேசிக்கொண்டிருப்பதைக் கேட்டேன். மெல்லிய ஆனால் உறுதியான குரலில் அவர் மார்க்சிய அழகியல் கோட்பாடுகளைப் பற்றி விவரித்துக் கொண்டிருந்தார். அவருடைய விவாதப்பாங்கு, கருத்துகளின் கூர்மை, என்னை மிகவும் ஈர்த்தது. கூட்டம் முடிவடையும் தருணம் என்னை அறிமுகம் செய்து கொண்ட போது உற்சாகத்துடன் என்னுடன் உரையாடினார். அவருடைய கதைகள் குறித்துப் பேசிய போது கவனமாகக் கேட்டார். அதுவரை நான் எழுதிய கதைகளை அவரிடம் படிக்கக் கொடுக்கலாமா என்று தயங்கியபடியே கேட்டேன். அவர் உடனே கொடுக்கும்படி சொன்னார். அதற்கடுத்த மாதத்தில் த.மு.எ.ச. வின் மாநிலமாநாடு சென்னையில் நடந்தது. அங்கு பார்வையாளராக வந்திருந்தார். அப்போது நான் கொடுத்த கையெழுத்துப் பிரதிகளை வாங்கிக் கொண்டுபோய் படித்து விட்டு மிக விரிவாக ஒரு கடிதம் எழுதினார் பூமணி. எழுத்தின் சூட்சுமங்கள் குறித்து நான் விளங்கிக் கொள்ள பல குறிப்புகள் அந்தக் கடிதத்தில் இருந்தன.

தமிழிலக்கியத்தில் தலித் இலக்கியம் என்ற வகை மாதிரி உருவாவதற்கு முன்னரே பிறகு, வெக்கை,போன்ற தமிழிலக்கியத்தின் முக்கியமான நாவல்களை எழுதியிருந்தார் பூமணி. தேசிய திரைப்பட வளர்ச்சிக்கழகத்தின் நிதியுதவியுடன் கருவேலம்பூக்கள் என்ற திரைப்படத்தை இயக்கினார். நாசர், ராதிகா, சார்லி, போன்ற திரைக்கலைஞர்கள் பங்கு பெற்ற அந்தத் திரைப்படமும் கரிசல்வாழ்வின் அவலத்தைக் கூறும் படமாகவே வெளிவந்தது. பல திரைப்பட விமர்சகர்களின் பாராட்டைப் பெற்றது.

யதார்த்தவாதத்தின் மகத்தான நாவல்களாக பூமணியின் ’ பிறகு ‘ ‘ ’வெக்கை’ நாவல்கள் திகழ்கின்றன. பிறகு நாவல் சுதந்திரம் பெறும்போது துவங்குகிறது.அழகிரிப்பகடையைக் கதாநாயகனாகக் கொண்டு எழுதப்பட்ட நாவல். ஒரு கரிசல் கிராமத்தின் மாற்றம், தீப்பெட்டியாபீஸ் வருகிற போது மனித உறவுகளில் ஏற்படும் மாற்றம் என்று அடித்தட்டு மக்களின் வாழ்வில் ஏற்படும் மாற்றத்தின் வரலாறாக விரிகிறது. தமிழில் எக்காலத்தும் சிறந்த நாவல்களில் ஒன்றாக பிறகு இருக்கும். அதே போல நிலத்தை அபகரிக்க நினைக்கும் வடக்கூரானை வெட்டிச் சாய்த்து விட்டு தலைமறைவாகத் திரிந்து நீதிமன்றத்தில் சரணடையும் வரையிலான நிகழ்வுகளை விறுவிறுப்புடன் சொல்லுகிற நாவல் வெக்கை. இப்போது வெளிவந்திருக்கும் அஞ்ஞாடி என்ற பெரும்படைப்பு இருநூறு ஆண்டு கால வரலாற்றைச் சொல்கிறது. கரிசல் கிராமத்தில் ஒரு அஞ்ஞாடிப்பள்ளருக்கும், ஏகாலிக்கும் இடையில் உருவாகும் நட்பாகத் துவங்கும் நாவல் எட்டையபுரம் வரலாறு, கட்டபொம்மன் வரலாறு, ஊமைத்துரை வரலாறு, கழுகுமலை கலவரம், சிவகாசிக் கொள்ளை என்று வரலாற்றின் பக்கங்களை விரித்துக் கொண்டே செல்கிறது. மனித விகாரங்களின் வழியே வரலாறு அதன் பொருண்மையான தளத்திலிருந்து நகர்ந்து மானுட அவலத்தின் குரலாக ஒலிக்கிறது அஞ்ஞாடி..

எப்போதும் கரிசல் பூமியில் அழியும் விவசாயத்தைப் பற்றியும், தீப்பெட்டியாபீஸுகளில் வதைபடும் குழந்தைகளைப் பற்றியும், ஒடுக்கப்படும் சாமானியர்களைப் பற்றியும் கவலையே பூமணியின். படைப்புகளின் அடிநாதமாக இருக்கிறது.

கோவில்பட்டிக்கருகிலுள்ள கரிசல் கிராமமான ஆண்டிபட்டியில் பிறந்து கல்லூரிப்படிப்பு முடித்து கூட்டுறவுத்துறையில் பதிவாளராக ஓய்வு பெற்று இப்போது கோவில்பட்டியில் வசித்து வரும் பூமணி கோவில்பட்டிக்கு வந்த புதிதில் மறுபடியும் எண்பதுகளில் சந்தித்த மாதிரி நண்பர்களைச் சந்திக்க ஆவல் கொண்டார். இப்போதும் காந்திமைதானத்தில் கூட்டம் கூட்டமாய் மக்கள் உட்கார்ந்திருக்கிறார்கள். பேசிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் அதில் கவிஞர் தேவதச்சன் இல்லை, எழுத்தாளர் கௌரிஷங்கர் இல்லை, கவிஞர் அப்பாஸ் இல்லை, எழுத்தாளர் கோணங்கி இல்லை, எழுத்தாளர் தமிழ்ச்செல்வன் இல்லை, வித்யாஷங்கர் இல்லை, எழுத்தாளர் நாறும்பூநாதன் இல்லை, எழுத்தாளர் அப்பணசாமி இல்லை, எல்லாவற்றுக்கும் மேலாக எங்கள் மதிப்பிற்குரிய எழுத்தாளர் பூமணி இல்லை. ஆனால் அவருடைய மெல்லிய உறுதியான குரல் எனக்குக் கேட்கிறது. அந்தக் குரலின் தனித்துவம் என் காதுகளில் ஒலித்துக் கொண்டேயிருக்கிறது. இலக்கியத்தின் நுட்பங்கள் குறித்தும், மார்சிய அழகியல் குறித்தும், மானுட அவலம் குறித்தும் சமூகமாற்றம் குறித்தும் அமைதியாக, அதே நேரம் அழுத்தமாகப் பேசிக் கொண்டிருக்கிறார் கரிசக்காட்டின் தனித்துவமிக்க கலைஞன் எங்கள் அன்புக்குரிய பூமணி.