சாதியின் தத்துவம்
Sunday, 3 August 2025
சாதியின் தத்துவம் - 1
Saturday, 2 August 2025
இந்திய நாடோடிக்கதை 4
இந்திய நாடோடிக்கதை 4
பேராசைக்காரத் தவளை
ஆங்கிலம் வழி தமிழில் -- உதயசங்கர்
ஒரு ஊரில் ஒரு தவளையும்
எலியும் நண்பர்களாக இருந்தன.
தவளையிடம் எலி சொன்னது,
“ போய் கொஞ்சம் குச்சிகள் கொண்டு வா.. நான்
போய் கொஞ்சம் மாவும் பாலும் கொண்டு வருகிறேன்.. இரவு
உணவு சமைப்போம் ” என்றது.
தவளை காட்டுக்குள் வெகுதூரம்
சென்று நிறைய குச்சிகளைக் கொண்டு வந்த்து. எலியும்
மாவும் பாலும் கொண்டு வந்து சேர்த்தது.
பிறகு எலி இரவு உணவைச்
சமைத்தது. சமைத்து முடித்ததும்,
“ நான் குளித்து விட்டு வருகிறேன்.. நீ இங்கேயே
இருந்து உணவை யாரும் திருடித் தின்று விடாமல் பார்த்துக் கொள்..”
என்று தவளையிடம் சொல்லிவிட்டு
குளிக்கப்போய் விட்டது. எலி அந்தப்பக்கமும் போனதும் தவளை அவசர அவசரமாக உணவைச் சாப்பிட்டுவிட்டு
அந்த இடத்தை விட்டு ஓடியே விட்டது.
எலி திரும்பி வந்து பார்த்தால்
சமைத்து வைத்த உணவு இல்லை. தவளையும் அங்கு இல்லை. தவளையைத்
தேடி வெளியே போனது. சத்தமாகக் கூப்பிட்டுக் கொண்டே தேடியது. தூரத்தில்
தவளை போய்க் கொண்டு இருப்பதைப் பார்த்ததும் ஓடிச் சென்று மறித்தது.
“ நீ ஏன் உணவைச் சாப்பிட்டாய்? ஏன் ஓடிப்
போகிறாய்? “
என்று கேட்டது. உடனே
தவளை,
“ ஓ அருமை நண்பா.. உன் உணவை நான் சாப்பிடவில்லை..ஒரு பெரிய
நாய் வந்தது. நானோ மிகவும் சிறியவன் நாயோ மிகப்பெரியது.. அது என்னைப்
பயமுறுத்தியது.. நான் ஓடி வந்து விட்டேன்..”
என்று சொன்னது. அதைக்
கேட்ட எலி,
“ அப்படியா சரி.. நீ போய் இன்னும் குச்சிகளைக்
கொண்டு வா.. நான் மாவும் பாலும் கொண்டு வருகிறேன்..”
என்று சொன்னது. தவளை
காட்டுக்குள் தூரமாகச் சென்று நிறையக் குச்சிகளைக் கொண்டு வந்தது. எலியும்
மாவையும் பாலையும் கொண்டு வந்தது. எலி நெருப்பை மூட்டி உணவைச் சமைத்தது. பிறகு
தவளையிடம், உணவைப் பத்திரமாகப் பார்த்துக் கொள்ளச் சொல்லிவிட்டுக் குளிக்கச்
சென்றது. எலி அந்த இடத்தை விட்டுப் போன உடனேயே தவளை உணவைச் சாப்பிட்டுவிட்டு
ஓடி ஒளிந்து கொண்டது.
எலி திரும்பி வரும்போது
தவளையைக் காணவில்லை. உணவும் இல்லை. காட்டுக்குள் சென்று கூவி
அழைத்தது. ஒரு மரத்திற்குப் பின்னால் இருந்து,
“ இதோ இங்கிருக்கிறேன்.. இங்கிருக்கிறேன்..” என்று
பதில் சொன்னது. எலி தவளையிடம் சென்று,
“ நீ ஏன் என் உணவைச் சாப்பிட்டாய்? “ என்று
கேட்டது.
“ நான் சாப்பிடவில்லை.. அது அந்தப்
பெரிய நாய் தான்.. உணவைச் சாப்பிட்ட்து.. அது என்னையும்
சாப்பிட விரும்பியது.. நான் ஓடி வந்து விட்டேன்..”
என்று தவளை பதில் சொன்னது.
“ அப்படியா.. சரி.. நீ போய் இன்னும் கொஞ்சம் குச்சிகளைக் கொண்டு வா..” நான்
போய் பாலும் மாவும் கொண்டு வருகிறேன்..” என்று சொல்லிவிட்டு எலி
சென்றது. மறுபடியும்
எலி உணவு சமைத்து வைத்து விட்டுக் குளிக்கக் கிளம்பியது.
மறுபடியும் தவளை உணவைச்
சாப்பிட்டுவிட்டு ஓடி ஒளிந்து கொண்டது. எலி திரும்பி வரும்போது
உணவும் இல்லை. தவளையும் இல்லை. எலி காட்டுக்குள்
சென்று தவளையைக் கண்டுபிடித்து அது தான் உணவைச் சாப்பிட்டது என்று குற்றம் சாட்டியது.
அதைக் கேட்ட தவளை, “ இல்லை..” என்றது. எலி, “ நீ தான்..” என்றது.
“ இன்னொரு முறை குச்சி எடுத்துட்டு வரச் சொன்னால் நான் உன்னைச்
முழுங்கிருவேன்....” என்றது தவளை.
“ சரி முழுங்கிரு..” என்றது
எலி. தவளையும் எலியை முழுங்கிவிட்டு ஒரு மரத்தின் கீழ் உட்கார்ந்திருந்தது. அப்போது
ஒரு ரொட்டிக்கடைக்காரன் வந்தான்.
“ ரொட்டிக்காரா ரொட்டிக்காரா.. இங்கே
வா.. எனக்குக் கொஞ்சம் ரொட்டி கொடு..” என்றது
தவளை. ரொட்டிக்காரன் சுற்றிச் சுற்றிப் பார்த்தான். யாரையும்
காணவில்லை. யார் அழைத்தார்கள்? என்று
தெரியவில்லை. கடைசியில் மரத்துக்குப் பின்னால் தவளை உட்கார்ந்திருப்பதைப்
பார்த்து விட்டான்.
“ எனக்குக் கொஞ்சம் ரொட்டி கொடு..” என்றது
தவளை. ரொட்டிக்காரன்,
“ முடியாது.. நான் உனக்கு ரொட்டி தரமாட்டேன்.. நான்
மிகப்பெரிய மனிதன்.. நீயோ மிகச்சிறிய தவளை.. உன்னிடம்
பணமும் கிடையாது..”
என்று சொன்னான்.
“ என்னிடம் பணம் இருக்கிறது.. நான்
கொஞ்சம் பணம் தருகிறேன்.. நீ கொஞ்சம் ரொட்டி கொடு..” என்று
சொன்னது தவளை.
“ இல்லை நான் தரமாட்டேன்..” என்றான்
ரொட்டிக்காரன்.
“ நீ ரொட்டி தரவில்லை என்றால் நான் முதலில் உன்னைச் சாப்பிடுவேன்.. பிறகு
உன்னுடைய ரொட்டியைச் சாப்பிடுவேன்..” என்றது தவளை. சொன்னது போலவே தவளை முதலில்
அந்த மனிதனைச் சாப்பிட்டது. பிறகு ரொட்டியையும் சாப்பிட்டது.
அந்த நேரத்தில், ஒரு மனிதன்
ஆரஞ்சுப்பழங்களும் எலுமிச்சைப்பழங்களும் சுமந்து கொண்டு வந்தான். தவளை
அவனைப் பார்த்து,
“ இங்கே வா.. இங்கே வா..” என்று கூப்பிட்டது. அந்தக்
குரலைக் கேட்டு முதலில் அந்த மனிதன் பயந்து போனான். பிறகு
தவளையைப் பார்த்தான். தவளை சொன்னது,
“ எனக்குக் கொஞ்சம் எலுமிச்சம்பழங்கள் கொடு..” என்றது. அந்த
மனிதன்,
“ முடியாது “ என்றான்.
“ சரி.. நீ கொடுக்கவில்லை என்றால் நான் உன்னை முழுங்கிருவேன்..” என்றது
தவளை. பிறகு தவளை ஆரஞ்சுப்பழங்களும் எலுமிச்சம்பழங்களும் சுமந்து
வந்த மனிதனை விழுங்கிவிட்டது. அந்த நேரத்தில் ஒரு குதிரையும் அதன் இணையும் வந்தன. அவற்றைப்
பார்த்த தவளை,
“ என்ன்னை உன் முதுகில் தூக்கிச் செல்.. நான்
உனக்கு பணம் தருகிறேன்..” என்றது.
“ முடியாது.. நீ குரங்கு மாதிரி இருக்கிறாய்.. உன்னை
என் முதுகில் சுமக்க மாட்டேன்..” என்றது குதிரை.
“ நீ முடியாது என்றால் உன்னை விழுங்கி விடுவேன்..” என்று
சொல்லி அந்தக் குதிரையையும், அதன் இணையையும் விழுங்கி விட்டது.
பிறகு அந்த வழியே ஒரு முடிதிருத்துநர்
சென்றார். அவரைப் பார்த்த தவளை,
“ வா.. எனக்கு முடி மழித்து விடு..” என்றது.
முடிதிருத்துநரும்,
“ சரி இதோ.. செய்கிறேன்..” என்றார். அவர்
தவளைக்கு முடி மழித்தார். அவர் தவளையின் வயிறு மிகவும் பெரியதாக இருப்பதாக நினைத்தார். வயிற்றில்
மழிக்கும் போது கத்தியால் ஒரு வெட்டி விட்டார்.
என்ன ஆச்சரியம்!
வயிற்றுக்கு உள்ளே இருந்து
ஒரு எலியும், மாவும் பாலும், வந்தன. ரொட்டிக்காரரும்
ரொட்டிகளும் வந்தன. எலுமிச்சை வியாபாரியும் அவனுடைய எலுமிச்சைகளும் ஆரஞ்சுப்பழங்களும்
வந்தன. கடைசியாக குதிரையும் அதன் இணையும் வந்தன.
அதைப் பார்த்த முடிதிருத்துநர்
ஓடியே போய் விட்டார்.
பேராசை கொண்ட தவளை வயிறு
கிழிந்து இறந்து விட்டது.
நன்றி - புக் டே