Monday, 4 August 2025

இந்திய நாடோடிக்கதை 5

 இந்திய நாடோடிக்கதை 5

கொண்டைக்குருவியும் இலவம்பஞ்சு மரமும்

ஆங்கிலம் வழி தமிழில் – உதயசங்கர்



முன்பு ஒரு காலத்தில், ஒரு நாள் ஒரு கொண்டைக்குருவி பறந்து செல்லும்போது

ஒரு மரத்தைப் பார்த்தது. அதில் சிறிய ஒரு காய் இருந்தது. கொண்டைக்குருவிக்கு

மிகுந்த மகிழ்ச்சி.

“ நான் இந்தக் காய் பழுக்கும்வரை இங்கேயே இருப்பேன்.. பழுத்ததும் நானே

சாப்பிடுவேன்..”

என்று சொன்னது கொண்டைக்குருவி. அது தன்னுடைய கூட்டை மறந்தது.

இணையை மறந்தது. அந்த மரத்திலேயே பனிரெண்டு ஆண்டுகள் உட்கார்ந்திருந்தது.

அதுவரை எதுவுமே சாப்பிடவில்லை. ஒவ்வொரு நாளும்,

“ நாளை இந்தப் பழம் பழுத்துவிடும்.. இதை நான் ருசித்துச் சாப்பிடுவேன்..” என்று

சொன்னது.

இந்தப் பனிரெண்டு ஆண்டுகளில் அந்த மரத்தில் வந்து உட்கார்ந்த பறவைகளை

எல்லாம் விரட்டி விட்டது. எந்தப் பறவையையும் கூடு கட்ட விடவில்லை. அப்படியே

யாராவது வந்தால்,

“ இந்த மரத்தின் பழம் நன்றாக இருக்காது..இங்கே வராதீங்க..” என்று சொல்லித்

திருப்பி அனுப்பிவிடும்.

ஒரு நாள் ஒரு குயில் வந்தது.

“ ஏன் எங்களை எல்லாம் விரட்டி விடுகிறாய்? இந்த மரத்திற்கு வரவோ உட்காரவோ

விட மாட்டேன் என்கிறாய்.. எந்த மரமும் உனக்குச் சொந்த மரம் கிடையாது..

எல்லோருக்கும் பொதுவானது..”

என்று கேட்ட்து. அதைக் கேட்ட கொண்டைக்குருவி,

“ நான் அதைப் பற்றிக் கவலைப்படவில்லை.. நான் இங்கேயே இருப்பேன்.. அந்தப்

பழம் பழுத்தவுடன் நான் சாப்பிடுவேன்..” என்று சொல்லியது.


அந்த மரம் இலவம்பஞ்சு மரம் என்று குயிலுக்குத் தெரியும். ஆனால்

கொண்டைக்குருவிக்குத் தெரியாது.

முதலில் கொண்டைக்குருவி பழம் என்று நினைத்துப் பார்த்தது மொட்டு.. பிறகு

மலரானது.. மலர் நீண்ட காயானது.. ஒரு நாள் அந்தக் காய் வெடித்துச் சிதறியது.

அதிலிருந்து பஞ்சு துகள்களாக்க் காற்றில் பறந்தது. ஆனால் கொண்டைக்குருவி

இன்னமும் அந்தக்காய் பழுக்கும் என்று நம்பிக் கொண்டிருந்தது.

“ அது பழுத்தால் மிக மிகச் சுவையாக இருக்கும்..”

ஆனால் பஞ்சு பஞ்சாகப் பறப்பதைப் பார்த்துக் குழம்பிப் போய் விட்டது.

“ இது என்ன? இந்த நேரம் பழுத்து இருக்கணுமே..” என்று நினைத்துக் கொண்டே

அந்தக் காயைப் பார்த்தது. அதில் ஒன்றுமே இல்லை. காலியாக இருந்தது. அதில்

இருந்த எல்லாப்பஞ்சும் பறந்து போய் விட்டது.

அப்போது குயில் வந்தது,

“ நீ எல்லாரையும் இந்த மரத்தில் வந்து உட்கார, அனுமதித்திருந்தால் உனக்கும்

நல்ல உணவு கிடைத்திருக்கும்.. நீ சுயநலம் கொண்ட பறவையாக இருந்த தால்

இயற்கையே உனக்கு தண்டனையாக ஒன்றுமில்லாத பழத்தைக் கொடுத்து விட்டது..”

என்று சொல்லி எல்லாப்பறவைகளையும் அழைத்தது. எல்லாப்பறவைகளும் வந்து

கொண்டைக்குருவியைக் கேலி செய்தன.

கொண்டைக்குருவிக்குப் பயங்கரக்கோபம். கொண்டைக்குருவி அந்த மரத்திடம்

சொன்னது,

“ நீ ஒரு மோசமான மரம்..உன்னால் யாருக்கும் எந்த பலனும் இல்லை..நீ யாருக்கும்

உணவு தரமாட்டாய்..”

அதற்கு அந்த மரம் ,

“ நீ சொல்வது தவறு.. இயற்கை என்னை இப்படித்தான் படைத்திருக்கிறது..

என்னுடைய பூக்கள் ஆடுகளுக்கு உணவாகும்.. என்னுடைய பஞ்சு தலையணைகள்,

மெத்தைகள் செய்யப் பயன்படும்..தெரியுமா? “

என்று சொன்னது. அதைக் கேட்ட கொண்டைக்குருவி வெட்கித் தலைகுனிந்து பறந்து

போய் விட்டது.


அன்றிலிருந்து கொண்டைக்குருவி ஒருபோதும் இலவம்பஞ்சு மரத்துக்கு அருகில் கூடப் போவதில்லை.

நன்றி - புக் டே

Sunday, 3 August 2025

சாதியின் தத்துவம் - 1

 சாதியின் தத்துவம்



1. சாதிப்பாகுபாடுகளின் அடிப்படையே பருப்பொருளான உடல்கள் தான். அந்த உடல்கள் பார்ப்பன, ஷத்திரிய, வைசிய, சூத்திர, பஞ்சம உடல்கள் தான்.
2. ஒவ்வொரு உடலும் புழங்குவதற்கான நிலம், நீர், காற்று, தீ, வெளி, வரையறுக்கப்படுகிறது.
3. வரையறுக்கப்பட்ட எல்லைகளிலிருந்து அந்த உடல்கள் தவறினால் தண்டனை அளிக்கப்படுகிறது.
4. சட்டம் இயற்றுகிறவர் எப்போதுமே அந்தச் சட்டத்தின் அனைத்துச் சலுகைகளையும் மீறல்களையும் அனுபவிப்பார் என்பது எழுதப்படாத விதியல்லவா? அதனால் இந்தச் சட்டங்களை வகுத்த பார்ப்பனருக்கு இந்தச் சட்டங்களிலிருந்து முழுவிலக்கு அளிக்கப்படுகிறது. அல்லது சலுகை அளிக்கப்படுகிறது.
5. மற்ற உடல்களில் ஷத்திரிய உடலுக்கும் சில கட்டுப்பாடுகளுண்டு. வைசிய உடலுக்கும் சில கட்டுப்பாடுகளுண்டு. சூத்திர உடலுக்கும் சில கட்டுப்பாடுகளுண்டு. ஆனால் பஞ்சம உடல் முழுமைக்கும் கட்டுப்பாடுகள் உண்டு.
6. பஞ்சம உடல் இயற்கை மூலங்களான நீரிலிருந்து விலக்கி வைக்கப்படுகிறது. காற்றிலிருந்து விலக்கி வைக்கப்படுகிறது. பூகோளரீதியாக ஊரைவிட்டு நகரை விட்டு விலக்கி வைக்கப்படுகிறது. நிலத்திலிருந்து விலக்கி வைக்கப்படுகிறது. நெருப்பிலிருந்தும் விலக்கி வைக்கப்படுகிறது. ( அவர்களைக் கொளுத்துவதற்கு மட்டுமே தீயை அனுமதிப்பதிப்பார்கள்.
7. குறிப்பிட்ட உடல்களைக் குறிப்பிட்ட எல்லைகளில் கட்டுப்படுத்தித் தனிமைப்படுத்துவதின் வழியே அந்த உடல்களை தங்களுடைய முழுமையான ஆதிக்கத்துக்குள் கொண்டு வருகிறது வர்ணாசிரமத்தருமம்.
8. அதற்கு அவர்கள் சடங்குகளின் வழியே ஒவ்வொரு சாதியையும் வர்ணத்தையும் பிரிக்கிறார்கள். இன்னின்ன சடங்குகளை இன்னின்ன முறையில் இன்னின்னார் தான் செய்ய வேண்டும் என்று சட்டங்களை வர்ணாசிரமக்கோட்பாட்டில் எழுதி வைத்திருக்கிறார்கள்.
9. கல்வி உரிமை மறுக்கப்பட்ட மற்ற சாதிகளுக்கு எப்படி இந்தச் சட்டங்கள் தெரியும்? என்ற கேள்விக்கு புராண, இதிகாச, புளுகு மூட்டைகளின் மூலம் அவர்கள் மனதை வசப்படுத்துகிறார்கள்.
10. பரம்பரை பரம்பரையாக இந்தக் கதைகள் ஊதிப்பெருகி அனைத்து சாமானியர்களின் மனதிலும் ஊடுருவி சமூகத்தில் தன்னுடைய இடம் என்ன என்பதை ஆழமாகப் பதிய வைத்து விடுகிறது.
11. மனிதர்களின் ஆன்மீக, அப்பாலை உலக நம்பிக்கைகளின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட கோவில்களிலும் இந்த எல்லைகளை இன்னமும் வரையறுத்து வைத்திருக்கிறார்கள். ( இளையராஜா சர்ச்சை, அர்ச்சகர் சர்ச்சை )
12. ஆக சாதியப்பாகுபாடு அறிவுத்திறனைக் கொண்டு பிரிப்பதில்லை. அவரவர் வைத்திருக்கும் செல்வத்தைக் கொண்டு பிரிப்பதில்லை. புகழைக் கொண்டு பிரிப்பதில்லை. உடலைக் கொண்டே பிரிக்கிறார்கள்.
13. எந்த உடலின் வழியே பிறக்கிறோமோ அந்த உடல் தான் நம்முடைய சாதியை, வர்ணத்தைத் தீர்மானிக்கிறது. சமூகத்தில் நமது இடத்தையும் தீர்மானிக்கிறது.
14. அதனால் தான் அம்பேத்கர் சமமான உடல்களுக்கிடையில் சமமான மதிப்பு வேண்டும். சாதி என்ற கற்பிதமான புனைவு ஒழிய வேண்டும்.
15. அனைத்து உடல்களும் ஒன்றிணையும் போது சமத்துவமான உடல்கள் தோன்றும். அப்போது சாதி என்ற கற்பிதம் ஒழியுமென்று அம்பேத்கர் சொன்னார்.
வெறுப்பின் கொற்றம் வீழ்க!
அன்பே அறம் என எழுக!

Saturday, 2 August 2025

இந்திய நாடோடிக்கதை 4

 

இந்திய நாடோடிக்கதை 4

பேராசைக்காரத் தவளை

ஆங்கிலம் வழி தமிழில் -- உதயசங்கர்




ஒரு ஊரில் ஒரு தவளையும் எலியும் நண்பர்களாக இருந்தன.

தவளையிடம் எலி சொன்னது,

போய் கொஞ்சம் குச்சிகள் கொண்டு வா.. நான் போய் கொஞ்சம் மாவும் பாலும் கொண்டு வருகிறேன்.. இரவு உணவு சமைப்போம்என்றது.

தவளை காட்டுக்குள் வெகுதூரம் சென்று நிறைய குச்சிகளைக் கொண்டு வந்த்து. எலியும் மாவும் பாலும் கொண்டு வந்து சேர்த்தது.

பிறகு எலி இரவு உணவைச் சமைத்தது. சமைத்து முடித்ததும்,

நான் குளித்து விட்டு வருகிறேன்.. நீ இங்கேயே இருந்து உணவை யாரும் திருடித் தின்று விடாமல் பார்த்துக் கொள்..”

என்று தவளையிடம் சொல்லிவிட்டு குளிக்கப்போய் விட்டது. எலி அந்தப்பக்கமும் போனதும் தவளை அவசர அவசரமாக உணவைச் சாப்பிட்டுவிட்டு அந்த இடத்தை விட்டு ஓடியே விட்டது.

எலி திரும்பி வந்து பார்த்தால் சமைத்து வைத்த உணவு இல்லை. தவளையும் அங்கு இல்லை. தவளையைத் தேடி வெளியே போனது. சத்தமாகக் கூப்பிட்டுக் கொண்டே தேடியது. தூரத்தில் தவளை போய்க் கொண்டு இருப்பதைப் பார்த்ததும் ஓடிச் சென்று மறித்தது.

நீ ஏன் உணவைச் சாப்பிட்டாய்? ஏன் ஓடிப் போகிறாய்? “

என்று கேட்டது. உடனே தவளை,

ஓ அருமை நண்பா.. உன் உணவை நான் சாப்பிடவில்லை..ஒரு பெரிய நாய் வந்தது. நானோ மிகவும் சிறியவன் நாயோ மிகப்பெரியது.. அது என்னைப் பயமுறுத்தியது.. நான் ஓடி வந்து விட்டேன்..”

என்று சொன்னது. அதைக் கேட்ட எலி,

அப்படியா சரி.. நீ போய் இன்னும் குச்சிகளைக் கொண்டு வா.. நான் மாவும் பாலும் கொண்டு வருகிறேன்..”

என்று சொன்னது. தவளை காட்டுக்குள் தூரமாகச் சென்று நிறையக் குச்சிகளைக் கொண்டு வந்தது. எலியும் மாவையும் பாலையும் கொண்டு வந்தது. எலி நெருப்பை மூட்டி உணவைச் சமைத்தது. பிறகு தவளையிடம், உணவைப் பத்திரமாகப் பார்த்துக் கொள்ளச் சொல்லிவிட்டுக் குளிக்கச் சென்றது. எலி அந்த இடத்தை விட்டுப் போன உடனேயே தவளை உணவைச் சாப்பிட்டுவிட்டு ஓடி ஒளிந்து கொண்டது.

எலி திரும்பி வரும்போது தவளையைக் காணவில்லை. உணவும் இல்லை. காட்டுக்குள் சென்று கூவி அழைத்தது. ஒரு மரத்திற்குப் பின்னால் இருந்து,


இதோ இங்கிருக்கிறேன்.. இங்கிருக்கிறேன்..” என்று பதில் சொன்னது. எலி தவளையிடம் சென்று,

நீ ஏன் என் உணவைச் சாப்பிட்டாய்? “ என்று கேட்டது.

நான் சாப்பிடவில்லை.. அது அந்தப் பெரிய நாய் தான்.. உணவைச் சாப்பிட்ட்து.. அது என்னையும் சாப்பிட விரும்பியது.. நான் ஓடி வந்து விட்டேன்..”

என்று தவளை பதில் சொன்னது.

அப்படியா.. சரி.. நீ போய் இன்னும் கொஞ்சம் குச்சிகளைக் கொண்டு வா..” நான் போய் பாலும் மாவும் கொண்டு வருகிறேன்..” என்று சொல்லிவிட்டு எலி சென்றது.  மறுபடியும் எலி உணவு சமைத்து வைத்து விட்டுக் குளிக்கக் கிளம்பியது.

மறுபடியும் தவளை உணவைச் சாப்பிட்டுவிட்டு ஓடி ஒளிந்து கொண்டது. எலி திரும்பி வரும்போது உணவும் இல்லை. தவளையும் இல்லை. எலி காட்டுக்குள் சென்று தவளையைக் கண்டுபிடித்து அது தான் உணவைச் சாப்பிட்டது என்று குற்றம் சாட்டியது.

அதைக் கேட்ட தவளை, “ இல்லை..” என்றது. எலி, “ நீ தான்..” என்றது.

இன்னொரு முறை குச்சி எடுத்துட்டு வரச் சொன்னால் நான் உன்னைச் முழுங்கிருவேன்....” என்றது தவளை.

சரி முழுங்கிரு..” என்றது எலி. தவளையும் எலியை முழுங்கிவிட்டு ஒரு மரத்தின் கீழ் உட்கார்ந்திருந்தது. அப்போது ஒரு ரொட்டிக்கடைக்காரன் வந்தான்.

ரொட்டிக்காரா ரொட்டிக்காரா.. இங்கே வா.. எனக்குக் கொஞ்சம் ரொட்டி கொடு..” என்றது தவளை. ரொட்டிக்காரன் சுற்றிச் சுற்றிப் பார்த்தான். யாரையும் காணவில்லை. யார் அழைத்தார்கள்? என்று தெரியவில்லை. கடைசியில் மரத்துக்குப் பின்னால் தவளை உட்கார்ந்திருப்பதைப் பார்த்து விட்டான்.

எனக்குக் கொஞ்சம் ரொட்டி கொடு..” என்றது தவளை. ரொட்டிக்காரன்,

முடியாது.. நான் உனக்கு ரொட்டி தரமாட்டேன்.. நான் மிகப்பெரிய மனிதன்.. நீயோ மிகச்சிறிய தவளை.. உன்னிடம் பணமும் கிடையாது..”

என்று சொன்னான்.

என்னிடம் பணம் இருக்கிறது.. நான் கொஞ்சம் பணம் தருகிறேன்.. நீ கொஞ்சம் ரொட்டி கொடு..” என்று சொன்னது தவளை.

இல்லை நான் தரமாட்டேன்..” என்றான் ரொட்டிக்காரன்.

நீ ரொட்டி தரவில்லை என்றால் நான் முதலில் உன்னைச் சாப்பிடுவேன்.. பிறகு உன்னுடைய ரொட்டியைச் சாப்பிடுவேன்..” என்றது தவளை. சொன்னது போலவே தவளை முதலில் அந்த மனிதனைச் சாப்பிட்டது. பிறகு ரொட்டியையும் சாப்பிட்டது.

அந்த நேரத்தில், ஒரு மனிதன் ஆரஞ்சுப்பழங்களும் எலுமிச்சைப்பழங்களும் சுமந்து கொண்டு வந்தான். தவளை அவனைப் பார்த்து,

இங்கே வா.. இங்கே வா..” என்று கூப்பிட்டது. அந்தக் குரலைக் கேட்டு முதலில் அந்த மனிதன் பயந்து போனான். பிறகு தவளையைப் பார்த்தான். தவளை சொன்னது,

எனக்குக் கொஞ்சம் எலுமிச்சம்பழங்கள் கொடு..” என்றது. அந்த மனிதன்,

முடியாதுஎன்றான்.

சரி.. நீ கொடுக்கவில்லை என்றால் நான் உன்னை முழுங்கிருவேன்..” என்றது தவளை. பிறகு தவளை ஆரஞ்சுப்பழங்களும் எலுமிச்சம்பழங்களும் சுமந்து வந்த மனிதனை விழுங்கிவிட்டது. அந்த நேரத்தில் ஒரு குதிரையும் அதன் இணையும் வந்தன. அவற்றைப் பார்த்த தவளை,

என்ன்னை உன் முதுகில் தூக்கிச் செல்.. நான் உனக்கு பணம் தருகிறேன்..” என்றது.

முடியாது.. நீ குரங்கு மாதிரி இருக்கிறாய்.. உன்னை என் முதுகில் சுமக்க மாட்டேன்..” என்றது குதிரை.

நீ முடியாது என்றால் உன்னை விழுங்கி விடுவேன்..” என்று சொல்லி அந்தக் குதிரையையும், அதன் இணையையும் விழுங்கி விட்டது.

பிறகு அந்த வழியே ஒரு முடிதிருத்துநர் சென்றார். அவரைப் பார்த்த தவளை,

வா.. எனக்கு முடி மழித்து விடு..” என்றது.

முடிதிருத்துநரும்,

சரி இதோ.. செய்கிறேன்..” என்றார். அவர் தவளைக்கு முடி மழித்தார். அவர் தவளையின் வயிறு மிகவும் பெரியதாக இருப்பதாக நினைத்தார். வயிற்றில் மழிக்கும் போது கத்தியால் ஒரு வெட்டி விட்டார்.

என்ன ஆச்சரியம்!

வயிற்றுக்கு உள்ளே இருந்து ஒரு எலியும், மாவும் பாலும், வந்தன. ரொட்டிக்காரரும் ரொட்டிகளும் வந்தன. எலுமிச்சை வியாபாரியும் அவனுடைய எலுமிச்சைகளும் ஆரஞ்சுப்பழங்களும் வந்தன. கடைசியாக குதிரையும் அதன் இணையும் வந்தன.

அதைப் பார்த்த முடிதிருத்துநர் ஓடியே போய் விட்டார்.

பேராசை கொண்ட தவளை வயிறு கிழிந்து இறந்து விட்டது. 

நன்றி - புக் டே

 

Wednesday, 30 July 2025

இந்திய நாடோடிக்கதை 3

 

இந்திய நாடோடிக்கதை 3

பூனையைக் கொல்ல முடியாது.

ஆங்கிலம் வழி தமிழில்உதயசங்கர்




முன்பு ஒரு காலத்தில் ஒரு நாயும் பூனையும் எப்போதும் சண்டை போட்டுக் கொண்டேயிருந்தன. பூனையை நாய் அடிக்கும். ஆனால் பூனைக்குக் காயம் ஏற்படாது. அதுமட்டுமல்ல, பூனை துள்ளிக்குதித்து,

எனக்குத் தான் வலிக்கலையே.. எனக்குத்தான் வலிக்கலையே.. தோள்பட்டை வலி போயே போச்சே..இப்ப எனக்கு வலிக்கலையே

என்று நடனம் ஆடும். நாய்க்குப் புரியவில்லை. மைனாவிடம் சென்ற நாய்,

இந்தப் பூனையை என்ன செய்வது? அடிச்சுட்டேன்.. கடிச்சுட்டேன்.. ஆனாலும் அதுக்கு வலிக்கலை.. நானும் பெரிய நாய் தான் அதுவும் பெரிய பூனை தான்..ஆனாலும் அதுக்கு வலிக்கலை.. ஆனால் அது என்னை அடிச்சா எனக்குப் பயங்கரமா வலிக்குது..”

என்று சொல்லி வருந்தியது. மைனா,

பூனையின் வாயை பயங்கரமாக் கடிச்சு வைச்சிரு.. நிச்சயம் அதுக்கு வலிக்கும்..”

என்று சொன்னது. மைனா சொன்ன மாதிரியே நாயும் பூனையின் வாயைப் பயங்கரமாகக் கடித்தது..ஆனால் பூனையோ,

எனக்கு வலிக்கலையே.. “ என்று துள்ளிக்குதித்து நடனம் ஆடியது. மறுபடியும் நாய் மைனாவிடம் சென்று,

என்ன செய்வது? “ என்று கேட்டது.

பூனையின் காதுகளைக் கடி..” என்றது மைனா. நாய் பூனையின் காதுகளைக் கடித்தது. அப்போதும் பூனை,

இப்பவும் வலிக்கலையே.. காதுல நான் கம்மல் போட்டுக்குவேனே..” என்று சொல்லி ஆட்டம் போட்ட்து.

நாய் யானையிடம் சென்றது.

உன்னால் இந்தப் பூனையைக் கொல்ல முடியுமா? எனக்குப் பெரிய தொந்திரவா இருக்குஎன்று கேட்டது.

இது என்ன பெரிய விஷயம்.. நான் கொன்னுருவேன்..நான் ரொம்ப்ப்பெரியவன் அது ரொம்பச்சின்னதுஎன்றது யானை.

யானை பூனையைத் தும்பிக்கையால் தூக்கி தூரமாய் வீசியது. தூரத்தில் விழுந்த பூனை மறுபடியும் துள்ளிக்குதித்து ஆடியது.

எனக்குக் கொஞ்சம் கூட வலிக்கலையே..” என்றது பூனை. யானைக்குக் கோபம் வந்து விட்டது.

உனக்கு நல்ல பாடம் கத்துக் கொடுக்கிறேன்..” என்று சொல்லிய படியே, பூனையைக் கீழே போட்டு தன்னுடைய பெரிய காலினால் ஓங்கி மிதித்தது. பூனை தரையிலிருந்து துள்ளி,

எனக்கு வலிக்கலையே..” என்று சொல்லிக்கொண்டே தன்னுடைய கூர்மையான நகங்களால் யானையின் தும்பிக்கையைக் கீறிவிட்டது. யானை வலியினால் கத்திக் கொண்டே ஓடியே போய் விட்டது.

நாய்க்கு மிகுந்த கோபம்.

பூனையைக் கொல்வதற்கு என்ன செய்வது ? “ என்று யோசித்தது. பூனையின் மூக்கைப் பலமாகக் கடித்தது. மூக்கிலிருந்து ரத்தம் வழிந்தது. ஆனால் பூனை இப்போதும் ஆடிக் கொண்டே,

எனக்கு வலிக்கலையே.. இப்போ நான் மூக்குத்தி மாட்டிக்குவேன்..” என்றது. நாய் பூனையின் வாலைக் கடித்து இரண்டு துண்டாக்கியது. அப்போதும் பூனை ஆடிக் கொண்டிருந்தது.

பிறகு நாய் ஒரு சிறுத்தையிடம் சென்றது.

நீ இந்தப் பூனையைக் கொன்று விட்டால் நீ என்ன கேட்டாலும் தருவேன்..” என்றது. உடனே சிறுத்தையும், “ நான் கொல்றேன்..” என்று கத்தியது. இரண்டும் பூனையைத் தேடிப் போயின.

பூனை சிறுத்தையைப் பார்த்ததும்,

நில்லு..உங்கிட்டே கொஞ்சம் பேசணும்.. முதல்ல உனக்குச் சாப்பிட ஏதாச்சும் கொடுக்கிறேன்.. பிறகு என்ன சொல்லணுமோ சொல்றேன்..” என்று சொல்லிவிட்டு வெகுதூரம் ஓடிச் சென்றது. தூரத்தில் நின்று கொண்டு ,

நான் உனக்கு எதுவும் கொடுக்க மாட்டேன்.. இப்ப நீ என்னைக் கொல்லமுடியாதே..” என்று சொல்லியபடியே ஆடியது.

சிறுத்தைக்குக் கோபமான கோபம். “ எவ்வளவு புத்திசாலியாக இருக்கிறது இந்தப் பூனைஎன்று நினைத்தபடியே காட்டுக்குள் ஓடி விட்டது.

நாய் ஒரு மனிதனிடம் சென்று கேட்டது. மனிதனும்,

நான் கத்தியால பூனையின் வயிற்றைக் கிழிச்சிருவேன்..” என்று சொன்னான். சொன்னமாதிரியே பூனையின் வயிற்றில் குத்தினான். ஆனால் குத்திய இடம் மூடிக் கொண்ட்து. பூனையும் குதித்து எழுந்து ஆடியது. மனிதன் அப்படியே பயந்து போய் ஓடி விட்டான்.

நாய் ஒரு கரடியிடம் சென்றது.

உன்னால் கொல்லமுடியுமா? “ என்று கேட்டது.

நான் நிச்சயம் கொல்வேன்..” என்று சொன்ன கரடி தன்னுடைய நகங்களால் பூனையின் உடலைக் கிழித்தது. ஆனால் பூனையை எதுவும் செய்ய முடியவில்லை. பூனை தன்னுடைய நகங்களால் கரடியின் மூக்கைப் பலமாக்க் கிழித்து விட்டது. கரடி அங்கேயே செத்து விட்டது.

இதைப் பார்த்த நாய் விரக்தியுடன் ஓடிச் சென்று மலையிலிருந்து விழுந்து இறந்து போனது.

பூனை தன்னுடைய நண்பர்களுடன் மகிழ்ச்சியாக வாழ்ந்தது.

 

சிம்லாவில் கேட்ட கதைகி.பி. 1876