Friday 7 June 2019

பப்பியின் வீடு


பப்பியின் வீடு

உதயசங்கர்

பப்பி தடுமாறியது. எதிரேயும் குறுக்குமறுக்கும் யார் யாரோ வந்து போய்க் கொண்டிருந்தனர். இரண்டு அடி முன்னால் போய் நின்று கொண்டிருந்த ஆட்டோவின் மீது மோதியது. யாரோ,
“ நாய்க்குக் கண்ணு தெரியுதா பாரு.. நின்னுக்கிட்டிருக்கிற ஆட்டோவில வந்து மோதுது…சூ…சூ..சூ.. “
என்று ஆட்டோக்காரர் சத்தம் போட்டார். பப்பி பயந்து நடுங்கியது. பப்பிக்கு எந்தப் பக்கம் போகவேண்டும் என்று தெரியவில்லை. உடம்பில் அரிப்பு எடுத்தது. அப்படியே உட்கார்ந்து முன்காலால் சொறிந்து கொண்டது. செம்பட்டைக்கலரில் முடி கொத்து கொத்தாய் தொங்கியது. முதுமையினால் தளர்ந்து போயிருந்தது. பப்பிக்கு பதினைந்து வயதாகி விட்டது. ஒரு கண் முழுவதுமாய் பார்வை தெரியவில்லை. ஒரு கண்ணில் அரைப்பார்வை மட்டும் தெரிந்தது. பல பற்கள் உதிர்ந்து விட்டன. மோப்பசக்தியும் குறைந்து விட்டது. குரலும் ஒடுங்கி விட்டது. குரைப்பதற்காக வாயைத் திறந்தால் ஊளைச்சத்தமோ, முனகலோ தான் வருகிறது.
எப்படி இந்தத்தெருவுக்கு வந்தோம் என்று பப்பி யோசித்தது. பப்பியின் சொந்தக்காரர் நேற்று இரவில் பப்பியை ஒரு சாக்குப்பையில் வைத்துத் தூக்கிக் கொண்டு வந்தார். இந்தத் தெரு மூலையில் பையோடு வைத்து விட்டுப் போய் விட்டார்.
காலையில் போக்குவரத்துச் சத்தம் கேட்டுத்தான் பப்பி கண்விழித்தது. பப்பியின் இளமையில் படு சுறுசுறுப்பாக இருக்கும். ஒரு இடத்தில் ஒரு நொடி கூட சும்மா இருக்காது. அதனுடைய சொந்தக்காரரோ, அவருடைய மனைவி குழந்தைகள் எல்லோரும் சொல்வதைக் கேட்டு நடக்கும். காலையில் பேப்பரைக் கவ்விக் கொண்டு வரும். வீசுகிற பந்தை எடுத்து வரும். இரவில் தூங்கவே தூங்காது. சின்னச்சத்தம் கேட்டாலும் காதுகளை விடைத்துக் கொண்டு உற்றுக் கவனிக்கும். அந்தச் சத்தம் ஆபத்து என்று தோன்றி விட்டால் உடனே குரைக்க ஆரம்பித்து விடும். ஒருமுறை அப்படி குரைத்ததால் பப்பியின் சொந்தகாரர் எழுந்து எல்லாவிளக்குகளையும் போட்டார். அதைப்பார்த்த திருடன் காம்பவுண்டு சுவரில் ஏறிக்குதித்து ஓடி விட்டான். குழந்தைகளோடு அப்படி விளையாடும். எல்லோருக்கும் செல்லப்பிள்ளையாக இருந்தது பப்பி. இப்போது குழந்தைகள் வளர்ந்து பெரியவர்களாகி விட்டார்கள். பப்பியால் முன்பு போல குரைக்கவோ, ஓடவோ, முடியவில்லை. அவர்கள் என்ன செய்வார்கள்?
பப்பி கண்களை மூடி யோசித்தது. வயிறு பசித்தது. தெரு மங்கலாகத் தெரிந்தது. எல்லோரும் பப்பியைக் கடந்து போனார்கள். யாரும் நிற்கவில்லை. பப்பிக்குச் சோர்வாக இருந்தது. அப்படியே ஒடுங்கிப் படுத்துவிட்டது. பப்பி ஒரு கனவு கண்டது.
” மகா..மகா.. இங்கே பாரேன் ஒரு சடைநாய்..”
“ ஐய்..ஆமா.. நாம வீட்டுக்குக் கூட்டிட்டு போவோமா? “
“ அய்யா திட்டுவாரே..”
“ நாம கெஞ்சிக் கேட்டா ஒண்ணும் சொல்லமாட்டாரு..”
சாக்குப்பையில் பப்பி மிதந்து கொண்டே போகிறது. வெகுநேரம் கழித்து சாக்குப்பையிலிருந்து பப்பியை யாரோ தூக்குகிறார்கள்.
“ அட கிழட்டு நாயை எதுக்குத் தூக்கிட்டு வந்தீக.. உங்களுக்குச் சாப்பாடு போடறதே கஷ்டமா இருக்கு.. கொண்டு போய் விட்டுட்டு வாங்க..” என்று அப்பாவின் குரல் கேட்கிறது.
“ அய்யா.. அய்யா.. இருக்கட்டும்யா.. பாக்கப் பாவமா இருக்கு.. “ என்று குழந்தைகள் கெஞ்சுகின்றன. பப்பி கண்களைத் திறந்து பார்க்கிறது. அரைக்கண் பார்வையில் அது ஒரு தகரக்கூரை போட்ட பிளாட்பார்ம் வீடு என்று தெரிகிறது. அப்பாவின் முகத்தில் இருந்த கடுமை குறையவில்லை. குழந்தைகள் பிரியத்தோடு பப்பியைத் தடவிக் கொடுத்தார்கள். அந்தப்பிஞ்சு விரல்களில் வழிந்த அன்பை பப்பி உணர்ந்தது. அப்போது ஒரு வயதான கிழவி அந்த வீட்டுக்குள் வந்தாள். பப்பியைப் பார்த்தாள். குழந்தைகளைப் பார்த்தாள்.
“ நாய்க்குச் சோறு வைச்சீகளா..பிள்ளைகளா..? என்னை மாதிரி அதுக்கும் முடியல… பாவம்..”
என்று சொல்லிக் கொண்டே அடுப்பாங்கரைப் பகுதிக்குப் போனாள். அதன் பிறகு அப்பா எதுவும் சொல்லவில்லை.  மகாவும் கதிரும் பப்பியைக் கட்டிப்பிடித்துக் கொண்டனர். பப்பி வாலை ஆட்டியது. லேசாய் முனகியது.
எல்லாம் கனவு மாதிரியே இருந்தது. ஆனால் மகாவும் கதிரும் பப்பிக்கு எதிரில் ஒரு பிளாஸ்டிக் கிண்ணத்தில் கொஞ்சம் சோறு போட்டுக் கொண்டு வந்தார்கள். பப்பி அந்தக் குழந்தைகளைப் பார்த்தது. அந்தக் குழந்தைகளுக்குத் தங்க நிறத்தில் சிறகுகள் முளைத்திருந்தன.

நன்றி - மாயாபஜார்



No comments:

Post a Comment