Tuesday 7 March 2017

மண்ணாக மாறிய பொன்

மண்ணாக மாறிய பொன்

உதயசங்கர்

காணாவூர் நாட்டில் திருடர்களே கிடையாது. அவ்வளவு நல்ல நாடா என்று நினைக்காதீர்கள் ஏனென்றால் அந்த நாட்டு மக்களிடம் பணம் கிடையாது. பணம் இருந்தால் தானே திருடர்கள் திருட முடியும்! அந்த நாட்டு தோலிருக்க சுளை முழுங்கி ராஜாவும், பொன்னுக்கு வீங்கி மந்திரிகளுமே அந்த வேலையைப் பார்த்துக் கொண்டார்கள். மக்களிடம் இருந்து வரி, வட்டி, என்று வசூல் செய்து நாட்டு கஜானாவை பொற்காசுகளால் நிரப்பி விட்டார்கள். ஆனாலும் பேராசை விடவில்லை. மேலும் மேலும் மக்களிடமிருந்து பிடுங்கிக் கொண்டிருந்தார்கள். வீட்டுவரி, வாசல் வரி, சன்னல்வரி, கதவுவரி, உணவுவரி, தோட்டவரி, காய்வரி, கனிவரி, உட்காரும் வரி, நிற்கும்வரி, நடைவரி, படுக்கும்வரி, உறங்கும் வரி, இரவு வரி, பகல்வரி, என்று ஏராளமான வரிகளைப் போட்டார்கள். அப்புறம் இந்த வரிகள் எல்லாம் தினசரி மாறிக்கொண்டேயிருக்கும். ஒரு நாள் பத்து வெள்ளி குறையும். மக்கள் கொஞ்சம் ஆறுதல் அடைவார்கள். ஆனால் மறுநாள் முப்பது வெள்ளி கூடிவிடும். ஒவ்வொரு நாளும் தொலைக்காட்சியைப் பார்த்துவிட்டு தான் வேலைக்கு போவார்கள். தொலைக்காட்சியில் அவ்வப்போது தோலிருக்க சுளைமுழுங்கி ராஜா தோன்றி உரைவீச்சு வீசுவார். அதில் பெரும்பாலும் இன்னும் ஆயிரம்வருடங்கள் கழித்து காணாவூர் நாடு உலகின் தலைசிறந்த நாடாக மாறி விடும். அதுவரை மக்கள் இந்த சிரமங்களைப் பொறுத்துக் கொள்ள வேண்டும் என்று கண்களில் கண்ணீர் வழிய உணர்ச்சிகரமாகப் பேசுவார். வேறுவழியின்றி மக்களும் பொறுத்துக் கொண்டார்கள். வேறு என்ன செய்ய முடியும்?
 அரண்மனை கஜானாவில் நிரம்பிய தங்கத்தை தோலிருக்க சுளைமுழுங்கி ராஜா என்ன செய்தார் தெரியுமா? தங்க இழைகளால் ஆன ஆடைகளில் வைரங்களைப் பதித்து காலை, மாலை, இரவு, என்று விதம் விதமாக உடுத்தினார்.
மக்கள் இருக்கும் ஓரிரு கைத்தறி ஆடைகளை அன்றாடம் துவைத்து உடுத்திக் கொண்டிருந்தார்கள். ஆனால் ராஜாவோ ஒரு முறை உடுத்திய உடையை மறுமுறை உடுத்த மாட்டார். மந்திரிகள் உள்ளாடைகளைக் கூட தங்கத்தினால் போட்டார்கள். அது மட்டுமல்ல.  அரண்மனையில் இருபத்திநாலு மணிநேரமும் விழாக்கள் நடந்து கொண்டிருந்தது. இதுக்குத்தான் விழான்னு இல்லை. தோலிருக்க சுளை முழுங்கி ராஜா உறங்கி எழுந்ததுக்கு விழா. பல் தேய்ப்பதுக்கு விழா. குளித்தால் விழா. சாப்பிட்டால் விழா, பிறந்த நாள் விழா, பள்ளி சென்ற நாள் விழா, படிப்பு முடித்த நாள் விழா, அரண்மனை விழா, அந்தப்புர விழா, என்று…..கேட்கவே வேண்டாம்.. எப்போதும் விழாக்கள் தான். இப்படி இன்ன காரணம் என்றில்லாமல் அரண்மனையில் விழாக்கள் நடத்தி மக்களிடம் இருந்து வசூலித்த வரிகளை ஆடம்பரமாய் செலவு செய்தார்கள்.
இவ்வளவு இருந்தும் ஒரு நாள் தோலிருக்க சுளைமுழுங்கி ராஜா நகர்வலம் வரும்போது ஒரு வீட்டில் திருமணவிழா நடந்து கொண்டிருந்தது. அந்த விழாவுக்கு வந்தவர்கள் மணமக்களுக்கு பரிசுப்பணம் கொடுத்துக் கொண்டிருந்தார்கள். அதைப்பார்த்த தோலிருக்க சுளை முழுங்கி ராஜா இவ்வளவு வரிகளைப் போட்டும் இவ்வளவு பணம் மக்களிடம் இருக்கிறதே என்று பொறாமைப்பட்டார். உடனே பொன்னுக்கு வீங்கி மந்திரிப்பிரதானிகளைக் கூப்பிட்டார். இரண்டு பகல், இரண்டு இரவு ஆலோசனை செய்தார்கள். எதுக்கு தெரியுமா? மக்களிடம் இருக்கும் அத்தனை தங்கம் வெள்ளிக் காசுகளை பறிக்க வேண்டும். கடைசியில் ஒரு பொன்னுக்கு வீங்கி மந்திரி தான் புதிய யோசனையைச் சொன்னார். “ பேசாமல் அத்தனை தங்க, வெள்ளிக்காசுகளைச் செல்லாதுன்னு சொல்லிருவோம்… எல்லோரும் ஒரு வாரத்துக்குள்ளே அவங்கவங்க கிட்டே இருக்கிற காசுகளை அரண்மனை கஜானாவில் கொண்டு வந்து கொடுத்துரணும்…அதுக்குப் பதில் அவங்களுக்கு பானை ஓட்டுச்சில்லுகளைக் கொடுத்துருவோம்… இனி அது தான் காசுன்னு சொல்லிருவோம்…எப்பூடி? “
என்று சொன்னான். உடனே இன்னொரு பொன்னுக்கு வீங்கி மந்திரி,
“ எல்லோரும் தங்க, வெள்ளிக்காசுகளைக் கொண்டு வந்து கொடுத்த பிறகு ஓட்டுச்சில்லுக்காசுகள் செல்லாதுன்னு சொல்லிருவோம்… அப்புறம் மக்களிடம் எந்தப்பணமும் இருக்காதுல்ல..ஹி.ஹிஹி…”
என்று சொன்னான். அதைக்கேட்ட தோலிருக்க சுளைமுழுங்கி ராஜாவுக்கு சந்தோசமாகி விட்டது. உடனே அதற்கு ஒரு விழா எடுத்துக் கொண்டாடினார். நள்ளிரவில் மக்கள் எல்லோரும் உறங்கிக் கொண்டிருக்கும் நடுநிசியில் முரசறைந்து தங்கம், வெள்ளி, காசுகள் செல்லாது என்றும் தெருவுக்குத் தெரு வைத்திருக்கும் அண்டாக்களில் அவரவர் கைவசம் வைத்திருக்கும் காசுகளைப் போட்டு விட்டு, அரசு அலுவலர் தரும் ஓட்டுச்சில்லுகளை வாங்கிக் கொண்டு போகவேண்டும். காசுகளைப் பதுக்கினால் கடுமையான தண்டனை கிடைக்கும் என்று காவலர்கள் கூவினார்கள்.
காலையில் எழுந்த மக்கள் அதிர்ச்சியடைந்தனர். கால்காசு, அரைக்காசு என்று சேர்த்து வைத்திருக்கும் அத்தனை தங்கம், வெள்ளிக்காசுகளை கொண்டுபோய் அண்டாக்களில் போட்டார்கள். சிலர் ஓலமிட்டு அழுதார்கள். சிறுகச்சிறுகச் சேர்த்து வைத்த காசு போகிறதே என்று அழூதார்கள். அண்டா ஸ்டாண்டில் இருந்த அரசு அலுவலர் கொடுத்த ஓட்டுச்சில்லுகளை வாங்கிக் கொண்டு வந்தார்கள். சிலர் வாங்கி வரும்போதே ஓட்டுச்சில்லுகளை கைதவறி கீழே போட்டு விட்டார்கள். ஓட்டுச்சில்லுகள் அப்படியே தூள் தூளாக நொறுங்கிவிட்டது. என்ன செய்வது என்று தெரியவில்லை. ஓட்டுச்சில்லுகளை முதலில் கடையில் வாங்கவில்லை. அதை எப்படிப் பத்திரப்படுத்துவது என்று தெரியவில்லை? மக்கள் குழம்பிப் போனார்கள்.
காணாவூர் அருகிலுள்ள காட்டில் குபரே மாளிகை கட்டி வாழ்ந்து வந்த குபேரனின் தேவதைகளுக்கு மக்களின் அழுகைச் சத்தம் கேட்டது. தேவதைகள் காணாவூர் நாட்டின் மீது பறந்து மக்களின் நிலைமையைப் பார்த்து வருந்தினார்கள். அவர்களுக்கு தோலிருக்க சுளைமுழுங்கி ராஜாவின் மீது கோபம் வந்தது. அவனுக்கு நல்ல பாடம் கற்பிக்க வேண்டும் என்று நினைத்தார்கள். அரண்மனைக்குப் பறந்து சென்றார்கள்.
அங்கே தோலிருக்க சுளைமுழுங்கி ராஜா, அவனுடைய பொன்னுக்கு வீங்கி மந்திரிகளோடு தங்க நாணயக்குவியல்களின் மீது படுத்து உருண்டு புரண்டு கொண்டிருந்தார்கள்.
“ ஹா..ஹாஹாஹா… எல்லாத்தங்கமும் இனி என்னிடம் வந்து விடும்… நான் தங்கராஜா..இனி நான் தங்கராஜா.. ” என்று சிரித்துக் கொண்டிருந்தான். மந்திரிகளும் பல்லிளித்துக் கொண்டு, “ ஹா..ஹா…ஹா… நாங்க இனி தங்கமந்திரிங்க..” என்று கத்திக் கொண்டிருந்தார்கள். இதைப்பார்த்த குபேரதேவதைகளுக்குக் கோபம் வராமல் இருக்குமா? அவர்கள் தங்களுடைய சேலையிலிருந்து ஒரு நூலை உருவிப்போட்டார்கள். அவ்வளவு தான். அத்தனை தங்கமும் மண்ணாக மாறிவிட்டது. தோலிருக்க சுளை முழுங்கி ராஜாவும், பொன்னுக்கு வீங்கி மந்திரிகளும் மணல் குவியல்களில் புரண்டு கொண்டிருந்தார்கள். அதிர்ச்சி அடைந்த தோலிருக்க மலை முழுங்கி ராஜா எழுந்து அரண்மனைக்குள் ஓடினார். அவருடைய சேர்த்து வைத்திருந்த ஆபரணங்களைத் தொட்டார். அவை மண்ணாகி விட்டது. வயிறு பசிக்கிறது என்று சாப்பாட்டு மேசைக்குப் போனார். உணவைத் தொட்டார். அதுவும் மண்ணாகிவிட்டது. அந்தப்புரத்திற்குப் போனார். ராணியைத் தொட்டார். ராணி மண்சிலையாகி விட்டார். ஆசையோடு ஓடி வந்த குழந்தையைத் தூக்கினார். குழந்தையும் மண்ணாகி பொலபொலவென உதிர்ந்து விட்டது.
தோலிருக்க சுளை முழுங்கி ராஜா ஆசைப்பட்டு தொட்ட எல்லாம் மண்ணாகி விட்டது. பொன்னுக்கு வீங்கி மந்திரிகளும் தொட்டது எல்லாம் மண்ணாகி உதிர்ந்து விட்டன. எல்லோரும் அழுது கொண்டே அரண்மனைக்கு ஓடி வந்தனர். அரண்மனை கொலுமண்டபத்தில் தோலிருக்க சுளை முழுங்கி ராஜாவும் அழுது கொண்டே சிம்மாசனத்தில் உட்கார்ந்தார். அதுவும் மண்ணாகி உதிர தரையில் விழுந்தார். எல்லோரும் தரையில் உட்கார்ந்து ஆலோசித்தனர்.

 மக்களிடம் வாங்கிய தங்கம், வெள்ளிக்காசுகளைத் திரும்பக் கொடுக்கச் சொல்லி உடனே ஆணையிட்டார். மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். குபேர தேவதைகளும் அரண்மனை மீது உருவிப் போட்ட அவர்களுடைய சேலை நூலைத் திரும்ப எடுத்துக் கொண்டனர். மண்ணானது எல்லாம் மீண்டும் உயிர் பெற்றன. காணாவூரில் ஆனந்தம் அலையடித்துக் கொண்டிருந்தது.
நன்றி - மாயாபஜார் தமிழ் இந்து.


No comments:

Post a Comment