Saturday 21 May 2016

மக்கள் நலக்கூட்டணி விளைவு

THE EFFECTS OF MNK

மக்கள் நலக்கூட்டணி விளைவு

உதயசங்கர்


தேர்தல் முடிந்து முடிவுகள் வெளியானதும் விரக்தியும், கோபமும், வருத்தமும், பகிடியும், கேலியும் கிண்டலும் தெறிக்கும் விமரிசனங்கள் ஊடகங்களில் வெளியாகிக் கொண்டேயிருக்கின்றன. எப்போதும் தோல்விக்கு யாரையாவது பலிகடா ஆக்குவது வழக்கம்தான். அப்படியே இந்தத்தேர்தலிலும் பணநாயகம், அதிகார துஷ்பிரயோகம், பொருத்தமில்லாத கூட்டணி, பொருத்தமில்லாத தலைவர்கள், அவர்களுடைய பேச்சுகள், நடவடிக்கைகள், என்று ஆயிரம் காரணங்கள் கூரம்புகளென பாய்ந்து கொண்டிருக்கின்றன.

ஆனால் யதார்த்தநிலையும், களநிலவரத்தையும் உணர்ச்சிவசப்பட்டு மறந்து விடவும் நேரிடுகிறது. அது மக்கள் மீதான சாபமாகவும் மாறுகிறது. இனி தமிழ் நாட்டை யாராலும் காப்பாற்ற முடியாது என்கிற மாதிரியும் பேசச்சொல்கிறது. மக்கள் நலக்கூட்டணி தோல்வியடைந்திருக்கிறது. ஆட்சியைப் பிடிக்கும் என்பது அதீதமான கற்பனை என்றாலும் ஒரு ஐந்து தொகுதியையாவது வென்றிருக்கலாம் என்ற ஆதங்கம் இடதுசாரி ஆதரவாளர்கள் எல்லோருக்கும் இருக்கிறது. ஒரு தொகுதி கூட பெறவில்லை என்பதில் மெய்யான ஆனந்தம் அடைகிற நடுநிலை (!) இடதுசாரி அறிவுஜீவிகள் கூட மேலுக்கு அவர்களும் காரணங்களைச் சொல்கிறார்கள். எல்லாக்கருத்துகளும் விமரிசனங்களும் வரவேற்கப்படவேண்டியவையே.

 இனி மக்கள் நலக்கூட்டணியின் விளைவுகளைப் பற்றி கொஞ்சம் உரையாடிப்பார்க்கலாம்.

சாதகங்கள்:
1.   ஆறு மாதங்களுக்கு முன்பு வரை அதிமுக அல்லது திமுக என்ற நிலைமையில் ஒரு அதிர்வை ஏற்படுத்தியிருக்கிறது.
2.   இதுவரை தேர்தலுக்குத் தேர்தல் கூட்டணி என்ற நிலைமை மாறி மக்கள் பிரச்னைகளுக்காக களமிறங்கி போராட குறைந்த பட்ச செயல்திட்டத்தினை உருவாக்கியிருக்கிறது.
3.   குறைந்த பட்ச செயல்திட்டத்தை உருவாக்கியதில் இடதுசாரிகளின் பங்களிப்பு மகத்தானது.
4.   திமுக, அதிமுக, பாஜக, காங்கிரஸ்,பாமக, நாம்தமிழர் ( ஊழல், மதவாதம், இனவாதம்,சாதியவாதம்) அல்லாத கட்சிகளை அதாவது ஒருங்கிணைத்து பலருடைய வியப்புக்குறிகளுக்கு மத்தியில் தேர்தல் களம் கண்டிருப்பது நம்பிக்கையளிக்ககூடிய விஷயம்.
5.   மின்னணு ஊடகங்களிலும், பத்திரிகைகளிலும், சமூக வலைத்தளங்களிலும், மூன்றாவது அணி குறித்த விவாதங்கள் வெளியானது இளைய சமுதாயத்தினருக்குக் நம்பிக்கையளிக்கக்கூடிய விஷயம்.
6.   ஆறுமாதகாலத்தில் ஒரு கூட்டணி உருவாகி 234 தொகுதிகளிலும் போட்டியிட்டு இவ்வளவு ஓட்டுகள் வாங்கியிருப்பது பெருமைப்பட வேண்டிய விஷயம்.
7.   மக்கள் நலக்கூட்டணியின் மக்கள் கோரிக்கைகளுக்கான போராட்டங்களைத் தொடர்ந்தால், அடுத்த ஐந்து ஆண்டுகளில் மிகப்பெரிய வளர்ச்சியடைய முடிகிற வாய்ப்பை இந்தத்தேர்தல் கொடுத்திருக்கிறது.
8.   புதிய புதிய இடங்களில் மக்கள் நலக்கூட்டணிக்கான ஆதரவுத்தளங்களை அடையாளம் காட்டியிருக்கிறது.

பாதகங்கள்:

1.   மக்கள் நலக்கூட்டணி உருவாகி ஆறே மாதத்தில் ஒரு தேர்தலைச் சந்தித்தது இப்போது நடக்கத்தொடங்கியிருக்கும் குழந்தையை 100 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் ஓடச் சொல்வது மாதிரி. அதற்கான விளைவை அடைந்திருக்கிறது.
2.   மக்கள் நலக்கூட்டணியிலுள்ள கட்சிகள் எல்லாம் ஊழல் கறையற்ற கட்சிகள் என்ற அடையாளம் மட்டுமே முக்கியமாக இருந்தது. சிலகட்சிகளின் கடந்த காலவரலாற்றை அவ்வளவு சீக்கிரம் யாரும் மறந்து விட மாட்டார்கள்.
3.   இடதுசாரிகளைத் தவிர மற்ற கட்சித்தலைவர்கள் தானே கட்சி, தானே தலைவர் என்ற அளவில் இருப்பதால் அவர்கள் பேசும் பேச்சுகள், நடவடிக்கைகள் மக்கள் நலக்கூட்டணியைப் பாதிக்கத்தான் செய்யும். பாதித்தது.
4.   மக்கள் நலக்கூட்டணியில் இடம் பெற்ற கட்சிகள் அனைத்தும் ஒப்பீட்டளவில் மிகச்சிறிய கட்சிகள் என்பதை மறந்து விடக்கூடாது. தமிழகமெங்குமுள்ள கிராமங்களில் இந்தக்கட்சிகளுக்கு பெரிய அமைப்பு பலமே கிடையாது.
5.   பெரும்பாலும் கிராமங்களில் உள்ள ஊராட்சி, ஒன்றிய, பதவிகளில் அதிமுக, அல்லது திமுக சார்ந்தவர்களே இருக்கிறார்கள். ஏற்கனவே பெரிய அளவுக்கு அமைப்பு பலமே இல்லாத மக்கள் நலக்கூட்டணிக்கட்சிகள் மக்களிடம் தங்களுடைய சின்னங்களை ஓரளவுக்கேனும் அறிமுகப்படுத்தவே இந்தத் தேர்தல் பயன்பட்டிருக்கிறது.
6.   67-ல் இருந்து தேர்தல்களைச் சந்தித்து வரும் திராவிடக்கட்சிகளின் எந்த யுத்தியும் மக்கள் நலக்கூட்டணிக்கட்சிகளிடம் கிடையாது.
7.   பணம், அதிகாரம், இந்தத்தேர்தலில் எப்போதும் இல்லாத அளவுக்கு புகுந்து விளையாடியதைத் தடுக்கத் தேர்தல் ஆணையமும் சரி, மக்களும் சரி தயாராகவில்லை.
8.   மக்கள் மனநிலையில் ஒரு தேக்கம், இளைஞர்கள் மத்தியில் ஒரு விரக்தி ஆகியவையே ஓட்டுக்குப்பணம், நோட்டாவுக்கு ஓட்டு என்று இரண்டு எதிர்நிலைகளில் இயங்கியது
9.   முதலில் எழுந்து வந்த எழுச்சியைத் தக்கவைத்துக் கொள்ள மக்கள் நலக்கூட்டணி தவறியது.
10.  தேமுதிக மீதான ஊடகவிமரிசனம் மக்கள் நலக்கூட்டணியின் ஆதரவுத்தளத்தைப் பாதித்தது.

இவையும் இன்னும் பல சாதகபாதகங்களும் இருக்கலாம். ஆனால் தொடர்ந்து தமிழகத்தின் எல்லாப்பகுதிகளிலும் அமைப்புபலத்தை அதிகரித்து தொடர்ச்சியான மக்கள் போராட்டங்களின் வழியே மக்கள் நம்பிக்கையைப் பெறுவது ஒன்றே மக்கள் நலக்கூட்டணிக்கும் குறிப்பாக இடதுசாரிகள் ஒரு தீர்மானகரமான சக்தியாக உருவாவதற்கும் உள்ள ஒரே வழி.


நாம் வெல்வோம்!

No comments:

Post a Comment