Monday 12 November 2012

மருத்துவத்தின் தத்துவம்

 

மனித நலம் காக்கும் ஹோமியோபதி- 6

உதயசங்கர்Medicines-are-obtained-from-animals

 

மருத்துவம் என்பது எல்லா உயிர்களின் உள்ளுணர்வின் ஞாபக அடுக்குகளில் உறைந்துள்ள செயல்பாடு தான். நாய், பூனை, போன்ற மிருகங்களைக் கவனித்துப்பார்த்தால் தெரியும். தனக்கு உடல்நிலை சரியில்லையென்றால் உணவெடுக்காது. அதோடு நாய் அருகம்புல்லைக் கடித்துத் தின்னும். சிறிது நேரத்திலேயே வயிற்றில் செரிக்காமல் தங்கி விட்ட விஷப்பொருளை கக்கி விடும். நாய்க்கு எப்படி அருகம்புல் தெரியும்? அதன் உள்ளுணர்வில் பதியப்பட்டுள்ள மருத்துவக்குறிப்பு ஞாபகத்தின் மேலாக அலையடித்து அதற்கு வழிகாட்டுகிறது. மனிதன் சமூகவயமாகும் போது கொஞ்சம் கொஞ்சமாக தன் உள்ளுணர்வின் பதிவுகளை அழித்து விட்டான். வேலைப்பிரிவினைகள் உருவாகும் போது மருத்துவம், மந்திரம், சடங்குகளோடு இணைந்து விட்டது. மருத்துவம் மிக உன்னதமான சேவையாகக் கருதப்பட்டது. மருத்துவத்துக்கு ஈடாகப் பொருள் பெறுவதே பாவம் என்று நம்பிய காலம் ஒன்றிருந்தது. மருத்துவர் என்று ஒரு சாதியே உருவானது, ஆனால் எல்லா நோய்களுக்கும் மருத்துவர்களைத் தேடிப்போவதில்லை. பெரும்பாலும் கை வைத்தியமாக வீடுகளில் சாதாரண நோய்களைக் குணமாக்கி விடுவார்கள். காய்ச்சல், சளி, தலைவலி, என்று அடிக்கடி வரக்கூடிய நோய்களுக்கு, உணவுப்பத்தியம், பச்சிலைச்சாறு, கஷாயம், சூரணம், என்று கொடுத்துக் குணப்படுத்தி விடுவார்கள் உணவே மருந்து, மருந்தே உணவு என்று இயற்கையோடு இயைந்து வாழ்ந்த காலங்கள் இருக்கத்தான் செய்தது. சித்தர்களின் தாக்கம் எப்படி நம்முடைய வாழ்விலும் உணவு முறைகளிலும் இருக்கிறது என்பது தனியாக ஆய்வு செய்ய வேண்டிய ஒன்று.

ஆனால் இன்று பெரும்பாலானவர்களுக்கு ஆங்கில மருத்துவம் தவிர வேறு மருத்துவம் இருக்கிறதா என்று கூடத் தெரியாது. பலருக்கு ஆங்கில மருத்துவம் தவிர மற்ற மருத்துவமுறைகள் எல்லாம் நாட்டு வைத்தியம் தான். ஆங்கிலவைத்தியம் மட்டும் தான் நவீன மருத்துவம். மற்றதெல்லாம் கண்ட்ரி மெடிசின். நோயுற்ற மனிதனை நம்பாமல் சோதனைச்சாலை முடிவுகளின் அடிப்படையிலே மருத்துவம் செய்யும் ஆங்கிலமருத்துவம் நவீன மருத்துவம் என்று பெயர் பெற்றிருக்கிறது. என்ன சொல்ல? அதைப் பற்றி வேறொரு கட்டுரையில் பேசுவோம்.

எந்த மருத்துவமுறையாக இருந்தாலும் நமது உயிரையும், உடலையும் தன்னிச்சையாக கையாளுவதற்கு உரிமை கிடையாது. நமக்குக் கொடுக்கப்படும் மருந்துகள், சிகிச்சைகள், பற்றி அறிந்து கொள்ள நமக்கு முழு உரிமை உண்டு. இன்னும் சொல்லப் போனால் நமக்குத் தரப்படும் மருந்துகள் அதன் விளைவுகள், பக்கவிளைவுகள், எல்லாவற்றைப் பற்றியும் சொல்லுவதற்குக் கடமைப்பட்டவர்கள் மருத்துவர்கள். எந்த மருத்துவரும் கடவுள் அல்ல. எல்லாத்துறைகளைப் போல மருத்துவத்துறையை அவர் படித்திருக்கிறார். அவ்வளவு தான். அதே போல எந்த மருத்துவமும் இயற்கையின் விதிகளுக்கு மாறாக நமது உடலில் செயல்பட முடியாது.

தத்துவம் என்றால் என்ன? மிக எளிமையாகச் சொல்வதென்றால் வாழ்க்கை பற்றிய விளக்கம். கண்ணோட்டம். உதாரணத்துக்கு இந்த வாழ்க்கையில் நாம் பட்டுக் கொண்டிருக்கும் கஷ்டநஷ்டங்களுக்கு நம்முடைய தலைவிதி என்று பெரும்பாலானோர்கள் நினைக்கிறார்களே அது ஒரு தத்துவவெளிப்பாடு. இப்படி வாழ்வின் ஒவ்வொரு செயலுக்குப் பின்னும் ஒரு தத்துவநோக்கு பின்னிப் பிணைந்துள்ளது. நம்முடைய உணவுப்பழக்கம், உடை, இருப்பிடம், என்று எல்லாம் மாறியதற்குப் பின்னால் ஒரு தத்துவம் இருக்கிறது. அந்தத் தத்துவமே அந்த அரசு நிர்வாகத்தை நிர்மாணிக்கிறது. அதைச் செயல்படுத்துகிறது. தத்துவத்தின் பார்வையைப் பொறுத்தே அந்தத் தத்துவம் யாருக்கானது? அதன் நோக்கம் என்ன? என்று தெரிந்து கொள்ள முடியும். முதலாளித்துவ தத்துவம் முதலாளிகளுக்குச் சார்பான அரசியல், சட்டம், நீதி, கல்வி, இவற்றைத் தான் செயல்படுத்தும். போலியான ஜனநாயக நடைமுறைகள் மூலம் எல்லோரையும் ஏமாற்றும். ஆனால் சாமானியர்கள் இந்த முதலாளித்துவத்தின் அசுர நிதிமூலதனப் பசிக்கு இரையாவதைத் தவிர வேறு மார்க்கமில்லை. ஆனால் எல்லாத்தத்துவங்களும் தங்கள் கருவுக்குள்ளேயே அதற்கு மாற்றான தத்துவத்தின் விதைகளைக் கொண்டிருக்கும். எல்லாவற்றிலும் இருப்பதைப் போல மருத்துவத்திலும் ஒரு தத்துவப்பார்வை இருக்கிறது. அது தான் அந்த மருத்துவ முறையைத் தீர்மானிக்கிறது.

சித்தா, ஆயுர்வேதம், யுனானி போன்ற மருத்துவமுறைகள் நிலப்பிரபுத்துவத் தத்துவப்பார்வை கொண்டவை என்றால் ஆங்கில மருத்துவமுறை முதலாளித்துவ தத்துவப்பார்வை கொண்டது. நிலப்பிரபுத்துவக் காலகட்டத்தில் மருத்துவம் புனிதமானதாகக் கருதப்பட்டது. அது மந்திரத்தன்மை கொண்டதாகவும், ரகசியமாய் செய்ய வேண்டியதாகவும் கருதப்பட்டது. அந்த மருத்துவ ரகசியங்களை யாரிடமும் பகிர்ந்து கொள்ளக்கூடாது. அப்படி பகிர்ந்து கொண்டால் அது பலிக்காது என்றும் நம்பப் பட்டது. மருத்துவம் நிலப்பிரபுத்துவத்தின் உற்பத்தி உறவுகளைப் போல மதிப்பு மிக்கதாக இருந்தது. மனிதர்களின் தனித்துவத்துவத்துக்கு முக்கியத்துவம் அளித்தது.

ஆங்கில மருத்துவமுறை முதலாளித்துவ தத்துவப்பார்வை கொண்டது. அதற்குச் சந்தை தான் முக்கியம். எல்லாவற்றையும் விற்கவோ, வாங்கவோ முதலாளித்துவம் முயலும். மைதாஸின் மனநிலை கொண்ட அதன் லாபவெறிக்கு எதுவும் பொருட்டல்ல. அதன் உற்பத்தி உறவுகள் சந்தையோடு தொடர்புடையது என்பதால் அது எதையும் மதிக்காது. எந்த விழுமியங்களையும் ஏற்காது. அப்படியே தன்னுடைய சந்தை தேவைகளுக்கேற்ப மதிப்பீடுகளை மாற்றிக் கொண்டேயிருக்கும். அதற்கு எல்லாமே எல்லாருமே பண்டங்கள் தான். எப்படி மனிதர்களுக்காக பொருட்களையும் பொருட்களுக்காக மனிதர்களையும் உருவாக்குகிறதோ அதே போல நோய்களுக்காக மருந்துகளையும் மருந்துகளுக்காக நோய்களையும் உற்பத்தி செய்யும்.

உதாரணத்துக்கு, இப்போது பிரசவம் என்றாலே அது சிசேரியன் தான் என்றாகி விட்டது. இது திட்டமிட்டு பணம் பறிப்பதற்கான செயலாக மாறி விட்டது. நாற்பது வயதுக்கு மேல் உள்ள பெண்களில் பாதிக்குப் பாதிப்பேருக்கு கர்ப்பப்பையை எடுத்து தூரப் போட்டாயிற்று. சமப்ந்தமில்லாமல் கூட்டம் கூட்டமாக தடுப்பூசிகளைப் போடச் செய்வது, இப்படிச் சொல்லிக் கொண்டே போகலாம். மனிதன் ஒரு முழுமையான இயங்கியல் உயிரினம் என்பதை மறுத்து அவனை ஒரு இயந்திரமாகப் பாவித்து எல்லாவற்றையும் தனித்தனியே பிரித்து வேலை பார்க்கிறது. எதிர்காலத்தில் ஒரு சமூகத்தையே ஊனமுள்ளதாக்குகிற வேலையைச் செய்து கொண்டிருக்கிறது. சிலர் மட்டும் செல்வம் கொழிக்க பெரும்பான்மை மக்கள் தங்கள் உயிர், பொருள், ஆவி, அனைத்தையும் இழக்கின்றனர். இது அதன் தத்துவப்பார்வையின் அடிப்படையில் உருவான நடைமுறை.

ஆனால் ஹோமியோபதியின் தத்துவப்பார்வை சமூகவயமானது. தெளிவான தத்துவநோக்கம் கொண்டது. எந்த மர்மங்களுமற்றது. இயற்கையின் விதிகளுக்கேற்ப செயல்படுவது, எளிமையானது, இனிமையானது, முழுமையான நலத்தை மீட்டுத் தருவது. பக்கவிளைவுகளற்றது. எனவே தான் ஹோமியோபதி மருத்துவம் புரட்சிகரமான மக்கள் மருத்துவமாக விளங்குகிறது. அது எப்படி என்று பின்னால் வரும் அத்தியாயங்களில் பார்க்கலாம்.

நலம் காக்க…தொடர்வோம்

2 comments:

  1. நண்பர் திரு உதயசங்கர் அவர்களின் ஹோமியோபதி பற்றிய தொடர்பதிவின் ஒரு பகுதி.
    ஆழ்ந்து படிக்க வேண்டிய பதிவு.
    நன்றி & வாழ்த்துகள் திரு உதயசங்கர்.

    ReplyDelete
  2. நல்ல தொடக்கம் . நன்றி

    ReplyDelete