Sunday 11 November 2012

தலைமைச் செயலாளர்

 

மனித நலம் காக்கும் ஹோமியோபதி –5medicine

உதயசங்கர்

 

நம்முடைய உயிராற்றல் என்ற தலைமைச் செயலாளர் அல்லது மேற்பார்வையாளர் இருபத்திநான்கு மணிநேரமும் உடலைக் கண்காணித்துக் கொண்டிருக்கிறார். உடலின் மாறுபாடுகளுக்கேற்ப அவ்வப்போது உத்திரவுகளைப் பிறப்பிக்கிறார். உடலிலுள்ள மற்ற உறுப்புகளின் சொற்களைக் கேட்கிறார். அவற்றின் நலம் அல்லது துயரைக் கவனித்து அதற்கேற்ப தன் உத்திரவுகளைப் பிறப்பிக்கிறார். அதே போல உடலின் உறுப்புகள் தரும் சமிக்ஞைகளுக்குக் கட்டுப்பட்டு தன் உத்திரவுகளை மாற்றவும் செய்கிறார். கீழிருந்து மேலாகவும் மேலிருந்து கீழாகவும் சமிக்ஞைகள், உத்திரவுகள், எதிர்வினைகள், செயல்கள் என்று மிகுந்த ஜனநாயக உணர்வுடன் நமது உயிராற்றலும் உடலும் இயங்குகிறது.

கம்யூனிஸ்ட் கட்சியின் புரட்சிகர நடவடிக்கைகள் அனைத்தும் மத்தியத்துவப்படுத்தப்பட்ட ஜனநாயக ( CENTRALISED DEMOCRACY ) முறையிலேயே நடக்கும். தத்துவார்த்த, அரசியல், பண்பாட்டு நடவடிக்கைகளை மேலிருந்து கீழாகவும் கீழிலிருந்து மேலாகவும் ஜனநாயகபூர்வமான கருத்தொற்றுமை மூலம் தீர்மானிக்கிறார்கள். இது இயற்கையோடு இயைந்த நடைமுறை.

உயிராற்றலை மையம் என்று கொண்டால் அதற்கு அடுத்த வட்டத்தில் மனமும், அதற்கடுத்த வட்டத்தில் உடலின் முக்கியமான ஜீவாதாரமான உறுப்புகளும், அதற்கடுத்த வட்டத்தில் அவ்வளவாக முக்கியமில்லாத உறுப்புகளும் அதற்கடுத்த கடைசி வெளிவட்டத்தில் தோல் போன்ற மிகவும் முக்கியத்துவம் குறைந்த உறுப்புகளும் வரிசைப்படுத்தப் பட்டிருக்கின்றன. அதனால் உயிராற்றலில் ஏற்படும் பாதிப்பு உயிரியக்கத்தை எந்த விதத்திலும் பாதித்து விடக்கூடாதென்பதால் அதன் அதிர்வுகளை உயிராற்றல் மையத்திற்கு வெகு தூரத்திலுள்ள உயிரியக்கநோக்கில் மிகவும் முக்கியத்துமில்லாத தோலுக்குக் கடத்துகிறது.

சரி உயிராற்றல் ஏன் பாதிப்புக்குள்ளாகிறது?. நமது சீரில்லாத ஆரோக்கியக்கேடான, பல்வேறு நடவடிக்கைகளாலும், முறையற்ற, தீமையான மருந்துகளாலும், ஏற்றத்தாழ்வுமிக்க சமூகக் காரணிகளாலும், ( உணவு, நீர், காற்று, சுற்றுச்சூழல், குடும்பம், சமூகம், அரசியல் ) பாதிப்புக்குள்ளாகிறது. இந்தப் பாதிப்பை அப்படியே உயிராற்றல் வைத்துக் கொள்வதில்லை. ஏனெனில் அப்படியே வைத்துக் கொண்டிருந்தால் உயிருக்கே ஆபத்தாகி விடும். அதனால் உயிராற்றலின் கடைசி வட்டத்திலுள்ள தோலுக்கு அந்தப் பாதிப்பைத் தள்ளி விடுகிறது. தோலில் சில பாதிப்புகள் ( கொப்புளங்கள், பருக்கள், கட்டிகள், நிறமாற்றம், அரிப்பு, ஊறல், காந்தல் ) ஏற்படுகின்றன. இவை உயிராற்றல் வெளித்தள்ளும் பாதிப்புகள் என்று நமக்குத் தெரியாததனால் நாம் தோல்நோய் நிபுணரைச் சென்றுச் சந்திக்கிறோம். அவர் கொடுக்கும் மருந்து, ஆயிண்மெண்ட், களிம்பு, என்று பல்வேறு வேதியல் கலவைகளைத் தடவி உயிராற்றல் வெளித்தள்ளிய பாதிப்பை, மீண்டும் உள்ளே தள்ளுகிறோம்.

சில காலம் கழித்து மூட்டுகளில் வலியோ, ஆஸ்த்மா துயரோ வருகிறது. இருக்கவே இருக்கிறார்கள் ஸ்பெஷலிஸ்டுகள். ஆர்த்தோ அல்லது நுரையீரல் நிபுணர்கள். அவர்களைச் சென்று பார்க்கிறோம். அவர்களும் நமக்கு வந்த தோல் வியாதியைப் பற்றிக் கவலைப்படாமல் ( ஏனென்றால் அது அவர்கள் வேலையில்லையே அதற்குத் தான் தோல் நோய் நிபுணர் இருக்கிறாரே ) இப்போதுள்ள ஆஸ்த்மாவுக்கோ, மூட்டு வலிக்கோ, மருந்துகள் தருகிறார். அதைச் சாப்பிட்ட சிறிது காலத்துக்குப் பிறகு இதயத்தில் வலி வருகிறது. இப்போது இதயநோய் நிபுணரைப் பார்க்கிறோம். அவர் இதயத்தில் அறுவை சிகிச்சை செய்து நம்மை எப்படியோ உயிரோடு (!) விட்டு விடுகிறார். யோசித்துப்பாருங்கள். உயிராற்றல் வெளித்தள்ளிய பாதிப்பை தவறான சிகிச்சைமுறையினால் உயிருக்கே ஆபத்தாக்கிக் கொண்டோம். அதில் இன்னொரு வேடிக்கை இப்படிப்பட்ட அறிவியல்பூர்வமற்ற மருத்துவமுறையை நாமெல்லோரும் ரெம்ப அறிவியல்பூர்வமான மருத்துவமுறையென்று கொண்டாடுகிறோம்.

நமது நாட்டில் உடல்நலமின்மையால் இறப்பவர்களில் ஐம்பது சதவீதமானவர்கள் தவறான மருத்துவச் சிகிச்சையினால் இறப்பவர்கள் என்றால் அதிர்ச்சியாக இருக்கிறதா இல்லையா? இதற்கு முக்கியமான காரணம் நம்முடைய அறியாமை. மருத்துவம் நமது பிறப்புரிமை என்ற ஞானம் இல்லாததால் அதை யாரோ விற்பன்னர்கள் சமாச்சாரமாக நினைத்து, அவர்களை கடவுளாக வழிபட்டு அவர்கள் கையில் நமது உடலையும் உயிரையும் ஒப்படைத்து விட்டு கையறு நிலையில் காசையும் தொலைத்து விட்டுப் புலம்பிக் கொண்டிருக்கிறோமே.

ஆதியிலிருந்தே இந்த மண்ணில் இருந்து வரும் மருத்துவ முறைகளை மாற்று மருத்துவமுறைகள் என்றும், பாதியில் ஆங்கிலேயர்களால் கொண்டு வரப்பட்ட ஏகாதிபத்திய ஆங்கில மருத்துவத்தை முதல் மருத்துவமாகவும் போற்றுகிறோமே. விடுதலை பெற்று இத்தனை ஆண்டுகளாகியும் ஆங்கிலேய மோகம் இன்னும் மறையவில்லை. அதற்குள் மறுபடியும் நம்மை அடிமை கொள்ள அவர்கள் வந்து கொண்டிருக்கிறார்கள். நாம் என்ன செய்யப் போகிறோம்?

நலம் காக்க…..தொடர்வோம்.

2 comments:

  1. உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் எனது இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
  2. அருமையான பதிவு.
    நன்றி.

    ReplyDelete