Saturday 31 December 2016

ஒரு குட்டிப்பாப்பாவின் கதை

ஒரு குட்டிப்பாப்பாவின் கதை

” இயற்கையின் அற்புத உலகில் ” இது ஒரு குட்டிப்பாப்பாவின் கதை. குட்டிப்பாப்பா தன்னுடைய வீட்டைச் சுற்றியுள்ள இயற்கையின் அற்புதங்களைப் பார்த்து வியந்து போகிறாள். முல்லைக்கொடி, ஒவ்வொன்றையும் அதிசயமாகவும், ஆச்சரியத்தோடும் பார்க்கிறாள். அந்த அதிசயத்தை ஆராய்ந்து பார்க்கிறாள். அதற்கான காரணத்தைப் பொறுமையாகக் கண்டு பிடிக்கிறாள். தான் கண்டுபிடித்த விசயங்களைப் பற்றி யோசிக்கிறாள். அப்படிக் கண்டுபிடித்த தன்னை பாராட்டிக் கொள்கிறாள். தன்னை ஒரு துப்பறியும் நிபுணராக, கண்டுபிடிப்பாளாராக, நினைக்கிறாள். எதிர்காலத்தில் இயற்கை அறிவியலாளராக உருவாகவேண்டும் என்ற ஆவல் அவளுக்கு உருவாகிறது.
அப்படி என்ன கண்டுபிடித்து விட்டாள் குட்டிப்பாப்பா? வண்ணத்துப்பூச்சிகள் எப்படி உருவாகின்றன? பார்க்க அருவெறுப்பாகத் தெரிகிற புழுக்களின் கதை என்ன? அந்தப்புழுவே தன்னுடைய வரலாற்றைச் சொன்னால் எப்படி இருக்கும்? கட்டெறும்புகள் தங்கள் வாயில் முட்டைகளோடு ஏன் வெயிலில் காய்கின்றன? கடி எறும்புகள் ஏன் படையெடுத்து மரத்தின் வேரை நோக்கி ஓடுகின்றன? குழிபறித்து தவறி விழும் எறும்புகளைத் தின்னும் குழியானை வளர்ந்து கொம்பன் யானையாகுமா? குயில்கள் ஏன் கூடு கட்டுவது கிடையாது? காக்கைக் கூட்டில் மட்டும் குயில்கள் முட்டையிடுவதின் ரகசியம் என்ன? காக்கைகளும், கழுகுகளும், மைனாக்களும் கழிவுகளைத் தின்று சுத்தப்படுத்த யார் சொல்லிக் கொடுத்தார்கள்?
எத்தனை விதவிதமான உயிர்கள்! எத்தனை விதவிதமான செடிகள்! எத்தனை விதவிதமான கொடிகள்? பறவைகள்! பூச்சிகள்! விலங்குகள்! மனிதர்கள்! எல்லோருக்கும் தனித்தனியான குணங்கள்! தனித்தனியான நிறங்கள்! வடிவங்கள்! ஆகா! என்ன அற்புதம்! அனைத்தும் இயற்கையின் மாபெரும் கலைப்படைப்புகள்! குட்டிப்பாப்பா எல்லாவற்றையும் பார்க்கிறாள். உற்று நோக்குகிறாள். ஆராய்கிறாள். உண்மையைத் தெரிந்து கொள்கிறாள். எல்லையற்ற மகிழ்ச்சியடைகிறாள். இது தான் குட்டிப்பாப்பாவின் கதை.
நீங்கள் வாசிக்கும்போது குட்டிப்பாப்பாவோடு கூட இருப்பீர்கள். குட்டிப்பாப்பா உங்களை உடன் அழைத்துச் செல்வாள். உங்களுக்கு இயற்கையின் அற்புதங்களைக் காட்டுவாள். வாசித்து முடிக்கும் போது பெரியவர்களானாலும் சரி குழந்தைகளானாலும் சரி சுற்றும் முற்றும் பார்ப்பீர்கள். எறும்புகளுக்கும், புழுக்களுக்கும் காக்கைகளுக்கும் குயில்களுக்கும் செடி கொடிகளுக்கும் கூட வணக்கம் சொல்வீர்கள். இயற்கையின் மீது அன்பு பொங்கும். அனைத்து உயிர்களைகளையும் நேசிக்கத் தொடங்கிவிடுவோம்.  நாம் வாழும் இந்தப்பூமி நமக்கானது மட்டுமில்லை என்ற எண்ணம் உறுதிப்படும். அனைத்து உயிர்களின் மீதும் நேசம் ததும்பும்.
மலையாள சிறுவர் இலக்கியத்தின் மிகச்சிறந்த படைப்பாளியான பேரா.எஸ்.சிவதாஸின் மற்றுமொரு உன்னதமான படைப்பு. ஏற்கனவே தமிழில் இவருடைய வாசித்தாலும் வாசித்தாலும் தீராது என்ற புத்தகம் அறிவியல் இயக்க வெளியீடாகவும், மாத்தன் மண்புழு வழக்கு புக் ஃபார் சில்ட்ரன் வெளியீடாகவும் வந்துள்ளது. இந்தப்புத்தகத்தை வெளியிடும் வானம் பதிப்பக உரிமையாளர் அன்புத்தம்பி மணிகண்டனுக்கு அன்பும் நன்றியும். இந்நூலுக்கு அழகிய ஓவியங்களை வரைந்து கொடுத்த ஓவியர். ராஜனுக்கும் நன்றி.
இந்தப் புத்தகத்தை வாசிக்கும்போதே  குழந்தைகள் மனதில் ஒரு மாற்றம் உருவாகும் என்பது உறுதி.
வெளியீடு- வானம் பதிப்பகம்





No comments:

Post a Comment