Tuesday 26 May 2015

வேதங்களின் அறம்

 

உதயசங்கர்Mohan Das (54)

 

அறம் என்றும் அறவுணர்ச்சி என்றும் அறவிழுமியங்கள் என்றும் பலவாறு சொல்லப்படுகிற சொல்லின் அரத்தம் என்ன? மனித குல வரலாற்றில் எப்போதும் அறவிழுமியங்கள் ஒன்று போல இருந்திருக்கிறதா? எல்லாக்காலத்துக்கும் பொதுவான அறம் என்ற ஒன்று இருக்கிறதா? வேதகாலம் பொற்காலம் என்றும் அதில் உன்னதமான அறவிழுமியங்கள் இருந்ததாகவும் கூறப்படுவது உண்மையா? அப்படி ஏதேனும் அறவிழுமியங்கள் இருந்தால் அவை எப்படிப்பட்டவையாக இருந்தன?

அறம் என்றால் அந்தந்தக்கால சமூக வாழ்க்கையில் உருவான மதிப்பீடுகள், தர்ம அதர்மக்கோட்பாடுகள், நாகரீக வளர்ச்சியினால் பெறப்படும் மதிப்பீடுகள், அறிவியல் வளர்ச்சியினால் ஏற்படும் மாற்றங்கள் குறித்த மதிப்பீடுகள், என்று சொல்லலாம். இந்த சமூக அறவிழுமியங்கள் தனிமனிதர்களையும், சமூகத்தையும் தார்மீகமாக அல்லது மானசீகமாகக் கட்டுப்படுத்துகிறது. சமூகத்தின், தனிமனிதர்களின் பொது வாழ்விலும் தனிப்பட்ட வாழ்விலும் நன்மை, தீமைகளைச் சொல்கிறது. பண்பாடு, பழக்கவழக்கங்களைக் காப்பாற்றுவதற்கு உதவுகிறது. சாஸ்திரம், சம்பிரதாயம், சடங்குகளின் வழி சமூக மனதையும், தனி மனித மனதையும், கட்டமைக்கிறது. கிட்டத்தட்ட அந்தந்தக்கால சமூகப்பொருளாதார அமைப்பின் ஆன்மாவாகச் செயல்படுகிறது எனலாம்.

உற்பத்தி சக்திகளுக்கும் உற்பத்திக்கருவிகளுக்கும் இடையில் ஊடாடும் உறவையே நாம் உற்பத்தி உறவுகள் என்கிறோம். இந்த உற்பத்தி உறவுகள் நீடித்திருக்க உற்பத்தி சக்திகளைக் கையில் வைத்திருக்கும் ஆளும் வர்க்கமானது பண்பாட்டை, பழக்கவழக்கங்களை, நீதிநெறிமுறைகளை, சாஸ்திரம், சடங்கு, சம்பிரதாயங்களை, உணவு, உடை, உறையுள், முதலான லௌகீக வாழ்க்கையை, இவையெல்லாவற்றின் அடிப்படையில் உருவாக்கிய அறவிழுமியங்களை நடைமுறைப்படுத்துகிறது. அதற்கு தன்னுடைய அரசு அதிகாரத்தைப் பயன்படுத்துகிறது. தன்னுடைய இருத்தலை நியாயப்படுத்துகிற விதத்தில் கலை, இலக்கியம், அறிவியல், பண்பாடு, சட்டம், நீதி, மதம், என்று எல்லாவிதங்களிலும் தன்னுடைய ஆக்கிரமிப்பை மக்கள் மனங்களின் மீது செலுத்துக்கிறது. இந்த கலாச்சாரமேலாண்மை மூலம் தன் அதிகாரத்துக்குத் தேவையான இசைவை மக்களிடமிருந்து பெற்றுக்கொள்கிறது. உற்பத்திசக்திகளின் நிலைத்த தன்மைக்கு அறவிழுமியங்களும் அவசியம் என்று தெரிகிறது.

வர்க்க சமூதாயத்தில் வர்க்க அறமே மேலோங்கியிருக்கும். முதலாளித்துவம் தனக்குச் சாதகமான அறவிழுமியங்களையே பிரச்சாரம் செய்யும். முன்னெடுக்கும். இதற்கு மாற்றாக பாட்டாளிவர்க்கம் வரலாற்றிலுள்ள முற்போக்கான அறவிழுமியங்களையெல்லாம் தொகுத்து ஒரு மாற்று, புதிய பாட்டாளி வர்க்க அறவிழுமியங்களை முன்னெடுக்கும். அதற்கு முதலில் எல்லாக்காலத்துக்கும் பொதுவான அறம் என்ற ஒன்றும் எல்லாவர்க்கத்துக்கும் பொதுவான அறம் என்ற ஒன்றும் கிடையாது என்பதை புரிந்து கொள்வோம். மாற்றம் ஒன்றே மாறாதது என்பதால் அறவிழுமியங்களும் மாறும். அப்படியானால் வேதகாலத்தில் எப்படிப் பட்ட அறவிழுமியங்கள் இருந்தன?

சிந்து வெளி நாகரீகத்தின் பொற்காலம் என கி.மு.2500 ஆம் ஆண்டைக் குறிப்பிடுகிறார்கள் ஆராய்ச்சியாளர்கள். அதற்கு ஆயிரம் ஆண்டுகளுக்குப் பின்னால் தான் ஆரியர்கள் சிந்துவெளிப்பிரதேசத்துக்குள் நுழைகிறார்கள். அதாவது இந்தியாவில் ஆரியர்கள் கி.மு. 1500 –க்கு முன்னால் வந்திருக்க வாய்ப்பில்லை. வேதங்களில் மிகப்பழமையான ரிக் வேதத்தை முதலில் இயற்றிய ரிஷிகளான பரத்வாஜரும், வசிஷ்டரும், விஸ்வாமித்திரரும், குறைந்தது முந்நூறு வருடங்களுக்குப் பின்னால் வந்தவர்கள் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். ரிக் வேதத்தில் ஆரியர்களுக்கும் சிந்து வெளி மக்களுக்கும் இடையில் நடந்த சண்டை தேவர்களுக்கும் அசுரர்களுக்கும் இடையில் நடந்த சண்டையாகக் காட்டப்படுகிறது. அதன் பிறகு ஆரிய மன்னர்களான திவோதாஸ்-சுதாஸ் காலமான கி.மு. 1200 ஆம் ஆண்டு வரையிலான காலம் பற்றிய குறிப்புகள் ரிக் வேதத்தில் இல்லை.

ஆரியர்கள் கால்நடை மேய்ச்சலும் விவசாயமும் கலந்த ஒரு பொருளாதாரத்தைக் கொண்ட அரை நாடோடிகளாகவும் இருந்தனர். அப்போது அவர்களிடையே எந்த உடமை வர்க்கமும் உருப்பெறவில்லை. ஒருவகையான ஆதிப்பொதுவுடைமை சமுதாயமாக இருந்ததெனக் கருதலாம். மேய்ச்சல் நிலம் தேடியே வந்தவர்கள். சிந்துவெளியில் அப்போதிருந்த நாகரீக வளர்ச்சி என்பது பழங்குடிச்சமூகத்திலிருந்து கிட்டத்தட்ட புராதன நிலவுடைமைச் சமூகமாக மாற்றமடைந்திருக்கும் நிலைமையை ஒத்திருந்தது. வர்க்க வேறுபாடுகள் தோன்றியிருந்தன என்பதை அங்கிருந்த குடியிருப்புகள் காட்டுவதாக தொல்லியல் அறிஞர்கள் கூறுகின்றனர். அவ்வளவு முன்னேறிய சமூகத்தையே நாகரீகத்தில் மிகவும் பின் தங்கிய காட்டுமிராண்டிகாலத்தின் உயர்ந்த நிலையில் இருந்த ஆரியர்கள் அழித்திருக்கிறார்கள்.. எனவே ரிக், வேதத்தில் உள்ள பாடல்களில் பாரம்பரியமாக தாங்கள் வணங்கும் இந்திரன் முதலான கடவுள்களின் புகழைப்பாடியும், எதிரிகளை வெற்றி கொள்ள வேண்டியும், அதற்காக சோமபானம் அருந்த வேண்டியும், வேள்விகளைப் பற்றியும், உடல் நலம், செல்வம், நீண்ட ஆயுள், பற்றியும் எழுதப்பட்டிருக்கிறது. இதில் எதிரிகளாக தாசர்களையும் தஸ்யூக்களையும் குறிப்பிட்டிருக்கிறார்கள். வேதகாலத்துக்கு முன்பும் பல ஆரிய இனக்குழுக்களைச் சேர்ந்தவர்கள் வந்திருக்கிறார்கள். அவர்களுக்குள்ளும் சண்டை நடந்திருக்கிறது. இப்படி முழுக்க முழுக்க யுத்தங்களைப் பற்றிய பாடல்கள் கொண்டதே ரிக் வேதம். இந்த யுத்தமும் சமயக்கோட்பாடுகளின் வேற்றுமையினால் விளைந்ததாகவே ரிக் வேதம் சொல்கிறது. யாகங்களையோ, பலிகளையோ செய்யவில்லை, இந்திரனைக் கும்பிடவில்லை, எனவே ஆரியரல்லாத அவர்களை அழிக்க வேண்டும். ரிக் வேதத்தின் ஒவ்வொரு பாடலிலும் அதைப் பாடிய ரிஷி குறிப்பிட்ட நோக்கத்தை அடைய விரும்பி குறிப்பிட்ட கடவுளை நோக்கி பிரார்த்தனை செய்கிற பாடல்களின் தொகுப்பு என்று வேண்டுமானால் சொல்லலாம்.

” நீங்கள் எப்போது யக்ஞம் செய்தாலும் தேவர்களான இந்திரனையும், அக்னியையும், புகழத் தவறாதீர்கள். அவர்கள் நிலையை உயர்த்தி அவர்களது புகழைக் காயத்திரி சந்தத்தில் பாடுங்கள்” ( ரிக் வேதம் 1.21.2 )

” இந்திரன், வருணன், அக்னி, ஆகியோரின் மனைவியர் என் வீட்டுக்கு வந்து சோமரசம் பருக விரும்புகிறென்.”

“ ஓ இந்திரனே நீ வீரன். நீ வந்து நாங்கள் தயாரித்திருக்கும் சோமரசத்தைப் பருகி எங்களுக்குச் செல்வத்தைக் கொடு. உனக்கு நிவேதனம் கொடுக்காதவர்களின் செல்வத்தைக் கொள்ளையடித்து அதை எங்களுக்குக் கொடு.” ( ரிக் வேதம் 1.81-8-9 )

” இந்திரனே எங்களைக் காப்பாற்றும்! நீர் எங்களைப் பகைவர்களிடமிருந்து பாதுகாப்பவர். நீர் எங்கள் விருப்பங்களை நிறைவேற்றுபவர். மலைகளைத் தூளாக்கும் வஜ்ராயுதம் படைத்தவர் நீர். குதிரைகள் மேல் சவாரி செய்யும் நீர் எங்களுக்கு பலவித உணவு வகைகளையும், செல்வங்களையும் வழங்குவீர்! “ ( 6-17-2 )

இதைத்தவிர அறநெறிகளாகவோ, ஆன்மீகதத்துவமாகவோ மனிதனை ” உயர்ந்த “ நிலைக்குக் கொண்டு செல்பவை என்று எதையும் சொல்ல முடியாது. சரி ரிக் வேதம் தான். இப்படி யென்றால் யஜூர் வேதம் வேள்விச் சடங்குகளுக்கான மந்திரங்களைப் பற்றிய தொகுப்பு. அசுவமேத யாகத்தில் என்ன மந்திரங்களை ஓத வேண்டும். ராஜசூய யாகத்தில் என்ன மந்திரங்களை ஓத வேண்டும் என்பது போன்ற பாடல்களின் தொகுப்பு எனலாம். அவையும் பெரும்பாலும் ரிக் வேதத்திலிருந்து எடுக்கப்பட்டவையே.

பிந்தைய வேதமான அதர்வண வேதத்தில் பேய், பிசாசு, பில்லி,சூனியம் நோய்நொடி, இவற்றை விரட்டுவதற்கான மந்திரங்களின் தொகுப்பு. உதாரணத்துக்கு, காய்ச்சலுக்கெதிரான மந்திரம், மலச்சிக்கல், சிறுநீர் போகாமை இவற்றுக்கான மந்திரம், கண்டமாலை நோய்க்கெதிரான மந்திரம், பொறாமையைச் சாந்தப்படுத்தும் மந்திரம், எலும்பு முறிவுக்கு மந்திரம், குழந்தைகளிடம் காணப்படும் புழுக்களுக்கெதிரான மந்திரம், பாம்பு நஞ்சுக்கெதிரான மந்திரம், கணவனை அடைவதற்கு மந்திரங்கள், கருத்தரிப்பதற்குத் தாயத்தாக கையில் அணியும் காப்பு, சுகப்பிரசவத்துக்கு மந்திரம், பெண்ணின் தீவிர அன்பைப் பெறுவதற்கு மந்திரம், ஆணின் தீவிர அன்பைத் தூண்டுவதற்கு மந்திரம், ஆணின் ஆண்மையை அழிக்கும் மந்திரம், குழந்தைக்கு முதல் இரண்டு பல் ஒழுங்கின்றி முளைப்பதன் தோஷத்தை நீக்கும் மந்திரம், கால்நடைகள் செழிக்க மந்திரம், சூதாட்டத்தில் வெற்றி பெற பிரார்த்தனை, என்று அன்றாட வாழ்வின் அத்தனை விஷயங்களுக்கும் மந்திரங்கள், மருத்துவம் என்று நிரம்பி வழிகிறது அதர்வண வேதம். சாம வேதமோ ரிக் வேதத்தை கிட்டத்தட்ட திரும்பச்சொல்வதைப் போன்றது. நாகரிகத்தின் ஆரம்பநிலையில் இருந்த ஒரு இனக்குழுவின் வாழ்க்கைப்பிரச்னைகள் அதற்கான கற்பனையான தீர்வுகளாகவே அதர்வண வேத சுலோகங்கள் இருக்கின்றன.

ஆரியமொழி பேசிய இனக்குழுக்கள் மேய்ச்சல் வாழ்க்கையிலிருந்து நிரந்தரமாக ஓரிடத்தில் தங்கியிருந்து வேளாண் சமூகமாக மாறத் தொடங்கிய காலத்தில் எழுதப்பட்ட வேதங்களில் நாகரிகமற்ற, புராதன, தொன்மங்களைச் சமயங்களாகக் கொண்ட ஒரு மக்கள் திரளின் சமயக்கோட்பாடே வெளிப்படுகிறது. அந்தச் சமயக்கோட்பாட்டுக்கு எதிரான அல்லது மாற்றான சமயக்கோட்பாட்டைக் கொண்டவர்களை எதிரிகளாகப் பாவித்ததும் அவர்களை வெற்றி கொள்ள தங்களுடைய இஷ்ட தெய்வங்களைப் போற்றி பிரார்த்திக்கும் பாடல்கள் நிறைந்தது. உணவு, உடை, உறையுள், பாலியல் உறவுகள், பழக்கவழக்கங்கள் ஆகிய எல்லாவற்றிலும் புராதன இனக்குழு சமுதாயத்தின் எச்சங்கள் இருப்பதைக் காணமுடிகிறது. எந்த வேதத்திலும் மனிதனை மேன்மைப்படுத்தும் அறநெறிகள் இல்லை.

வேதங்களில் எந்த அறவிழுமியங்களும் இல்லை என்று வேதகாலத்திலேயே ஆதிப்பொருள்முதல்வாதிகளான சார்வாகர்கள், பிரகஸ்பதிகள் முழங்கியிருக்கிறார்கள்.

“ அக்னிஹோத்திரம், மூன்று வேதங்கள், சன்னியாசி, திரிதண்டம், சாம்பலைப் பூசிக்கொள்வது இவையெல்லாம் ஆண்மையும் அறிவும் இல்லாதவர்களுக்கு வயிறு வளர்க்கும் வழிகளே..” என்றும்

“ சிரார்த்தம் நடத்துவது இறந்தவர்களுக்குத் திருப்தியளிக்கும் என்றால் இங்கேயும்கூட பயணம் செய்பவர்கள் புறப்படும்போது அவர்களுக்கு உணவுப் பொருட்களைக் கொடுத்து விடுவது அவசியமில்லை…..”

“ வேதங்கள் மூன்று குறைபாடுகளால் கறைப்பட்டுள்ளது.- உண்மையில்லாதது, தனக்குத் தானே முரண்படுவது, கூறியது கூறல் என்பவை இந்த முரண்பாடுகள்..”

என்றும் கூறுகிறார்கள். நாகரிகத்தின் ஆரம்பநிலையில் உள்ள விசித்திரமான சித்திரங்களே வேதங்கள். இந்த விசித்திரங்களையோ, காலத்துக்கு ஒவ்வாத பிரார்த்தனகளையோ, வேள்விகளையோ யாரும் கேள்வி கேட்டு விடக்கூடாதென்பதற்காகவே வேதங்கள் புனிதமானவை என்றும் கேள்விகளுக்கு அப்பாற்பட்டவையென்றும் வெளிப்படையான தோற்றத்தை விட உள்ளார்ந்த ரகசியங்கள் நிரம்பியது என்றும் வேதங்களைச் சுற்றி ஒரு ஒளிவட்டம் சுழல வைக்கப்படுகிறது. மனுவின் வர்ணாசிரமம் இந்திய சமூகத்தை பிறப்பின் அடிப்படையில் வருணங்களாகப் பிரித்தது. சாதிகளாகப் பிரித்தது. சாதிவாரியாகத் தொழில்களைப் பிரித்தது. எல்லா சாதியினருக்கும் சாஸ்திர சடங்கியல், வழிபாட்டு முறையில் படிநிலைகளை ஏற்படுத்தி அதன் சிகரத்தில் பிராமணியத்தை வைத்ததன் மூலம் இந்து சமூகத்திற்கு நிர்வாகரீதியான சட்டத்திட்டங்களை, தண்டனைகளை உருவாக்கியது மனுவின் வர்ணாசிரமம். இந்த கூம்பு வடிவ சமூக அமைப்பிற்கு தலைமையில் பிராமணர்களும் அடுத்தடுத்த கீழ்நிலையில் மற்றவர்களையும் வைத்தது. இந்துத்வ பழமைவாதிகள் தங்களுடைய உண்மையான நோக்கம் தெரியாமலிருக்க தங்களுடைய நோக்கங்களுக்கு புனிதத்தையும் பழம்பெருமையும் வேண்டி வேதங்களைக் கையிலெடுத்துக் கொண்டிருக்கிறார்கள். அங்கங்கே வேளாண்மை செய்த அரைநாடோடி இடையர் குலம் தங்களுடைய புராதன சமய வழிபாடு, தெய்வங்கள், நம்பிக்கைகள், வேண்டுதல்கள், பிரார்த்தனைகள், இனக்குழு பழக்கங்கள் இவைகளைப் பற்றி பாடித் தொகுத்த தொகுப்பே வேதங்கள். மற்றபடி வேதங்களில் என்றும் நிலைத்திருக்கும் அறவிழுமியங்கள் என்று ஒரு சுக்கும் இல்லை.

துணை நூல்கள்- 1. பாபா சாகேப் டாக்டர் அம்பேத்கர் தொகுப்பு நூல்கள்

2. ரிக் வேதகால ஆரியர்கள்-ராகுல்ஜி

3. வேதங்கள் ஒரு ஆய்வு- சனல் இடமருகு

4. பண்டைக்கால இந்தியா – டி.என்.ஜா

நன்றி - வண்ணக்கதிர்

2 comments:

  1. வேதங்களின் அறம் = Udhayasankar = ஆழ்ந்து படிக்க வேண்டிய பதிவு. எனது பக்கத்தில் பகிர்கிறேன். நன்றி திருமதி
    Malliga Udhayasankar

    ReplyDelete
  2. மற்றபடி வேதங்களில் என்றும் நிலைத்திருக்கும் அறவிழுமியங்கள் என்று ஒரு சுக்கும் இல்லை.
    அருமையான
    அனைவரும் உணர வேண்டிய பதிவு ஐயா
    நன்றி

    ReplyDelete