Friday 2 January 2015

அடுத்த கட்டத்துக்கான ஊக்கமே சாகித்ய அகாடமி விருது – பூமணி

 

நேர்காணல்ND1A5574

உதயசங்கர்

( 1970-களில் மரபுக்கவிதையில் துவங்கிய இலக்கியப்பயணம் தமிழின் மிக முக்கியமான படைப்பாளில் ஒருவராக பரிணமித்து ” வயிறுகள் “ துவங்கி ஐம்பத்தியிரண்டு சிறுகதைகள், ” ”பிறகி “ லிருந்துஆறு நாவல்கள், மொழிபெயர்ப்பு, கருவேலம்பூக்கள் என்ற திரைப்படம், என்று தன் இலக்கிய ஆளுமையால் தமிழிலக்கியத்தில் தனக்கென ஒரு தனியிடம் பிடித்தவர். எழுத்தாளர் பூமணி. அதிர்ந்து பேசாத இயல்பும், எழுத்தின்பால் ஆழ்ந்த நேசமும் கொண்ட அவருடைய சமீபத்திய படைப்பான “ அஞ்ஞாடி “ என்ற நாவலுக்கு இந்த ஆண்டுக்கான சாகித்ய அகாடமி விருது கிடைத்திருக்கிறது. எப்போதும் ஒதுங்கியிருக்கும் சுபாவம் கொண்ட அவருடைய வீட்டில் இப்போது எப்போதும் ஊடக வெளிச்சம். இந்தியா டூடேவுக்காக அவருடைய மனம் திறந்த நேர்காணல் )

கேள்வி: உங்களுடைய அஞ்ஞாடி நாவலுக்கு சாகித்ய அகாடமி விருது கிடைத்தமைக்கு இந்தியா டூடே சார்பாக மனமார்ந்த வாழ்த்துக்கள்! இந்த விருதின் தருணம் எப்படியிருக்கிறது?

பூமணி:, விருது கிடைக்க வேண்டும் என்பதற்காக எழுதவில்லை. அதனால் பெரிய ஆரவாரமோ, மகிழ்ச்சியோ இல்லை. அஞ்ஞாடி எழுதுவதற்காக இரண்டு வருட காலம் ஆராய்ச்சி செய்ய வேண்டியதிருந்தது. அதைத் தொடர்ந்து ஏழு வருடங்கள் அஞ்ஞாடி நாவலை எழுதினேன். கிட்டத்தட்ட ஒன்பது வருட உழைப்பு. அந்த உழைப்புக்குக் கிடைத்த அங்கீகாரமாக இந்த விருதை நினைக்கிறேன். அதே மாதிரி அடுத்த கட்ட நகர்வுக்கான ஊக்கமாக சாகித்ய அகாடமி விருது கிடைத்தாக நினைக்கிறேன்..

கேள்வி: கரிசல் இலக்கியத்தின் மூத்த எழுத்தாளரான கி.ராஜநாராயணனை முன்னத்தி ஏர் என்று முன்பு சொல்லியிருக்கிறீர்கள். அவருடைய எழுத்துக்கும் உங்களுடைய எழுத்துக்குமான ஊடாடலைப் பற்றிச் சொல்ல முடியுமா?

பூமணி: கரிசல் வட்டார இலக்கியம் என்று சொல்வதில் இப்போது எனக்கு உடன்பாடில்லை. சாதிய இலக்கியம் என்று இப்போது சொல்லுவதைப்போல குறுகிய பார்வை கொண்டதாக இருக்கிறது. கரிசல் இலக்கியம் கரிசல் இலக்கியம் என்று ஆரவாரித்ததில் கு.அழகிரிசாமி மாதிரியான எழுத்தாளர்களை நாம் தவறவிட்டு விட்டோம். கு.அழகிரிசாமி முன்பே நாம் அங்கீகரித்திருந்தால் கரிசல் இலக்கியத்தின் வேகம் குறைந்திருக்கும். இப்போது எனக்கு குற்றவுணர்ச்சியே இருக்கிறது. அருமையான கதைகளை எழுதியுள்ள கு.அழகிரிசாமியின் எழுத்து கிராமங்களில் காலையில் ஆலங்குச்சியால் நிதானமாக ஒவ்வொரு பல்லாக விளக்குவதைப் போன்ற எழுத்து. புறவயமான சூழ்நிலைச் சித்திரத்தை அகவயப்படுத்தி அந்தக்கதையின் ஓட்டத்துக்கு இசைவாகவோ, கூடுதல் வெளிச்சம் தருகிற மாதிரியோ இருக்கிறது அவருடைய கதைகள். அவரையெல்லாம் விட்டு விட்டு காடு கரை என்று எதை எதையோ எழுதியாச்சு..

கேள்வி: அஞ்ஞாடி நாவலில் ஒரு இருநூறு ஆண்டு கால தென் தமிழக வரலாறு பேசப்படுகிறது. அஞ்ஞாடி என்ற பெயரே இனவரைவியல் தன்மையோடு சூட்டப்பட்டிருக்கிறது. பள்ளர், நாடார், வண்ணார், மறவர், என்ற சாதிகளின் வரலாறாகவும், சிவகாசிக்கலவரம், கழுகுமலைக்கலவரம்,, கிறித்துவ மதமாற்றம் போன்ற நிகழ்வுகளையும் கண்முன்னே கொண்டு வந்திருக்கிறீர்கள். பின் நவீனத்துவ கோட்பாடுகளில் ஒன்றான அடையாள அரசியலை அஞ்ஞாடி முன்வைக்கிறதா?

பூமணி: அடையாள அரசியலில் பூமணி இல்லை. எனக்கு அதில் உடன்பாடுமில்லை. ஒரு சாதியை அடையாளப்படுத்தி அதைச் சார்ந்து எழுதினாலே அது அடையாள அரசியல். ஆனால் நான் அப்படி எழுத வில்லை. இன்று தமிழகத்தின் வரலாற்றை எழுத வேண்டுமானால் சாதிகளைப் பற்றி எழுதாமலிருக்க முடியாது. அஞ்ஞாடி மார்க்சீயநோக்கில் எழுதப்பட்ட நாவல். அஞ்ஞாடி என்றால் அம்மாடி என்று அர்த்தம். குடும்பர்கள் மட்டுமே வாழும் கலிங்கல் கிராமத்தை என்னுடைய லட்சியக்கிராமமாக நான் எழுதியுள்ளேன். அதில் அவர்களுக்கு சலவை செய்யும் ஒரே ஒரு வண்ணார் குடும்பத்தையும் எழுதியுள்ளேன். இனக்குழு வரலாறும் இருக்கிறது. தொன்மங்களின் வரலாறும் இருக்கிறது. நாவலுக்காக ஆய்வு செய்கையில் நம்முடைய வரலாறே வன்முறைகளின் வரலாறாக இருப்பதை என்னால் பார்க்க முடிந்தது.

கேள்வி: அஞ்ஞாடி நாவலின் முதல் மின்னல் எப்படித் தோன்றியது?

பூமணி: 1800 – களின் துவக்கத்தில் தமிழகத்தின் தென்கோடியில் வாழ்ந்த நாடார் இன மக்கள் திருவிதாங்கூர் மன்னரின் அடக்குமுறைகளை எதிர்த்து தோள்சீலைப் போராட்டம் நடத்துகிறார்கள். அதில் நிறையப்பேர் அடக்குமுறைகளுக்கு அஞ்சி திருநெல்வேலி, மாவட்டம், ராமநாதபுரம் மாவட்டம், என்று குடிபெயருகிறார்கள். சிவகாசிக்கொள்ளை என்று பெரும்பான்மை மக்கள் பேசுகிற நாடார் இன மக்களுக்கு எதிராக மறவர் இன மக்களின் தலைமையில் எல்லா சாதியினரும் சேர்ந்து நடத்திய கலவரத்தைப் பற்றி அங்கொன்றும் இங்கொன்றுமாக செய்திகள் கேள்விப்பட்டிருக்கிறேன். என்னுடைய கிராமத்திலிருந்த ஒரு தாத்தாவின் கட்டை விரல் வளைந்திருந்தது. அதைப் பற்றிக் கேட்டபோது அவர் சிவகாசிக்கொள்ளையில் அவரைக் குத்த வந்த வேல்கம்பைப் பிடித்து மல்லுக்கட்டும் போது கவண்கல் வந்து விரலில் தாக்கியதினால் எலும்பு வளைந்து விட்டது என்றார். . சாதாரண மக்களும் கலந்து கொண்ட அந்தச் செய்தி எனக்கு சிவகாசிக்கலவரம் பற்றி ஆய்வு செய்யும் ஆர்வத்தைத் தூண்டியது. அங்கே அஞ்ஞாடி கருக்கொண்டது.

கேள்வி: உங்களுடைய நாற்பதாண்டுகளுக்கு மேலான இலக்கியப்பயணத்தை எப்படிப் பார்க்கிறீர்கள்?

பூமணி: 1966 – ஆம் ஆண்டு நா.பா. நடத்திய தீபம் பத்திரிகையில் மரபுக்கவிதை வெளிவந்தது. அது தான் என்னுடைய முதல் படைப்பு. அதன் பிறகு 1969 – ஆம் ஆண்டு எழுத்து பத்திரிகையில் அறுப்பு என்ற என் முதல் சிறுகதை வெளியானது… இப்போது யோசிக்கும்போது இன்னும் கொஞ்சம் சிறுகதைகள் எழுதியிருக்கலாம் என்று தோன்றுகிறது. 1979- ஆம் ஆண்டில் என்னுடைய முதல் நாவல் பிறகு வெளியானதிற்குப் பிறகு சிறுகதைகள் எழுதும் ஆர்வம் குறைந்து விட்டது நாவலின் விரிந்த களத்தில் எழுதிய பிறகு சிக்கனமான மொழியில் சிறுகதை எழுத முடியவில்லை. இப்போது கதைக்கட்டுரை என்று ஒரு புதிய வடிவத்தில் எழுதிக் கொண்டிருக்கிறேன். அறிவுப்பூர்வமான கருத்துக்களும் உணர்வுமயமான நிகழ்வுகளும் இணைந்த வடிவம்.

கேள்வி: உங்களுடைய அடுத்த நாவலைப் பற்றிச் சொல்ல முடியுமா?

பூமணி: கிறிஸ்து பிறப்பதற்கு முன்பாக முதல் ஆயிரமாவது ஆண்டிலிருந்து எட்டாம் நூற்றாண்டில் வாழ்ந்த ஆண்டாள் வரையிலும் வெளியில் மறைந்து போய் பூமிக்கடியில் ஓடிக் கொண்டேயிருக்கும் சரஸ்வதி நதி மாதிரி பெண்களின் ஓலம் கேட்டுக் கொண்டேயிருக்கிறது. ஒரு சாதாரண இனக்குழுத்தலைவனான கிருஷ்ணன் எப்படி கடவுளாக மாறுகிறான். பெண்கள் எப்படி அடிமைப்படுத்தப்படுகிறார்கள்? வெறும் உற்பத்திக் கருவிகளாக பெண்களை எப்படி மாற்றுகிறார்கள்? என்றெல்லாம் விவாதிக்கிற நாவலை எழுதத் தொடங்கியிருக்கிறேன்.

 

அஞ்ஞாடி நாவல் இதுவரை பெற்ற விருதுகள்

1. கீதாஞ்சலி விருது

2. தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்-கலைஞர்கள் சங்கம் வழங்கிய கே.பி.பாலச்சந்தர் நினைவு நாவல் விருது

3. ஆனந்த விகடன் விருது

4. புதுமைப்பித்தன் படைப்பிலக்கிய தமிழ்ப்பேராய விருது

5. கலைஞர் பொற்கிழி விருது

6. உலகத் தமிழ் பண்பாட்டு மைய விருது கோயம்புத்தூர்

சாகித்ய அகாடமி

நன்றி- இந்தியா டுடே ஜனவரி,7

2 comments:

  1. அவசியம் வாங்கிப் படிக்கின்றேன் ஐயா
    நன்றி

    ReplyDelete
  2. வாழ்த்துக்கள்.

    ReplyDelete