Tuesday 1 January 2013

கற்பது கற்கண்டா? கசப்பா?

1345537051_430813134_1-play-school-stickers-hydrabad உதயசங்கர்

மனிதன் தன்னுடைய வாழ்நாளிலே குழந்தைப்பருவத்தில் தான் மிக வேகமாகவும், மிக அதிகமாகவும் கற்கிறான். கற்றுக்கொள்வதில் இருக்கும் அவனுடைய ஆர்வம் எல்லையில்லாதது. நம்மில் பெரும்பாலோருக்கு பள்ளிக்கூடத்திற்குச் சென்று புத்தகங்களில் உள்ள விஷயங்களைக் கற்றுக் கொள்வது மட்டும் தான் கற்றல் என்ற எண்ணம் இருக்கிறது. இல்லை. பிறந்ததிலிருந்தே குழந்தை கற்றுக் கொண்டுதானிருக்கிறது. தன் அநுபவங்கள் மூலம் தான் கற்றுக் கொண்டதிலிருந்து தனக்கு விருப்பமானதில் ஆர்வமாய் இருக்கவும், விருப்பமில்லாததை ஓரங்கட்டவும் பழகுகிறது. சுயமாக, சுதந்திரமாகக் கற்றுக் கொண்டுவரும் குழந்தைகளைப் பள்ளிக்கூடமென்னும் கட்டமைக்கப்பட்ட, கட்டாயக்கீழ்ப்படிதலை மட்டுமே தன் ஒழுங்குநடவடிக்கையாகக் கொண்ட பள்ளிக்கூடங்கள் ஒருபோதும் தங்களுடைய கற்பித்தல் முறைமையைப் பற்றிக் கவலைப்பட்டதில்லை. பள்ளிக்கூடங்கள் குழந்தைகளை இயந்திரங்களாகவே பாவிக்கின்றன. அடக்குமுறைக்கல்வியின் மூலம் தங்கள் அதிகாரத்தை நிலைநிறுத்தவே முயற்சிக்கின்றன. இதனால் குழந்தைகள் மனம் வெதும்பிக் கல்வியின் மீதே வெறுப்படைந்து விடுகின்றனர். எந்தக் குழந்தையும் குதூகலமாக பள்ளிக்கூடத்துக்குச் செல்வதில்லை. இது இப்போது மட்டுமல்ல. எப்போதும் இப்படியே. சிலர் நினைப்பது போல ”அந்தக்காலத்திலே” என்றெல்லாம் இல்லை. இப்போதுள்ள சிறு சிறு மாற்றங்களுக்கே பெரும் போராட்டம் நடந்திருக்கிறது. நடந்துக் கொண்டிருக்கிறது. காரணம் நம்முடைய குடிமைச்சமூகத்துக்குக் கல்வி என்பது வேலைவாய்ப்புக்கான கடவுச்சீட்டு என்ற அளவிலேயே புரிதல் இருக்கிறது. அதனால் அதன் ஒரு அங்கமாக இருக்கும் ஆசிரியர்களூம் அப்படியே நினைக்கிறார்கள். ஆனால் சுமார் தொண்ணூறு வருடங்களுக்கு முன்பு நமது கல்வி முறை குறித்து விமர்சனம் செய்தவர், கற்றல் கற்கண்டாக இனிக்க புதிய புதிய செயல்முறைக் கல்வியை ஆய்வு செய்து அதை நடைமுறைப்படுத்தியவர், காந்தியின் சமகாலத்தவர், ஒருவர் இருந்திருக்கிறார். அவர் கிஜூபாய் பகேக.

கற்றலின் இனிமை என்ற செயல்முறைக்கல்விமுறைக்கு முன்னோடி கிஜூபாய் பகேக. இன்றும் பெரும்பாலான ஆசிரியர்களுக்கு இந்த முறை உவப்பானதாகத் தெரியவில்லை. கையில் பிரம்பு இல்லாமல் குழந்தைகளுடன் சமமாக உட்கார்ந்து விளையாட்டாகக் கல்வி போதிக்கும் முறை அவர்களுக்கு அச்சலாத்தியாக இருக்கிறது. ஆசிரியர் என்றால் ஒரு பயம் வேண்டாமா? என்ற எண்ணம் அவர்கள் மனதில் வேரோடியிருக்கிறது. குழந்தைகளைப் பயமுறுத்தியே தாங்கள் அவர்களை விட உயர்ந்தவர்கள், எல்லாம் தெரிந்தவர்கள், என்ற அதிகாரத்தை நிலைநிறுத்த நினைக்கிறார்கள். அன்பே உருவான குழந்தைகள் தாய், தந்தைக்குப்பிறகு ஆசிரியர்களிடமே அதிக அன்பு செலுத்துகிறார்கள். பரிசுத்தமான, எதிர்பார்ப்பில்லாத அந்த அன்பை ஆசிரியர்கள் தங்களுடைய கடுமையான அடக்குமுறையினால் அலட்சியம் செய்கிறார்கள். குழந்தைகளிடம் தன்னம்பிக்கையை வளர்ப்பதற்குப்பதில் தாழ்வுமனப்பான்மையை விதைக்கின்றனர். இதையெல்லாம் மாற்றவேண்டும் என்பதற்காக குழந்தைகளுக்காகத் தன் வாழ்வை அர்ப்பணித்தவர் கிஜூபாய் பகேக. 1885-ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 15-ஆம் தேதி குஜராத்தில் பிறந்த கிஜூபாய் பகேக முதலில் ஒரு வழக்கறிஞராகத் தொழில் செய்தார். பின்னர் வழக்கறிஞர் தொழிலைத் துறந்து தொண்டுள்ளம் நிறைந்த ஆசியராகப் பணியாற்றினார். குழந்தைகளுக்குக் கல்விகற்கும் முறைமை குறித்து இந்த அளவுக்கு ஆழமாகச் சிந்தித்துச் செயல்பட்டவர் இந்தியாவிலேயே கிஜூபாய் பகேக ஒருவர் தான்.கல்விமுறைமை குறித்து அவருடைய புரட்சிகரமான அணுகுமுறை காரணமாக குழந்தைகளின் காந்தி என்று அன்பாக அழைக்கப்பட்டவர். தனியாகவும் மற்ற கல்வியாளர்களுடன் சேர்ந்தும் இருநூறுக்கும் மேற்பட்ட கல்வி நூல்களை எழுதியுள்ளார். 1939-ஆம் ஆண்டு தனது ஐம்பத்திநாலாவது வயதில் இயற்கை எய்தினார் கிஜூபாய் பகேக. அவருடைய “ பகல் கனவு” என்ற நூல் எல்லோரும் படிக்கவேண்டிய புத்தகம்.

பகல் கனவு ஒரு கதை தான். ஆனால் அந்தக் கதையின் வழியே கிஜூபாய் தன் செயல்வழிக்கல்வி முறையை நமக்கு அறிமுகப்படுத்துகிறார். ஆம். லட்சுமிசங்கர் என்ற ஆசிரியர் கல்வி அதிகாரியிடம் அநுமதி வாங்கி ஒரு பள்ளிக்கூடத்தின் ஒரு வகுப்பை தன்னுடைய பரிசோதனை முயற்சிக்காக எடுத்துக் கொள்கிறார். அந்தப்பள்ளிக்கூடத்தில் பிரம்பின் ஆட்சியே நடந்து கொண்டிருக்கிறது. அவர் எடுத்துக் கொண்டிருந்த வகுப்பில் இருந்த மாணவர்கள் முதல் நாள் அவரை ஏமாற்றி விடுகிறார்கள். அந்தக் குழந்தைகளை வசியப்படுத்தும் கலையை மறுநாள் கண்டுபிடித்து விடுகிறார் ஆசிரியர் லட்சுமிசங்கர். கதை பிடிக்காத குழந்தைகள் இருக்கமுடியுமா? குழந்தைகள் அவருடைய கதை சொல்லும் கலையில் மயங்கிவிடுகிறார்கள். அதிலிருந்து துவங்குகிறது அவருடைய பரிசோதனை முயற்சி. வெறும் பாடப்புத்தகங்களை மட்டுமே மனனம் செய்து கொண்டிருந்த குழந்தைகள் விளையாட்டாய் எழுத்துகளைக் கற்றுக் கொள்கிறார்கள். விளையாட்டாய் வாக்கியங்களை அமைப்பதற்குக் கற்றுக் கொள்கிறார்கள். கதைப்புத்தகங்களை வாசிக்கிறார்கள். தாங்கள் சுத்தமாக இருப்பதற்குக் கற்றுக்கொள்கிறார்கள்.பாடல்கள் பாடுவதற்குக் கற்றுக்கொள்கிறார்கள். படம் வரைவதற்குக் கற்றுக் கொள்கிறார்கள். நாடகம் போடுவதற்குக் கற்றுக்கொள்கிறார்கள். மரம் ஏறக்கற்றுக்கொள்கிறார்கள். கவிதையையும் கற்றுக்கொள்கிறார்கள். தம்மையும் சுற்றுப்புறத்தையும் சுத்தம் செய்யக்கொள்கிறார்கள். பொம்மைகள் செய்யக் கற்றுக் கொள்கிறார்கள்.கவிதை எழுதக் கற்றுக்கொள்கிறார்கள். எல்லாவற்றையும் விளையாட்டாகவே கற்றுக் கொள்கிறார்கள்.

இத்துடன் மொழிப்பயிற்சி, இலக்கணம், வரலாறு, பூகோளம், கணிதம், என்று எல்லாப்பாடங்களையும் கற்றுக் கொள்கிறார்கள். வழக்கமான மனனக்கல்வி முறையில் அல்லாமல் குழந்தைகளே மனம் ஒன்றி ஈடுபாட்டுடன் விளையாட்டாய் கற்றுத் தேர்ந்து விடுகிறார்கள். ரேங்க் இல்லை. கெட்டிக்காரன் என்றோ மோசமானவன் என்றோ யாரும் இல்லை. எல்லோரும் ஒருவருக்கொருவர் உதவி செய்து கொள்கிறார்கள். எனவே போட்டி, பொறாமை, இல்லை. தேர்வில் வகுப்பே பாஸாகிறது. ஒரு இனிய கனவைப் போல இந்தக் கதை விரிந்து செல்கிறது. எத்தனை முறை படித்தாலும் ஆர்வம் குன்றாத இந்தப்புத்தகம் குழந்தைகளின் கல்விமுறை குறித்த நம்முடைய எண்ணங்களை அப்படியே புரட்டிப் போடுகிறது. வாசித்து முடிக்கும்போது இப்படி ஒரு பள்ளி, இப்படி ஒரு வகுப்பு, இப்படி ஒரு ஆசிரியர் நமக்குக் கிடைத்திருக்கக் கூடாதா என்ற ஏக்கம் வரும். சுமார் தொண்ணூறு ஆண்டுகளுக்கு முன்னால் கிஜூபாய் கண்ட கனவு இன்னும் பகல் கனவாகவே இருக்கிறது. மேலோட்டமான சிறு சீர்திருத்தங்களுக்கே பெரும்போராட்டம் நடத்த வேண்டியிருக்கிறது. அதுவும் கல்வியை அரசாங்கம் கைகழுவ முயற்சித்துக் கொண்டிருக்கும் இந்த வேளையில், கல்வியைக் கொள்ளை லாபம் அடிக்கும் உற்பத்திசாதனமாக தனியார் பள்ளிகள் பயன்படுத்திக் கொண்டிருக்கும் இந்த வேளையில், கிஜூபாயின் பகல் கனவு மிகுந்த முக்கியத்துவம் பெறுகிறது. எல்லோரும் வாசித்து நமது கல்விமுறை குறித்து ஆழ்ந்த பரிசீலனை செய்யவேண்டும். அதற்கான திசைவழியில் எல்லோரும் நடந்து செல்லவேண்டும். அப்போது தான் எதிர்காலக்குழந்தைகளாவது நம்மைச் சபிக்காமலிருப்பார்கள்

நன்றி-இளைஞர் முழக்கம்

4 comments:


  1. உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் என் இனிய புத்தாண்டு வாழ்த்துகள்.

    2013ல் உங்கள் நம்பிக்கைகளும் ஆசைகளும் கனவுகளும் கைகூடட்டும்


    அன்புடன்
    மதுரைத்தமிழன்

    ReplyDelete
  2. இந்தப் பதிவைப் பார்க்கவும்.
    http://swamysmusings.blogspot.com/2013/01/blog-post_3.html

    ReplyDelete
    Replies
    1. நன்றி. அவசியம் பார்க்கிறேன்

      Delete
  3. கற்றலின் இனிமை என்ற செயல்முறைக்கல்விமுறைக்கு முன்னோடி கிஜூபாய் பகேக. இன்றும் பெரும்பாலான ஆசிரியர்களுக்கு இந்த முறை உவப்பானதாகத் தெரியவில்லை. கையில் பிரம்பு இல்லாமல் குழந்தைகளுடன் சமமாக உட்கார்ந்து விளையாட்டாகக் கல்வி போதிக்கும் முறை அவர்களுக்கு அச்சலாத்தியாக இருக்கிறது.

    அருமையான பதிவு. அச்சலாத்தியாக = அருமையான வட்டார சொற்றோடர். சிவகாசி, சாத்தூர், கோவில்பட்டி தவிர மற்ற ஊர்களில் இருப்பவர்களுக்கு இந்த சொல் தெரியாது என நினைக்கிறேன். மிக்க நன்றி.

    ReplyDelete