Wednesday 24 October 2012

பழிக்குப்பழி

street-dogs மலையாளம் – மாலி

தமிழில் - உதயசங்கர்

ஒரு ஊரில் ஒரு தெருநாய் இருந்தது. அது பிச்சை எடுத்து வாழ்ந்து வந்தது. ஆனால் சில சமயம் திருடியும் தின்னும். ஒரு தடவை ஒரு தவறு நடந்தது. அது ஒரு மனிதனின் வீட்டுக்குள் போனது. சமையலறைக் கதவு திறந்து கிடந்தது.தெருநாய் சமையலறைக்குள் நுழைந்தது. பாத்திரத்தில் நிறையச் சோறு இருந்தது. பாத்திரம் மூடியிருந்தது. அது மூக்கினால் மூடியைத் தள்ளிவிட்டது. மூடி கீழே விழுந்து கடமுடா கடமுடான்னு சத்தம் கேட்டது. சத்தம் கேட்டு மனிதன் ஓடி வந்தான். பாதி தின்னும் திங்காமலும் தெருநாய் வெளியே ஓடியது.மனிதன் கீழே கிடந்த கல்லை எடுத்தான்.ஓடுகிற தெருநாயைப் பார்த்து எறிந்தான்.கல் தெருநாயின் வலது பின்காலில் பட்டது. தெருநாய் நொண்டிநாய் ஆகிவிட்டது. அது நொண்டிக் கொண்டே ஓடிவிட்டது.

அந்த ஊரில் இருபது நாய்களுக்கும் மேலே இருந்தன. அவைகள் எல்லாம் தெருநாயின் கூட்டாளிகள். அவைகள் அந்தத் தெருநாயை நொண்டிநாய் என்றே அழைத்தன.

நொண்டிநாய்க்கு மனிதன் மேல் பகை தோன்றியது. ஒரு மனிதன்தானே தன்னை நொண்டியாக்கியது, எனவே மனிதர்களைப் பழி வாங்கணும். இதுதான் அதன் முடிவு.

ஆனால் அது என்ன அவ்வளவு எளிதான காரியமா? மனிதனுக்கு நாயைவிட புத்தியுண்டு. சக்தியுண்டு. எனவே பொறுமையாய் செய்யவேண்டும். முதலில் கூட்டாளிகளோடு ஆலோசிக்கவேண்டும்.

நொண்டிநாய் ஒரு சுற்றறிக்கை அனுப்பியது.

‘பிரியமான தெருநாய்களே! மிகவும் முக்கியமான ஒரு காரியம். அதைப் பற்றிப் பேச நாம் ஒரு கூட்டம் போடவேண்டும்.சனிக்கிழமை இரவு பத்து மணிக்குக் கூட்டம். இடம் ஊருக்கு கிழக்கே உள்ள மைதானம். மிக முக்கியமான காரியம். நீங்கள் எல்லோரும் கண்டிப்பாக வரவேண்டும். நான் காத்திருப்பேன்.’

குறித்த நேரத்தில் எல்லாத் தெருநாய்களும் ஆஜராகி விட்டன. வீட்டுநாய்களைப் போல அவைகள் கிடையாது. வீட்டுநாய்களுக்கு இரவில் காவல் வேலை உண்டு. தெருநாய்களுக்கு காவல் வேலை என்ன ஒருவேலையும் கிடையாது.

தெருநாய்கள் வட்டமாய் உட்கார்ந்தன.

நொண்டிநாய் பேசியது.” தெருநாய்களே! மனிதர்களுக்கு நாய்கள் என்றால் பெரிய வெறுப்பு. நான் அதற்கு ஒரு ஆதாரம் தருகிறேன். ஒரு மனிதன் இன்னொரு மனிதனை வெறுக்கிறான். அப்போது அவன் எப்படி அவனைத் திட்டுகிறான்? ஏ பூனையே! என்று சொல்வதில்லை. ஏ கோழி! என்று சொல்வதில்லை. ஏ காளையே! என்று சொல்வதில்லை. மாறாக ஏ நாயே! என்று திட்டுகிறான். இனிமேல் அதற்கு நாம் ஒத்துக் கொள்ளக் கூடாது. நாம என்ன செய்யலாம்?” என்று கேட்டது.

வெறியனான ஒரு தெருநாய்,” நாம ராத்திரியில் சத்தமாய் குரைக்கணும். அப்படி மனிதர்களைத் தூங்கவிடாமல் செய்யணும்” என்று சொன்னது.

“மனிதர்களுடைய சாப்பாட்டையெல்லாம் நாம திருடி திங்கணும்..”இன்னுமொரு வெறிபிடித்த நாய் சொன்னது.

”பார்க்கிற மனுசங்களையெல்லாம் பாய்ஞ்சு கடிக்கணும்..” என்று எல்லோரையும் விட கூடுதல் வெறி பிடித்த தெருநாய் கூறியது.

“இதெல்லாம் ஆபத்தான வழிகள்..மனிதர்கள் நம்மை அடிச்சே கொன்னுருவாங்க..நான் ஒரு நல்ல வழி சொல்றேன்.. ஒரு நாய் இன்னொரு நாயை வெறுத்தால் ‘ஏ மனிதா!’ ன்னு திட்டணும்” என்று நொண்டிநாய் சொன்னது.

சரிதான். எல்லோரும் ஒத்துக் கொண்டனர்.

தெருநாய்களின் கூட்டத்தில் ஒரு கருங்காலி இருந்தது. கருங்காலிக்குச் சேக்காளியாய் ஒரு வீட்டுநாய் இருந்தது. கருங்காலி நடந்ததையெல்லாம் வீட்டுநாயிடம் சொன்னது. அந்த வீட்டுநாய் அவனுடைய எஜமானனான மனிதனிடம் சொன்னது.அந்த மனிதன் மற்ற மனிதர்களிடம் சொன்னான். மனிதர்களுக்கு தெருநாய்கள் மீது கோபம் வந்தது. அது தெருநாய்களுக்குத் தெரிந்து விட்டது.

நொண்டிநாய்க்கும் மற்ற நாய்களுக்கும் தகவல் கிடைத்தது.மனிதர்கள் கம்புகளோடு வருகிறார்கள். நொண்டிநாய் நொண்டி நொண்டி ஓடத் தொடங்கியது. நொண்டிகளில்லாத மற்ற நாய்கள் நொண்டாமல் ஓடத்தொடங்கின. எங்கே? அடுத்த ஊருக்கு.

நொண்டிநாய்க்குக் கருங்காலி நாயோடு வெறுப்பு தோன்றியது. நேரடியாக மோத முடியாது. ஆனாலும் அது கருங்காலியைக் கூப்பிட்டது.’ஏ மனிதா!’

மற்ற எல்லா தெருநாய்களும் அதைப் பின்பற்றி ‘ஏ மனிதா!’ என்று கூக்குரலிட்டன.

1 comment: