Saturday 20 October 2012

பல்லின் வேலைநிறுத்தம்

மலையாளம் – மாலி

தமிழில் – உதயசங்கர்16820

 

நாக்கு,”வயிறே! நான் தான் உண்மையில் கொடுத்துவைத்தவன்!” என்று சொன்னது. வயிறு உடனே,”நாக்கே! நீ ஏன் அப்படிச் சொல்றே?” என்று கேட்டது. அதற்கு நாக்கு,” எனக்கு சாப்பாட்டின் ருசி தெரியும். என்னைத் தவிர வேறு யாருக்கும் ருசி தெரியாது. நான் ஒரு வேலையும் செய்ய வேண்டாம். ஆனால் இஷ்டம் போல ருசித்துச் சாப்பிடலாம். பல்லின் வேலையோ பாவம்! அவன் சாப்பாட்டை மென்று சவைக்க வேண்டும்.ஆனால் ருசி அறிய மாட்டான். முட்டாள்!” என்றது.

வயிறும் உடனே,” நீ சொன்னது சரிதான்,நாக்கே! அப்படின்னா நானும் கொடுத்து வைத்தவன் தான்.சாப்பாட்டுக்காக நானும் எந்த வேலையும் செய்வதில்லை.ஆனாலும் எனக்கு சாப்பாடு கிடைக்கிறது. என்னைத் தவிர வேறு யாருக்கும் சாப்பாடு கிடைப்பதில்லை. பல்லு கூலியில்லாம வேலை செய்ற சுத்தமுட்டாள்” என்று சொன்னது.

இந்த உரையாடலை பல் கேட்டது. அது தனக்குள்,”சாப்பாட்டைக் கடிப்பது நான் நொறுக்குவது நான் அரைப்பது நான் இப்படி பல வேலைகளை நான் செய்கிறேன். ஆனால் எனக்கு எந்தப் பயனும் இல்லை.ஒரு வேலையும் செய்யாத நாக்குக்கும் வயிறுக்கும் எல்லாப் பிரயோசனமும் கிடைக்கிறது. இது அநியாயம்! அநியாயம்!’ முணுமுணுத்தது.

பல்லின் சேக்காளி கண். அதைப் பார்த்து பல் கேட்டது,” கண்ணே! நீ எனக்கு உதவி செய்வாயா?”

அதற்கு கண்,” பல்லே நான் உனக்கு உதவி செய்றேன்” என்று சொன்னது.

நாக்கிற்கு ஒரு சொந்தக்காரன் இருக்கிறான். வயிறுக்கும் ஒரு சொந்தக்காரன் இருக்கிறான். பல்லுக்கும் ஒரு சொந்தக்காரன் இருக்கிறான்.கண்ணுக்கும் ஒரு சொந்தக்காரன் இருக்கிறான். இவர்கள் எல்லோருக்கும் சொந்தக்காரன் ஒரே ஆள் தான் அவன் மனிதன்.

மனிதன் மதியம் சாப்பிட உடகார்ந்தான்.அப்போது கண் தன்னுடைய வேலையைக் காட்டத் தொடங்கியது. கண் மூடிக் கொண்டது. மனிதனால் சோற்றையும் கறிகளையும் பார்க்க முடியவில்லை.மனிதனின் வலது கை இலையைத் தடவியது. சோறு என்று நினைத்து பொரியலை அள்ளினான்.பொரியலை வாய் என்று நினைத்து மூக்கிற்குள் தள்ளினாள்.

மூக்கிற்கு ரொம்ப சங்கடமாகி விட்டது. அவன் கையை அழைத்து,”வலது கையே பொரியலை வாயிலதான் வைக்கணும்.தெரிஞ்சுதா..நான் வாயில்லை..மூக்கு..எனக்கு எவ்வளவு எரிச்சல் தெரியுமா? மூச்சும் முட்டுது..” என்று சொன்னது.

வலது கை மூக்கிலிருந்து பொரியலை வாரி எடுத்தது. ரொம்பக் கஷ்டப் பட்டு அதை வாயில் வைத்தது. மனிதனுக்குச் சாப்பிட ரொம்பநேரமாகி விட்டது.

கண்,”பல்லே! நான் மனிதனைக் கஷ்டப் படுத்திப் பார்த்துவிட்டேன்.ஆனால் அவன் எப்படியோ சாப்பிட்டு விட்டான்..இனி என்னால் முடியாது.. உன் வேலையை நீயே பார்த்துக்கோ..” என்று சொன்னது.

பல் உடனே,”கண்ணே! நீ சொல்றது சரிதான்..ஆனால் நான் என்ன செய்யணும்னு சொன்னா நல்லாயிருக்கும்..” என்று சொன்னது.அதற்கு கண்,” பல்லே! நீ கடிக்காதே! நொறுக்காதே!அரைக்காதே! பேசாமல் இரு! மொத்தத்தில் வேலைநிறுத்தம் செய்யவேண்டும்” என்று சொன்னது.

மனிதன் இரவில் சாப்பிட உட்கார்ந்தான். கண் மூடவில்லை. சோறு,சாம்பார், அப்பளம், மாங்காய்பச்சடி, எல்லாம் வாயில் கிடந்தது. ஆனால் பல்தான் வேலைநிறுத்தம் செய்ததே. அவன் கடிக்கவில்லை. நொறுக்கவில்லை. அரைக்கவில்லை அசையாமல் இருந்தது. நாக்கினுக்கு பழைய மாதிரி ருசி கிடைத்தது. வயிறும் பழைய மாதிரியே நிறைந்தது.

மனிதன் உறங்கினான். இரண்டு மணி நேரம் கழிந்தது. வயிறில் ஒரு புரட்டல்.என்ன காரணம்? சாப்பாடு செரிக்கவில்லை. கொஞ்சம் கொஞ்சமாக அந்த வலி கூடிக் கொண்டே போனது. கடைசியில் சகிக்கமுடியவில்லை. வயிறு என்ன செய்தது தெரியுமா? செரிக்காத சாப்பாட்டை மேல் நோக்கி ஒரு தள்ளு..! அதெல்லாம் வாந்தியாக நாக்கில் பட்டு வெளியே வந்தது. வாந்தியின் ருசி தெரிந்த போதோ? அய்யோ! நாக்கிற்கே வாந்தி வந்தது.

அடுத்த நாளும் அப்படியே தான் நடந்தது. அதற்கு அடுத்த நாளும் அப்படியே. நான்கு நாட்களும் அப்படியே நடந்தது. வயிறு பலகீனமாகி விட்டது. நாக்கும் பலகீனமாகிவிட்டது. கண்ணும் பலகீனமாகிவிட்டது. பல்லுக்கு மாத்திரம் பலகீனமே இல்லை!

கண்,” நாக்கே! வயிறே! உங்களால நானும் கஷ்டப் படறேன்..பல் சவைக்கவில்லையென்றாலோ? நாம காலி! பல்லுகிட்ட மன்னிப்பு கேளுங்க! அப்பத்தான் அவன் வேலைநிறுத்தத்தை விடுவான்..” என்று சொன்னது.

உடனே நாக்கு,” பல்லே! உன்னை நான் முட்டாள்னு சொன்னது தப்பு. நான் உங்கிட்டே மன்னிப்பு கேட்டுக்கிறேன்” என்று சொன்னது.

வயிறு,” பல்லே! என்னையும் மன்னிக்கணும் இனி நான் உன்னை சுத்த முட்டாள்னு சொல்லமாட்டேன்..இது உறுதி!” என்று சொன்னது.

பல் வேலைநிறுத்தத்தைக் கை விட்டது.அது கடிக்கத் தொடங்கியது. நொறுக்கத் தொடங்கியது.அரைக்கத் தொடங்கியது.எல்லோரும் சுகமாக வாழ்ந்தனர்.முன்னே மாதிரி.

2 comments: