Tuesday 2 October 2012

மந்திரமும் தந்திரமும்

மலையாளத்தில் –மாலி

தமிழில் – உதயசங்கர்

 

ஒரு அழகான ராஜகுமாரிக்கும் ஒரு அழகான ராஜகுமாரனுக்கும் கல்யாணம் நிச்சயம் செய்தனர்.ஆனால் கல்யாணம் நடக்கவில்லை.காரணம் யார் தெரியுமா? கெட்டவனான ஒரு மந்திரவாதி தான்.

ராஜகுமாரியை தான் கல்யாணம் முடிக்கவேண்டும்- அது தான் அந்த மந்திரவாதியின் ஆசை.அவன் ராஜகுமாரியின் அரண்மனைக்குச் சென்றான். பூந்தோட்டத்தில் ஒளிந்து கொண்டான். அங்கேயே பதுங்கியிருந்தான். ராஜகுமாரி பூப்பறிக்கத் தோட்டத்திற்கு வந்தாள். மந்திரவாதி சில மந்திரங்களை உச்சரித்து ராஜகுமாரியை பெண்நாயாக மாற்றினான்.பின்பு வேகமாக நடக்கத் தொடங்கினான். அந்த நாயும் மந்திரவாதியின் பின்னாலேயே போயிற்று. போகாமலிருக்க முடியாது. அத்தனை வலிமை இருந்தது அந்த மந்திரத்துக்கு.

ராஜகுமாரியைக் காணவில்லையா? ராஜகுமாரனுக்கு அளவு கடந்த துக்கம் உண்டானது. இனி என்ன செய்ய? ஒரே ஒரு வழியே இருக்கிறது. நல்லவனான ஒரு மந்திரவாதி இருந்தான். ராஜகுமாரன் அந்த நல்ல மந்திரவாதியைப் பார்த்து ராஜகுமாரி காணாமல் போனதைச் சொன்னான். நல்லமந்திரவாதி தன் மந்திரசக்தியைக் கொண்டு நடந்ததையெல்லாம் தெரிந்து கொண்டான்.

“ராஜகுமாரா! யார் கண்ணிற்கும் தெரியாமல் மறைந்திருக்கும் மந்திரம் எனக்குத் தெரியும். அதைப் போல பழைய உருவம் திரும்ப கிடைக்கவும் மந்திரம் தெரியும். ரெண்டையும் உனக்குச் சொல்லித் தாரேன்..மந்திரம் மட்டும் போதாது..ஒரு தந்திரமும் சொல்லித் தாரேன்..” என்று நல்லமந்திரவாதி சொன்னான்.

மந்திரமும் தந்திரமும் கிடைத்தவுடன் ராஜகுமாரனுக்கு சந்தோசமாகி விட்டது. அவன் நல்லமந்திரவாதியிடம் பயணம் சொல்லிக் கொண்டு புறப்பட்டான். கெட்டமந்திரவாதியின் வீட்டைத் தேடிப் போனான். வெகுதூரத்தில் ஒரு மலை இருந்தது. அந்த மலையில் ஒரு குகை இருந்தது. அந்தக் குகையில் தான் கெட்ட மந்திரவாதியின் வீடு இருந்தது. ராஜகுமாரன் வெகுதூரம் பயணம் செய்தான்.நிறைய கஷ்டங்களைச் சந்தித்தான். கடைசியில் குகைக்கு அருகில் வந்து விட்டான்.மறையும் மந்திரத்தைச் சொல்லி மறைந்து குகைக்குள் நுழைந்து விட்டான்.

அது கெட்டமந்திரவாதிக்குத் தெரியாது. அவன் வேலை மும்முரத்திலிருந்தான். மறுநாள் காலையில் கல்யாணம்.நிறைய கூட்டாளிகளைக் கூப்பிட்டிருந்தான். பிரமாண்டமான விருந்துக்கும் ஏற்பாடு செய்திருந்தான்.முகூர்த்தநேரம் வரும்போது தான் மந்திரவாதி மந்திரம் சொல்லி பெண்நாயை ராஜகுமாரியாக்குவான். பின்பு அவளைக் கலியாணம் செய்வான்.

ராஜகுமாரன் பெண்நாயைப் பார்த்தான். துயரத்தைச் சகிக்கமுடியவில்லை. எவ்வளவு கஷ்டம்? தன்னுடைய பிரியமான ராஜகுமாரி இந்த உருவத்திலா? ராஜகுமாரனின் கண்களிலிருந்து கண்ணீர் வழிந்தது.

நல்லவேளை மந்திரவாதி வெளியே போனான். இதற்குத்தானே ராஜகுமாரன் காத்திருந்தது.ராஜகுமாரன் மந்திரவாதியின் அறைக்குள் நுழைந்தான். மேசை திறந்து மந்திரப் புத்தகத்தை எடுத்தான்.பக்கங்களைப் புரட்டி தலைப்புகளைப் பார்த்தான்.அதோ ஒரு தலைப்பு ’மனிதனை நாய்களாக மாற்றுகிற மந்திரம்’. ராஜகுமாரன் அந்த மந்திரத்தை மனப்பாடம் செய்து கொண்டான். காலையில் மந்திரமும் சொல்வான். தந்திரமும் செய்வான். அப்போது பார்க்கலாம் பொழுதுபோக்கு.

காலையில் என்ன ஆரவாரம்! நெருங்கிய நண்பர்கள் வந்தார்கள். அவர்கள் இஷ்டம் போல சாப்பிட்டார்கள். குடித்தார்கள்.பேசினார்கள். மொத்தத்தில் ஒரே கோலாகலமாக இருந்தது. கடைசியில் முகூர்த்தநேரம் வந்தது. கெட்டமந்திரவாதி மந்திரம் சொன்னான்.அந்தப் பெண்நாய் ராஜகுமாரியாக மாறியது.அப்போது ராஜகுமாரன் என்ன செய்தான் தெரியுமா? மந்திரம் சொல்லி மந்திரவாதியை ஆண்நாயாக்கி விட்டான்.

கூட்டாளிகள் அதிர்ச்சி அடைந்து போனார்கள்.இதற்கிடையில் ராஜகுமாரன் என்ன செய்தான் தெரியுமா? ராஜகுமாரியையும் மறையச் செய்தான். இருவரும் சேர்ந்து ஒரே ஓட்டம். ராஜகுமாரியின் அரண்மனைக்குச் சென்று விட்டார்கள்.

ஆண்நாயான மந்திரவாதிக்கு ராஜகுமாரன் செய்த தந்திரம் புரிந்துவிட்டது. மனிதனாக மாறினால் தானே மந்திரம் சொல்லமுடியும்.நாயாக இருக்கிறானே! ராஜகுமாரனைக் கடித்துக் கொல்லவேண்டும்!. அந்த நாய் ராஜகுமாரியின் அரண்மனைக்கு ஓடியது.ரொம்ப தூரம் ஓடியதால் வாயில் நுரையும் கிதைப்பும் ஏற்பட்டது. வழியில் கூடியிருந்தவர்கள் அதைப் பார்த்து,”அதோ ஒரு பைத்தியக்காரநாய்..”என்று கூப்பாடு போட்டனர். எல்லோரும் சேர்ந்து அந்த நாயை அடித்துக் கொன்றனர்.

ராஜகுமாரன் மறைவிலிருந்து வெளியே வந்தான். ராஜகுமாரியையும் மறைவிலிருந்து வெளியே கொண்டு வந்தான். பின்பு அவர்கள் கல்யாணம் பிரமாதமாக நடந்தது.sher-christopher-1

2 comments: