Tuesday 11 September 2018

புனிதப்பசு


புனிதப்பசு

மலையாளத்தில் - மாதவிக்குட்டி
தமிழில் - உதயசங்கர்
ஒரு நாள் ஒரு பையன் ரோட்டுக்குப்பக்கத்திலிருந்த குப்பைத்தொட்டியில் கிடந்த வாழைப்பழத்தோல்களை எடுத்துத் தின்று கொண்டிருந்தபோது ஒரு பசு அவனுக்கு அருகில் வந்தது. அவன் கையிலிருந்த பழத்தோலைக் கடித்து இழுத்தது.
பையனுக்குக் கஷ்டமாகி விட்டது. அவன் பசுவை விரட்டினான். பசு உரக்கக்கத்திக்கொண்டே ரோட்டில் ஓடியது.
உட்னே சாமியார்கள் தோன்றினார்கள்.
“ புனித மிருகமான பசுவினை நீயா தொந்தரவு செய்தாய்? “
என்று அவர்கள் பையனிடம் கேட்டார்கள். அதற்கு அந்தப்பையன்,
“ நான் தொந்தரவு செய்யலை.. நான் தின்னுக்கிட்டிருந்த பழத்தோலை அந்தப்பசுதான் கடித்து இழுத்தது. அதனால் நான் அதை விரட்டி விட்டேன்…”
என்று சொன்னான். உடனே சாமியார்கள்,
“ உன்னுடைய மதம் எது? என்று கேட்டனர். அதற்கு அந்தப்பையன்,
“ மதமா.. அப்படின்னா என்ன? “ என்று கேட்டான்.
“ நீ இந்துவா? முஸ்லீமா?.. கிறிஸ்தவனா? நீ கோவிலுக்குப்போவாயா? சர்ச்சுக்குப் போவாயா? “ என்று சாமியார்கள் கேட்டனர்.
“ நான் எங்கேயும் போகமாட்டேன்..” என்று அந்தப்பையன் சொன்னான். உடனே அவர்கள்,
“ அப்படின்னா நீ கடவுளை நம்பல இல்லையா? “ என்று கேட்டனர். அதற்குப் பையன்,
“ நான் எங்கேயும் போகமாட்டேன்.. எனக்குச் சட்டை கிடையாது.. என்னுடைய டவுசரின் பின்னால கிழிஞ்சிருக்கு..”
என்று சொன்னான். உடனே சாமியார்கள் ஒருமித்த ஒரே குரலில்,
“ நீ முஸ்லீம்தான்.. புனிதப்பசுவினைத் துன்புறுத்தி விட்டாய்..” என்று கூறினர்.
அதைக்கேட்ட அந்தப்பையன்,
“ நீங்கள் பசுவுக்குச் சொந்தக்காரர்களா? “ என்று கேட்டான்
சாமியார்கள் அந்தப்பையனின் கழுத்தை நெறித்துக்கொன்று அந்தக்குப்பைத்தொட்டியிலேயே போட்டார்கள். பின்னர் அவர்கள் எல்லோரும் ஒரே குரலில்,
“ ஓம் நமச்சிவாய.. உங்கள் திருநாமம் போற்றப்படுவதாக..”
என்று கூவினார்கள்.

No comments:

Post a Comment