Sunday 19 August 2012

முன்னொரு காலத்திலே

 

ஒரு நகரம், சில நண்பர்களைப் பற்றிய நினைவுக் குறிப்புகள்

நூல்மதிப்புரை

புத்தகன்

 

இந்தப் புத்தகத்தை நீங்கள் வாசித்தால், இப்படி ஒன்றை நாமும் எழுத வேண்டும் என்ற ஆசை துளிர்ப்பது நிச்சயம். ஒவ்வொருவரும் எங்கோ பிறந்து, இடம் பெயர்ந்து, என்னவோ மாறி, புதுப்புது நண்பர்களோடு தனது பயணத்தைத் தொடந்துகொண்டு இருந்தாலும்.. பிறந்த ஊர், நம்முடைய வீட்டுக்கு முதன்முதலாக வந்த நண்பன், ஓசியில் கிடைத்த முதல் புத்தகம், எழுதியதைப்பாராட்டிய முதல் ரசிகன் என்பதெல்லாம் மறக்கமுடியாது. அப்படி சில நினைவுகளின் தாழ்வாரம் இது.

பிறிதொரு மரணம் தொகுப்பின் மூலம் தமிழ்ச்சிறுகதை உலகில் தன்னை இணைத்துக் கொண்ட உதயசங்கர், வைக்கம் முகமது பஷீர் தொடங்கி சமகாலக் கதைகள் வரை மலையாளத்தில் இருந்து தமிழுக்குக் கொண்டு வந்து சேர்த்தவர். அவரது சொந்த நகரமான கோவில்பட்டி தான் இந்தப் புத்தகத்தின் களம். அதை ஒரு சோவியத் ரஷ்யாவாக வர்ணித்து இருப்பது தான் இதன் அடித்தளம்.

தடுக்கி விழுந்தால் கோவில்பட்டியில் ஒரு எழுத்தாளனின் udhayasankar cover1[4]தலையில் தான் முட்ட வேண்டும் என்பார்கள். ச.தமிழ்ச்செல்வன், கோணங்கி, உதயசங்கர், கௌரிசங்கர், வித்யாஷங்கர், தேவதச்சன், நாறும்பூநாதன், அப்பாஸ், அப்பணசாமி, மாரீஸ், ஜோதிவிநாயகம், சிவசு, சாரதி, என்று எண்ணிக்கொண்டே போகலாம். கோவில்பட்டிக்கு அந்தப் பக்கம் கி.ராஜநாராயணனும் இந்தப் பக்கம் கந்தர்வனும் இருந்தார்கள்.

80 – களின் தொடக்க காலத்தில் கிளம்பியவர் உதயசங்கர். “ இத்தனை சிறிய நகரத்தில் இத்த்னை எழுத்தாளர்கள் ஒரே காலகட்டத்தில் எழுத வந்தது போல், தமிழ்நாட்டில் வேறெங்கும் நடந்திருக்குமா என்று தெரியவில்லை. ஒரே நேரத்தில் 20 எழுத்தாளர்கள் ஒரே இடத்தில் சிந்திக்கவும், பேசவும், விவாதிக்கவுமான சூழல் இருந்தது. படைப்புச் செயல்பாட்டில் ஆரோக்கியமான போட்டி நிலவியது.” என்கிறார் உதயசங்கர்.

இவான் துர்கனேவின் ’மூன்று காதல் கதைகள்’ படித்துக் காதலர்களாகி.. கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கையை வாசித்து தோழர்களாகி, ‘சிலந்தியும் ஈயும்’ படித்து வர்க்கங்களை உணர்ந்து டி.எஸ்.எலியட் படித்து கவிஞர்களாகித் திரிந்த ஓர் இளைஞர் கூட்டத்தையே புத்தகங்கள் ஒன்று சேர்த்துள்ளது. இலக்கியம், அரசியல், சாளரங்களைத் திறந்துவிட எல்லா ஊர்களிலும் பாலு, பால்வண்ணன் போன்றவர்கள் இருக்கிறார்கள். இந்தக் கூட்டத்துக்குள் முத்துசாமி என்பவர் வருகிறார். எதுவுமே எழுதவில்லை அவர். எல்லா விவாதங்களிலும் இருக்கிறார். யோசித்துப் பாருங்கள். எல்லாஊர்களிலும் முத்துசாமிகளும் இருப்பார்கள்.

“ வாழ்க்கை தன் கொடூரமான பற்களால் பல கலைஞர்களைக் கிழித்து எறிந்திருக்கிறது. வாழ்க்கைக்குச் சவால் விட்டுக் கொண்டே, கலைஞன் ஜெயித்துக் கொண்டு இருக்கிறான். அந்த வெற்றிக்காகத் தன்னை பலியிட்டேனும்..” என்று சொல்லும் உதய்சங்கர், 14 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் ஊருக்கு வருகிறார். இந்த ஊர் அவருக்குப் பிடிக்கவில்லை. எல்லோருக்கும் முன்னொரு காலத்தில் பார்த்த ஊர் நிச்சயம் பிடிக்கும்!

வெளியீடு- வம்சி புக்ஸ், 19, டி.எம்.சாரோன், திருவண்ணாமலை. விலை ரூ 70/

நன்றி- ஜூனியர் விகடன் 22-8-12

No comments:

Post a Comment